Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 28

ராணி மங்கம்மாள் – 28

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள்

    • விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது கோபமாகவும் இருந்தது.

 

    • தன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை.

 

    • அரண்மனை வீரர்களை அழைத்து “எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள்! அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள்! மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்” – என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள்.

 

    • தப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.

 

    • ராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது.

 

    • அதே சமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு உறுதிப்பட்டு வந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும்கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன்.

 

    • “எப்படியும் பாட்டிக்குப் பின் நான் தான் ஆளப்போகிறேன்! இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜாக்கிரதை! ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள்! இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்!”

 

    • படைத் தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன் வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணி மங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான்.

 

    • சதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும் நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது.

 

    • விஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.

 

    • “மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க! மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க!” – என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது.

 

    • ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது. தான் எங்கே இருக்கிறாம்’ – என்று சுதாகரித்துக் கொள்ளவே சில விநாடிகள் ஆகின. படுக்கை அறையிலிருந்து வெளியே வர வாயிலருகே சென்றாள் அவள்.

 

    • அறைக்கதவு வெளிப்புறமாக அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கதவு வரை சென்றுவிட்டு ஏமாற்றத்தோடும் திகைப்போடும் தலை குனிந்தபடி மீண்டும் உள்ளே திரும்பிய ராணி மங்கம்மாள் அறை வாசலில் ஏளனச் சிரிப்பொலி கேட்டு மறுபடி திரும்பிப் பார்த்தாள்.

 

    • விஜயரங்கன் தான் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையில் முடி சூட்டப்பட்டிருந்தது.

 

    • “விஜயரங்கா! இதெல்லாம் என்னடா கோலம்? யார் அறைக் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுப் பூட்டியிருப்பது?”

 

    • “ஒன்றுமில்லை! சில நாட்களுக்கு முன் நீங்கள் எனக்குச் செய்த அதே உபசாரத்தை உங்களுக்கு இப்போது நான் திருப்பிச் செய்திருக்கிறேன். புரியும்படியாகச் சொல்வதனால் இந்த அறைக்குள் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த வயதான காலத்தில் அதிகச் சிரமம் வைக்கக்கூடாது என்பதற்காகச் சிறைச்சாலை இருக்கும் இடத்துக்கு உங்களை அனுப்பாமல் நீங்கள் இருக்கும் இடத்தையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டேன் பாட்டீ!”

 

    • “துரோகி! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! உன்னைப் பச்சிளம் பாலகனாக எடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.”

 

    • “இதே முறையில் நான் இருந்த இடத்திலேயே என்னை நீங்கள் சிறைப்படித்தினீர்களே, அது துரோகமில்லாமல் என்னவாம்?”

 

    • “வார்த்தையை அளந்து பேசு! உன் நாக்கு அழுகிவிடும்.”

 

    • “இனி உங்கள் சாபங்கள்கூடப் பலிக்க வழி இல்லை. அதிகாரம் இப்போது உங்களிடம் இல்லை. தலைவர்கள், படைகள், கோட்டை, கொத்தளம், ஆட்சி அத்தனையும் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு பேசினால் நன்றாயிருக்கும் பாட்டி!”

 

    • “அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தானடா சொந்தப் பாட்டியிடம் கூடப் பேசமுடியும்.”

 

    • “நான் அற்பனா வீரதீரனா என்பது போகப் போகப்புரியும் பாட்டி! இன்றைக்குத் தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது! விடிய விடமாட்டேன்.”

 

    • “இது அக்கிரமம்! நீ உருப்படமாட்டாய்.”

 

    • “இதில் எதுவும் அக்கிரமமில்லை பாட்டீ! இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடி சூட்டிக் கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு?”

 

    • ராணி மங்கம்மாள் அவனுக்கு மறுமொழி கூறவில்லை. சேற்றில் கல்லை வீசியெறிந்தால் பதிலுக்கு அது தன் மீது தான் தெறிக்கும் என்றெண்ணி அவனோடு பேசுவதைத் தவிர்த்தாள் அவள். விழிகளில் கண்ணீர் பெருக அவள் மீண்டும் தான் சிறை வைக்கப்பட்டிருந்த படுக்கை அறை முலையில் போய் அமர்ந்தாள். அவன் வெளியே எக்காளமிட்டுக் கைகொட்டி நகைத்தான். அந்த வஞ்சக நகைப்பைக் கேட்டு அவளுக்கு அடிவயிறு பற்றி எரிந்தது.

 

    • “பாட்டீ! ஞாபகம் வைத்துக் கொள்! நீ வைத்த கட்டுக்காவலில் இருந்து நான் தப்பி ஓடியது போல் நீ இங்கிருந்து தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தாலோ பின் விளைவுகள் மிகவும் விபரீதமாயிருக்கும்…” என்று அவளை உரத்த குரலில் எச்சரித்துவிட்டுப்போய்ச் சேர்ந்தான் விஜயரங்கன்.

 

    • முன்பொரு நாள் இதே விஜயரங்கனின் குழந்தைப் பருவத்தில் இவன் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுர உச்சியிலிருந்து தன்னைத் தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவது போல அதிகாலையில் கண்ட கெட்ட கனவு இப்போது ராணி மங்கம்மாளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது.

 

    • சுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப் பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கணையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்ட கொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.

 

    • தன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தைவிட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது. இப்படியே இன்னும் சில நாட்கள் தனிமையில் அடைபட்டுக் கிடந்தால் சித்தப்பிரமை ஏற்பட்டுப் புத்தி சுவாதீனமே போய்விடும் போலிருந்தது.

 

    • “வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செய்தும் எனக்கு இந்த கதியா? கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே! என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்? எனக்கா இந்தத் தண்டனை?” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பரும் நீரும்கூடத் தருவாரில்லை. இதுவரை தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையாண்டானிடம் படுகிறோமே என்ற எண்ணம் அவளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் இத்தனை பெரிய கிராதகனாக இந்த வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் நடந்தவற்றை அவளால் நம்பி ஒப்புக்கொள்ளக்கூட முடியாமலிருந்தது. ஆனால் நடந்ததோ நடந்திருப்பதோ பொய்யில்லை. நிஜம்தான் என்பதும் நிதர்சனமாகப் புரிந்தது. சில நாட்களுக்குப் பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் அதுவும் நிறுத்தப்பட்டது.

 

    • தனது சிறைக்குள் ராணி மங்கம்மாள் எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போயிருந்தாள். அவளுடைய ராஜ கம்பீரப் பார்வை மங்கியிருந்தது. முகத்தில் கருமை தட்டியிருந்தது. கண்கள் குழி விழிந்திருந்தன. அந்தப்புரத்தின் அந்த ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய சோக நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின. நம்பிக்கை வறண்டது.

 

    • விஜயரங்கனும் சிறையில் வந்து அவளைப் பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அநாதரவாக அநாதையாக அவள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே அவளைச் சரிபாதி கொன்று விட்டிருந்தது. இத்தனை கொடுமைகளை அடைய, தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.

 

    பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும்கூடத் தரலாகாது என்று கொடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறவே பயப்பட்டார்கள். இதில் தங்களுக்கு எதற்கு வீண் வம்பு என்று பேசாமல் இருந்தார்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 53

உனக்கென நான் 53 சன்முகம் மயங்கிவிழ சந்துரு “அப்பா” என தாங்கிபிடித்தான். அதற்குள் தன்னவனை காணாமல் வந்த அன்பு “மாமா” என ஓடிவந்தவள் தன் மாமனாரை பிடித்துகொண்டு “அப்பா வாங்க” என கத்தினாள். “என்னங்க பொண்ணுகத்துற சத்தம் கேக்குதுங்க” என்றார் பார்வதி.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழியோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?   திவான் : நான் போனதில்லை.   அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன்