Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’

சாரி ஜான்…. இந்தக் கேவலத்தை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு மண்டகப்படியை அரேஞ் செய்துட்டு வரதுக்குள்ள தாமதமாயிடுச்சு. காதம்பரி விழாவுக்குப் போறதைத் தடுக்கக் கால் பண்ணேன். அவ அட்டென்ட் பண்ணல. செல்லையும் ஆப் பண்ணிட்டா”

 

“நான் உங்களைப் பத்தி அவ கிட்ட விசாரணை செய்துட்டு இருந்தேன். அந்த சமயம் உங்க அழைப்பு வந்ததும் அவளுக்கு எடுக்க சங்கடமா இருந்திருக்கும்” என்று சூழ்நிலையை விளக்கினாள் கல்பனா.

 

“ஆனால் உன்னையும் எங்களால் ரீச் பண்ண முடியல” என்றான் ஜான் குற்றம்சாட்டும் தொனியில்.

 

“என் நேரம். நேத்து என் பையன் போனைக் கீழே போட்டுட்டான். இன்னைக்கு அது சுத்தமா வேலை செய்யாம சதி பண்ணிருச்சு”

 

“சரி விடுங்க எல்லாம் ஒரே சமயத்தில் சேர்ந்து இன்னைக்குப் பழி வாங்கிருச்சு”

 

 

“வம்சி….. இந்த புரளியைக் கிளப்பினது அந்த லில்லியா இருக்குமோ. அவளுக்குத்தான் விளம்பர நிறுவனங்களோட தொடர்பு இருக்கு“ சந்தேகமெழுப்பினாள்  கல்பனா.

 

“பேயை சொல்லிட்டு, கூட சேர்ந்திருக்கும் பிசாசை விட்டுட்டியே”

 

“அமர்நாத்தா… “

 

“அவனேதான். லில்லி என்னைக் கல்யாணம் செய்துட்டு செட்டில் ஆகத் திட்டம் போட்ட மாதிரி அவனுக்குக் காதம்பரியைக் கல்யாணம் செய்துட்டு செட்டில் ஆகத் திட்டம். இந்த மாதிரி ஒரு குழப்பம் வந்தா நீ மானத்துக்கு பயந்து ஜகா வாங்கிடுவ… குழம்பின குட்டையில் மீன் பிடிக்கலாம்ன்னு ஒரு எண்ணம்”

 

காதம்பரியின் புறம் திரும்பினான் வம்சி.

 

“இதைப் போல ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததுன்னு தெரிஞ்சு நீ கிளம்புறதுக்குள்ள உன்னைப் பிடிச்சுடணும்னு வேகமாய் கிளம்பி வந்தேன். ஆனால் புரளி தொடங்கின இடத்தைக் கண்டுபிடிச்சு. அவங்க மூவ் என்னவா இருக்கும்னு யோசிச்சு நமக்கு பாதகம் வராத மாதிரி அவங்களை அடிக்க ஏற்பாடு செஞ்சேன். இந்த வேலைகளில் பிஸியா இருந்ததில் உங்களை அழைக்க வர முடியல. தவிர இந்த சமயத்தில் நான் காதம்பரியை அந்த இடத்தில் சந்திச்சால் விஷயம் எந்த திசையில் போகும்னு சொல்ல முடியாது. நல்லவேளை அதுக்குள்ள ஜான் உங்களைக் கூட்டிட்டு வந்துட்டான்.”

 

“அவங்களைப் பத்தி போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணிங்களா”

 

“அதுமட்டுமில்லை இனிமே அமர்நாத் அண்ட் லில்லிக்கு விளம்பரத்துறையில் வாழ்க்கை அஸ்தமனமாக ஏற்பாடும் பண்ணியாச்சு. இனி அவங்க வேற பொழைப்பை பார்க்க வேண்டியதுதான்.”

 

அதுவரை அமைதியாக இருந்த காதம்பரி வாயைத் திறந்தாள்.

“கடைசியில் நான் பயந்த மாதிரியே ஆயிருச்சு வம்சி”

 

“காதம்பரி…”

 

“எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் உங்க ப்ராஜெக்ட் வாங்கினேன். ஆனால் கடைசியில்…. உங்க கூட என்னமோ பகிர்ந்துதான் ரூபி ப்ராஜெக்ட் வாங்கினேன். அதைப் போலத்தான் மத்த நிறுவனங்களின் விளம்பரத்தையும்  வாங்கிருப்பேன்னு எவ்வளவு சுலபமா சொல்லிட்டாங்க”

 

“செர்ரி”

 

“கேட் ஒரு நெருப்புன்னு யாரும் தள்ளி நிக்க மாட்டாங்களே, இனி நான் எந்த கம்பனியை அப்ரோச் பண்ணாலும் என்கிட்டே வேற எதையோ எதிர்பார்ப்பானே. எனது ஆட் நிறுவனத்தில் வேலை செய்றவங்களுக்கும் இதனால் மதிப்பு குறையும். என்னைக் கேவலமா நினைப்பாங்க. மெதுவா வெளிய போய்டுவாங்க”

 

“எதை எதையோ கற்பனை பண்ணிக்காதே ஹனி..”

 

“உங்க கூட பழகும்போது இது வெளியில் தெரிஞ்சா உங்களைக் கவர்ந்துதான் இந்த ப்ரஜெக்ட் பிடிச்சதா சொல்வாங்கன்னு நினைச்சேன். ஆனால் எங்க அம்மாவையும் அப்பாவையும் கூடத் தரம் தாழ்ந்து பேசுவாங்கன்னு நினைக்கல வம்சி”

 

“பெண்ணை சுலபமா வீழ்த்தும் ஆயுதம் என்ன தெரியுமா கேரக்டர் அசாசினேஷன். அவளைப் பத்தி அவதூறு பரப்பினால் அவள் மனதளவில் தளர்ந்து அந்த இடத்தை விட்டே மறைஞ்சுடுவா. அந்த ராமனின் மனைவி சீதை கூட கேவலமான நாக்குக்குத் தப்பல. ஆனால் இந்தப் பரதேசிங்களுக்கு உண்மையை நிரூபிக்க நீ தீக்குளிக்க நினைக்காதே. வார்த்தைகளை தூசியாட்டம் தட்டி விட்டுட்டு போயிட்டே இரு.

 

ஒரு மூன்றாம்தர ஆள் வாய்க்கு வந்ததை பேசினால் அது உண்மையாயிடுமா… மீடியா எந்த அளவுக்கு வேகமா முன்னேறுதோ அந்த அளவுக்குத் தனி மனிதனையும் அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பத்தி செய்திகளைப் பரப்புறதும் அதிகமாயிடுச்சு. இது உண்மையா பொய்யான்னு உறுதியா தெரியாமலேயே மத்தவங்களும் ஷேர் பண்றாங்க”

 

“ஆனாலும், உங்க உறவு பொய்யில்லையே” என்றாள் கல்பனா இடையிட்டு.

 

“எங்க உறவு பொய்யில்லை, ஆனால் அதுக்காக இந்த ப்ராஜெக்ட்டை காதம்பரிக்குத் தரணும்னு அவசியமில்லை. எனக்குக் காதம்பரியின் அன்பு கிடைக்குறதுக்கு முன்னாடியே முழு மூச்சா இருந்தது எனது நிறுவனம். இவளை ஒரு முறை பார்த்ததும் ரூபி ப்ராஜெக்ட்டைத் தாரை வார்த்து ரிஸ்கியான ஒரு மூவ் எடுக்கற அளவுக்கு நான் மனசைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன் இல்லை”

 

உஷ்… என்று அனைவரையும் அமைதிப் படுத்தினான் ஜான்.

 

“ரெண்டு பேரும் ஒரு உண்மையை உங்க வார்த்தைகள் மூலம் உறுதிப் படுத்துங்க… கேட்டுக்கும் உங்களுக்கும் தொழில்முறை என்ற எல்லைக் கோட்டை தாண்டி ஒரு உறவு இருக்குறது  உண்மையா”

 

இருவரும் தப்பு செய்த பிள்ளைகளைப் போல பதில் சொல்லாமல் ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வம்சி முதலில் தெளிந்தான்.

 

“ஆமாம்… இருக்கு… ஐ லவ் ஹர். அதை சொல்ல நான் ஏன் வெட்கப்படணும்“

 

“அப்பறம் ஏன் மறைச்சிங்க? அவ கூட டைம் பாஸ்க்காக பழகினிங்களா?” கடுமையாகக் கேட்டாள் கல்பனா. வம்சி பதில் சொல்லவில்லை. ஆனால் அவனைக் குற்றம்சாட்டுவதைப் பொறுக்க முடியாத காதம்பரி கல்பனாவைத் தடுத்தாள்.

 

“அவரைத் தப்பு சொல்லாதே… வம்சி எத்தனையோ தடவை கல்யாணம் செய்துக்கலாம்னு இன்டேரக்டா சொன்னார். ஆனா நான்தான் சம்மதிக்கல”

 

“உனக்கு வம்சியை மயக்கி இந்த ப்ராஜெக்ட் வாங்கிட்டன்னு ஊரே சொல்வாங்கன்னு ஒரு எண்ணம். உன்னோட கம்பனிக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தயாராயிட்ட அப்படித்தானே”

 

ஜான் கேள்விக் கேட்டான் “அதை உன் எம்ப்ளாயிஸ் செய்வாங்களா? அவங்களுக்கு சில ஆயிரங்கள் அதிகமா சம்பளம் வந்தா அடுத்த கம்பனிக்குத் தாவிடுறாங்க இல்லையா. அதைத் தப்புன்னும் சொல்ல முடியாது. இப்ப என் முன்னேற்றத்துக்காக நான் வேற நிறுவனம் ஆரம்பிச்சுட்டுப் போகலையா. அவங்கவங்க தங்களோட வாழ்க்கையைப் பார்த்துக்குவாங்க கேட். நீயும் அதிகமா யோசிக்காம உன் வாழ்க்கையைப் பாரு”

 

அவன் பேசியதில் காதம்பரியிடம் சிறு தெளிவு.

 

“இதுவரை எப்படியோ இருந்திங்களோ எங்களுக்குத் தெரியாது… ஆனால் இனிமே நீங்க ரெண்டுபேரும் இந்த மாதிரி வாழுறதை எங்களால் அனுமதிக்க முடியாது. நாங்க யாரு அனுமதிக்கன்னு கேள்வி கேட்க மாட்டிங்கன்னு நம்புறோம். கேட், அவளுக்கு யாருமே இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கா. ஆனால் நானும் கல்பனாவும் பூமியை சுத்துற நிலா மாதிரி அவளை சுத்திட்டே இருக்கோம். வம்சி இனிமே, எங்க பொண்ணு கூட வாழணும்னா முறைப்படி கல்யாணம் செய்துக்கோங்க” என்றான் ஜான்.

 

அவன் விட்ட இடத்திலிருந்து கல்பனா தொடர்ந்தாள். “இப்போதைய சூழ்நிலையில் காதல் மட்டும் போதுமானதா உங்க ரெண்டு பேருக்கும் தோணலாம். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட உறவில்லைன்னா உண்மையான அன்பு கூடத் தவறா சித்தரிக்கப்படும். அதை ஆம்பளைங்க  ஈஸியா துடைச்சுப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஆனால் இதுக்கு சம்மதிச்ச பெண்களைத்தான் சமுதாயம் குற்றம் சாட்டும்.

 

இப்ப கேட் உங்க மனைவியா இருந்திருந்தா வம்சிகிருஷ்ணாவின் மனைவியை படம் எடுத்து எல்லாருக்கும் அனுப்பும் துணிச்சல் எவனுக்காவது வந்திருக்குமா? ரூபி நெட்வொர்க் ஓனர் வம்சி மாளிகை மாதிரி வீட்டை விட்டுட்டு மளிகை சாமானை வாங்கிட்டு ரகசியமா எதுக்கு சந்திக்கணும்? ரெண்டு பேரும் கைகோர்த்தே ஷாப்பிங் போலாமே.

கேட் நீயும் இந்த மாதிரி பயந்துட்டு அந்த இடத்தை விட்டு ஓடி வராம ஆமாண்டா என் வீட்டுக்காரர் கூட ஊர் சுத்தினேன்னு தலை நிமிர்ந்து சொல்லிருக்கலாம்”

 

“ஆனால் அப்பறம் இந்த காண்ட்ராக்ட் கூட வம்சியோட காதலிக்குத் தந்ததாத் தானே சொல்வாங்க” என்றாள் காதம்பரி ஆதங்கத்துடன்.

 

“சொல்லிட்டுப் போகட்டுமே…. இப்ப ரொம்ப கேவலாமால்ல சொல்றாங்க. இதை விடவா அது பெரிய அசிங்கம். ஆமாண்டா என் கணவரோட கம்பனிக்கு நான் ஆட் செய்றேன்னு சொல்லு.

 

நம்மைக் குற்றம் சொல்றவங்க எல்லாரும் உத்தமன் இல்லை. இந்தத் திருமணத்தை நீ மறுத்தா இனி தொழில் முறையில் சந்திக்கும் பலபேர் வம்சியா மாற நினைப்பாங்க. நீ மறுத்தா உன் மேல சேறை வாரி இறைப்பாங்க. அதை உன்னால தாங்க முடியுமா?”

 

கேட் முகத்தில் கலக்கம்.

 

“அவளைக் கஷ்டப்படுத்தாதிங்க கல்பனா. அவ தொழிலில் முன்னேறணும்னுற  வெறி வேற எதையும் சிந்திக்க விடலை. அதுக்காகத்தான் நானும் அடிக்கடி காதம்பரியை சந்திச்சு, பழகி வாழ்க்கையில் அவ மறந்திருந்த குடும்ப வாழ்க்கை பத்தின ஆசையைத் தூண்டினேன். அவ சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும்னு விரும்பினேன். இன்னைக்கு இல்லைன்னாலும் சில மாதங்கள் கழிச்சு நடந்திருக்கும்”

 

“வம்சி, சில சமயம் ஸ்ட்ராங்கா சொன்னால்தான் நம்ம கருத்து எடுபடும். கேட் சென்டிமென்ட், பாசம் எல்லாத்தையும் மனசில் புதைச்சு வச்சுகிட்டா. அவளுக்கு உறவுகள் மேல பயம். இருபது வயசு கூட நிரம்பாத பெண்ணைத் தலை மூழ்கிட்டுப் போன அண்ணன் இருந்திருந்தா நான் கூட அப்படித்தான் இருந்திருப்பேன். கல்யாணம் உறவும் நிலைக்காம போயிட்டான்னு பயம். நீங்கதான் அவ மனசில் நம்பிக்கை தரணும்.

 

கேட், நான் திருப்பித் திருப்பி சொல்றேன். உனக்காக உன் வாழ்க்கையை வாழு. வம்சி மாதிரி ஒரு அருமையான கணவன் கிடைக்கிறது கஷ்டம். இந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டா உன்னை மாதிரி முட்டாள் வேற யாருமில்லை”

 

கேட்டின் அமைதி அவள் நல்ல முடிவுக்குத் தயாராகிவிட்டதை சொன்னது.

 

“நாங்க கிளம்புறோம். சீக்கிரம் மனசுவிட்டுப் பேசிட்டுக் கல்யாணத் தேதியை  ரெண்டு பேரும் சொல்லுங்க”

 

அவர்கள் கிளம்பியதும் காதம்பரியிடம் வந்தான் வம்சி.

 

“மை ஸ்வீட் செர்ரி உன் மனசில் வேற என்ன குழப்பம் ஓடுது? சொல்லு… இன்னைக்கு மனசு விட்டுப் பேசிடலாம்”

 

“வம்சி… உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் க்ளோஸா பழகின ஒரே ஆண்மகன் நீங்கதான். ஆனால் ஒரு நல்ல மனைவியா இருக்க முடியுமான்னு தெரியலயே”

 

“அது ஏன்?”

 

“என் வீட்டைப் பார்த்திங்கல்ல… நான் என்னை கவனிச்சுக்குறதே பெரிய விஷயம். அதில் உங்களையும் பார்த்துட்டு. அதுவும் கல்யாணம்னா பின் தூங்கி முன் எழணும், உங்க ஷூ, சாக்ஸ் முதற்கொண்டு எடுத்து வைக்கணும், முக்கியமான நாளை நினைவு வச்சுட்டு விருந்து சமைக்கணும், சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிட்டு வரணும், உங்க மனசு கோணாம நடக்கணும் ப்ளா… ப்ளா… ப்ளா… இதெல்லாம் என்னால சரியா செய்ய முடியுமான்னு தெரியல வம்சி”

 

“நீ எந்த காலத்தில் இருக்க…. அந்த காலத்தில் ஆண்கள் வேலைக்கு போனாங்க. பெண்கள் வீட்டுத் தலைவியாய் இருந்தாங்க. சோ ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் அந்த காலத்து மக்கள் மனநிலைக்குத் தகுத்த மாதிரி போட்டாங்க. இதை எல்லாம் செய்யணும்னு நான் சொன்னால் பெண்கள் சங்கத்தில் எங்களைத் தூக்கிப் போட்டு மிதிச்சுடுவாங்க”

 

“அதுமட்டுமில்ல  நீங்க ஒரு சர்வாதிகாரி ஒரு ட்ரெஸ் கூட உங்க இஷ்டத்துக்குத்தான் உடுத்தணும்னு சொல்விங்க. சாப்பாடு, தூக்கம் எல்லாத்தையும் நீங்கதான் டிஸைட் பண்ணுறிங்க… இதெல்லாம் நினைச்சா உங்ககூட குடும்பம் நடத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு?”

 

“சந்தேகமா இருந்தாலும் செஞ்சேல்ல… லுக் செர்ரி நான் ஆபிஸ்ல ஒன்பது மணிக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணால் நீ எத்தனை மணிக்கு வருவ?”

 

“எட்டு அம்பதுக்கு”

 

“அது ரிஷப்ஷன்ல ரிப்போர்ட் செய்யும் டைம்…. ரூபி பில்டிங் இருக்கும் ஏரியாவை எத்தனை மணிக்கு ரீச் பண்ணுவ?”

 

“எட்டரைக்கு. லேட் ஆனால் உங்களுக்கு கோவம் வருமே”

 

“உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைச்சா அதை துளி கூட பிசகாம நிறைவேத்த நீ எடுத்துகிட்ட முயற்சி. ப்ராஜெக்ட் டைம்லைன் கேட்டால் நாலு நாளைக்கு முன்னாடி ப்ரிபேர் பண்ற. ஒரு ஒத்துவராத டைம்லைன் கொடுத்தாலும் ஓவர்டைம் செய்து வேலையை முடிக்கிற. ஒரு க்ளையன்ட் கூட நல்லபடியா உறவு மெயின்டைன் செய்ய எத்தனையோ தியாகங்கள் செய்ற நீ, உன் சுக துக்கங்களில் பங்கெடுத்து உன் கூடவே வர நினைக்கும் எனக்காக சில காம்ப்ரமைஸ் செய்துக்கக் கூடாதா?”

 

“காம்ப்ரமைஸ்ன்னா… நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டனும்னு அர்த்தமா?”

 

“இல்லை ஹனி… நீயும் இந்த ட்ரெஸ்தான் நான் உடுத்தணும்னு சொல்லு. என் சாப்பாட்டை நீ டிஸைட் பண்ணு. இந்த மாதிரி ஸ்வீட்டா பழி வாங்கு. செர்ரி  என்டையர்லி ஆப்போசிட்டான இரவு பகல், இருள் ஒளி இதெல்லாம் சேர்ந்து ஒரு அழகான நாளையே உருவாக்குது. நம்மால முடியாதா என்ன? இத்தனைக்கும் நம்ம ரெண்டு பேரும் அந்த அளவுக்கு ஆப்போசிட் கேரக்டர்ஸ் இல்லை. முக்கியமா நம்ம ரெண்டு பேரோட காதல் ரொம்ப ஸ்ட்ராங்.”

 

“என்னோடதுமா?”

 

“பின்ன… ப்ளைட்டில் என் கால் நீட்ட முடியாதேன்னு கவலைப்பட்டது, இப்ப கல்பனா என்னைக் கோவமா பேசினப்ப அவளை தடுத்தது, சோனாவைப் பார்த்துப் பொறாமைப் பட்டது, அமர்நாத் ஏர்போர்ட்டில் என்னை இளக்காரமா பார்த்தப்ப ரூபி பேரை சொல்லி மரியாதை வாங்கிக் கொடுத்ததுன்னு உன் காதலை உன்னையே அறியாமல் வெளிய காமிச்சுட்டேதான் இருந்த அதனாலதான உன்னை நெருங்கினேன்”

 

“நிஜம்மாவா… இந்த அளவுக்கு வெளிப்படையாவா இருந்திருக்கேன்”

 

“இன்னொன்னும் உண்டு…. நீ ராகி மாவு வாங்கி எனக்குப் பிடிக்கும்னு ராகிக்களி கிண்ட ட்ரை பண்ணது கூடத் தெரியும்”

 

“எப்படி வம்சி”

 

“பெங்களூர்ல இருந்து வந்த இரண்டாவது  வாரம், நீ கூட ஆபிஸ் வராம டேக்கா கொடுத்தியே…. அப்ப ஒரு நாள் கள்ளசாவி போட்டுத் திறந்து உன் வீட்டுக்கு வந்தப்ப ராகி மாவு, பாத்திரம் எல்லாம் கிட்சன்ல இருந்தது. இனிமே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதிரடியா பண்ணித்தான் உன் மனசை மாத்தணும்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்துட்டேன்”

 

 

சற்று மலர்ந்திருந்த காதம்பரியின் முகம் மறுபடியும் வாடியது “மனசை என்னதான் சமாதனம் செய்துட்டாலும்  நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துட்டா அமர்நாத் சொன்னது உண்மையாயிடும். ரூபில நான் கஷ்டப்பட்டு ஆட் வாங்கினது கூட நீங்க எனக்காகத் தந்ததாத்தானே சொல்வாங்க. எனது வெற்றியே கேள்விக்குறி ஆயிடுமே.”

 

“சூரியனைக் கையால் மறைக்க முடியுமா செர்ரி.. “

 

“அப்படின்னா…”

 

“அப்படின்னா… உனக்கு இண்டர்நேஷனல் அட்வர்டைஸ்மென்ட்ஸ் அவார்ட்ல நீ போன வருஷம் செய்த குளியல் சோப்பு ஆட் சிறந்ததா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு. நாளைக்கு நியூஸ்ல நீதான் டாப்பா இருக்கப் போற… “

 

“நிஜம்மாவா வம்சி…”

 

“நிஜம்மா…. காலைல உன்னைப் பார்க்க மீடியா ஆட்கள் குவிஞ்சுடுவாங்க. உன் மேல கொண்ட பொறாமையால்தான் இந்த மாதிரி ஒரு செய்தி பரவினதா இன்னொரு புரளி வரும். உன் அவமானம் துடைக்கப் படும். அதுக்கு நான் கேரண்டி…. “

 

“நீங்கதான் அதை செய்யப்போறிங்களா…”

 

“உனக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பில்லை ஹனி..”

 

“நாளைக்கு இன்டர்வியு எடுக்க வருவாங்க. நம்ம கல்யாணத் தேதியையும் சேர்த்தே சொல்லிடலாமா.. “ வெட்கத்துடன் சொன்னாள் காதம்பரி.

 

“அதுக்கு முன்னாடி நான் முறைப்படி ப்ரபோஸ் செய்யணுமே….

 

தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை. இதெல்லாம் நீ நிரூபிச்சு என் மனசில் நுழைஞ்ச அழகியே… என் வாழ்நாள் முழுவதும் என் கூடவே இருப்பியா… என் மனைவியா”

 

“வம்சி… “

 

“எஸ் செர்ரி.. வில் யூ மாரி மீ?”

 

“என் முரட்டு ஜிஞ்சர் பிஸ்கட்… நம்ம கல்யாணத் தேதியை சீக்கிரம் சொல்லு. உன் மனைவியாகும் நாளை எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கேன்”

 

“இதை இனிப்போட கொண்டாடலாமா…. பட் காதம்பரி மை ஸ்வீட் செர்ரி, நீ இருக்கும்போது வேற ஸ்வீட் எதுக்கு?”

 

“வம்சி திருட்டுப் பயலே… இப்படிப் பேசியே என்னைக் கவுத்துட்டிங்க… “

 

அவளும் தன் மனம் கவர்ந்த கள்வனின் தோளில் நிம்மதியுடன் சாய்த்துக் கொண்டாள். மின்னலும் மின்னலும் பின்னலாய்ப் பிணைந்து கொண்டது.

 

தங்கள் தொழிலே வாழ்க்கை என்றிருந்த ஈகோ பிடித்த இரு நபர்களையும்  அவர்கள் தொழில் நிமித்ததாலே சந்திக்க வைத்து, புத்திசாலித்தனதாலேயே ஒருவரால் ஒருவரைக் கவர வைத்து இன்று ஒருவரோடு ஒருவராய் இணைத்து வைத்தக் காதலைப் பற்றி  சும்மாவா சொன்னார்கள்

 

காதல் மாய உலகம்  சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

                      

காதம்பரியின் வார்த்தைகளிலேயே கதையை முடித்தால் இன்னுமும் பொருத்தமாக இருக்குமே….

 

“பலம், மானிடரை கவரும் விஷயம். அது காராய் இருக்கட்டும் இல்லை மனிதனாய் இருக்கட்டும்…. அழகு முதலில் ஈர்த்தாலும் பலமே கடைசி வரை நிலைத்திருக்க செய்யும்”

 

தங்களின் காதலின் பலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இணையும் இந்த இருவரின் சிறு சிறு வேற்றுமைகளையும் கூட  களைந்து அந்த பலமே இவர்களை இறுதிவரை இணைத்திருக்கும் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை.

 

 

சுபம்

1 thought on “தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை தவறிவிட்டாய் – 12வார்த்தை தவறிவிட்டாய் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல. திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது

நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 6நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 6

6. கபாடத்தில் ஒரு களவு   மதில் மேல் அந்த இடத்திற்கு வந்த பின்புதான் முடிநாகன் செய்த சமயோசிதமான யோசனையின் சிறப்பு இளையபாண்டியனுக்குப் புரிந்தது. முடிநாகனின் அனுபவ அறிவையும், கபாடபுரத்தின் கோட்டை மதிற்சுவர்களில் எங்கெங்கு எந்தெந்த நுணுக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பது பற்றி