Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 18’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 18’

அத்தியாயம் – 18

கல்யாண மாலை

 

அந்த நாளும் அழகாய் விடிந்தது. யாதவே தன்னவளுக்காய் தேர்ந்தெடுத்திருந்த அந்த பல வர்ணங்கள் இணைந்த பட்டில் தேவதையாய் ஜொலித்தாள் கவின்யா. 

 

 

அந்த சேலையை எடுக்க வேண்டாம், எங்கள் வழக்கப்படி கல்யாணப்பெண் இப்படி பல வர்ணங்கள் இணைந்த புடவை உடுத்துவதில்லை. மஞ்சள், ரோஜா போன்ற மங்களகரமான நிறங்களே முகூர்த்த புடவையாக எடுப்பார்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் வசந்தா. ஆனால் அவர் பெற்றவன் கேட்டால் தானே…

 

 

யாழ் நகரின் பிரபல அழகு நிலையமான தாட்சா பியூட்டி பார்லரில் இருந்து கவியின் ஒப்பனைக்காக வந்திருந்தவர்கள் தங்கள் பணியை செவ்வனவே செய்திருந்தார்கள்.

 

 

ஆனால் எத்தனை அழகாய் ஒப்பனை செய்தும் மருந்துக்கும் புன்னகையற்ற கவியின் வதனம் வாடிப் போய் சோர்ந்து காணப்பட்டது. ஒப்பனைகள் முடிந்ததும் தமக்கையோடு தனியாகப் பேச வேண்டும் என்று அனைவரையும் வெளியே அனுப்பினாள் அருண்யா. 

 

 

கதவைத் தாளிட்டு தமக்கையின் அருகே வந்து அருகிருந்த கட்டிலில் அமர்ந்தவள்,

 

 

அக்கா… நான் உன்னை விடச் சின்னப் பிள்ளை தான்… இருந்தாலும் சொல்லுறதைக் கேள்… இந்த கல்யாணம் நீயே முடிவெடுத்து சம்மதிச்சது… அதுக்கு பிறகும் இப்பிடி மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு இருக்கிற நல்லாவா இருக்கும்? யாதவ் உன்னைக் காதலிக்கிறார் கவிக்கா… உன்னை ரொம்ப லவ் பண்ணுறார். நீ ஸாம் ஸேரை லவ் பண்ணின தெரிஞ்சும் உன் மனசைப் புண்படுத்தாம நடந்து கொள்ளுறார்…

 

 

அதுக்குப் பிறகும் நீ இப்பிடி வேண்டா வெறுப்பா நடந்து கொள்ளுற அவருக்கு செய்ற அநியாயம்… இது நீ எடுத்தமுடிவு எண்டதை மறக்காதை. கொஞ்சமாவது சிரிக்கா… உன்னை பாக்க கல்யாணப் பொம்பிளை மாதிரியே இல்லை… உன் கோழைத்தனத்திற்கு யாதவையும் பலியாக்காதே. அவரோடயாவது சந்தோசமா வாழ முயற்சி செய்… 

 

 

எல்லாம் மனசு தான்க்கா. நாம மனசை வைச்சுக்கிற முறையில தான் சந்தோசம், துக்கம் எல்லாம். ஒரு முடிவை எடுத்தால் அதை செயற்படுத்துற வழியைப் பார்… முடிவு எடுத்த பிறகு நடந்து முடிஞ்சதைப் பற்றிக் கவலைப்பட்டு ஆகப்போகிறது ஒண்டுமில்லை… அதால கல்யாண பொம்பிளையாய் சந்தோசமா இருக்கிற வேலையைப் பார்… கொஞ்சமாவது சிரி… கவலைப்படாதை. யாதவ் அத்தான் உன்னைப் புரிஞ்சு நடந்துப்பார்… எங்க இப்ப சிரி பார்க்கலாம்…”

 

 

தங்கை சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளிலிலுமிருந்து சுட்ட உண்மையை உணர்ந்து கொண்ட கவியும் அதன் பிறகு சிரித்த முகமாகவே தன்னை மாற்றிக் கொண்டாள். காது வரைக்கும் உதட்டை இழுத்து ஒரு புன்னகை புரிந்து தங்கையைப் பார்த்து,

 

 

இவ்வளவு சிரிச்சால் போதுமாடி…?”

 

 

என்று கேட்டாள். அவளின் அந்த வில்லங்க நகையில் அருணிக்கு புன்னகை மலர,

 

 

இந்தளவெல்லாம் கூட. கொஞ்சம் குறைக்கலாம்…”

 

 

என்று கவியைக் கொஞ்சம் இலகு மனநிலைக்கு மாற்றினாள். அதன் பின்னர் இடையிடையே கவியின் முகம் சோபை இழந்தாலும் முடிந்தளவு தன்னை நன்றாகவே வைத்துக் கொண்டாள்.

 

 

பல வர்ணப் பட்டுக் கட்டி யாதவ்வின் அருகே அமர்ந்து பிராமணர் சொன்ன கிரியைகளைச் செய்து யாதவ் தந்த புடவையை வாங்கிச் சென்று சுமங்கலி பெண்கள் புடைசூழ அதை மாற்றி வந்தாள்.

 

 

சிவப்புப் பட்டில் தகதகவென வந்தவளிடமிருந்து யாதவ்வால் கண்களை விலக்க முடியவில்லை. வைத்த விழி வாங்காது அவளையே பார்த்து இருந்தவன் உள்ளத்தில் பேருவகை. பெரிய தடை ஒன்று வந்தாலும் கூட இன்னும் சில நிமிடங்களில் அவள் தனக்கே தனக்காய். காலம் முழுவதும் அவளோடே இணைந்து வாழப் போகும் வாழ்க்கை. 

 

 

நினைவே இனிக்க மலர்ந்த முகத்துடன் அவளைப் பார்த்தான். கவியும் ஒரு புன்னகையை சிந்தி விட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். உரிய சடங்குகள் நிறைவேறி மந்திரங்கள் உச்சரிக்க, கெட்டி மேளம் கொட்ட, மங்கல வாத்தியங்கள் முழங்க, கூடியிருந்த சொந்த பந்தங்கள் மலர் தூவி வாழ்த்த யாதவ்மித்ரன் கவின்யாவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான். 

 

 

கைகளை கூப்பி தலையைக்குனிந்து அவன் தாலியை கழுத்தில் ஏற்றுக் கொண்டிருந்த கவியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிதறின. எதற்காக அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அது ஆனந்தக் கண்ணீரா, துக்கக் கண்ணீரா எதுவும் புரியாத நிலை. எந்தப் பெண்ணுக்கும் இன்னொருவனுக்கு சொந்தமாகும் அந்த நிலையில் வரும் இனம் புரியாத படபடப்பு கண்ணீராக வெளி வந்ததோ அவளே அறியாத நிலை.

 

 

உலகத்து மகிழ்ச்சி எல்லாம் தனக்கே சொந்தமாக்கியது போன்ற சந்தோசத்துடன் தாலியைப் பூட்டி நிமிர்ந்தவன் கவியின் கலங்கிய கண்களைப் பார்த்து தவித்து விட்டான். அவனது அனைத்து சந்தோஷங்களும் அந்த ஒரு நொடியில் வடிந்து விட கவி ஸாமை நினைத்துத் தான் அழுகிறாள் என்று நினைத்து தனக்குள்ளேயே உடைந்து நொறுங்கி அப்படியே இறுகிப் போய் விட்டான். 

 

 

அன்று மாலை கவியின் வீட்டில் பதிவுத் திருமணத்திற்குரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

யாதவ் கிறீம் கலர் சூட்டிலும் கவின்யா மெல்லிய ஆரஞ்சும் இல்லாத பிங்கும் இல்லாத ஒரு கலர் லெஹங்காவிலும் தயாராகி இருந்தார்கள். 

 

 

மாலை மாற்றி, மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணத்தைப் பதிவாளருக்கு முன்னால் இரு தரப்பு பெற்றோரது சாட்சி கையெழுத்துடனும் பதிவு செய்து கொண்டார்கள். 

 

 

காலையில் நல்லூரிற்கு வர முடியாத சொந்தங்கள், நண்பர்கள் பின்னேரம் கவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எல்லோரையும் அதிர்ச்சியோடு ஆச்சரியப் படுத்தும் விதமாக ஸாம் அஞ்சலியோடு இணைந்து வந்து கொண்டிருந்தான். 

 

 

கவின்யாவும் யாதவும் அவர்களை மகிழ்ச்சிகரமாகவே மேடைக்கு வரவேற்றனர். ஸாமும் புன்சிரிப்புடன் மேடைக்குச் சென்று மனதார அவர்களை வாழ்த்தி புதுமணத் தம்பதியினரோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழிறங்கினான்.

 

 

பம்பரமாகச் சுழன்று, வந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டிருந்த அருண்யா அப்போது தான் மேடையை விட்டிறங்கிய ஸாமைக் கண்டு அதிர்ந்து விட்டாள். அடுத்த கணம் அவர்களை நோக்கி சென்றவள்,

 

 

வாங்கோ ஸேர்… வாங்கோ அஞ்சலி அக்கா. .. நான் உள்ள நிண்டபடியா கவனிக்கல உங்களை… இப்ப தான் வந்தியளா..? வாங்கோ வந்து சாப்பிட்டிட்டுப் போங்கோ…”

 

 

அவர்களை விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த ஹோலுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டின் வெளி முன் முற்றத்தில் கொட்டகை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு மணப்பந்தல் போடப் பட்டிருந்தது. வீட்டு வரவேற்பறை பெரிது என்பதால் அங்கே நிறைய இருக்கைகள் போட்டு விருந்திற்குரிய ஒழுங்குகளைச் செய்திருந்தனர். உள்ளே சாப்பிட வந்தவர்களைக் கவனித்து உபசரித்து கொண்டிருந்த படியால்தான் அருண்யா ஸாம் வந்ததைக் கவனிக்காதது.

 

 

விருந்து நடைபெறும் இடத்துக்குச் சென்றதும் அங்கே வந்திருந்த சில நட்பு வட்டத்தைக் கண்டதும் அஞ்சலி அவர்களோடு இணைந்து கொண்டாள். ஸாமின் காதல் தெரிந்த ஒரு சிலரில் அவளும் ஒருத்தி என்பதால் இன்றைய சூழ்நிலையில் ஸாமோடு என்ன பேசுவது என்று தெரியாத தர்மசங்கட நிலையில் இருந்தாள் அவள். நண்பர்களைக் கண்டதும் இதுதான் சாட்டு என்று அவர்களிடம் ஓடி விட்டாள்.

 

 

அருண்… கல்யாண வீட்டு ஃபிஸில நீரும் சாப்பிட்டு இருக்க மாட்டீர். டைம் ஆகிட்டுத் தானே.. நீரும் என்னோட சேர்ந்து சாப்பிடுமன்…”

 

 

ஸாம் கூறியதும் அவனைத் தனியாக அமர விட மனம் ஒப்பாமல் தானும் வேண்டியதைத் தட்டில் போட்டுக் கொண்டு ஸாம் எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

 

 

நீங்க வருவீங்க என்று நான் நினைக்கல ஸேர்…”

 

 

ஹூம்… எனக்கும் வரப் பிடிக்கலத்தான். நிரோஜன் ஆக்களை வரச் சொல்லி கேட்டனான்… மாட்டம் என்றிட்டாங்க….”

 

 

அதுதான் நானும் கேட்கிறன். அப்பிடி உங்கட மனசைக் கஷ்டப்படுத்திக் கொண்டு ஏன் வந்தீங்க? வெளில சிரிச்சுக் கொண்டு இருந்தாலும் உங்கட கண்ணில தெரியுதே நீங்க படுற வேதனை…”

 

 

அவன் மனதை அச்சொட்டாகப் புரிந்து கொண்டு அழுதுவிடுபவள் போல் சொன்னவளைக் கரிசனையாய் பார்த்தான்.

 

 

பிறகும் ஏன் வந்தன் என்றால் கவியோ, யாதவோ வேதனைப் படக் கூடாது, நான் இன்னும் கவியை நினைச்சு அவளை மறக்கேலாமல் கஸ்டப்படுறன் என்று… அந்த குற்றவுணர்ச்சி ரெண்டு பேரிட்டயும் இருக்கும் வரைக்கும் அவங்களால சந்தோசமா வாழ ஆரம்பிக்கேலாது… என்ர கவி ஸொரி… கவி ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாலும் என்னால தாங்க முடியாது. அவள் என்னை நினைச்சுக் கவலைப் படாமல் தன் வாழ்க்கையை தொடங்கணும் என்று தான் நான் வந்தன்”

 

 

சொன்னவனையே வியப்போடு பார்த்தாள். இவனை என்ன மனிதன் என்று நினைப்பது? இந்த காலத்தில் போய் இப்படி ஒரு காதலா…

 

 

நான் நாளைக்கே கொழும்பு போறன் அருண்… இங்க வேலை ரிசைன் பண்ணுறன். லண்டன் அல்லது வேற நாடு போக முழுமூச்சாக ட்ரை பண்ணப் போறன். உம்மை கொழும்பில மீட் பண்ணுறன். சரியா?”

 

 

பேச வார்த்தைகள் வராமல் மௌனமாய் தலையசைத்தாள். அவனது வேதனையை உணர்ந்தவளால் அவனைப் போல் வெளிக்கு சிரிக்க முடியவில்லை.  

 

 

உண்டு முடித்து சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு அருண்யாவிடம் விடைபெற்று கிளம்பி விட்டான் ஸாம். சந்திரஹாசனும் தெய்வநாயகியும் இவனைக் கண்டிருந்தாலும்அருகில் வந்து பேச முயற்சி எடுக்கவில்லை. அவனும் முயலவில்லை.

 

 

வீட்டிற்கு வந்தவனுக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. தந்தையோடும் எதுவும் பேசாமல் உடையைக் கூட மாற்றாது அப்படியே சென்று கட்டிலில் வீழ்ந்தான். விட்டத்தை வெறித்தவன் மனக்கண்ணில் கவியோடு கூடிய ஒவ்வொரு நினைவும் அணிவகுக்கத் தொடங்கிற்று. 

 

 

ஒரு கட்டத்தில் தலையை உலுக்கி அவள் இப்போது என் கவி இல்லை… இன்னொருத்தன் பொண்டாட்டியை மனசால நினைப்பதும் தப்பு என முடிவெடுத்தவன் தன் எண்ண ஓட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எழுந்து சென்று முகம் கழுவி உடை மாற்றி வந்தான். நேரம் இரவு இரண்டு மணி காட்டியது.

 

 

கட்டிலில் மறுபடியும் வந்து விழவும் அவனது தொலைபேசி அழைத்தது. இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று சிந்தித்தவாறே எடுத்து பார்த்தவன் அருண்யா எனவும் அழைப்பை ஏற்றுக் காதிலே வைத்தான். 

 

 

ஹலோ…நித்திரையா ஸேர்…? நான் இப்ப தான் எல்லா வேலையும் முடிச்சு றூம்க்கு வந்தன்… ஒரே டயர்ட்… நாளைக்கு இரவே கொழும்பு போகோணும்… நாளண்டைக்கு இரவு கொழும்பில ரிஸப்ஷன்… யாதவ் அத்தானிட ஒபிஸ் ப்ரண்ட்ஸ்க்காக… முடியல…”

 

 

என்று அவன் சுகம் விசாரித்து அவனை வேதனையில் ஆழ்த்தாமல் தன் கதை பேசினாள். இருந்தாலும் தன்னை ஆறுதல் படுத்தவே அவள் அழைத்திருக்கிறாள் என்பதுபுரிந்து அவள் அன்பில் தன்னை இழந்தவன் அவ்வளவு நேரம் கொண்டிருந்த கட்டுப்பாடெல்லாம் இழந்து விம்மத் தொடங்கினான்.

 

 

அருண்…. என்னால முடியல அருண்… இனி கவிட பேரைச் சொன்னாலே பாவம்… ஆனால் இந்த ஆறு வருஷமா ஒவ்வொரு விசயத்தையும்அவளுக்காக என்று தானே பாத்துப்பாத்து செய்வன்… அவளை நினைக்காம ஒரு நிமிஷம் கூட நான் இருந்ததில்லையே… எப்பிடி மறக்கப் போறன் என்று தெரியேல்லையே அருண்… நான் என்ன செய்வன்…. 

 

 

செத்தால் இந்த வேதனை தீரும் என்றால் எனக்கு அதுக்கும் குடுப்பினை இல்லையே…நான் செத்தால் அதுக்குபிறகு கவி நிம்மதியாக வாழ மாட்டாளே… 

 

 

ஏன் அருண் எனக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது… அம்மா இல்லாம போனா… இப்ப அம்மாக்கு மேல உயிரை வைச்சிருந்த கவி எனக்கு கிடைக்காம போய்ட்டா… நான் விரும்பிற எதுவுமே எனக்குக் கிடைக்காதா…?”

 

 

குழந்தையாய் விம்மியவனை என்ன வார்த்தை சொல்லி ஆறுதல் படுத்துவது என்று புரியாமல் இவளும் கண்களில் நீர் வடிய,

 

 

அழாதைங்கோ ஸேர்…. எங்கட ஸேர் எவ்வளவு ஸ்ட்ரோங்கான ஆள்… அவர் அழலாமோ….? உங்களுக்கு கவிக்காவை விட வேற ரொம்ப நல்ல பொண்ணு கிடைக்கணும் என்று எழுதி வைச்சிருக்குப் போல… அதுதான் இப்பிடி எல்லாம் நடக்குது. 

 

 

அச்சாக்குட்டி ஸேர் எல்லோ… நீங்க அழ எனக்கும் அழுகை வருது… அருண் அழுதால் சகிக்காது… தெரியும் தானே… அது பரவாயில்லையோ…?  கவலைப்படாதையுங்கோ ஸேர்… ப்ளீஸ்…. கவிக்காட நல்லதுக்கு என்று தானே நீங்க வந்தனீங்க… அப்புறம் இப்பிடி அழுகிற தெரிஞ்சால் அவ எவ்வளவு வேதனைப் படுவா…?”

 

 

என்னால முடியலையே அருண்… எத்தனை விதமாக அவளை எனக்குப் பக்கத்தில் வைச்சுக் கற்பனை பண்ணியிருப்பன்… இண்டைக்கு என்ர கவியை இன்னொருத்தனுக்குப் பக்கத்தில பாக்க நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கே… யார் எப்பிடிப் போனால் என்ன என்று நானும் பேசாமல் செத்துப் போறன்…. அப்ப இந்த வேதனையெல்லாம் இல்லைத் தானே…”

 

 

ஐயோ…. ஸேர்… படிக்காததுகள் மாதிரி இது என்ன சாகிறன் சாகிறன் என்று கொண்டு… நீங்கள் செத்துப் போனால் உங்களை சுத்தியிருக்கிற எல்லாரிட வாழ்க்கையும் நிம்மதி இல்லாம போய்டுமே… என்னாலயே தாங்கேலாதே… நீங்க ஏதாச்சும் செய்தீங்க என்றால் அடுத்த நிமிஷமே நானும் உயிரோட இருக்க மாட்டன். அம்மாவுக்கும்  துணிவில்லாத கவிக்கும் குடுக்கிற தண்டனை என்று நினைச்சு நானும் உங்களுக்கு பின்னால மேல வந்திடுவன்…”

 

 

லூசி மாதிரி கதைக்காதையடி… உனக்கென்ன விசரே… நீ ஏன் சாகப் போறாய்… ?”

 

 

கோபத்தின் உச்சியில் அவளை மரியாதை குறைத்து கடிந்தான். 

 

 

உங்களுக்குத் தான் விசர் முத்திப் போச்சு… லவ்க்காக எவனாவது சாவானா…? மூண்டு பிள்ளை பெத்து பதினைஞ்சு வருஷமாக குடும்பம் நடத்தின உங்கட அப்பாவுக்கு உங்கட அம்மாவில இல்லாத லவ்வா…

 

 

உங்கட அம்மா அப்பாவில இருந்த லவ்வில ஹார்ட் அட்டாக் வந்து செத்தா என்றா இன்னொரு கல்யாணம் கட்டாமல் அவவையே நினைச்சுக் கொண்டு உங்கள் எல்லாரையும் வளத்த உங்கட அப்பாட லவ்வ விட உங்கட இந்த கண்ணாலயே கதைச்ச காதல் பெரிசோ…?

 

 

என்ர மனுசில நான் வைச்ச லவ் தான் பெரிசு என்று அவரும் செத்திருந்தா இண்டைக்கு நீங்கள் மூன்று பேரும் எங்கேயாவது அனாதையா திரிஞ்சு இருப்பியள்…

 

 

அப்பிடிப்பட்ட அப்பாவை வேதனைப் படுத்த சாகப் போறியளோ…? உங்களுக்கு வேதனையாத்தான் இருக்கும்… அது எனக்கும் புரியுது… அதுக்கு சாகிறது தீர்வில்லை சரியோ…

 

 

காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. நீங்க எவ்வளவு கெட்டிக்காரன்… லைப்ல எத்தினையோ விசயம் சாதிக்கலாம்… அதை விட்டிட்டு லூசுகள் மாதிரி கதைச்சுக் கொண்டு…

 

 

எனக்கும் உந்த மனேஜ்மன்ற் படிப்பு ஏழு நாளும் படிப்பு படிப்பு என்று ஒரே விசராக் கிடக்கு. வாங்கோ உங்களோட சேர்ந்து நானும் சாகிறன்… எனக்கும் நிம்மதி… அதுக்குப் பிறகு படிக்கத் தேவையில்ல.. ”

 

 

கோபமாக அவள் கத்தக் கத்த சுயநிலைக்கு வந்து கொஞ்சம் நிதானமாகினான். வாய்விட்டழுது தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டது அவனை ஆசுவாசப் படுத்தியிருந்தது. மெல்லிய குரலில் அவளிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். 

 

 

ஸொரி அருண். … ஏதோ வேகத்தில சாகப் போறன் என்று சொல்லிட்டன். நான் அப்பிடிச் செய்வனா? ஸொரிடா…”

 

 

இப்ப சொன்ன மாதிரி ஒரு வேகத்தில இவர் செத்து வைப்பாராம்… நாங்கள் இங்க காலம் பூராவும் இவரை நினைச்சு அழ வேணுமாக்கும்…”

 

 

இன்னும் கோபம் தீராதவளாய் சத்தமாக புறுபுறுத்தவளின் கோபம் தீர்க்க முனைந்ததில் தன் வேதனைகள் மறந்தான் இவன்.

 

 

இருந்தாலும் சாட்டோட சாட்டாக படிக்க கள்ளம் என்றதைச் சொல்லிட்டீர் என்ன?”

 

 

சும்மா விளையாடாமல் போங்கோ ஸேர்… எனக்கு வாற கோபத்துக்கு… நீங்க கதைச்ச கதைக்கு நேரில இருந்திருந்தால் உங்கட கழுத்தை நானே நெரிச்சுக் கொன்னிருப்பன்…”

 

 

இன்னும் கோபம் தீராதவளாய் குமுறினாள். அவளை அடக்கும் வழி தெரியாது பேச்சை மாற்றினான்.

 

 

அருண்… இண்டைக்கு நீர் எவ்வளவு வடிவா இருந்தனீர் தெரியுமோ..? பொம்பிளைப் பிள்ளை மாதிரி இருந்தீர்… தலைமுடியும் கொஞ்சம் வளந்திட்டென்ன…?”

 

 

இங்க ஒருத்தரும் எனக்கு ஐஸ் வைக்க வேணாம்… சரியோ…?”

 

 

உண்மையாத்தான் அருண் சொல்லுறன்… இண்டைக்கு கலியாண வீட்டுக்கு வந்த எத்தினை பேரிட நித்திரையைக் குழப்பினீரோ தெரியேல்ல…”

 

 

அவன் கேலியான குரலில் கூறவும் இவள் சிறிதாய் வெக்கப்பட்டாள்.

 

 

போங்கோ ஸேர்… உங்களுக்கு என்னோட எப்ப பாத்தாலும் பம்பல் தான்… இந்த மொட்டை மண்டைய ஒருத்தனும் சைட் அடிக்க மாட்டான்… ஸோ நீங்க கவலைப் படாதீங்கோ….”

 

 

என்ன எங்கட அருணுக்கும் வெக்கம் வருதோ…? ஆனால் உண்மையா நீர் நல்ல வடிவா இருந்தனீர்…”

 

 

ஓகே ஓகே. .. தாங்ஸ்… மூண்டு மணி தாண்டிட்டு… கண்டதையும் யோசிக்காமல் போய்ப் படுங்கோ…. எனக்கும் கண்ணை சுழட்டுது…”

 

 

இருந்தாலும் சாட்டோட சாட்டா படிக்கக் கள்ளத்தில சாகப் போறன் என்று உண்மையப் போட்டுடைச்சிட்டீரே…

 

 

ஓகே அருண்… பிள்ளைக்கும் கொஞ்ச நாளா ஒரே வேலை… டயர்ட் தானே… நீர் படும். குட் நைட்….”

 

 

குட் நைட் ஸேர்…”

 

 

தொலைபேசியை அணைத்துக் கட்டிலில் வீழ்ந்த இருவரும் உடல் அலுப்பும் மனக் களைப்பும் ஒருங்கே சேர தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

 

 

கவின்யாவும் யாதவ்மித்ரனும் முதலிரவில் என்ன ஆனார்கள்

 

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 18’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’

அத்தியாயம் – 11 பொங்கு தமிழ்  27.06.2003. சர்வதேச சமூகத்தையே அந்த சிறிய நிலப் பரப்பை நோக்கி பார்வையை திருப்ப வைத்த தினம். ஆம். யாழ் மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் அரங்கே அது. அண்ணளவாக இரண்டு லட்சங்களிற்கும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

அத்தியாயம் – 13 யாதவ் காதல் நிறைவேறுமா?   யாதவ்மித்ரனின் வார்டை அடைந்த அனுஷியா,  “டேய் அண்ணா…! சுகமாகி வீட்டுக்கு போனதும் ரெண்டு வீட்டை எனக்கு எழுதி வைக்கிற வேலையைப் பார். சரியா?” “உண்மையாவா சொல்லுறாய் அனு…? என்ர வயித்தில பாலை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 32 என்ன அதிர்ச்சி?   எல்லோரும் விமான நிலையத்தை அடைந்து பிரிவுத் துயரோடு நின்றிருந்தார்கள். அருண்யா ஸாமின் கைப்பிடி விடவில்லை. அவனும் அவளை அணைத்தவாறே மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.      இவர்கள் பேச்சுக்கு காது கொடுத்தவளாக நள்ளிரவிலும்