அத்தியாயம் – 24
மறுநாள் மாலை நரேஷின் வீட்டில் அனைவரும் குழுமி இருக்க…
தீர்ப்பு சொல்ல வந்த வெள்ளைக்காரனிடம் வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள் ரேச்சல்.
“ட்ரை திஸ் ட்ரிங் மைக். யோகர்ட் வித் மேங்கோ. ஐ லவ் திஸ் மேங்கோ லஸ்ஸி”
“வாவ் ரிச் அண்ட் கிரீமி” என்று ரசித்து பருகினார் மைக்கேல்.
“சரி பரிசோதனைக் கூடத்துக்குப் போகலாமா”
“ஏற்கனவே என்னோட சோதனைகளை முடித்துவிட்டேன். சில பார்மாலிட்டிகளை மட்டும் மிஸ்டர் மல்கோத்ரா கூட பேசி முடிக்க வேண்டியது இருக்கு. எஸ்கியூஸ் மீ ரேச்சல் உன் மகளும் இந்த போட்டியில் கலந்திருக்கறதால உன் முன்னாடி பேச முடியாது”
முக்கியமான நபர்கள் நுழைந்ததும் அலுவலகத்தின் கதவுகள் சாத்தப்பட்டன.
ரே கேங்க் அதுதான் ரேச்சல், ரேணு குழு மற்றும் மீரா சஷ்டி பிங்குவின் மாதிரிகளைப் பரிசோதித்து முடிவினை அறிவித்தார் மைக்கில் உலகத்தின் சிறந்த பெர்ஃப்யூமர்களில் ஒருவர்.
“எப்படியும் இந்த வெள்ளைக்காரன் ரேச்சலுக்கு தெரிஞ்சவன் மாதிரிதான் இருக்கான். அவளுக்கு சாதகமாத்தான் முடிவு சொல்லுவான் பாரேன்… மீராக்கா நீ பேசாம அந்த ஒரு கோடியை எடுத்துட்டு செட்டில் ஆயிருக்கலாம்”
“ரேச்சல் பண்டாஸ்டிக் எப்படி இவ்வளவு நுட்பமான காம்பினேஷனை கண்டுபிடிச்சன்னு எனக்கு ஆச்சிரியமா இருக்கு” என்றார் மைக்கல்.
“நிஜம்தான் கஷ்டமாத்தான் இருந்தது. என் வருங்கால மாப்பிள்ளை உதவி இல்லைன்னா கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருந்திருக்கும்” என்றவள்
“அவரையும் கூப்பிடுறேன்” என்றபடி அழைக்க அங்கு வந்ததோ கண்ணன்.
“கண்ணன் அண்ணா” பிங்கு திகைக்க…
அலட்சியமாக அவர்களை முறைத்தபடி மைக்கலின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் கண்ணன்.
“என்னென்ன டெஸ்ட்ஸ் பண்ணிங்க. எப்படி இவ்வளவு தூரம் ட்ரேஸ் பண்ணிங்கன்னு சொல்ல முடியுமா?”
கண்களில் திமிரோடு ரே தங்களது பரிசோதனை ஒவ்வொரு படியாக எப்படி முன்னேறியது என்று சொல்லத் தொடங்கினாள்.
மனதே உடைந்து அமர்ந்துவிட்டாள் மீரா. இத்தனை முயற்சிகளும் பாடுகளும் கடைசியில் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே.
முதலில் ரேவின் மாதிரிகள் சோதிக்கப்பட்டது ரேச்சலின் தலையீடாக இருக்கலாம் . ஆனால் போலி சென்ட்டை இடம் மாற்றி மீராவை திசை திருப்பி முயற்சித்தது இந்த கண்ணன் தானே.
ஆனால் சஷ்டிக்கோ இன்னொரு அதிர்ச்சி. அவர்களது சோதனையின் ஸ்டெப்சை அப்படியே அச்சுப்பிசகாமல் மைக்கிலிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள் ரே. இது எப்படி சாத்தியம்?
அடுத்து சில நிமிடங்களில் கண்ணனைத் தனியான இடதிற்கு மடக்கி அழைத்து வந்த சஷ்டி சீறினான்.
“கண்ணா… அந்த திருட்டுக்கு நீதான் காரணமா? ஏண்டா இப்படி செஞ்ச” சஷ்டி சீர..
“திருட்டா… “ என்றான் கண்ணன் புரியாத பாவனையில்.
“அண்ணா… நான்தான் அந்த சென்ட்டை மாத்தி வச்சேன்னு மீராக்கா கிட்ட சொல்லிட்டேன்”
“மீராக்கு தெரிஞ்சுடுச்சா… அப்ப நானும் உண்மையை ஒத்துக்குறேன். எனக்கு தோல்வியே பிடிக்காது. அதுவும் இந்தக் காட்டுபய கிட்ட தோத்துப் போறது என்னால டைஜெஸ்ட் பண்ணவே முடியல. இவன் தோல்வி அடையணும், அதுக்கு மீராவும் தோல்வி அடையணும்னு முடிவு பண்ணேன்”
“பிங்குவோட துணையோட ஒரிஜினல் சென்ட்டு பாட்டிலை மாத்தி போலி பாட்டிலை வச்ச. நீ அனுப்பினதா சொல்லிட்டு என்னை சந்திக்க வந்த பெர்ஃப்யூமர் கிட்டதானே டூப்ளிகேட் சென்ட்டத் தந்த” சீறினாள் மீரா.
“மீரா மீரா மீரா… என்னை மாதிரி ராஜதந்திரியோட அறிவைப் புரிஞ்சுக்காததுதான் இப்ப நீ பாடு பயங்கரமா தோல்வி அடைஞ்சதுக்குக் காரணம்
பிங்கு மாதிரி ஒரு கத்துக்குட்டி டூப்ளிகேட் பாட்டிலை வச்சதோட என் வேலை முடிஞ்சதுன்னு நினைக்கிறியா? இல்லவே இல்லை. பிங்குவோட லேப்டாப்பை சரி பண்ணும்போது அதில் ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணிட்டேன். அதில் நீ என்ன என்டர் பண்ணாலும் என்னால படிக்க முடியும். நீ எழுதின ஃபார்முலா எல்லாம் உக்காந்த இடத்திலேயே என் மடியில் வந்து விழுந்துச்சு.
ஸ்டெப் பை ஸ்டெப்பா நீ பண்ண முயற்சியை அப்படியே ஒரு டாக்குமெண்ட்ல காப்பி பண்ணிட்டு ரேச்சல்ட்ட ஒரு போன்தான் பண்ணேன். அதுக்கு பரிசா ரேணுவே கிடைச்சுட்டா”
“ஏண்டா ஒரு பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா அதுக்குப் பழி வாங்க இந்த அளவுக்கா போவ… அவளோட அடையாளத்தையே மறைக்க துணை போயிருக்க… இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா” எரிச்சலாய் சொன்னான் சஷ்டி.
“என்னை மாதிரி அழகும், அறிவும், தகுதியும் நிறைஞ்ச ஒருத்தனை மறுத்தா அதன் விளைவுகள் என்னவாகும்னு நினைச்சுப் பாத்திருக்கணும். ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும் வேண்டாம்னு சொல்றதுக்கும் எனக்கு மட்டுமே உரிமை இருக்கு”
“நீ என்ன சொன்னாலும் அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு பொண்ணுங்க போயிடணுமா… உன் அழகு தகுதி எல்லாம் ஹீரோ மாதிரிதான் கண்ணா இருக்கு. ஆனால் உன் மனசு வில்லத்தனமா இருக்கு. அதனாலதான் வில்லனோட முடிவும் தோல்விதான்”
புரியாமல் பார்த்தான் கண்ணன்.
அதற்குள் அங்கிருந்தவர்களை நோக்கிக் கைதட்டி கவனத்தைத் திருப்பினார் நரேஷ்.
“சொல்லுங்க மைக்கேல், ரேச்சலோட மகள் ரேணுதான் இதில் ஜெய்ச்சாங்கன்னு சொல்லிடலாமா”
“உங்க ஆசைப்படி நானே ரிசல்ட்டை எல்லார் முன்னாடியும் ஆனவ்ன்ஸ் பண்ணிடுறேன்
இந்த அளவுக்கு, கிட்டத்தட்ட முக்கால்வாசி ஒரிஜினல் பெர்ஃப்யூம கண்டுபிடிச்சுட்டாங்க ரேணு, ரேச்சல் டீம். இருந்தாலும் முழு கிணறைத் தாண்டலையே… எனவே இந்த முயற்சி இன்னும் முழுமை அடையலன்னு சொல்லலாம்.
ஆனால் மீரா அண்ட் சஷ்டி டீம் எப்படி இந்த அளவுக்கு துல்லியமா இந்த பார்முலாவைக் கண்டுபிடிச்சாங்கன்னு என்னால வியக்காம இருக்க முடியல. நானறிஞ்ச ராஜீவ் ஒரு தனித்துவமான மனிதர். அவரோட ஐடியாக்கள் எல்லாமே ஒரு எல்லைக்கு உட்பட்டது கிடையாது. ஏன்னா அவர் ஒரு படைப்பாளி, புது புது வாசனைகளையும் வழிமுறைகளையும் உண்டாக்கியவர். அவரோட ஐடியாவைத் துல்லியமா கண்டுபிடிச்ச மீராவோட டீம் வெற்றி பெற்றதா அறிவிக்கிறேன்”
புன்னகையில் விகாசித்த மீராவின் கரங்கள் ஒருபுறம் அன்னையையும் மறுபுறம் சஷ்டியையும் இறுக்கிக் கொண்டது.
“இதை நான் ஒத்துக்க முடியாது” கிறிச்சிட்டாள் ரேச்சல்.
“இந்தத் துறையைப் பத்தின அறிவே இல்லாத மீரா எப்படி ஃபார்முலா படி தயாரிக்க முடியும். ராஜீவ் அவகிட்ட பார்முலாவைத் தந்திருந்தால் மட்டுமே இது பாசிபில். உண்மையை சொல்லு மீரா ராஜீவ் முன்னாடியே உனக்கு பார்முலாவைத் தந்திருந்தார்தானே”
“ஆமாம் தந்துட்டார்” என்றாள் மீரா கூலாக
“அதானே பார்த்தேன். இவ அழுகுணி ஆட்டம் ஆடிருக்கா… கண்டுபிடிச்சதும் இவகிட்ட தந்திருக்கார்”
“ஆனால் உன் வாக்குமூலப்படி நான்தான் யாரோவாச்சே… இந்த யாரோ ஒரு பொண்ணு கிட்ட ராஜீவ் எப்படி கண்டுபிடிச்சதும் பார்முலாவை ஷேர் பண்ண முடியும்?”
“அது… அது வந்து… நீ திருடியிருப்ப… “
நரேஷ் முகம் சுளித்தார் “ரஞ்சித் இந்தப் பெண்மணி உண்மையை சொல்றாப்ல தெரியல… நீ சொல்றியா இல்ல நானே சொல்லட்டுமா” என்றார் கடுமையான குரலில்.
சுஷ்மாவை குற்ற உணர்வுடன் பார்த்துவிட்டுத் தலைகுனிந்த ரஞ்சித் மெதுவாக சொன்னார் “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க ரேணு என்னோட பொண்ணுதான்”
“உன் தம்பி மேல அநியாயமா சுமத்தின பழியைப் பத்தியும் இப்பவே சொல்லிடு” என்றார் நரேஷ் இரும்புக் குரலுடன்.
“ரேச்சலுக்கும் எனக்கும் பிறந்தவதான் ரேணு. எங்க உறவை வெளிப்படையா அறிவிக்க முடியாததால ராஜீவ் அவளைத் தன் மகளை மாதிரி பார்த்துக்கிட்டான்”
“இந்த ஏமாற்று வேலையைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவு உங்கப்பா முட்டாள்ன்னு நினைச்சியா…
ராஜீவின் குடும்பம் பாரிஸ்ல இருக்குனு எனக்கு முன்னாடியே தெரியும். ஆனால் அவங்களை ஏத்துக்க மறுத்ததுக்கு முழுக்க முழுக்க என்னோட வறட்டுப் பிடிவாதம் மட்டுமே காரணம். ஆனால் ரெண்டு பொண்ணுங்க ராஜீவின் பெண் தான்தான்னு வந்து நிக்கும்போது உண்மையைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நான் விவரம் தெரியாதவன் இல்லை.
மீராவோட பேச்சில் அவளுக்கும் ராஜீவுக்கும் இருந்த உறவு ஒரு தந்தை மகளோட பாசப்பிணைப்பா தெரிஞ்சது. ஆனால் ரே… அவளோட பேச்சில் வெளிப்பட்ட ராஜீவ் ஒரு அன்பான மனிதனாத்தான் தெரிந்தான். தொழில் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகிட்டது, சில பொம்மைகள் வாங்கித் தந்தது, சில இடங்களுக்கு அழைத்துப் போனதைத் தவிர ராஜீவ் ஒவ்வொரு சமயத்திலும் உன் மகளுக்கு ஒரு வழிகாட்டியாத்தான் இருந்திருக்கானே தவிர தகப்பனா இல்லை.
உனக்கும் ரேச்சலுக்குமான நிழலான உறவை வெளிப்பாடுதாம இருந்ததைத் தவிர ராஜீவ் வேற எதுவும் தவறு செய்ததா நான் நினைக்கல. உங்க உறவைக் காட்டிக் கொடுக்காத ஒரு தம்பிக்கு நீ பரிசளிச்சது என்ன? அவனோட குடும்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க விடாம செஞ்சது. உன்னோட பொண்ணை அவனோட பொண்ணுன்னு தவறா உலகத்துக்குக் காட்டி ராஜீவுக்கு அவப் பெயர் உருவாக்க நினைச்சது. உனது பதில் நன்றி என்னை ரொம்பக் காயப்படுத்திடுச்சு. அதற்கான தண்டனை உனக்கு விரைவில் கிடைக்கும்.
இது என் ரெண்டு பேத்திகளுக்கும் நான் தந்த டெஸ்ட். ராஜீவின் மகள் எனது டெஸ்ட்டில் பாசாயிட்டா. உன் மகள் உன்னைப் போலவே குறுக்குவழியில் ஜெயிக்க நினைச்சதுதான் தப்பு
மீரா ராஜீவின் மகள்ன்னு உங்க எல்லார் முன்னாடியும் அறிவிக்கிறேன். பெர்ஃப்யூம் நிறுவனத்தின் சட்டபூர்வமான வாரிசு மீராவும் என் மருமகள் சுமித்ராவும்தான்.
ரேச்சல் வேற நிறுவனத்தில் தனது பணியைத் தொடரலாம். ரே… மீரா விரும்பினால் அவளது நிறுவனத்தில் தொடரலாம். ஆனால் ரேவும் எனது பேத்தி என்பதால் அவளுக்கு அவளது தகப்பனின் சொத்தில் இருந்து ஒரு பகுதி தரப்படும்”
சுஷ்மா அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ மருத்துவர் அவளுக்கு முதலுதவி அளித்தார்.
ரே அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்துவிட்டாள் “மாம், டேடி என் அப்பா இல்லையா… இவர்தானா என் அப்பா… “ விம்மினாள்.
“ஒரு தடவை கூட அவர் என்னை வேறாளா நினைச்சதில்லை. ஆனால் நீ பணத்துக்காகவும் பதவிக்காகவும் செஞ்ச வேலை ரொம்ப கீழ்தரமா இருக்கு” என்று சீறினாள் ரே.
“மீரா நான் தோத்துட்டேன் மீரா. நீதான் அப்பாவோட உண்மையான வாரிசு. தாத்தாவோட உண்மையான பேத்தி”
“குழந்தை நீயும் என்னோட பேத்திதான்”
“இருந்தாலும் முறையான உறவுக்குப் பிறக்கலயே தாத்தா… “ கண்ணீர் வழிந்தது ரேவின் கண்களில்.
“பெற்றோர் செஞ்ச தவறுக்குப் பிள்ளைகள் என்ன செய்வீங்க” என்று தன்னை சமாதானப் படுத்திய சுமித்ராவின் மடியில் படுத்து ஓவெனக் கதறினாள் ரே.