Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’

அத்தியாயம் – 05

காதலிக்கிறாளா கவி?

 

 

யார்டி அவன் ஸாம் அபிஷேக்?  அன்றைக்கு வீட்ட வந்தவங்களில ஒருத்தன் தானே… 

 

 

நானும் நல்ல பொடியள் என்று பாத்தால் ஐயாக்கு காதல் கேட்குதாம்… காதல்… அதுவும் கிறிஸ்டியன் நாய்… என்ன துணிவிருந்தால் என்ர பிள்ளைக்கு காதல் கடிதம் தருவான்?

 

 

இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது… இப்பவே போய் அவன்ட அப்பன் ஆத்தையைக் கேட்கிறன். இதோ பிள்ளைய வளர்த்து வைச்சிருக்கிற லட்சணம் என்று…

 

 

அவன் தந்தால் நீயும் வாங்கிக் கொண்டு வருவியே… ஓ/எல் (+1) எடுக்க போறாய்.. இப்பவும் நீ என்ன குழந்தை பொடியே…”

 

 

அருணியையும் மறவாது சேர்த்து வறுத்தெடுத்தவர் மறுபடியும் தொடர்ந்தார். 

 

 

என்ன திண்ணக்கமிருந்தால் நம்பி வீட்டுக்க விட போட்டோவைக் களவெடுத்துக் கொண்டு ஓடியிருப்பான்… சாதிப் புத்தியைக் காட்டிட்டாங்கள். உவங்களை  எல்லாம் நிக்க வைச்சுச் சுட வேணும்.

 

 

முளைச்சு மூணு இலை விடேல்ல. அதுக்கிடையில காதல் வந்து விட்டதாம். எங்க வடிவான, வசதியான பெட்டையள் இருக்கிறாளுகள் என்று கதைச்சு மயக்கி சொகுசாக வாழுறதுக்கு தானே இவங்கள் உந்த காதல் வேசம் போடுற…

 

 

எல்லாம் அவனைப் பெத்ததுகள் குடுத்த இடம். சின்ன வயசிலேயே புத்தி சொல்லி வளத்திருந்தா புத்தி இப்பிடி புல்லு மேயப் போயிருக்குமோ? இதுக்குத் தான் பிள்ளையளை செல்லம் குடுக்காமல் கண்டிச்சு வளக்கோணும் எண்டுற. 

 

 

எல்லாம் உங்கட அப்பர் உங்களுக்கு தாற இடம். இல்லை என்றால் அவன் தான் தாறான் என்றால் இப்பிடி வாங்கிக்கொண்டு வந்து நிப்பியே? அக்காவுக்கே கடிதம் வாங்கி வாறனி என்றால் நீ உனக்காக எத்தினை பேரிட்ட வாங்கி வரப் போறியோ?”

 

 

என்று பெண்ணைப் பெற்ற சராசரி தாயாகப் பொரிந்து கொட்டினார் தெய்வநாயகி. 

 

 

அவர் நல்ல அண்ணா அம்மா… நல்ல கெட்டிக்காரரும்… கம்பஸ்ல மனேஜ்மென்ட் படிக்கிறார். பார்க்கவும் நல்ல வடிவு… அஜித் மாதிரி.”

 

 

தாயின் குணம் தெரிந்தும் வாயை வைத்துக் கொண்டு இருக்காமல் அருணி ஸாமிற்கு வக்காலத்து வாங்க தெய்வநாயகியோ எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பொங்கத் தொடங்கினார்.

 

 

படிப்பும், வடிவும் இருந்தால் சரியே… அந்த நாய் வேற சாதி, சமயம் எண்டது உன்ர கண்ணில படேலையே… அக்காவுக்கே இவ்வளவு கதைக்கிறது நாளைக்கு சிங்களவனை இழுத்துக் கொண்டு வந்தாலும் அதிசயமில்லை.. வைரவருக்கு நாய் வாச்ச மாதிரி எனக்கென்று ஒண்டு வந்து பிறந்திருக்கே… இதுகளை கவனமா வளர்த்து ஒருத்தன்ர கையில பிடிச்சுக் குடுக்கிறதுக்குள்ள எனக்கு சீவன் போய்டும் போல கிடக்கே… எல்லாம் உங்கட அப்பா தாற இடம்…”

 

 

வெளியே சென்று விட்டு அப்போது தான் வீட்டுக்குள் வந்த சந்திரஹாசன்,

 

 

ஏனப்பா… இப்பிடி எட்டு வீட்டுக்கு கேட்க கத்திக் கொண்டு நிக்கிறீர்? அப்பிடி என்ன நடந்த?”

 

 

கேட்ட கணவன் கையில் கடிதத்தை கொடுத்தார். கவியோ தன்னவன் எழுதிய முதல் மடலை தான் பார்க்க முடியாமல் இப்படி பார்க்க கூடாத பெற்றோர்கள் பார்த்ததில் வெட்கி தலை குனிந்து நின்றாள். தன் விளையாட்டு வினையாகி தன் தமக்கையை வேதனை படுத்தியதை உணர்ந்து செய்வதறியாது நின்றாள் அருணி. 

 

 

கடிதத்தை பொறுமையாக வாசித்து முடித்த சந்திரஹாசன்,

நல்ல பொடியன் தான். மனசில பட்டதை அருமையா எழுதி இருக்கிறான்…”

 

 

அவர் இவ்வாறு கூறியது தான் தாமதம் தெய்வநாயகியின் கோபம் எல்லாம் அவர் மீது திரும்பியது.

 

 

உங்களுக்கு என்ன விசர் முத்திப் போச்சேப்பா… மகளுக்கு வந்த காதல் கடிதத்தை பாத்து நல்லா எழுதி இருக்கிறான் என்று சொன்ன முதல் அப்பன் நீங்களாத் தான் இருப்பியள்? அவன் வேற சாதி, கிறிஸ்டியன் வேற… அதைப் பற்றி எழுதியிருக்கிற கண்ணுக்குத் தெரியேல்லயோ?” 

 

 

இந்த வயசில காதல் கடிதம் குடுக்கிற வழக்கம் தான். இப்ப உமக்கு என்ன தெய்வம் பிரச்சினை? அவன் காதல் கடதாசி தந்தது பிரச்சினையா? அல்லது அவன் வேற சாதி, மதம் என்பது பிரச்சினையா? கவிட படிப்பைக் குழப்பாமல் சோதினை முடிய விட்டுத் தானே குடுத்து இருக்கிறான்… கெட் டுகெதரில பாத்தவன் ரெண்டு வருசம் காத்து இருந்திருக்கிறானே”

 

 

இந்த மனுசனுக்கு நட்டுக் கழண்டு போச்சுது போல கிடக்கு… அந்த பொடியனைப் பிடிச்சு நல்ல ஏச்சுக் குடுப்பம் என்றில்ல… அவனுக்கு சப்போர்ட் பண்ணுது”

 

 

கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தவர்,

 

 

எனக்கு எல்லாம் தான் பிரச்சினை… நான் உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த வீட்டில காதல் கத்தரிக்காய் ஒண்டுக்கும் இடமில்லை. சொல்லிப் போட்டன்” 

 

 

என்றவர் கணவன் கையிலிருந்த கடிதத்தை வாங்கி தூள் தூளாக கிழித்து எறிந்து விட்டு தனது வேலையைக் கவனிக்க சென்றார். 

 

 

விக்கித்து நின்ற மகள்களைக் கண்டும் காணதது போல் சந்திரஹாசன் கிணற்றடிக்குச் செல்ல அழுகையை அடக்கும் வழி தெரியாமல் கவின்யா தனது அறையை நோக்கி ஓடினாள்.

 

 

சிறிது நேரம் மலைத்துப் போய் வேரோடியவளாக அதிலேயே நின்ற அருணி தாய் கிழித்துப் போட்ட அத்தனை தூள்களையும் பொறுக்கிச் சென்று அதனைப் பொருத்துவதில் முனைந்தாள்.

 

 

சில மணிநேரம் வீணாக்கி அக் காதல் மடலுக்கு முழு வடிவம் கொடுத்து எடுத்து கொண்டு கவியின் அறைக்கு சென்றாள். இன்னமும் அழுது கொண்டிருந்தவளிடம்,

 

 

ரியலி சொறி அக்கா. நான் விளையாட்டுக்குத் தான் செய்தனான். இப்பிடி அம்மாட கையில போகும் என்று எதிர்பாக்கல. சொறி அக்கா. இந்தா… ஒட்டிட்டன்… வாசிச்சுப் பார்.” என்று அவள் கையில் கொடுத்து விட்டு அவளுக்கு தனிமை கொடுத்து வெளியேறினாள். 

 

 

பலமுறை திரும்ப திரும்ப வாசித்தவள் தாயார் கண்டுவிட்டாலும் என்று தனது புத்தகம் ஒன்றினுள் பத்திரப் படுத்தினாள் அந்த முதல் காதல் பொக்கிஷத்தை. 

 

 

லூஸு… ரெண்டு வருஷமா இதை எழுத தான் வெய்ட் பண்ணிச்சாக்கும்” 

 

 

மனதிற்குள் அவனை செல்லமாக வைதவள்

 

 

உங்களை கெட் டுகெதரில பாத்த அண்டைக்கே உங்கட பார்வை புரிஞ்சுது அபி! எப்ப ஆர்ப்பாட்டம் நடந்த அன்று என்னையும் அருணையும் கவனமாக வீட்டுக்கு கூட்டி வந்தியளோ அண்டைக்கு உங்கட அக்கறையிலும் பாசத்திலும் நான் சரண்டர்… ஒருநாள் கோயிலடில உங்களைக் காணேல்ல என்றால் கூட உங்களுக்கு  என்னாச்சு என்று யாரிட்டயும் கேட்கவும் வழியில்லாமல் எவ்வளவு தவிச்சிருப்பன் தெரியுமா? நீங்க வீட்ட வந்திட்டு போனதில இருந்து என்ர போட்டோவைக் காணேல்ல என்றவே எனக்குத் தெரியும்… நீங்க தான் எடுத்துக் கொண்டு போய்ட்டியள் என்று… சரியான கள்ளன் தான் நீங்க” 

 

 

மனதிற்குள் அவனோடு கதை பேசிக் கொண்டிருந்தவளை அருணியின் குரல் நிஜவுலகுக்கு மீட்டு வந்தது. 

 

 

என்னக்கா…அத்தானோட டூயட்டா? அதுசரி பதில் கடிதம் எழுதிட்டியா?”

 

 

மெதுவாக கதை அருண்…. அம்மாட காதில விழுந்துச்சோ செத்தம்…” பயந்தவாறே கதவை ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள்.

 

 

சரியக்கா.” என்றவளிடம்

 

 

நீ அபிட்ட நான் கொழும்பு போய்ட்டன். பதில் தரேல்ல என்று சொல்லு… என்னை ரெண்டு வருசமா காக்க வைச்சவர்… ரெண்டு கிழமை வெய்ட் பண்ணட்டும்”

 

 

அப்ப என்ன கம்பஸில போய் சொல்லப் போறியே? அவர் மனேஜ்மன்ற்… நீ மெடிக்கல் பக்கல்டி… எப்பிடி அக்கா சந்திப்பாய்?”

 

 

ராக்கிங் டைம் தானே…. ஆரம்பத்தில கொஞ்ச நாளைக்கு எல்லாம் ஒண்டாத் தான் திரிவாங்கள்…முதல் வருசம் எங்களுக்கு முழுக்க கம்பஸில தானே… பிறகு தான் ஹொஸ்பிடல்… அப்ப ஐயாவைக் கவனிச்சுக் கொள்ளுறன்” மகிழ்ச்சியாக சூழுரைத்தாள் கவின்யா.

அம்மா… இப்பிடி சொல்லுறா… பிறகு என்ன செய்யிற அக்கா? வேற சாதி, மதம் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டா போல கிடக்கு” கவலையுடன் கேட்ட அருண்யா தொடர்ந்தாள்.

 

 

ஆனால் ஸாம் நல்ல பொடியன்… உனக்கு நல்ல பொருத்தமும் கூட. எங்கட அஜித் மாரி ஆள் பாக்கவே சூப்பர். எனக்கே சைட் அடிக்க சொல்லுது” 

 

 

அடிங் கொய்யாலே… என்ர ஆளை நீ கவுக்க பாக்கிறியா? ஐயா நம்ம விட்டு அங்க இங்க அசைய மாட்டாராக்கும்” என்று செல்லமாக தங்கையின் முதுகில் ஒன்று போட்டவள்,

 

 

அப்பா இருக்கிறார் தானே… அப்பாவை வைச்சு சமாளிக்கிற தான்.  அப்பா ஒரு நாளும் எங்கட விருப்பத்துக்கு மாட்டன் என்று சொல்ல மாட்டார் தானே” தனது தாயாரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தப்புக் கணக்கு போட்டாள் அந்த பேதைப் பெண்.

 

 

சனிக்கிழமை எப்போதடா வரும் என்று பொழுதை ஒரு மாதிரி நெட்டித் தள்ளி காலை ஆறு மணிக்கே கோவில் மதிலடியில் ஆஜர் ஆகி விட்டான் ஸாம். வழி மீது விழி வைத்து அருண்யாவுக்காக காத்து நின்றவன் உள்ளத்திலோ பலவண்ண உணர்ச்சி குவியல்கள்.

 

 

கவியின் பதில் என்னவாக இருக்கும்? மாட்டன் என்று சொல்லிட்டால் என்ன செய்யிற? அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் கதைச்சுப் பாப்பமோ?’

 

 

மனதைச் சுற்றி சுற்றி அரித்த எண்ணங்களால் அலைப்புறுதலுற்று அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்தான்.

 

 

தூரத்திலேயே ஸாம் படும் பாட்டைக் கண்டு கொண்ட அருணி உதித்த சிரிப்பை அரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டு அவனை நெருங்கினாள்.

 

 

உமக்காகத்தான் வெய்ட் பண்ணுறன் அருணி… அக்காட்ட குடுத்தீரா? என்ன சொன்னவ? கடிதம் ஏதும் தந்தவவா? எப்ப கொழும்பு போறா? போன் நம்பர் தாறீரா? மொபைல் இருக்குத் தானே” என்று மூச்சு விடாது படபடத்தான்.

 

 

அவனது பதட்டத்தைப் பார்த்து அவனோடு மேலும் விளையாட எண்ணியவள், அன்று தான் கடிதத்தை கொடுக்காமல் ஓட கவி துரத்த கடைசியில் தாயார் வாசித்து ஸாமை திட்டியது. அவர் உயிரோடு இருக்கிற வரை காதல் கத்தரிக்காய் ஒன்றையும் அனுமதிக்க மாட்டேன் என்று கடிதத்தை கிழித்து எறிந்தது ஈறாக அனைத்தையும் ஒப்பித்தாள்.

 

 

தந்தை திட்டாததையும் தான் கடிதத்தை ஒட்டிக் கொடுத்து கவி வாசித்ததையும் மூச்சும் விடவில்லை. 

 

 

கவலைப் படாதிங்கோ…இன்னொரு கடிதம் எழுதித் தாங்கோ… குடுத்து விடுறன்” நகைமுகத்துடன் கேட்டவளை முறைத்தான்.

 

 

நீர் ஒரு தரம் செய்த உதவியே இந்த ஜென்மத்துக்கும் போதும். நன்றி தாயே… நீர் கிளம்பும்” என்று அவளுக்கு ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைத்தவன் மனதோ வெற்றுக் காகிதமாய் வெறுமை அடைந்தது. 

 

 

முதன்முதலாக மதிலை விட்டு அகன்று பிள்ளையாரிடம் சென்று முழந்தாளிட்டு  அமர்ந்தவன்,

 

 

ரெண்டு வருசங்களாக உங்கட கோயிலுக்கு வந்தும்  உங்களைக் கும்பிடேல்ல என்று என்னை பழி வாங்கிடாதையுங்கோ பிள்ளையாரப்பா… நீங்க தான் எப்பிடியாவது கவியையும் என்னையும் சேர்த்து வைக்கோணும்”

 

 

அவரே கல்யாணம் ஆகாமல் இன்னும் காத்துக் கொண்டிருக்க அது தெரியாமல் அவரிடம் போய் வேண்டிக் கொண்டான் ஸாம். 

 

 

எங்கே தனக்குத் தான் கல்யாணம் ஆகவில்லை ஸாம் ஆவது கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும் என்று நினைத்து சேர்த்து வைத்தாரா? அல்லது என்னைப் போலவே நீயும் பிரம்மச்சாரியாக காத்திருப்பாய் என்று வரம் கொடுத்தாரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

அத்தியாயம் – 17 யாரோ யாரோடி உன்னோட புருஷன்?   தந்தையை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தாள் கவின்யா. தாயின் தற்கொலை மிரட்டலை தந்தையிடம் சொன்னாலும் தந்தை தாயைத் திட்ட அவமானம், ஆவேசப் படும் தாய் இறுதியில் எடுக்கப் போகும் முடிவு தற்கொலையே.

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

அத்தியாயம் – 10 சொல்லாயோ சோலைக்கிளி     வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள்.     கல்விப் பொதுத்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’

அத்தியாயம் – 21 நடந்தது என்ன?   பத்து வருடங்கள் உருண்டோடியிருந்தது. மந்திகையில் அமைந்திருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளியே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து யாருக்கோ காத்துக் கொண்டிருந்தான் அவன். சிறிது நேரம் முதல் தான் வெளிதேசத்திலிருந்து வீடு திரும்பி