Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

அத்தியாயம் – 18

“உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு”

“அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா ஏன் அவர்கிட்ட கல்யாணம் ஆனதை மறைக்கப் போறார்?”

“அதெல்லாம் இளவயசு வேகம் மீரா. நம்ம ஊரில் கூட பலபேர் பிள்ளைகள் காதல் கல்யாணம் செஞ்சது தெரிஞ்சதும் அடி உதைன்னு கிளம்புவாங்க… அதுவே ஒரு பத்து இருபது வருஷம் கழிச்சு பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது அன்னைக்கு நமக்கு இருந்த பகை உணர்ச்சி தேவை இல்லாததுன்னு தோணும். அதே மாதிரி ஒரு உணர்வு உங்க தாத்தா பாட்டிக்கும் வந்திருக்கலாம்”

“நான்தான் தாத்தா பாட்டின்னு சொல்லிட்டு இருக்கேன். அவங்க என்னைப் பேரப் பிள்ளைன்னு நினைக்கிற மாதிரியே தெரியலையே”

“அப்படித் தெரியாமலயா உன் பாட்டி உனக்குக் கல்யாணம் செய்யும்போது அவங்க சார்ப்பா தர ஒரு சோக்கர் செட் ரெடி பண்ணி உங்கம்மாவுக்கு போட்டோ அனுப்பிருப்பாங்க”

“என்ன சொல்றீங்க அங்கிள்”

“உன் பாட்டி அடிக்கடி உங்கம்மா கிட்ட பேசுறாங்க. அவங்களைப் பொறுத்தவரை உன்னையும் சின்ன ரேணுவையும் தன்னோட பேரப்பிள்ளைகளாவே நினைக்கிறாங்க”

“இதை நம்பவே முடியல அங்கிள்”

“எனக்கும்தான். அவங்களுக்கு உன் அம்மாவைப் பத்தின தப்பான கணிப்பு இல்லை… ஏதாவது உதவி செய்யனுமான்னு அடிக்கடி கேட்கிறாங்க போல”

“அவங்க மனசில் என்னதான் இருக்கு?”

“ நரேஷ் வீட்டுப் பெண்கள் எல்லாரும் என்ன நினைக்கிறாங்கன்னா… ராஜீவுக்கு ரெண்டு பெண்கள் கூட பழக்கம் இருந்திருக்கு. அந்த ரெண்டு பெங்களுக்கும் குழந்தைகள் இருந்திருக்கு. அதில் ஒருத்தர் மனைவி இன்னொருத்தார் துணைவி. எப்படி இருந்தாலும் பெரியவர்களிடமிருந்து மனைவிக்கு சட்டப்படி நிறுவனத்தின் வாரிசு உரிமையும், துணைவிக்கு ஆதரவும் கொஞ்சம் சொத்தும் உண்டு. அதில் உன் மேல இருக்கும் தனி பிரியத்தால் அவங்க உறவுக்காரப் பையன் ஒருத்தனுக்கு உன்னைக் கல்யாணம் செய்துத் தர விருப்பமான்னு கூட உன் பாட்டி உன் அம்மாகிட்ட கேட்டிருக்காங்க. சுமித்ரா இதைக் கேட்டு வானத்தில் பறந்துகிட்டு இருக்கா”

“ஓ மை காட். இதெல்லாம் மட்டும் தாத்தாவுக்குத் தெரிஞ்சா என்னாகும்”

“அவருக்குத் தெரியாமலயா உன் பாட்டி வாக்கு தந்திருப்பாங்க”

“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை அங்கிள். நான்தான் சட்டப்படி வாரிசு அதை நிரூபிக்கணும். எங்கம்மாதான் அவங்க மருமக… அதைத் தவிர அவங்க வீட்டில் பாக்கும் மாப்பிள்ளை எல்லாம் சமாதான முயற்சியாத்தான் பார்க்குறேன். அதில் எனக்கு உடன்பாடில்லை“

“சரி, அதுக்காகத்தானே உன் போராட்டம் எல்லாம். ஆனாலும் கண்ணன் விஷயத்தையும் கொஞ்சம் யோசி. உன்னைக் கல்யாணம் பண்ண எல்லா தகுதிகளும் நிறைஞ்ச ஒருத்தன்”

“அங்கிள் இந்த விஷயத்தில் என்னை தயவுசெய்து நீங்களோ அம்மாவோ கம்பல் பண்ணாதிங்க ப்ளீஸ்”

“கண்டிப்பா உன்னை கம்பல் பண்ண மாட்டோம்மா. ஏன்னா கல்யாணத்துக்குப் பின்னாடி வாழ்க்கை நடத்தப் போறது நீதான். எங்களோட கருத்தை உன்கிட்ட பகிர்ந்துகிட்டோம்”

“நீங்க பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி அங்கிள். இருந்தாலும் எனக்கு கண்ணன் மேல அவ்வளவா ஈடுபாடு இல்லை”

“அவன் கூட பேசிப்பாக்கலாமே மீரா. ஒண்ணு ரெண்டு சந்திப்புகளுக்குப் பின்னாடி உன் எண்ணம் மாறலாம்”

“எனக்கு அப்படித் தோணல… கண்ணன் கூட பேசின சில தடவைகள் கூட அவர் என்னமோ ஒரு அதிகாரத் தொனிலதான் என்கிட்ட பேசிருக்கார். ‘அந்தக் காட்டான் வேண்டாம் அனுப்பிடு, நான் வேற நல்ல பெர்ஃப்யூமர் தேடிட்டு இருக்கேன். அவனை வச்சுத்தான் உன் ஆராய்ச்சி நடக்கணும்னா அப்படி ஒண்ணு நீ பண்ணவே வேண்டாம்’ இப்படி பேசுற ஒருத்தர்கிட்ட என்னால எவ்வளவு அட்ஜஸ்ட் பண்ண முடியும் அங்கிள்”

“கண்ணனுக்கு சஷ்டியை அவ்வளவா பிடிக்காது மீரா. அதனால அப்படி நடந்திருக்கலாம்”

“எனக்கு அவர் விருப்பு வெறுப்பு பத்தித் தெரியாது அங்கிள். ஆனால் ஒண்ணு ரெண்டு தடவை மட்டுமே பார்த்திருக்கும் என்கிட்ட அவர் உரிமை எடுத்துக்கிறதும் அதிகாரம் செலுத்துறதும் பிடிக்கல. இதை அவர்கிட்ட சொல்லிடுங்க ப்ளீஸ்”

“உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது மீரா”

“இதனால என் மேல கோபமில்லையே”

“எனக்கு நீயும் ஒரு மகளைப் போல தான் மீரா… நான் கண்ணன் கிட்ட சமயம் பார்த்து உன் மறுப்பை சொல்லிடுறேன். சஷ்டி வெயிட் பண்ணிட்டு இருக்கான். உன் ஆராய்ச்சியைத் தொடரு”

 

மீரா நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தவர் நீண்ட பெருமூச்சு விட்டார். கண்ணன் தன்னைப் பற்றியும் தனது தகுதியைப் பற்றியும்  பெருமையாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இந்த மறுப்பு அவனை மிகவும் பாதிக்கும் என்றெண்ணியவாறே கண்ணனின் எண்ணை அழுத்தினார்.

அவர் நினைத்தவாறே கண்ணனின் கண்கள் மீராவின் மறுப்பை எண்ணி நெருப்பைக் கக்கியது. “என்னை ஒரு பெண்ணுக்கு எப்படிப் பிடிக்காமல் இருக்கும்?” அதுவும் அப்பா இவர்தான் என்று சரியான சான்று கூட அளிக்க முடியாத மீராவிற்கு என்னை மறுக்க எவ்வளவு தைரியம். மீரா நான் மறுப்பை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டேன்”

***

சஷ்டியும் மீராவும் தீவிரமான ஆராய்ச்சியில் இறங்கியிருந்தனர்.

“இதில் கண்டிப்பா ஒரு வேர் கலந்திருக்கு”

“எப்படி சொல்றீங்க”

“வேருக்கு ஒரு மண் கலந்த ஒரு தனியான மணம் இருக்கு. வெட்டிவேர் இருக்கே அதை எதில் கலந்தாலும் தெரியும்”

“வெட்டிவேர் நாங்க கூட யூஸ் பண்ணுவோம். இதில் வெட்டிவேர் கலந்திருக்குன்னு சொல்றீங்களா”

“இல்லை… ஆனால் ஒரு வேர் கண்டிப்பா இருக்கு. நம்ம இதுவரை கலந்திருக்கலாம்னு நினைச்ச பொருட்களை எழுது”

தனது கணினியைத் திறந்தவள் அதிலிருந்து ஃபைல் ஒன்றைத் திறந்து “ரோஜா, சந்தனம்…” சொல்லிக் கொண்டே வந்தாள். ஓரிடத்தில் நிறுத்தியவன்.

“கடைசியா சொன்ன பொருளைத் திரும்பப் படி” என்றான்…

“ஓரிஸ்”

“ஒரு டன் வேரை பக்குவம் செஞ்சு ரெண்டு கிலோ எண்ணை தயாரிப்போம். அதனால இது உலகத்திலேயே விலை உயர்ந்த ஒரு பொருள்ன்னு ஒரு நாள் சொன்னியே அதுதானே”

“ஆமாம் சஷ்டி… ஆனால் அதில் பூக்கள் கூட இருக்கு அதுவும் வாசமாவே இருக்கு. அது ஏன் ஒரு பூவா இருக்கக் கூடாது”

“கண்டிப்பா இருக்காது… வேருக்குன்னு தனி வாசம் இருக்கு. அந்த வாசம் இதில் இருக்கு. நீ சாம்பிள் வச்சிருக்குற பூவாசத்தையும், வேர் எண்ணையும் தா…” என்றான்

மீரா அவனிடம் தந்த இரண்டு சாம்பிள்களையும் முகர்ந்தவன் “நூறு சதவிகிதம் உறுதியா இது வேரை வச்சு செஞ்சதுதான்” என்றான்.

மும்பை, நரேஷின் லாஃப், இவர்கள் இருவரும் ஊட்டியில் ஒர்ரிஸ் வேர் கலந்திருக்கிறது என்று கண்டறிந்த அதே நேரம் ரேயிடம் தொலைப்பேசியில் ரேச்சல் உரையாடிக் கொண்டிருந்தாள்.

“அம்மா இந்த பிளாஸ்டிக் சர்ஜெரி எல்லாம் செஞ்சிருக்கணுமா… இந்த மூக்கு லிப்ஸ் ஷேப் எனக்கு பிடிக்கவே இல்லை” கண்ணாடியில் தனக்கே அன்னியமாய் தோன்றிய தனது உருவத்தைப் பார்த்தபடியே சில வாரங்களுக்கு முன் தான் செய்துக் கொண்ட சர்ஜரி பிடிக்காது தாயிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“உனக்கென்ன தெரியும் ரே… இந்தியாவில் உங்க பாட்டியோட பழைய போட்டோ பார்த்து அந்த முக ஜாடை உனக்கு அப்படியே இருக்கணும்னு பண்ணது”

“ஏற்கனவே நான் பாட்டி முகஜாடைன்னு நீ சொல்லுவியே”

“ஆமாம் ஆனால் கூர்ந்து பார்க்கணும். இப்ப கொஞ்சம் மாத்தி வடிவமைச்சதில் அப்படியே தெரியுது”

“அப்படி வடிவமைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?”

“அதை விடு, ஓரிஸ் கலந்திருக்கும்னு சொன்னியே அதைப் பத்தி மேற்கொண்டு விவரத்தைக் கண்டு பிடிச்சிங்களா?”

“ஓரிஸ் கண்டிப்பா கலந்திருக்கும்மா… எங்க டெஸ்ட் எல்லாம் அதை உறுதிப் படுத்திருக்கு. ஆனால் ஓரிஸ் வேரா இல்லை பூவான்னு கொஞ்சம் குழப்பம் இருக்கு”

“கண்டிப்பா இது ஓரிஸ் ரூட்தான். எப்போதும் ராஜீவ் ஒரு ஹை கிளாசை எதிர்பாக்குறவன். சோ… பூக்களை வச்சு செய்றதை விட ரூட்தான் யூஸ் பண்ணுவான்”

“இருந்தாலும் டிஸ்டிலேஷன் பிராஸஸ்ல ஒவ்வோரு மூலப் பொருட்களையும் பிரிச்சுப் பார்த்ததில் பூவா இருக்கும்னுதான் இங்க பெர்ஃப்யூமர் சொல்றாங்க”

“முட்டாள் நீயே ஒரு பெர்ஃப்யூமர் சிறந்ததா ஒரு பொருளை உருவாக்க நினைச்சா என்ன தேர்ந்தெடுப்ப…”

“ஐ அக்ரீ வித் யூ மாம்… ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு… மீரா இதெல்லாம் கண்டு பிடிச்சுடுவாளா”

“உனக்கே இந்த காம்ப்ளிகெடெட் சென்ட்டில் இவ்வளவு டவுட் இருக்கும்போது இந்த இண்டஸ்ட்ரி பத்தி எ, பி, சி, டி கூடத் தெரியாத மீரா என்ன கிழிக்கப் போறா.. பயங்கரமா தோத்துட்டு ஊரவிட்டு ஓடிப் போவா… “

“இப்பயே அதைத்தானே செஞ்சிருக்கா”

“ஆமாம் அவ ஊட்டிலேருந்து இன்னமும் வரலயா?”

“இல்லம்மா… அவளோட பாய் ஃப்ரெண்ட் கூட சுத்திட்டு இருக்கா”

“இருந்தாலும் அவளை லேசா எடை போடாதே… ராஜீவ் மூளை அவளுக்கு தப்பாம இருக்கு”

“அப்ப என்னோட அப்பாதான் மீராவுக்கும் அப்பாவா” அதிர்ந்து போய் கேட்டாள் ரே.

“சூ… தட் இஸ் நாட் அவர் டாபிக் ஆப் டிஸ்கஷன் நவ். நம்ம வேலையைப் பத்தி மட்டும் பேசு, நினை அதுதான் உனக்கு நல்லது” என்று மகளுக்குக் கட்டளையிட்டுவிட்டு அலைப்பேசியை அணைத்த ரேச்சல் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். கடைசியில் மீரா பதுங்கியது பாய்வதற்குத்தான் என்ற முடிவுக்கு வந்தவள் அடுத்தடுத்த வேலைகளை மளமளவென செய்ய ஆரம்பித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’

அத்தியாயம் – 9   மறுநாள் காலை எழுத்து, குளித்துக் கிளம்பி பெட்டி படுக்கையை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு ரெடியாகி நின்றாள் மீரா. மணி ஒன்பதாகியும் சஷ்டி வரும் சுவடே இல்லை. போன் வேறு வாய்ஸ் மெசேஜுக்கு நேரடியாக அவளை

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’

அத்தியாயம் – 2   “மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி பண்ண முடியும்னு நான் நம்புறேன்” என்று குமரேசன் சொல்லியே அனுப்பிருந்தார்.  முதல்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5 வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார்