Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 22’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 22’

அத்தியாயம் – 22

எங்கே  யாதவ்மித்ரன் ?

 

இரவு ஒன்பது மணி போல் தூக்கத்தில் இருந்து விழித்த கவின்யா சாப்பிட மனமற்று எழுந்து உடை மாற்றி விட்டு மீளவும் படுக்கையில் சரிந்தாள். 

விட்டத்தை வெறித்தவள் மனமோ இன்று ஸாமோடு பேசியதன் விளைவோ நினைக்க மறுக்கும் அந்த  கொடிய நிகழ்வை அசை போடலாயிற்று. 

கவின்யாக்கு கொழும்பு பொது வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிக்கு இடம் கிடைத்திருந்தது. யாதவின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை. கவின்யா அவன் கூடவே தினமும் வசிக்கப் போகிறாளே. அது போதாதா அவனுக்கு

கொஞ்சம் கொஞ்சமாக தனது குறும்பு பேச்சினாலும் சின்னச் சின்ன சில்மிஷங்களாலும் அவனின் உண்மையான அன்பு, அக்கறையாலும் கவியை தன்னுடைய பாச வலையில் வீழ்த்திக் கொண்டிருந்தான். அவளும் தெரிந்தே ஆசையாய் விழுந்து கொண்டிருந்தாள் அந்த அன்புச் சிறையில். 

நாட்டுப் பிரச்சினை கொஞ்சம் வலுத்திருந்த நேரம். சமாதான பேச்சு வார்த்தைகள் நோர்வேயிலும் ஜெனீவாவிலும் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

இவர்கள் வாழ்வை சூறாவளியாய் சுழற்றி போட்ட அந்த நிகழ்வு ஓர் நாளில் இலகுவாய் நடந்தேறியது. 

அப்போது தான் வேலை முடித்து வந்திருந்த கவியும் யாதவும் அன்றைய நாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தவாறே இரவுணவை உண்டு கொண்டிருந்தார்கள்.

வெளிக் கதவை யாரோ பொறுமையின்றி பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது இரவு பத்து மணிக்கு. இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் விசாரித்தவாறே யாதவ் எழுந்து சென்று கதவைத் திறந்தான். அவன் பின்னேயே விரைந்தாள் கவி.

கதவைத் திறந்தது தான் தாமதம். அவர்கள் இருவரையும் தள்ளிக் கொண்டு ஒரு இருபது இருபத்தைந்து சீருடை அணிந்தவர்கள் உள்ளே நுழைந்தனர். அனைவரின் கையிலும் தயார் நிலையில் துப்பாக்கி.

வெலவெலத்துப் போய் நின்ற கவியை எச்சில் கையாலேயே அணைத்துக் கொண்ட யாதவ் பயத்தில் படபடத்த இதயத்தை அடக்கிக் கொண்டு கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு சிங்களத்தில் தனது உரையாடலை ஆரம்பித்தான் அவர்களோடு.

இப்ப எதுக்கு எல்லோரும் இங்க வந்திருக்கிங்க இந்த ராத்திரியில்…?”

நீ விடுதலைப் போராளிகளுக்கு பணம் குடுக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. அதால உன்னை கைது செய்கிறோம்…”

இப்போது  பேச ஒழுங்காக வராவிட்டாலும்  மற்றவர்கள் பேசும் சிங்களம் புரியும் கவிக்கு. அவர்கள் கூறியதைக் கேட்டதும் யாதவைக் கட்டியணைத்தபடி தேம்பியழுதாள் அந்தப் பேதைப் பெண்.

நோ… நான் யாருக்கும் எந்தப் பணமும் கொடுக்கவில்லை… உங்களுக்கு யாரோ தவறான தகவலை வழங்கியிருக்கிறார்கள்….”

இன்று காலையில் சம்பத் ஃபாங்கிலிருந்து ஐம்பது லட்சங்கள் எடுத்து இருக்கிறாய்… அந்தப் பணத்தை என்ன செய்தாய் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அதை நீ நாலாம் மாடிக்கு (புலன் விசாரணைகள் இடம்பெற்று வந்த இடம்) வந்து சொல்லு….”

அந்தப் பணத்தை என் சித்தப்பாக்குத் தான் கொடுத்துள்ளேன். நான் எந்த போராட்டத்துக்கும் பணம் கொடுக்கவில்லை. இப்படி எந்த உத்தரவும் இல்லாமல் நீங்கள் என்னை கைது செய்ய முடியாது.. நான் வர மாட்டேன்…”

கவியை தனக்குப் பின்னால் தள்ளி அவளை மறைத்தவாறு விறைப்பாகவே யாதவ் கூறிக் கொண்டிருக்க ஒருத்தன் துப்பாக்கியின் பின்பக்கத்துப் பிடியால் யாதவின் தலையில் ஓங்கி அடித்தான். நெற்றி ஒரு பக்கம் வெடித்து இரத்தம் கொட்டியது.

யாது….” 

அலறியபடி கவி  அவனைப் பாய்ந்தணைக்க அவளின் நீண்ட பின்னலைப் பிடித்திழுத்து அவளை தூரமாய் எறிந்தவர்கள், யாதவின் பின் கழுத்தில் கையை வைத்து அவனை வெளியே நெட்டித் தள்ளிச் சென்றார்கள். 

சுவரோரமாய் சென்று விழுந்தவள் தலையில் அடிபட்டு இரத்தம் கொட்டுவது கூடத் தெரியாமல் “யாதவ்… யாதவ்….” என்று கத்திக் கொண்டே எழுந்து வெளியே ஓடினாள். அந்தோ பாவம். அதற்குள் அவர்கள் வந்த சுவடு தெரியாமல் அந்த பிரதேசத்தை விட்டு விலகியிருந்தார்கள். 

அழுதுகொண்டே திரும்ப வீட்டிற்கு வந்தவள் தொலைபேசியில் தந்தைக்கு விடயத்தை சொல்லி விட்டு செய்வதறியாது உட்கார்ந்து விட்டாள். 

சந்திரஹாசன் கொழும்பிலிருந்த தனது நண்பருக்கு விஷயத்தைச் சொல்லித்தான் உடனே புறப்பட்டு வருவதாகவும் அதுவரை கவியைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அந்த நண்பரும் மனைவியும் உடனே புறப்பட்டு கவி வீட்டிற்கு சென்று அவளை ஆசுவாசப் படுத்த முனைந்தார்கள்.

இங்கே சந்திரஹாசனும் தெய்வநாயகியும் விடுமுறைக்கு வீடு சென்றிருந்த அருண்யாவும் உடனே கொழும்பை நோக்கி பயணித்தார்கள்.  சந்திரஹாசன் மூலம் விசயம் அறிந்திருந்த சுந்தரலிங்கம் தம்பதியும் கொடிகாமத்தில் தங்கள் காரில் வந்து இணைந்து கொண்டார்கள்.  

அடுத்த நாள் காலையே கொழும்பை அடைந்தவர்கள் யாதவின் நண்பனான ஒரு சட்டத்தரணியையும் அழைத்துக் கொண்டு நாலாம் மாடிக்குச் சென்றார்கள். ஆனால் அங்கே தாங்கள் அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என்ற சேதியே பலனாகக் கிடைத்தது. கொழும்பிலிருந்த அனைத்து காவல் நிலையத்துக்கும் சென்று புகார் அளித்தார்கள்.

பூஸா, வெலிக்கடைச் சிறைச்சாலைகளையும் சென்று விசாரிக்கத் தவறவில்லை. ஆனால் பலன் மட்டும் பூச்சியமே. யாராலுமே கவியைத் தேற்ற முயலவில்லை. பேருக்கு சாப்பிட்டுப் படுத்தெழும்பி பிரமை பிடித்தவளாய் உலாவிக் கொண்டிருந்தாள் கவின்யா. 

ஒரு மாதம் கடந்த நிலையில் எந்த தகவலும் யாதவ்வை பற்றிக் கிடைக்காது போகவே மேலிடங்களில் தெரிந்தவர்களைப் பிடித்து கவியின் இன்ரேன்ஸிப்பை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றி அவளைத் தங்களோடு அழைத்துச் சென்றனர் யாதவின் பெற்றோர். வேலைக்கு சென்றாலாவாது அவள் மனம் தேறாதா என்று. 

சந்திரஹாசனும் பணி நிமித்தம் ஊருக்குத் திரும்பி விட தெய்வநாயகி அருண்யாவோடு கொழும்பில் தங்கிக் கொண்டார். 

இந்த பேரிடியை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது எல்லோரும் நெஞ்சைப் பிசைந்த சோகத்தோடு வேறு வழியின்றி தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். 

2006 ஆம் ஆண்டு ஏ9 பாதை (வடபகுதியை இலங்கையின் மற்றைய பாகங்களோடு இணைக்கும் நெடுவீதி) மூடப்பட்டு பின் 2009 மே பதினெட்டாம் திகதி யுத்தம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் திரும்பவும் பாதை திறந்த பின்னரும் கூட இன்று வரைக்கும் யாதவ் பற்றிய எந்த செய்தியும் அறியவில்லை. 

மனித உரிமைகள் ஆணையத்தில் காணாமல் போனோர் பட்டியலில் யாதவின் பெயரையும் பதிந்து விட்டு இன்று வரைக்கும் சர்வதேச சமூகத்திற்கு முன்னால் கண்துடைப்பிற்காக நடைபெறும் விசாரணைகளில் தீர்வு கிடைக்காத என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் இவர்களும் ஒருவராய் என்றோ ஒருநாள் அவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவ்வப்போது நடைபெறும் காணாமல் போனோர் உறவுகளின் உண்ணாவிரத போராட்டங்களிலும், வீதி மறிப்புகளிலும், மனித சங்கிலிப் போராட்டாங்களிலும் சந்திரஹாசனும் சுந்தரலிங்கம் தம்பதியும் தங்களையும் இணைத்துக் கொண்டு கவியின் வாழ்வில் ஒரு வெளிச்சம் வந்து தீரும் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கவியோ வேலை நேரத்தில் தன்னை மறந்து அந்த பாவப்பட்ட தமிழ் மக்களின் பிணி தீர்க்கும் முயற்சியில் தன்னை மறப்பாள். ஆனால் மீதி நேரம் முழுவதும் எங்கே தனது வேதனை தன்னைச் சுற்றி இருப்பவர்களை இன்னும் அதிகமாய் வேதனைப் படுத்துமோ என்ற கவலையில் உள்ளுக்குள்ளேயே குமைந்து தினம்தோறும் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள். 

அக்கா….”

அருண்யாவின் மென்மையான அழைப்பில் தன் சிந்தனை கலைந்து நிஜத்துக்கு வந்தாள். 

என்னக்கா… இண்டைக்கு வேலை கூடவா..? ரொம்ப டயர்ட்டா இருக்கிறாய்… சாப்பாடு எடுத்து வைக்கவா…? நானும் இன்னும் சாப்பிடேல்ல… வாவன்…”

ஏன் அருண் இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாய்… சரி சரி வா…”

என்றவாறு சமையலறையை நோக்கி விரைந்தாள். தங்கை தான் உண்ணாமல் உண்ண மாட்டாள் என்பதை அறிந்தும் தூங்கி விட்ட தன் மடத் தனத்தை திட்டிக் கொண்டே தனக்கும் தங்கைக்குமாய் உணவை எடுத்து சாப்பாட்டு மேசையில் வைத்தவள் அருணியும் வர இருவருமாய் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள். 

அம்மா சாப்பிட்டாவா? நான் அம்மாவையும் போய் பார்க்கேல்ல இன்னும்.”

ஓமக்கா… இன்றைக்கும் திரெப்பி செய்ய மாட்டேன் என்று அடம் பிடிச்சா… பின்னேரம் அப்பா வீல் செயாரில் வைத்து பிள்ளையாரடி கோயில் வரை கூட்டிக் கொண்டு போய் வந்தவர்.”

ஹூம்… நல்லது. அம்மாவை அடிக்கடி வெளியே கூட்டிக் கொண்டு போக வேணும்… நீயும் போனால் எவ்வளவு நல்லது…”

இப்ப என்ர கதையை விடக்கா. நீ ஏன் இன்றைக்கு சரியான அப்செட்டாக இருக்கிறாய்? ஆஸ்பத்திரியில ஏதும் பிரச்சினையோ?”

அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. கொஞ்சம் பேசன்ட்ஸ் அதிகம். வேலை கூட. சரியான அலுப்பு… அதுதான் நித்திரையாப் போனன். அதைவிடு அருண்… இண்டைக்கு ஸாமைப் பார்த்தன்… ஹொஸ்பிடல் வந்திருந்தார்….  நேற்றும் வந்தவர் நான் கதைக்கேல… இண்டைக்குத்தான் கதைச்சனான்…”

என்ன ஸாம் ஸேரோ? லண்டனால வந்திட்டாரோ? எப்பிடி இருக்கிறார் அக்கா…? என்ன சொன்னார்…? நம்ம கதையெல்லாம் தெரியுமா…?”

அப்பிடியே தான் இருக்கிறார். கொஞ்சம் தாடி வளர்த்திருக்கிறார். அது வந்து…. என்ர விசயம் அவரிட அண்ணா சொல்லி இருக்கிறார் போல. அது தெரிஞ்சதும் வந்து தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச்  சொல்லிக் கேட்டார்…”

ஸேர் என்றால் ஸேர் தான்… பார்த்தியாக்கா அறிஞ்ச உடன உன்னைப் பார்க்க வந்திட்டார்… நீ என்ன சொன்னாய் அக்கா?”

பல வருடங்களின் பின்னர் பழைய துள்ளலோடு ஒலித்த தங்கையின் குரலை அதிசயமாய் பார்த்தாள் கவி. 

அந்த சம்பவத்தின் பின்னர் தனக்குள்ளேயே ஒடுங்கி பழைய கலகலப்பு, கேலி, துள்ளல், துடுக்குத் தனம் எதுவுமின்றி தன் சுட்டித்தனம், குறும்பெல்லாம் மறந்து தேவைக்கு மட்டுமே வாயால் வார்த்தைகளை உதிர்த்து ஒரு நடைப் பிணமாக வாழ்ந்த அருண்யாவின் முகத்தில் ஸாமின் பெயரைக் கேட்டதுமே வந்த மலர்ச்சியை தனக்குள்ளேயே குறித்துக் கொண்டாள் அந்த பாசக்கார சகோதரி. 

என்னக்கா யோசிச்சிட்டு இருக்கிறாய்…? ஸேர் கேட்டதுக்கு என்ன சொன்னாய்…?”

ஆவலாய் விசாரித்தவளுக்கு விரக்தியாய் பதிலிறுத்தாள் கவின்யா.

நான் என்ன சொல்ல அருண்…?  என்ர யாதுவை மறந்து என்னால எப்பிடி இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்…? மாட்டன் என்று சொல்லிட்டன்…”

ஹூம்… ஆனால் அக்கா சொல்லுறனே என்று கோபிக்காதை… யாதவ் அத்தானுக்காக இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திட்டு இருக்கப் போறாய்…? ஸாம் சேர் என்றால் எல்லாம் தெரிஞ்சவர்… உன்னை ரொம்ப புரிஞ்சு கொண்டவர்… உன்னை நல்லாப் பார்த்துக் கொள்ளுவாரக்கா…”

அதெல்லாம் சரி அருண்… ஆனால் என்னால யாதவ மறந்து அது ஸாமே ஆனாலும் கல்யாணம் பண்ணேலாது… யாதவ் எப்பிடியும் திரும்ப வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு அருண்…. நீ பட்ட கஷ்டம்… என்ர வாழ்க்கைக்காக நீ ரிக்ஸ் எடுத்து உன்ர வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டது எதுவும் வீணாகாது அருண்… நிச்சயமாக யாது திரும்ப வருவார்…”

உணர்ச்சி பொங்கக் கூறி விட்டு விழிகளில் துளிர்த்த நீரை தங்கைக்கு தெரியாமல் உள்ளிழுத்து மறைத்தபடி சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக சமையலறைக்கு எடுத்துச் சென்றாள்.

தமக்கை எழுந்து செல்வதையே பார்த்த படி தட்டில் மீதியிருந்த உணவை அளைந்தவளின் கண்களிலும் கண்ணீர் துளிகள். 

தனது தட்டைக் கழுவி வைத்து விட்டு வந்த கவி இன்னமும் தங்கை தட்டையே அளைந்து கொண்டிருப்பதைப் பார்த்தவள்,

அருண்… சாப்பிட்டு முடிஞ்சால் போய்க் கையைக் கழுவு…”

சரிக்கா…”

என்மேல் எவ்வளவு பாசம் இருந்திருந்தால் இப்படி எனது வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக இப்படி தன் வாழ்க்கையே இழந்திருப்பாள் இவள்… கடவுளே எங்கள் வாழ்வில் இத்தனை இழப்புகளை சந்தித்த பின்னும் உன்னை நம்புகிறேன்… இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு… இந்த இளம் வயதிலேயே நடைப் பிணம் ஆக்கி விட்டாயே… எங்கள் பழைய அருண் எங்களுக்கு கிடைப்பாளா…?’ 

அப்பிளை துண்டுகளிட்ட படியே கடவுளிடம் வேண்டி முடித்தவள் தங்கையின் பக்கமும் பாதியைத் தட்டில் வைத்து நீட்டியபடி “அக்கா..” என்றழைத்தவளின் குரலில் தங்கையை நோக்கினாள்.

அக்கா… எனக்கு ஸேரைப் பார்க்கணும் போல இருக்கு… இங்க எவ்வளவு நாள் நிக்கிறாரோ தெரியேல்ல… நாளைக்குப் பின்னேரம் அவரிட வீட்ட போய்ப் பார்க்கவா…

லண்டன் போன தொடக்கத்தில என்னோட கதைச்சவர்… பிறகு ஒரு தொடர்பும் இல்லை… அந்தோணி அங்கிள் இறந்தப்ப கூட வரேல்ல… பேஸ்புக், டிவிட்டர், ஈமெயில் எதுவும் இல்லை… அப்படி என்ன தலைமறைவு வாழ்க்கை வாழ்க்கை வாழுறார் என்று சண்டை போடணும்…”

பழைய அருணியின் துடுக்குத் தனம் தலை தூக்க ஆவலாய்க் கேட்டவளிடம் மறுக்கவா போகிறாள் கவி? ஆனால் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. காரணம். பத்து வருடங்களாக அஞ்ஞாத வாசம் புரிபவள் முதல் முதலாக வீட்டுப்படி தாண்டி வெளியே போய் ஸாமை சந்திக்க விரும்புவதை எண்ணி அதிசயித்தாள். இதிலிருந்தே அவள் ஸாம் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்து கொண்டாள். 

அருண்யா ஸாமை சந்திக்க முதலே தான் ஸாமை சந்தித்து அருணி பற்றிய உண்மைகளைத் தெரியப் படுத்தினால் ஸாம் அவளைக் கொஞ்சம் மாற்ற முயலுவான். இவள் வேறு இன்னமும் அவன் பெயர் கேட்டால் முன்பு மாதிரியே ஸேர் ஸேர் என்று உருகுகிறாளே. சிலவேளை இத்தனை வருடங்கள் கழித்து அருணியின் வாழ்வில் ஒளியேற்றத் தான் கடவுள் ஸாமை அனுப்பி வைத்தாரோ…? எல்லோரது வேண்டுதல்களும் வீண்போகவில்லையோ?

மனதில் பல சிந்தனைகளோடு தூங்கியெழுந்தவள் காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே வேலைக்குத் தயாராகி போகும் வழியில் ஸாமின் வீட்டிற்கு சென்றாள். 

இவள் வெளியே நின்று கூப்பிடவும் ஸாமே வந்து கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்து உபசரித்தான். அவனது இரண்டாவது அண்ணி தேநீரோடு வர இருவரும் எடுத்து பருகிக் கொண்டே கேள்வியாய் கவியை நோக்கினான் ஸாம்.

இரு மிடறு அருந்திவிட்டு

ஸாம்… உங்களிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லோணும்… அருண் இண்டைக்கு உங்களைப் பார்க்க வரப் போறன் என்று சொல்லியிருக்கா… அவ இப்ப முந்தி மாதிரி இல்லை… ரொம்ப மாறிட்டா… ஆனால் உங்கட பேரைக் கேட்டதும் அவ முகத்தில பழைய களை வந்துச்சு… 

அதுதான் உங்களுக்கு முழு உண்மையும் தெரிஞ்சால் அவளை பழையபடி மாத்திறதுக்கு ஏதாவது செய்யலாமோ என்று… அதுதான் உங்களைப் பார்த்து கதைச்சிட்டுப் போகலாம் என்று…”

கவி கூறியதைப் பதைப்புடன் கேட்டவன் விடயம் கொஞ்சம் பாரதூரமானது என்பதைப் புரிந்து கொண்டு,

கவி… நான் உங்கட ஹொஸ்பிடல் குவாட்டர்ஸ்க்கே நேற்று மாதிரி வந்திடுறன்… எத்தனை மணிக்கு வந்தால் உங்களுக்கு ஓகே…?”

ஒரு மணிக்கு என்ர லஞ்ச் டைமுக்கு வந்திடுங்க… ரொம்ப தாங்ஸ் ஸாம்…”

கூறி விட்டு எல்லோரிடமும் விடைபெற்று வைத்தியசாலைக்குச் சென்றாள். 

அருண்யாவின் மாற்றத்திற்கு என்ன காரணம்

1 thought on “யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 22’”

  1. கதையைப் படிக்கும் போது மனம் மிகவும் கணமாக உள்ளது. ஈழப் பிரச்சினை பற்றி பல விதங்களில் அறிந்தாலும் சாமான்யர்களில் இருந்து பணம் படைத்தவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் பற்றி அறிய முற்படும் போது எல்லாம் எங்களின் கையாலாகாத தனத்தை நினைத்து வெட்கின்றேன். மிகவும் வேதனையாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

அத்தியாயம் – 29 ஸாம்அபிஷேக் – அருண்யா    அதிகாலை ஐந்து மணிக்கே அந்த நட்சத்திர விடுதியை அடைந்து விட்டார்கள். காரிலேயே இருவரும் நன்கு தூங்கியிருக்க மலையகத்தின் கூதல் காற்று சிறு குளிரோடு உடம்பை ஊடுருவிச் செல்ல காரை விட்டு இறங்கி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

அத்தியாயம் – 13 யாதவ் காதல் நிறைவேறுமா?   யாதவ்மித்ரனின் வார்டை அடைந்த அனுஷியா,  “டேய் அண்ணா…! சுகமாகி வீட்டுக்கு போனதும் ரெண்டு வீட்டை எனக்கு எழுதி வைக்கிற வேலையைப் பார். சரியா?” “உண்மையாவா சொல்லுறாய் அனு…? என்ர வயித்தில பாலை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’

அத்தியாயம் – 07 காதலெனும் தேர்வெழுதி   அன்று மாலையிலும் சந்திரஹாஸனே வந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றார்.     அவர்கள் வருகைக்காகவே காத்திருந்த அருண்யா அவர்கள் காரை விட்டு இறங்க முதலே பரபரத்தாள்.      “அக்கா… ராக்கிங்