Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1

முன்னுரை

     1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் “நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு. நீர், காற்று, வெளிச்சம் போன்று இது இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்” என்று கூறினார். நான் ஒரு நாவலை எழுதி முடிக்கு முன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்று கூடச் சொல்ல மாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்து விட்டது. எனவே, ‘அலைவாய்க் கரையில்’ என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன். தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன்.

இதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டிருந்திருக்கிறேன். வறச்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண்மையைப் உப்புப் பாத்திகளில் கரிப்பு மணிகள் கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக் கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன்.

உப்புக் காலம் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த புரட்டாசிக் கடைசியின் அந்த நாட்களிலேயே, உப்பளத்தின் அந்தப் பொசுக்கும் வெம்மையில் என்னால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க இயலவில்லை. கண்களுக்கெட்டிய தொலைவுக்குப் பசுமையற்ற – உயிர்ப்பின் வண்ணங்களற்ற வெண்மை பூத்துக் கிடந்தது. வெண்மையாகப் பனி பூத்துக் கிடந்திருக்கும் மலைக்காட்சிகள் எனது நினைவுக்கு வந்தாலும் எரிக்கும் கதிரவனின் வெம்மை அந்த நினைப்பை உடனே அகற்றிவிட்டது. அங்கே காலையிலிருந்து மாலை வரையிலும், கந்தலும் கண் பீளையுமாக, உப்புப் பெட்டி சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமியரையும், பெண்களையும், பாத்திகளின் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களையும் கண்டேன். அப்போது எங்கோ ஃபிஜித் தீவினில் கரும்புத் தோட்டத் தொழிலாளர் நிலையை நினைந்துருகித் தன் கண்ணீரையும் பாக்களாக இசைத்த பாரதியின் வரிகள் என்னுள் மின்னின. அந்நியன் நாட்டை ஆளும் நாட்களல்ல இது. நாள்தோறும் எங்கெங்கெல்லாமோ பல மூலைகளிலும் மக்கள் உரிமைகளும், நியாயமான சலுகைகளும், நியாயமல்லாத சலுகைகளும் கோரிக் கிளர்ச்சிகள் செய்வதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவதும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாடிக் கட்டிடங்களில் குளிர்ச்சியான இதம் செய்யும் அறையில் அமர்ந்து கோப்புக் காகிதங்களில் கையெழுத்துச் செய்யும் அலுவலகக்காரர்கள், மருத்துவ வசதிகளும், ஏனைய பிற சலுகைகளுமே மாதத்தில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெறுகின்றனர். சுதந்தர இந்தியாவில் மக்கட் குலத்துக்கு இன்றியமையாததோர் பொருளை உற்பத்திச் செய்வதற்கு உழைக்கும் மக்கள், உயிர் வாழ இன்றியமையாத நல்ல குடிநீருக்கும் திண்டாடும் நிலையில் தவிப்பதைக் கண்ட போது எனக்கும் குற்ற உணர்வு முள்ளாய்க் குத்தியது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் சுட்டெரிக்கும் வெய்யிலில் பணியெடுக்கும் இம்மக்களுக்கு, வாராந்திர ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளும் கூடக் கூலியுடன் கிடையாது. கிடைக்கும் கூலியோ உணவுப் பண்டங்களும், எரிபொருளும் உச்சியிலேறி விற்கும் இந்த நாட்களில், இம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானதும் ஆனால் உண்மையானதுமான தென்னவென்றால், உப்பளத் தொழிலாளி, இருபத்தைந்து ஆண்டுகள் பணியெடுத்திருந்தாலும், தனது வேலைக்கான நிச்சயமற்ற நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறான் என்பதேயாகும். ஒரு சாதாரண குடிமகனுக்கு, ஒரு சுதந்திர நாட்டில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எந்த வசதியையும் உப்பளத் தொழிலாளி பெற்றிருக்கவில்லை. வீட்டு வசதி, தொழிற்களத்தில் எரிக்கும் உப்புச் சூட்டிலும் கூடத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஓய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி, குழந்தைகள் கல்வி, உப்புத் தொழில் இல்லாத நாட்களில் வாழ்க்கைக்கான உபரித் தொழில் ஊதிய வசதிகள் எதுவுமே உப்பளத் தொழிலாளிக்கு இல்லை என்பது இந்த நாட்டில் நாகரிகமடைந்தவராகக் கருதும் ஒவ்வொருவரும் நினைத்து வெட்கப்படவேண்டிய உண்மையாக நிலவுகிறது.

 

உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண்களோ அவர்களுடைய உடலமைப்பு இயல்புக்கேற்ற வேறு பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். தூத்துக்குடி வட்டகையில் உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ. 6-75, பெண்களுக்கு ரூ. 4-40 சிறுவர் சிறுமியருக்கு ரூ. 3-00 அல்லது 2-50 என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிடக் குறைவு என்று கேள்விப்பட்டேன்) ஆனால் இந்த நிர்ணயக் கூலி பெரும்பாலான தொழிலாளருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர், கங்காணி அல்லது ‘காண்ட்ராக்ட்’ எனப்படும் இடை மனிதர் வாயிலாகவே ஊதியம் பெறுகின்றனர். பதிவு பெற்ற தொழிலாளிகள், அளநிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகக் குறைவானவர்கள் தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகத்தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும் கூட வியப்பில்லையாம்! குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் எதிர்காலம் மழலைச் செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் வறியவர்களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும் போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப் படுவதைத் தடைசெய்வது சாத்தியமில்லை. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார், எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறுகின்றனர் என்ற விவரங்கள் இந்நாட்களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தைகளைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக்கிறது. இந்நிலை வெளி உலகம் அறியாமல், கேட்பாருமற்று, உரைப்பாருமற்று அவலமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. இச்சிறாருக்கு தனிப்பட்ட முறையில், அந்தத் தொழிற்களத்தில் அவர் ஈடாக்கும் உழைப்புக்குகந்த முறையில் உணவுப்பொருள், மருத்துவ வசதி (மற்றும் கல்வி)யும் அளிக்க வழி செய்யப்படல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சம் கனக்க, உப்பளத் தொழிலாளரிடையே உலவிய போது, நண்பர் ‘சிட்டி’ அவர்கள் வாக்கை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கொறிக்கும் சிறு தீனிகளாகிவிடக் கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது.

இம்முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வமும் ஆவலுமாக உதவிய நண்பர்கள் பலருக்கும் நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். தூத்துக்குடி என்றாலே, நண்பர் திரு. ஆ.சிவசுப்பிரமணியனின் இல்லமே நினைவில் நிற்கிறது. வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவருடைய நட்பு, இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்று மகிழ்கிறேன். எந்த நேரத்திலும் சென்று உதவி வேண்டி அவரை அசௌகரியத்துக்குள்ளாக்கும் உரிமையை அவர் மனமுவந்து எனக்கு அளித்திருக்கிறார். இவரது இல்லம் என்றால், குடும்பம் மட்டுமல்ல. இக்குடும்பத்தில் பல மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோரும் இணைந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவராகி விட்டதால், உப்பளத்து வெயிலில் நான் காய்ந்த போதும், தொழிலாளர் குடியிருப்புகளில் நான் சுற்றித் திரிந்த போதும், நான் தனியாகவே செல்ல நேர்ந்ததில்லை. மாணவமணிகளான இளைஞர்கள் திரு. எட்வின் சாமுவேல், சிகாமணி ஆகியோர் நான் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட பலரைச் சந்தித்துச் செய்தி சேகரிக்க உதவியதை எந்நாளும் மறப்பதற்கில்லை.

உப்பளத் தொழிலாளரில் எனக்குச் செய்தி கூறியவர் மிகப் பலர். வேலை முடித்து வந்து இரவு பத்து மணியானாலும் தங்கள் உடல் அயர்வைப் பொருட்டாக்காமல் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து என்னைச் சந்தித்த தோழர்கள் திருவாளர் மாரிமுத்து, முனியாண்டி, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன்.

எப்போதும் போல் எனது எழுத்துக்களை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு ஊக்கமளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இதை நூல் வடிவில் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறி தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் எனக்கு ஆதரவு நல்கும் வாசகப் பெருமக்களின் முன் இதை வைக்கிறேன்.

— ராஜம் கிருஷ்ணன்

 

அத்தியாயம் – 1 

 

உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங்கதிர்க் குடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற்கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங்களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது. இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் ‘அட்டு’ நீக்கி, பதமான களியும் மணலும் விரவி, நீரைக்கூட்டி, ‘செய் நேர்த்தி’ செய்யும் கோலங்கள் கடற்கரை நெடுகிலும் ஏக்கர் ஏக்கராக விரிந்த உப்பளங்களில் காட்சிகளாக விரிகின்றன.

‘தைச்சீர்’ கழித்து, பொன்னின் கதிர்களறுத்துக் களத்து மேடுகளில் நெல்மணிகளை உழவர் பெருமக்கள் குவிக்கும் அக்காலத்தில், ஆற்றோரத்து விளைநிலங்களில் மண் அன்னை பிள்ளை பெற்ற தாயாக மகிழ்ந்து காட்சியளிக்கிறாள். மீண்டும் மீண்டும் பசுமையில் பூரித்துக் கொழித்து இயற்கையில் மலரும் அன்னையாக உலகை உய்விப்பாள்.

ஆனால், இந்தக் கடற்கரையோரங்களில், பூமித் தாயின் பசுமையை அழித்து, உலகெங்கும், உயிர்க்குலமனைத்துக்கும் சாரமளிக்கும் கரிப்பு மணிகளை விளைவிக்கச் செய்நேர்த்தி செய்கிறார்கள். வானின்று பொழியும் காருக்குப் போட்டியாக, பூமிப்பெண்ணை என்னாலும் தாயாக்க இயலும் என்று கடலோன் பூமிப்பெண்ணின் உதரத்தில் தங்கி அவளை அன்னையாக்குகிறான். நல்லார் பொல்லாரென்ற சூதறியாத வானவனோ எல்லோருக்கும் பொதுவாக காய்ந்து, மண்ணை வெய்துயிர்க்கச் செய்கிறான். அவன் கொடையில் கரிப்பு மணிகள் கண் மலர்கின்றன.

விரிந்து பரந்த பாத்திகளுக்குச் செய்நேர்த்தி செய்யும் கால்கள் அனைத்தும் மனிதக் கால்கள். நீரும் களியும் மணலும் குழம்பிக் குழம்பி மனித ஆற்றலின் வெம்மைகளும் மண்ணின் உட்சூடும் கொதித்து ஆவியாகிப் போகும் ‘செய்நத்து’ கருவைக்காட்டு உப்பளத்திலும் நடக்கிறது. அந்தப் பாதங்கள் கறுத்துக் கன்றிப் புண்பட்டுத் தேய்ந்தாலும் இன்னும் ஆற்றலைக் கக்கும் இயக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

“செறுக்கி மவளுவ… அழுந்த மெறியுங்க…! சாமியாரே? ஆவட்டும்!…”

கங்காணியின் விரட்டல் கசையடிபோல் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த அதட்டல்கள் அவ்வப் போது விழுந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அங்கே பாத்தி மிதித்துப் பண்பாடு செய்யும் மேனிகள் இரத்தமும் சதையும் துடிப்பும் துள்ளலுமாக இல்லை. அமாவாசைக் கடலைப் போன்று ஆற்றலை அவர்களால் கொட்ட முடியாது. இறைத்து இறைத்து ஊற்றுக் கண் வற்றிய கிணறு. மேல் மழையோ அற்பம். சுரண்டினால் சிறிது நீர் பொசிந்து வரும். பிறகு நின்று போகும். மீண்டும் வெட்டினால் சுருசுருவென்று நீர் ஊறி வரும். அந்தப் பாத்தியில் எட்டுப் பேர் மிதிக்கிறார்கள்.

மருதாம்பா, மாரி, இசக்கி மூவரும் இளமையில் ஆளுகைக்கப்பால் அநுபவப் பாதையில் தேய்ந்து மெலிந்தவர்கள். இசககியின் மகளான பன்னிரண்டு பிராயத்தி முத்தம்மா, மாரியின் மகள் லெச்சுமி, பையன் கந்தவேலு கைக்குழந்தையை நிழலில் போட்டுவிட்டு, மூன்று பிராயத்து முதற் குழந்தையைக் காவலுக்கு வைத்து விட்டு அடிக்கொரு முறை அழுகையொலி கேட்கிறதா என்று பார்த்துக் கொண்டே மிதிக்கும் ருக்குமணி, ஆகியோரைத் தவிர ஒரே முதிய ஆண் மகனான அங்கே ‘செய்நத்து’ச் செய்பவன், ‘சாமியார்’ என்றழைக்கப் பெறும் கண்ணுசாமிதான். அவன் மருதாம்பாளின் புருஷன்.

“ஏத்தா! இது ரிக்காடு டான்சில்ல குதிக்குறாளுவ… மெதிச்சுத் துவயிங்க! விருசா ஆவட்டும்! சாமியாரே, ஒமக்கு இது சரியல்ல. நீரு வாரும். ‘சிப்சம்’ எடுத்துப் போட…” என்று கங்காணி அவனை நிறுத்தித் தோளைப் பற்றி அழைத்துச் செல்கிறான்.

உட்சூடும் வெளிச்சூடும் சங்கமித்துக் கால்களில் நெருப்பைக் கக்குகின்றன. நெருப்புப் பந்தத்தில் நெருப்பு வளையத்தில்… அவர்கள் நடக்கிறார்கள். நடப்பு இல்லை… மிதித்தல். பையன் வாளியில் நீரெடுத்து அவ்வப்போது மண்ணில் விசிறிக் கொட்டுகிறான். அந்த நீர், அவர்கள் காலடிகளில் பாயும் போதே ஆவியாகிவிட, தேய்ந்து வெண் குறுத்தாகிவிட்ட அவர்கள் அடிகளில் கொப்புளத்தைத் தோற்றுவிக்கும் கொதிப்பைக் கக்குகிறது. அழுத்தமும் சூடும் மண்ணை மெத்து மெத்தென்று வெண்ணையாக குழைத்த பிறகு கெட்டித்து இறுகச் செய்யும் நிணமும் சதையும், பூவின் மென்மையுமான பெண்மையின் துடிப்புக்களும் இறுகிக் கெட்டித்துக் காய்ந்து போகும் இந்தச் ‘செய்நேர்த்தி’ தை, மாசி முழுதும் கூட நீண்டு போகும்.

மருதாம்பா, சற்றே தலைதூக்கி, கங்காணி, தன் புருஷனை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறாள். சென்ற ஆண்டு வரையிலும் சாதாரணத் தொழிலாளியாக இருந்த சுப்பன் இப்போது கங்காணியாகி விரட்டுகிறான். மிஞ்சினால் முப்பது வயசிருக்கும். கணக்கப் பிள்ளைக்கு அவ்வப்போது கையும் மனமும் நிறையக் காணிக்கை வைத்திருப்பான். கங்காணியாகி விட்டான். செய்நேர்த்திக் காலத்தில் நிர்ணயக் கூலி முழுவதையும் கொடுக்க மாட்டார்கள். உப்பெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த அளத்தின் இருநூறு ஏக்கரிலும் பண்பாட்டு வேலை முடியவில்லை என்று கூலியைக் குறைத்தே கொடுப்பார்கள். ஆணுடைய நிர்ணயக் கூலி பெண்ணுடைய கூலியை விட அதிகம் என்பதால், தன் புருஷனை ஜிப்சம் சுமக்கத் தள்ளிப் போகிறான் என்றுணர்ந்து மருதாம்பா சில நிமிடங்கள் செயலற்று நிற்கிறாள். கண்ணுசாமிக்குத் துல்லியமான கண் பார்வை போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. அவர்களைப் போன்ற உப்பளத் தொழிலாளிகள் யாருக்குமே தெளிவான கண்பார்வை கிடையாதுதான் என்றாலும் கண்ணுசாமிக்குக் கண்களில் நீர் வடிந்து நீர் வடிந்து, சென்ற ஆண்டிலிருந்து, கலத்திலிட்ட சோறு கூடத் தெரியாதபடி ஒளி மங்கிவிட்டது.

“நீரு பெட்டக்கண்ண வச்சிட்டு வார்பலவைப் புடிச்சித் தொழில் செய்ய ஏலாது. ‘மெக்கிட்டு’க் கூலியா (மெக்கிட்டு – அன்றன்று சிறு கூலிக்குச் செய்யும் துண்டு வேலை) செய்நத்துக்கு இருந்துபோம்… அதும் கூட கணக்கவுள்ள கண்டாச் சண்டை போடுவா. ஆச்சி அளுகாண்டு எடுக்கே…” என்று வேலைக்குச் சேர்க்கும் போதே நிபந்தனை போட்டான் கங்காணி.

பெண்களுக்கு நான்கு ரூபாய் கூலி கொடுப்பான். அவர்களுடைய நிர்ணயக் கூலி நாலு ரூபாயும் நாற்பது பைசாவுமாகும். ஆண்களுக்கு நிர்ணயக் கூலி ஆறு ரூவாயும் சொச்சமுமாகும். ஆனால் செய்நேர்த்திக் காலத்தில் முழுக்கூலியைக் கண்களால் பார்க்க இயலாது. நான்கு ரூபாய் கொடுப்பான் முன்பெல்லாம். செய்நேர்த்திப் பணிக்கு ஆண்களை மட்டுமே எடுப்பார்கள். பெண்கள் வரப்பில் குவிந்த உப்பைத் தட்டுமேட்டில் கொண்டு சேர்க்கும் பணியைத்தான் பெரும்பாலும் செய்வார்கள். இந்நாட்களிலோ, ஆடவருக்கு அதிகக்கூலி என்பதால், பெண்களையும், இரண்டு ரூபாய்க் கூலிக்கு வரும் சிறுவர் சிறுமிகளையும் ‘பாத்தி மிதிக்க’ச் செய்கிறார்கள். மிதித்து மிதித்து மண்ணைப் பண்படுத்த வேண்டும். காலால் அழுத்தினால் அடிபதியலாகாது. இவ்வாறு பண்படுத்தும் பாத்திகளே உப்பை விளைவிக்கும் ‘பெண்’ பாத்திகள். ஆண்டுதோறும் தவறாமல் இந்தப் பெண் பாத்திகளுக்குக் குறையாமல் சீரெடுக்க வேண்டும். இந்தப் பாத்திகளில் விளையும் உப்பு வெள்ளை வெளேரென்று, தும்பைப்பூ வண்ணத்தில் கற்கண்டைப் போல் தோன்றும். அவ்வளவும் தூத்துக்குடித் துறையிலிருந்து ஏற்றுமதியாகும் ‘கல்கத்தா’ உப்பு.

இந்த அளவில் கடலிலிருந்து நேராக நீரைக் கொண்டு வருவதில்லை. கிணறுகள் தோண்டி, அதிலிருந்து நீரை இறைவை இயந்திரத்தால் தெப்பம் என்று சொல்லப்பெறும் முதல் பாத்திகளில் பாய்ச்சுகிறார்கள். இப்பாத்திகளில் நீரின் அடர்த்தி கூடியதும், முதல் கசடுகளான சேரு, கீழே படிந்து விடும். இவ்வாறு ஆண்டு முழுவதும் படிந்த சேறு தான் இறுகிக் காய்ந்து நட்சத்திரச் சில்கள் பதித்தாற் போன்று ஜிப்சம் எனப் பெறும் கூட்டுப் பொருளாகிறது. இதைப் பெயர்த்தெடுக்கத்தான் கங்காணி, கண்ணுசாமியைத் தள்ளிச் செல்கிறான்.

“லே செவந்தகனி, சாமியாருக்கும் ‘சிப்சம்’ பேத்துக் குடு… இங்கிட்டு நின்னு திருப்பிப் போடுவாரு…”

“செவந்தகனியா?” என்று திருப்பிக் கேட்கும் கண்ணுசாமி எங்கோ ஓர் மூலையில் நோக்குகிறான்.

“ஆமா, நாதா, மெக்கிட்டா, காண்டிராக்டா மாமா?”

“மெக்கிட்டுன்னுதா சொன்னா. எனக்கு என்ன எளவு தெரியிது?…”

சிவந்தகனி மருதாம்பாளுக்குத் தம்பி முறையாகக் கூடியவன். அவன் ஒரு பாளத்தை வெட்டி, கண்ணுசாமியின் கைகளில் வைக்கிறான். கண்ணுக்கு எல்லாம் மொத்தையாக இருக்கிறது. போகும் தடம் தெளிவாகத் தெரியாமல் எங்கே கொண்டு எப்படிப் போடுவான்? கண்களிலிருந்து இனி வடிவதற்கு நீருமில்லை. ‘பல் முளைத்துப்’ போன அந்தப்பாளம் கைகளைக் குத்தி அவனை வளையச் செய்கிறது. தடம் தெரியாமல் அதையும் போட்டுக் கொண்டு விழுகிறான்.

“…கீள வுழுந்திட்டாரே… அவரால் ஆவாது. பாவம்…” சிவந்தகனி அவரைத் தட்டித் தூக்குகிறான். “ஏதும் அடிபட்டிச்சா மாமா? பாவம், உம்மால இனி அளத்து வேல செய்ய முடியுமா?…”

அவன் தூக்கிய பாளம் நொறுங்கி மண்ணும் சில்லுமாகக் கண்களில் விழுப்புழுதி பரவுகிறது. உச்சியில் வழுக்கை, காதோரங்களில் வெண்மையும் கருமையுமாகப் பிரிபிரியாக முடிக்கற்றை; சென்ற ஆண்டின் இறுதியிலிருந்தே வேலைக்குப் பாதி நாள் வர முடியாமல் ஆசுபத்திரிக்கும் சென்று வந்தான். கண் பார்வை மீளுமென்ற நம்பிக்கை இல்லை. அதற்குப் பிறகு தான் அவன் முகச்சவரம் செய்து கொள்ளவில்லை. பார்வை போனாலும் வயிற்றுப் பசி குறைகிறதா?

“சாமியாரே! உன்னால எதும் ஆவாது! இது வரய்க்கும் செஞ்சதுக்கு ரெண்டு ரூவாக்கூலி தாரேன்… அம்புட்டுத்தா…” என்று கங்காணிச் சுப்பன் கோடு கிழித்து விடுகிறான்.

ரெண்டு ரூபா… மருதாம்பாளுக்கு நான்கு ரூபாய் வரும். வீட்டில் நான்கு குழந்தைகள்… மழைக்காலம் முழுவதும் வேலை கிடையாது. அப்போது வாங்கித் தின்ற கடன், வீட்டு வாடகை, பழைய கடன், புதிய கடன், அரிசி, விறகு, செலவு சாமான்களின் விலைகள்…

மண்ணிலே விழுந்தவனால் எழுந்திருக்க இயலாத பாரங்கள் அழுத்துகின்றன. பகல் நேர உணவுக்கு மணி அடிக்கிறது.

மருதாம்பா வந்து அவன் கையைப் பற்றி அழைக்கிறாள்.

“வுழுந்திட்டயளா, சிவந்தகனி சொன்னா. செவனேன்னு பாத்தி மிதிச்சிய. வேலையில்லேன்னா… போறா, நீரு வாரும்.”

உணர்ச்சிகள் களரியாக மோதுகின்றன. வாலிபம் கிளர்ந்த காலத்தில் அவன் துறைமுகத்தில் தொழிலாளியாக இருந்தான். முட்டையும், கறியும் தின்று வளர்த்த உடலில் நிமிர்ந்த ஆணவத் திமிர் இன்று கரைந்து, குத்துப்பட்டு வீழுந்து விட்டாலும், அந்தப் பழைய வடிவத்தை இன்னமும் நினைப்பூட்டும் உடலியல்பு மாறிவிடவில்லை. கருமை பாய்ந்து தடித்த நெற்றியும், நரம்புகள் புடைத்துத் தசைகள் ‘முறுகத்’ தெரியும் தோள்களும் கால்களும் தளர்ச்சியைக் காட்டவில்லை. மருதாம்பா அவன் கையைப் பற்றியிருக்கிறாள். அவள் கையிலும் நரம்புகள் புடைக்க, எலும்பு முட்டியிருக்கிறது. அந்தக் கை, ஒரு காலத்தில் எப்படி இருக்கும்?

மடையோரம் செழித்து வளர்ந்த தாழையின் நடுவே பூத்த குலைபோல் இருப்பாள். அவளைக் கட்டியவன் ஒரு கிழவன், ஈர்க்குச்சி போல் கையும் காலுமாக ஒரு சீக்காளி. பட்டாணி வறுக்கும் கடையில் வேலை செய்த அவன் கையில் கிடைத்ததைக் குடித்து விட்டும் வருவான். முதல் தாரத்துக்கு மூன்று வளர்ந்த பிள்ளைகள்.

மருதாம்பா துறைமுகத்தில் மூட்டை சுமக்க வந்த காலத்தில் அந்தக் கங்காணிக்கு இரையாகு முன் இவன் பார்வையில் உருகிப் போனாள். இவனுக்கும் அப்போது கல்யாணமாயிருந்தது. ஒரு மகளும் மகனுமாகக் குழந்தைகளும் இருந்தார்கள். ஆனால் கட்டியவள் ஒரு முசுடு. இவனுக்கு ஈடு கொடுக்கத் திராணியில்லாதவள். எனவே இவளை அவன் சேர்த்துக் கொண்டான். துறைமுகத்துத் தொழிலை விட்டு அந்நாளில் இவன் உப்பளத் தொழிலுக்குக் காண்டிராக்டாக வந்தான். கையில் காசு குலுங்கியது. ஆனால் இளமையும் எழிலும் நிறைந்த பெண்பிள்ளைக்குப் புருஷன் உடன் இருந்தாலே, தொழிற்களங்களில் அவர்கள் வரப்போரத்து மலர்களாகக் கருதப்படுவார்கள். கண்ணுசாமி அவளுக்குப் புருசனுமில்லை. எனவே இவள் நிமித்தமாக அந்தக் கணக்கப்பிள்ளைச் சுடலைமாடனிடம் மோத வேண்டியிருந்தது. அவன் சாய்கால் உள்ளவன். இவன் மீது கொலைக்குற்றம் சுமத்திச் சிறைக்கும் அனுப்பி வைத்தான். சிறையில் மூன்றாண்டுகள் கழித்துவிட்டுத் திரும்பி இவன் வந்த போது, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட்டாள்.

மருதாம்பாதான் இவனைக் கண்டு வீட்டுக்கழைத்துச் சென்றாள். அவள் கிழவனை விட்டு வந்து விட்டாள். அந்தக் கணக்கப்பிள்ளை அளத்திலும் வேலை செய்யவில்லை. இருவரும் அந்நாளிலிருந்து சேர்ந்து வாழ்கிறார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாகக் குழந்தைகள் குடும்பம். ‘தாலிக்கெட்டை’ப் பற்றிக் கவலைப் படாமல் வளர்ந்திருந்தாலும், தொழில் இத்தனை ஆண்டுகளில் அவர்களுடைய வண்மையைக் கூட்டியிருக்கவில்லை. உப்பளத் தொழில் அத்தகையதுதான். எப்போதேனும் அந்த மணற்கரையில் பெய்யும் மழையைப் போன்ற அந்த அற்பக் கூலியினால் அவர்கள் பசித்தீயை முற்றிலும் அவித்து வறட்சியைத் தீர்க்க முடிவதில்லை.

வழுக்கு மரமாகத் தெரிந்த வாழ்க்கையில் அவர்களால் ஏறவே முடியவில்லை. மருதாம்பா சட்டுவமாகத் தேய்ந்து போனாள். ஒவ்வொரு மழைக்காலமும் சோதனைக்காலம். இடையில் பத்துப் பதினைந்து நாட்கள் எங்கேனும் கூலி வேலை கிடைத்தாலே பெரிது. அந்தக் கண்டம் தப்பி, புத்தாண்டன்று பாத்திப் பண்பாட்டுக்குத் தொழிலாளர் வரும்போது, அவர்களது அவல நிலையை உப்பளத்து முதலாளிமார் முற்றிலும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் தவறில்லை. ஐந்து ரூபாய் கூலி பேசிவிட்டு மூன்று ரூபாய் கொடுத்தாலும் மீறிச் சென்றுவிட இயலாமல் அவர்கள் பொருளாதார நிலை குழிபறித்து வைத்திருக்கிறது.

பன ஓலை கொண்டு வேயப்பெற்ற அந்தக் கொட்டகையில் உள்ளே சந்து சந்தாக வெய்யில் விழுந்து அவர்கள் உணவு கொள்வதைப் பார்க்கிறது. “மேல வெயில்… தள்ளி ஒக்காரும்” என்று மருதாம்பா அவனை நகரச் செய்கிறாள். பிறகு உணவுப் பாத்திரத்தைத் திறந்து, ஒரு வெங்காயத் துண்டையும் பச்சை மிளகாய்த் துண்டையும் கேழ்வரகுக் களியின் உருண்டையையும் அவன் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

நசுக்கப் பெறும் உணர்வுகள் அலையலையாக உந்த உள்ளத்து விம்மல் வெளிப்படுகிறது. “நீ தேடிச் சோறு போட ஒக்காந்திட்டேன் பாத்தியா?” என்று விம்முகிறான்.

“பேசாதிரிம்…” என்று இரகசியக் குரலில் கடிந்து கொள்கிறாள் மருதாம்பா.

அங்கே வேலை செய்யும் அனைவருக்குமாக ஒரு பானை தண்ணீர்தான் குடிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

“ஏத்தா மொவத்தத் தொழில கழுவிக்கிறதுக்கென்ன…” என்று சிவந்தகனி யாரையோ சண்டை போடுகிறான்.

“நானென்ன சொம்பு தண்ணீயா எடுத்த? ஒரு கிளாசு, ஓங்காருவாரு தூள் பறக்கு…”

“இந்த அளத்துல தாவில! முன்ன பளஞ்சிபுர அளத்துல குடிக்க ஒரு சின்ன பக்கெட்டி தண்ணிதா வரும். அம்புட்டுப் பேரும் அத்தத்தா குடிக்கணும். ஒரு செறட்ட நீரு கெடய்க்காது செல நா. சித்திரக் கோடையில கெடந்து எரியுவம்…” என்று ஒரு கிழவி திருப்திப்படுகிறாள்.

கும்பியின் எரிச்சலைச் சோறு சற்றே தணித்தாலும், தண்ணீர்த் தாகம்…!

“எல்லாம் குடிச்சிப் போடாதிய” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் தங்கள் தூக்குப் பாத்திரங்களில் சிறிது நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். சிவந்தகனிதான் பங்கீடு செய்கிறான். “ந்திரீ… ஊத்து…” என்று கிழவி குழிந்த மூடியை மீண்டும் நீட்டுகையில் அவன் கண்டிப்பாக மறுக்கிறான். “ருக்மணி, புள்ளக்கிப் பாலு கொடுக்கா அவக்கு வேணும்” என்று பானையின் அடியில் ஒரு தம்ளர் தானிருக்கிறதென்று காட்டுகிறான்.

வெற்றிலைச் சாரும் புகையிலையும் போடுகிறவர்களும், பீடி கொளுத்தி வைப்பவர்களும், ஏதேனும் கட்டை தேடித் தலைக்கு வைத்துக் கொண்டு தலையைச் சாய்ப்பவர்களுமாக, சோற்றுக்கடை முடிகிறது.

“ஏத்தா, கங்காணிய பெரியாசுபத்திரில கொண்டு காட்டல?…” என்று மருதாம்பாளிடம் லெட்சுமி கேட்கிறாள். கண்ணுசாமி கங்காணி இல்லைதான். ஆனால் லெட்சுமிக்கு எல்லா ஆடவர்களும் கங்காணி என்றே நினைப்பு.

“பெரியாசுவத்திரில தா டாக்டர் பாத்து ஆபிரசன் பண்ணமின்னா; ஆபுரசன் பண்ணா சுத்தமா கண்ணு தெரியாம போயிடுமிண்ணு சொல்றாவ. இப்ப சோலியெடுக்க முடியாம இல்ல கடையில போயி சாமானம் வாங்கிட்டு வருவா. எங்க வளவில் அவிய பாட்டுக்கு நடந்திட்டுத் தா போவா, இந்த உப்பளத்துச் சூடு தா அக்கினியாட்டமா கண்ணுக்கு ஆவுறதில்லே…” என்று கூறுகிறாள் மருதாம்பா.

மீண்டும் மருதாம்பா பாத்தி மிதிக்கச் சென்று, மலை வாயில் கதிரவன் சாயும் வரையிலும் அவள் வேலை செய்யும் வரையிலும் கண்ணுசாமி அந்தக் கொட்டடியில் பிரும்மமாக உட்கார்ந்திருக்கிறான். ஐந்தரை மணியோடு பாத்தி மிதிப்பு ஓய்கிறது.

“வாரும் போவலாம்…!”

அவர்கள் குடியிருக்கும் இடம் இரண்டு மைல் தொலைவு இருக்கிறது. எல்லோரும் கைகளில் தூக்குப் பாத்திரங்களுடன் நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடுகின்றனர். பனை மரங்களினூடே செங்கதிரோன் இறுதியாகப் பிரியா விடை பெறும் ஒளியைப் பாய்ச்சுகிறான். நெருங்கி வரும் மருதாம்பா, அவன் செவிகளில் மட்டும் விழும்படியாகக் கேட்கிறாள்.

“ஏன் சவங்கிப் போயிட்டிய…?”

“சவங்காம என்ன செய்ய? ரெண்டு ரூவாக் கூலிக்குக் கூட ஏலாமப் போயிட்டனில்லா…”

அவனுடைய கை, வார் பலகைக் கம்பைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துக் கடினமாகி விட்ட கை, அவள் மணிக்கட்டைப் பற்றி அந்த எலும்பு முழியை அழுத்துகிறது.

“…நா… நாத்திக்கிழம போயி அந்த வுள்ளயக் கூட்டிட்டு வார…”

“எந்த வுள்ள?”

“அதா, ஒங்க வுள்ள பொன்னாச்சி பயலும் வரட்டும். ரெண்டோட ரெண்டா இருக்கட்டும். போன வருச மானோம்புக்குப் போனப்பவே செவந்தகனி பொஞ்சாதி சொன்னா. அவியளுக்கும் அஞ்சாறு வுள்ள; தம்பாட்டளத்துல (* தம்பாட்டளம் – தன் பட்டாளம் – சிறு அளவில் தாமாகவே உப்பு உற்பத்தி செய்யும் சிறு தொழில் அளம்) ஒண்ணும் கண்டு முதலாவுறதில்ல. நெதவும் அடியும் மிதியுந்தான்னா. இங்கு நாம கூட்டி வச்சிக்குவம். நாம குடிக்கிற கஞ்சிய அதுங்கக்கும் ஊத்துவம்னு தோணிட்டே இருக்கி. என்னாந்தாலும் அவிய ஆத்தா அநுபவிக்கிற சொத்து, நா அவகரிச்சிற்ற…”

இருளில் ஒலிக்கும் மந்திரச் சொற்களைப் போல அவன் செவிகளில் விழுகின்றன. அவன் ஆதரிக்கும் நெடு மரம், காய்ந்து பட்டுப்போகும் நிலையிலிருக்கிறான். தாயற்ற அந்தக் குழந்தைகளையும் கூட்டி வருவதாக அவள் சொல்கிறாள்.

இது…

அவன் மௌனமாக நடக்கிறான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 6சாவியின் ஆப்பிள் பசி – 6

பூவேலி கிராமத்தில் பாரதத் திருநாளை முன்னிட்டு பதினெட்டு நாள் உற்சவம். எல்லைக்கோடியிலுள்ள தர்மராஜா கோயிலில் தாரையும் தப்பட்டையும் அதிர்வேட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. “ஊர்ல என்ன விசேஷம்?” என்று பாப்பாவிடம் கேட்டான் சாமண்ணா. “தர்மராஜா திருநாள். கோவிலுக்குப் பக்கத்துலே பந்தல் போட்டு, பாரதம்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1

அத்தியாயம் 1 – பறித்த தாமரை      பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும்,