ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 24’

 அன்று புதன்கிழமை. நாகம்மாள் ரொம்ப முகமலர்ச்சியுடன் இருந்தாள். கண்ணாடியைச் சீந்தாதவள் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறாள். தும்பைப் பூப்போன்ற வெள்ளைப் புடவையை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி சீராகச் சொருகிக் கொள்கிறாள். இன்று ஏது இவ்வளவு குதூகலம். இன்று சந்தை நாளென்றா, இல்லை, வாரந் தவறாது தான் சந்தை வருகிறது. அப்போதெல்லாம் இவ்வளவு ஆனந்தப் பெருக்கு ஏற்பட்டதில்லையே? பின்பு பூரிப்புக்குக் காரணமென்ன, மணியக்காரர் வருகிறார்! இத்தனை நாளாக அங்குமிங்கும் பார்த்து யோசனை சொல்லி வந்தவர் இன்று நேரிலேயே வருகிறார். அவராக வீடு தேடி வருகிறதென்றால் நாகம்மாளுக்கு அதைவிட சந்தோஷச் செய்தி வேறு இருக்கமுடியுமா? வாசல் பக்கம் போவதும், உள்ளே வருவதும், பொழுதைப் பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருந்தாள். அவளிடம் மட்டும் அமானுஷயமான சக்தி ஏதாவது இருந்தால், அப்போது அடிக்கும் மாலை வெயிலை மாற்றி காரிருள் மயமாகச் செய்திருப்பாள். ஏனென்றால் இருட்டினவுடன் வருவதாக மணியக்காரர் தெரிவித்திருந்தார்.

     முலாம் பூசிக் கொந்திருந்த இயற்கை தன் சௌந்தர்யக் கதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கிற்று. மரங்களின் உச்சியிலும் வீட்டுக் கூரையிலும் படிந்திருந்த தங்கச்சிவப்பு மெதுவாக மறைந்தது. இரவு தன் நீண்ட கரும்போர்வையை வாரி விரித்தது. இரவின் சாந்த மடியிலே பக்ஷ¢ ஜாதிகள் தலைசாய்த்தன. அந்த அமைதியான வேளையில் சித்திரப்பாவை போன்று நாகம்மாள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு சருகின் அழைப்புக்கும் சட்டெனத் திரும்புவாள். சிறு காற்றில் ஓலைகள் படபடக்கும் போது செருப்புச் சத்தம் என்று எண்ணி ஏமாறுவாள். அர்த்தமற்ற சத்தம் ‘ஹோ’ என எழும். திடுக்கிட்டு தலை நிமிருவாள். ‘கெட்டியப்பன் முன்னால் வந்திருக்கப்படாதா?’ என்று அவன் மேல் சலித்துக் கொள்வாள். இவ்வித விவரிக்க முடியாத ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “என்னைத்தான் திட்டப் போகிறாள்” என்று அவள் மனதைத் தெரிந்தவன் போலக் கெட்டியப்பன் குரல் கேட்டது. “எங்கள் முகத்திற்காக உங்களை இன்று ஒன்றும் செய்யமாட்டாள்” என்று முதலியார் தமாஷ் பண்ணினார்.

     நாகம்மாள் விளக்கை உயர்த்தி கதவை நன்றாகத் திறந்து, “வாங்க, வாங்க” என உபசரித்தாள். பாயை எடுத்து அவள் விரிக்கும் முன்பே, “இல்லெ, இல்லெ, வேண்டாம்” என்று முதலியார் தடுத்தார்.

     “உங்களுக்கு இல்லை – ஆனால்…” என்று மணியக்காரர் முகத்தைப் பார்த்து விட்டு நாகம்மாள் மறுபடியும் பாயை எடுக்கப் போனாள்.

     “எனக்குத் தெரியும். இதோ பாருங்க கட்டில் இருக்கிறது. அவர் உட்கார்ந்து கொள்ளட்டுமே” என்றார் முதலியார். “எங்குதான் உக்காந்தா என்னப்பா?” என்று பெரும் போக்காகக் கூறி மணியக்காரரும் கீழேயே உட்கார்ந்தார். மணியக்காரர் அவ்வறையின் ஒவ்வொரு மூலையையும் மேலும் கீழும் நோக்கியவாறு, “வெகுநாளைக்கு முன் வந்தது. பத்துப் பனிரண்டு வருஷமிருக்கும் இங்கு அடியெடுத்து வைத்து. அதற்கப்புறம் யார் வந்தார்கள், போனார்கள்? என்ன நாகம்மா, அந்த ஓரத்திலே சின்ன மாடக்குழி ஒன்று இருந்ததே, இப்போது மூடிவிட்டீர்களா?” என்று கேட்டார்.

     நாகம்மாள் என்னவோ யோசித்துக் கொண்டு நின்றாள்.

     கெட்டியப்பன் ஆச்சரியத்துடன், “உங்களுக்கு அதெல்லாம் எப்படி ஞாபகத்திலிருக்கிறது?” என்றான்.

     “இந்த ஆச்சரியத்தில் தான் பேசக்கூடத் தோன்றாது நிற்கிறதைப் பாருங்களேன்” என்று நாகம்மாளைச் சுட்டிக் காட்டினார் முதலியார்.

     “என்னது, என்ன?” என்று நாகம்மாள் இரண்டு மூன்று தரம் கேட்டாள்.

     மணியக்காரர் சிரித்து விட்டு, “அது என்னவோ சின்ன சங்கதி. என்ன நாகம்மா, நான் சீக்கிரமா இப்போது போயாக வேண்டும். யாராவது பார்த்தால் நாளைக்குச் சின்னப்பன் வந்ததும் என்னவாவது சொல்லி வைப்பார்கள். எனக்கெல்லாம் இங்கு என்ன வேலை என்று அவன் அப்படியும் இப்படியும் பேசுவான். நானும் சும்மா இருக்க மாட்டேன். கோபத்தில் கண்டபடி பேசி விட்டால் இன்னும் சங்கடம் தானே? இத்தனை தொல்லையில்லாமல் நடந்து கொள்வது நல்லதல்லவா? என்ன நான் சொல்வது சரிதானே” என்றார் அவளைப் பார்த்துக் கொண்டே.

     நாகம்மாள் தலையைக் குனிந்தபடி, “உங்களுக்குத் தெரியாததை, நான் என்ன அதிகம் சொல்லப் போகிறேன். எல்லாம் நீங்க சொன்னா செரி” என்றாள்.

     “காலையில் சின்னப்பன் வரப்போறானம். எனக்குத் தகவல் கிடைத்தது. அவசியம் நாளைக்கு வந்து விடுவான் என்று தான் நானும் நினைக்கிறேன். போய் பதினைந்து நாளைக்கு மேல் ஆகிறதல்லவா? தோட்டங்காடுகளை விற்க ஏற்பாடு பண்ண இவ்வளவு நாட்கள் போதாதா?” என்றார்.

     “என்ன ஏற்பாடு ஆகிவிட்டதா?” என்று திகைப்புடன் நாகம்மாள் கேட்டாள்.

     “ஆனமாதிரிதான். கையெழுத்து ஒன்றுதான் பாக்கி!”

     “அப்புறம்?”

     “நீ ஏன் கலங்க வேண்டும். எதுக்கும் அஞ்சாதே. எனக்கு சரி பாதியைப் பிரித்து விடு” என்று தாராளமாகக் கேளு. சும்மா மிரட்டினா ‘இதெல்லாம் தெரியுமப்பா’ என்று சொல்லிவிடு. ‘அப்படியாச்சா? லொட, புட, அது செய்திடுவேன், இது செய்திடுவேன்’ என்றால், எனக்குக் கொடுத்தபின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று தைரியமாகச் சொல்லு. நீயேன் தயங்கோணும்; தாமதம் செய்யோணும்! இனித் தாமதித்தால் வெள்ளம் தலைக்கு மேல் போவது நிச்சயம்.”

     “வாஸ்தவம் தான்” என்று முதலியார் பேச்சை ஆமோதித்தார்.

     நாகம்மாள் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்துவிட்டு, “நான் என்னென்ன செய்யோணும், என்ன செய்யச் சொல்றீங்க?” என்று கேட்டாள்.

     “அன்றைக்கு மாதிரி அரண்டு போய் பதில் பேசாது விட்டுடாதே. எனக்கு உண்டானதைப் பிரித்து விடு என்று கண்டிப்பாகக் கேள். பின்னால் வருவதற்கு நாங்கள் இருக்கிறோம். அவன் என்ன ஆகாசத்திலா பறந்து விடுவான். நீ மட்டும் உறைத்து நின்றால் விலைக்கு வாங்க ஒருவன் கிட்ட வந்துவிடுவானா?” என்றார் மணியக்காரர்.

     நாகம்மாள், “ஆகட்டும் நீங்கள் சொன்னபடிக் கேக்கிறேன்” என்றாள்.

     பின்பு மணியக்காரர் கெட்டியப்பனிடம் “அவன் வந்த பிறகு இந்தப் பக்கம் அடிக்கடி தலைகாட்டாதே. தப்பாக நினைக்க இடம் உண்டாகும்” என்றார்.

     “அண்ணா, இப்போதே நான் சாளைக்குப் போய்விடுகிறேன். நீங்கள் கூப்பிடுகிற சமயம் வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

     “நாங்களும் அவனோடு போகிறோம்” என்று முதலியார் சொல்லவும் மணியக்காரர் சிரித்துக் கொண்டு எழுந்தார்.

     அவர்கள் போனபின் கொஞ்ச நேரம் வரை நாகம்மாள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தாள். கதவைத் தாளிட்டுப் படுக்கவும் இஷ்டமில்லை. உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கலவர மனதுடன் யோசனையில் மூழ்கினாள். அப்போது ‘சொத்தெ’ன்று ஒரு பூச்சி முகட்டிலிருந்து கீழே விழுந்தது. பல்லியால் கவ்வப்பட்ட பாதி பாகம் போக மீதி பாதி பாகமே தரையில் துடித்துக் கொண்டிருந்தது. அந்த மரித்துப் போகும் பூச்சியைக் கண்கொட்டாது பார்த்துவிட்டு மேலே கூரையைப் பார்த்தாள். உயர எங்கும் பூச்சிக்கூடு. ஒட்டடை அடித்து வருஷக் கணக்காகிறது. இதில் புகைக் கலப்பு வேறு கன்னங்கரேலெனக் கப்பியிருந்தது. மேலும் கீழும் பார்க்கப் பார்க்க நாகம்மாளுக்குக் கசப்பாக இருந்தது.

     ‘என்ன இது ஒரே குப்பை மயம். வந்தால் என்ன சொல்வார்கள்? சொல்லுவதென்ன, எனக்கே அசிங்கமாக இருக்கிறதே.’ காலடி ஓசை கேட்டது. திடுக்கிட்டு நோக்கினாள். யாரென்று தெரியவில்லை. ஒரு வேளை கெட்டியப்பனாக இருக்குமோ, அல்லது முதலியாரோ, யாரென்று அவளால் நிச்சயம் செய்ய முடியவில்லை. “என்ன கோயில் பாளத்தாளா!” என்று கேட்டுக் கொண்டு பெரியண்ண கவுண்டர் வந்தார். அயலூரிலிருந்து கலியாணமாகி வரும் பெண்களை அந்த ஊர்ப்பெயரைச் சொல்லியே தான் அநேகமாகக் கூப்பிடுவார்கள்.

     தன்னை அவ்விதம் பெயரிட்டு அழைப்பவர் யாரென்று நாகம்மாள் நோக்கினாள்.

     “நீங்க தான் என்னைப் பயப்படுத்தினது?”

     “நான் அல்ல, எங்க தாத்தா வந்தாலும் உன்னைப் பயப்படுத்த முடியுமா? இந்த அர்த்த ராத்திரியில் நீதான் யாரையோ பயப்படுத்த உக்காந்து கொண்டிருக்கிறாய். நான் அகஸ்மாத்தாக வந்து சேர்ந்தேன்” என்று சொல்லிவிட்டுப் பெரியண்ணன் சிரித்தார்.

     நாகம்மாளும் கூடச் சிரித்து விட்டுப் பின்பு ரொம்ப அனுசரணையாக, “இன்னேரத்தில் எங்கிருந்து வாரீங்கள்?” என்றாள். பெரியண்ணன், “பேச நேரமில்லை” என்று சொல்லிச் சுருக்கமாக, “கருப்பட்டி வண்டி பின்னால் வந்தேன். நொடித்தடம், வண்டி இடறி அகாலத்தில் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது? சின்னப்பன் இருந்தாலும் சந்தைக்குப் போயிருப்பான். என்ன பண்ணுவது? இருக்கிற வரையிலும் செய்துதானே தீரோணும்? கஷ்டம் என்று பார்த்து முடிகிறதா? நான் வருகிறேன் ஆயா? நேரமாச்சு, வண்டி வெகுதூரம் போயிட்டது” என்று அடியெடுத்து வைத்தார்.

     “வாசலில் முளை அடிச்சிருக்குது. பாத்துப் போங்கள்” என்று நாகம்மாள் சொல்லச் சொல்ல அவர் முளையில் மோதி காலை நொண்டிக் கொண்டே போனார்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19

அத்தியாயம் 19 – கச்சேரியில் கள்வன்      ‘மகா-௱-௱-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது.

கல்கியின் பார்த்திபன் கனவு – 41கல்கியின் பார்த்திபன் கனவு – 41

அத்தியாயம் 41 வழிப்பறி சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 23கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 23

அத்தியாயம் 23 – பண்ணையாரின் தவறு      கல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து