Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்

4

நாச்சப்பன் தான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதைத் தன் மகனிடம் கூட சொல்லவில்லை. சங்கொலியைப் பற்றித்தான். அதென்னவோ அவன் காதுகளுக்கு இழவு வீட்டில் ஒலிக்கும் பறை ஒலியாகவே பட்டு வந்தது. சங்குச் சத்தம் கேட்டவுடன் சிட்டாய்ப் பறக்கும் ஆண்களும் பெண்களும், உள்ளேயிருந்து ‘திமுதிமு’வென்று வருகிற கூட்டமும், காபி – டீக்கடைகளில் பொங்கி வழிகிற நெரிசல்களும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தால் – சாலையில் போவோர் வருவோர் காட்சிகள் நன்கு தெரியும். அந்தச் சமயங்களில் நாச்சப்பன் கண்களை மூடிக் கொள்வான். வேப்ப மரமும் காற்றும் மட்டும் துணைக்கு இல்லாமல் இருந்திருந்தால் பக்கத்துத் தோட்டத்திற்குள் ஓடி எங்காவது மர நிழலில் உட்கார்ந்து கொள்வான். அவன் போக்கே அலாதியானது.

“எங்கேப்பா பையனை இன்னம் காணமே?” என்றான் நாச்சப்பன்.

கருப்பண்ணன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே. “அவன் என்ன அண்ணா சின்னப் பையனா? கொளந்தப் பையன் அல்லவே? வளந்துக்கிட்டு வர்ரான் பாரு. அவனுக்கும் கூட்டாளிக, வேடிக்கைப் பேச்சுக, ‘பிரச்சனை’கள் இருக்குமே?” என்றான்.

நாச்சப்பனுக்கு வந்த நாளிலிருந்து எல்லோருடைய வாயிலும் அடிபடுகிற அந்த ‘பிரச்னை’ என்ற சொல்லுக்கு அர்த்தமே விளங்கவில்லை. ‘எல்லோரும் ‘பிரச்னை’க்காரர்களாகவே இருக்கிறார்கள்? ஏன் பையன் கூட அடிக்கடி – பாட்டுப் பாடுவது போல ஐந்தாறு வார்த்தகளைச் சொல்கிறானே? போராட்டம்! கதவடைப்பு! உள்ளிருந்தே வேலை நிறுத்தம்! இதெல்லாம் என்ன?’ என்று நாச்சப்பன் தனக்குள் கேட்டுக் கொள்வான்.

*****

கூத்தாண்டைப் பண்டிகை சிங்கநல்லூரோடு கொடி போன்று ஒட்டிக் கொண்டே பிறந்திருக்கும் என்றே தோன்றுகிறது. வேறு எந்த ஊரிலும் கூத்தாண்டைப் பண்டிகை என்பதாக ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை! அரவான் பண்டிகைதான் கூத்தாண்டை. அந்த அரவான் பாரதப் போர்க்களத்தில் வருகிறானே அவனேதான். பிற்காலத்தில் தனக்கு இம்மாதிரி ‘விழா’ எடுப்பார்களா என்பது அம்மாவீரனுக்குக் கூட அன்று தெரிந்திருக்காது!

பொங்கல் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த பண்டிகை. தீபாவளி ‘கலப்படம்’ என்றாலும் வாணவேடிக்கையை எங்கும் காணலாமே! ஆனால் சிங்கநல்லூர் வாசிகளுக்கு ‘கூத்தாண்டி’தான் கொள்ளை இன்பம் கொட்டுவது! ஆனந்தம் சொரிவது! அமுதை நிரப்புவது! ஆம், பண்டிகைக்கு ஒரு மாதம் இரண்டு மாதத்திற்கு முன்பே கூத்தாண்டி அங்குள்ளவர்களின் மனசில் ‘கூத்தாடி’க் கொண்டிருக்கும்!

ஆலை முதலாளிகளும் அந்த பண்டிகைக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். போனஸ் ‘பிரச்சினை’களில் பேச்சுவார்த்தை முறிவுகளில் தீபாவளி, பொங்கல் ‘அட்வான்சு’கள் கூட தாமதம் ஆகிவிடுவதுண்டு. ஆனால் கூத்தாண்டிக்கு அட்வான்சை மில் அதிபர்கள் முன்கூட்டியே தந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பே துரிதமாகச் சென்றுவிடும். விருந்துகள் என்ன, வேடிக்கைகள் என்ன, இதே பேச்சுத்தான் எங்கும்.

புலிவேஷம், கரகம், பொம்மலாட்டம், ராட்டினத் தூரிகளின் ஒலி எல்லாமாகச் சேர்ந்து – தேர்த்திருவிழா, கலியாணக்காட்சி அத்தனையும் ஒருங்கே சேர நிகழ்வதைப் போலிருக்கும்! எங்கும் ஒளிமயம், மதுரமயம், வர்ணமயம்தான்!

நாச்சப்பன் யோசிக்கிறான். ‘என்னடா இது! ஊசி குத்த இடமின்றி இப்படி நிற்கிறார்களே! ராத்திரிக்கு எப்படி எங்கே படுத்துத் தூங்குவார்கள்?’

தூங்குவதாவது! கொடி கட்டிப் பறக்கும் உல்லாசமும் உவகையும் அப்படியே அலக்காக அடித்துக் கொண்டு போய்விடாதா? ஆகாயம், அண்டவெளி அப்புறத்துக்கப்புறம் ‘எங்கோ இன்பவெளி’க்கே இழுத்துச் சென்றுவிடுமே. கற்பனை மிதக்கும்! ஒயில் மதிமயக்கும்!

ஆற்று வெள்ளம் ஓரிடத்திலேயே நிற்கிறதா? மனித வெள்ளமும் ஒரே இடத்தில் கட்டுண்டு கிடக்க வேண்டுமா? ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஓடுகிறவனுக்கு ஏன் தூக்கம் வருகிறது? இடத்தைப் பற்றித்தான் கவலை ஏன் உண்டாகிறது?

பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களே இருந்தன. பலகார மணந்தான் வீதியெங்கும், வீடெங்கும் ‘கமகம’த்தது. அந்த வாசனை நாச்சப்பனையும் எட்டிற்று. அவனும் நுகர்ந்தான். அனுபவித்தான். நல்ல மணம் நாசிக்கு மட்டுமா? நாவுக்கு மட்டுமா? மனத்திற்கே உவந்ததல்லவா?

“ஏண்ணா! உங்க ஊட்டிலே என்ன ‘மா’ப் பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்துக் கிழித்தான் கருப்பண்ணன். அது நனைந்திருந்தது. பற்றவில்லை!

“உங்க ஊட்டிலே என்ன பண்றயோ அதுதானப்பா என் ஊட்டிலேயும்!” என்று பொருத்தமான பதிலைச் சொல்லிவிட்டதாக கருப்பண்ணன் முகத்தைப் பார்த்தான். அவன் குனிந்தபடி ‘நவராத’ தீக்குச்சியைத் தேடிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் வீடு இருந்தது. ஆனால், ஒட்டியும் ஒட்டாமலும், அவர்கள் அந்தக் கூத்தாண்டி வைபவத்திலிருந்து விலகி நின்றார்கள் என்றும் கூற முடியாது. அந்த மரத்தில் அவர்களும் இரு கிளைகள் தான்! இருப்பினும் அதில் பூ இல்லை! பூவின் பொலிவு கிடையாது! பெண் இருந்தால் அல்லவா புன்னகை மிளிரும்!

கிட்டப்பன் ‘கூட்டத்’தில் கலந்து விட்டான்! ‘கூட்டாளி’கள் அவனைச் சுற்றிலும் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். “கிட்டு, கோழியும் கறியும் பதம் பாக்கோணும்னா எங்க ஊட்டுக்கே வந்திரு” என்றான் கண்ணன். அவனும் ‘அரியா’ எடுக்கிற பையன் தான். முத்துசாமி லேசில் விடுகிறவன் அல்ல. “எல்லாம் இனிப்படா! அத்தனையும் இனிப்பிலே செஞ்சு தீர்ப்பதா எங்க அம்மாவும் அக்காவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்காங்க. நீ வேறே யாராச்சும் கூப்பிட்டாங்கிண்ணு போனே, அப்பறும் கெணத்துக்குள்ளறவே அழுத்திப் போடுவேன்” என்று செல்லமாகப் பயங்காட்டினான். அவர்கள் இரட்டையர்கள் மாதிரி. கிணற்றில் குளிக்க ஒன்றாகவே செல்வார்கள். வீட்டின் பின்புறம் உப்புத் தண்ணீர்க் கிணறுதான். ஆனாலும் அந்தத் தோட்டத்தில் வேட்டி துண்டைக் காயப்போட மரஞ்செடிகள் நிறைந்திருந்தன. ஒரு விதத்தில் கீரனூர் ஞாபகத்தை அது மூட்டிக் கொண்டிருக்கும். உள்ளூரில் நாள் தவறினாலும் அவன் கிணற்றுக்குப் போய்க் குளிக்கத் தவறமாட்டான். ‘ஸ்பின்னிங்’கில் வேலை பார்க்கும் பெண்களில் சிலர் இவனுடைய ‘ஊரு சேரி’யை விசாரித்து வைத்திருந்தார்கள். சந்தர்ப்பங்களில் கோவையிலிருந்து சில சாமான்கள் அவர்களுக்குத் தேவைப்படும். சுத்தமான நெய் வேண்டுமென்றால் சிங்கநல்லூரில் கிடைக்காது. அங்கும் அப்படித்தான் என்றாலும் கோவையில் அவினாசி ‘சட்டி’ வெண்ணெய் இரண்டொரு நெய்க்கடைகளில் கிடைக்கும். விஷயம் தெரியாத எந்த ஆளையும் வெண்ணெய்க் கடைக்காரன் சுலபத்தில் ஏமாற்றி விடுவான்! ஏமாற்ற வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இல்லாத கடைக்காரனுக்குக் கூட ‘நல்லது கெட்டது’ தெரிந்தால் தானே என்ற நினைப்பிருக்கும். உருவத்தில் வெண்மையாக இருந்தால் அது மணக்கும் வெண்ணெய் ஆகிவிடுமா? காய்ச்சிய பிறகு மணத்தைக் காண்பதை விட கண்ணால் கண்டாலே கிட்டப்பன் சொல்லிவிடுவான். அவன் ‘காங்கய நாட்டுக்காரன்’ அல்லவா? கருப்பண்ணனுடைய நண்பர்களும் கிட்டப்பனை, “நீ வாப்பா நம்ம ஊட்டுக்கே” என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவன் கருப்பண்ணன் ஆதரவில் நிழலில் வளர்கிறான் என்பது மற்றவர்களுக்குத் தெரியும். பையனைச் சீராட்டினால் கருப்பண்ணனுக்குத் திருப்தியாக இருக்கும். அவனுடைய திருப்தியையும் நல்லெண்ணத்தையும் சம்பாதித்துக் கொண்டால் மில்லுக்குள் ‘கவலை’யின்றி இருக்கலாம். உள்ளே வேலை செய்வதில் சிற்சில ‘இலதைமுள் கவலை’கள் உண்டு. முக்கியமாக மாஸ்டர் – அடே அப்பா! அந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தனை பேருக்குமே மாஸ்டர் சிங்காரம் பிள்ளை என்றால் ஒரு கிலிதான். இன்றைய மில்களின் நிலை அல்ல பதினைந்து வருஷங்களுக்கு முன்பு! இன்று முதலாளியே சொந்தமாக எந்த ஆளையும் மில்லுக்குள் சேர்த்துவிட, சேர்த்துக் கொள்ள முடியாது. சங்கத் தலைவர்கள் உடனே ‘சங்கநாதம்’ செய்யக் கிளம்பி விடுவார்கள். பழைய ‘லிஸ்டு’களை எடுத்து முன்னால் பரப்பி விடுவார்கள். முன்பு வேலை பார்த்தவர்கள், ‘வெயிட்டிங் லிஸ்டி’ல் இருப்பவர்கள், தாற்காலிக தொழிலாளிகள் – யாரையும் தான் இப்போது ‘பர்மனெண்ட்’ நிரந்தரத் தொழிலாளியாக வேலை போட்டுத் தந்துவிடுவதில்லையே! ஆனால் முதல் சுதந்திர இந்தியாவின் தேர்தல்கள் முடிந்த சமயம் மில்களின் போக்கும் நடைமுறையும் அலாதியானது. சிங்காரம்பிள்ளை மிஸ்டர் சிம்மம் போல் நடந்து வருவார். ஒரு பார்வை பார்ப்பார். ‘என்ன?’ என்று அழுத்தமாகக் கேட்டால் சற்றே நடுக்க, கேட்கிற ஆசாமிக்கு ஏற்படத்தான் செய்யும். முதலாளியும் மறுபேச்சுப் பேச மாட்டார். அவர் ஏன் பேசுகிறார்? அவருடைய குறிக்கோள் இலாபம். அந்த இலாபத்திற்குத் தடை ஏற்படாதவரை, யாவும் சுமுகமாக உள்ளே இயங்கிக் கொண்டிருக்கிற தென்றால் – ஏஜெண்டு ஆபீசோடு சரி! உள்ளே ஒரு ‘ரவுண்டு’ வந்தாலும் மிஸ்டர் பிள்ளையிடம் தான் ஏதாவது கேட்பார். கேட்பது ஏது? மாஸ்டர் நாய்க்குட்டி போல் குழைந்து கொண்டு பின் செல்வார். மெல்ல ஏதாவது கூறுவார். முதலாளியோடு ‘பேசுகிறார்’ என்று பிறருக்குத் தெரிய வேண்டும். அதெல்லாம் பெரிய நாடகம் தான்! கூத்தாண்டி போல் அனுபவிக்க வேண்டிய காட்சிகள்!

கிட்டப்பனுக்குக் ‘கூடை’ தூக்குகிற உத்தியோகம்தான். மில்லுக்குள் குப்பை கூட்டினால்தான் என்ன? அவன் ஜேப்பிலே எப்போதும் சீப். தலை கலைந்து போனால் உடனே சீவிக் கொள்ளத் தான்! மற்றப் பையன்கள் அவ்விதம் செய்கையில் இவனுக்கு விருப்பமில்லா விட்டாலும் சீப்பு அவனுக்கும் தேவைப்பட்டது!

காக்கி டிராயர், நீலத்திலும் சிகப்பிலும் கூட நிஜார்கள். ஏழெட்டு உருப்படிகள் தைத்திருந்தான். வெள்ளை, கலர் சொக்காய்களும் ஐந்தாறு இருந்தன. தினசரி ஒன்றை மாற்றினால் ஒரு வாரத்திற்கு வெவ்வேறு ரகங்களாகப் போட்டுக் கொள்ளலாம். ஊரில் வேட்டி கட்டி கொண்டிருந்தான். உடம்பைப் பாதி மறைக்க சிறு துண்டு போர்த்தியிருப்பான். வேட்டி கோடு கிழிந்தும் ஆங்காங்கு தைப்புக்களும் துணிகளில் காணப்படும். இப்போது பழைய வாழ்வுக்கே விடுதலை! இங்கே ஒட்டுக்கும் தைப்புக்கும் இடமே இல்லை! யந்திரங்களுக்கிடையே புகுந்து வருகிறவனுக்கும் வேட்டிக்கும் வெகு தூரம்!

ஒரு சைக்கிள் வாங்க வேண்டுமென்ற யோசனை. பணமும் இருந்தது. சில்லறை அயிட்டங்களுக்குக் கருப்பண்ணனிடம் யோசனை கேட்க வேண்டியதில்லை. ‘கூலிங்கிளாஸ்’ ஒன்றைக் கூட்டாளி வாங்கினான். வெயிலுக்கு அது வேண்டியதுதான். ஆனால் அவனுடைய தோழன், “மொகத்துக்கு இது அழகடா!” என்றான். இவனும் ஒன்று வாங்கி விட்டான். கருப்பண்ணனும், “இப்பத்தாண்டா ராஜா மாதிரி இருக்கு!” என்று தட்டிக் கொடுத்தான். சைக்கிள் வாங்கினாலும் கருப்பண்ணன் ஆட்சேபிக்கப் போவதில்லை. ‘அப்பன் என்ன சொல்லுமோ?’ என்ற அச்சம்தான் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அப்பனுக்கு அது சந்தோஷத்தைக் கொடுக்கிற காரியமாக இருந்தாலும், ‘நீ சைக்கிள் ஏறீட்டு எங்கப்பா போகப் போறே?’ என்பான். அதற்கு என்ன பதில் சொல்வது? ‘என் சினேகிதர்கள் பூளைமேட்டில் இருக்காங்க. போத்தனூரிலே இருக்காங்க! நாங்க அடுத்த வார ‘லீவி’லே மருதமலைக்குப் போகப் போறோம்’ என்று சொல்ல முடியுமா? சொல்லலாம். ஆனால் பெரியவன் சமாதானப்பட மாட்டான். ‘அப்பனுக்கு அதிருப்தி தருவது சரியல்ல’ என்று இதுவரை சைக்கிள் வாங்காமலேயே இருந்தான்.

பெரியவன் தன்னுடைய பையனின் வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டு வந்தான் – வருகிறான். மகன் வளர்ந்து வருகிறான். நாலு பேரும் ‘நல்லவன்’ என்று சொல்லுகிறார்கள். இதை விட அவனுக்கு ஆனந்தம் வேறொன்றும் இல்லை. புரிகிறது. அவனுக்கும் புரிகிறது. ஆனாலும் தேகம் திண்ணையில் – இங்கு சிங்கநல்லூரில் கிடந்தாலும் – ஆவி – அவனுடைய உயிர் – அணு அணுவாகப் பிரிந்து போய் கீரனூர் மண்ணிலேயே என்னத்தையோ தேடிக் கொண்டிருக்கிறதே! தங்கம் தேடி அலைந்த மனிதர்களின் கதையாக – தங்கத்தைக் கற்பாறைகளுக்கிடையே துளாவினால் அங்கே என்ன கிடைக்கும்.

கீரனூரிலும் பண்டிகை கொண்டாடினார்கள். எந்த ஊரில் தான் பண்டிகை கொண்டாடாமல் இருக்கிறார்கள்? பையன் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பான். நாச்சப்பனுடைய விளையாட்டு அந்த ஒற்றை மாட்டு வண்டியோடுதான். வாடிக்கையாளர்களை நாடிச் செல்லாவிட்டால் காளையின் வயிறும் அவர்கள் இருவரின் வயிறும் வற்றிவிடுமே!

இங்கே வந்தும் பல மாதங்கள் ஏன் வருஷங்கள் மூன்று கழிந்து விட்டன. ஆயினும் ‘பட்டா’ச் சத்தத்தைக் கேட்டால், மாடுகள் மேய்வதைப் பார்த்தால், எருமை நியாயத்தை அடுத்த வீட்டுக்காரி எடுத்தால், கன்றுக்குட்டி துள்ளி வருவதைக் கண்டால் பழைய ‘நப்பாசை’ அவனைப் பற்றிக் கொள்கிறது. கீரனூருக்குத் தாவுகிறது மனம். மலையாள மங்கையோ, கருப்பண்ணனோ, வெற்றிலை பாக்குக் கடைக்காரனோ எவர் சொல்வதும் அவன் செவியில் பதிவதில்லை! செவி ஏற்றுக் கொண்டால்தானே மனம் பதில் உரைக்கும்?

கீரனூருக்கும் ஊத்துக்குளிக்கும் பதினாலு மைல் என்றால் இடையே பன்னிரண்டு ஊர்களுக்கும் அதிகம். சின்னச் சின்ன ஊர்கள். பட்டிக்காடுகள் தான். அங்குள்ள அத்தனை ஊர்க்காரர்களும் நாச்சப்பனைப் பண்டிகைக்குக் கட்டாயம் வந்து சேர வேண்டும் என்பார்கள். வாய் உபசாரம் அல்ல. ஆடி நோன்புக்கே எவ்வளவு நேரமானாலும் அவனுக்கும் மகனுக்கும் ‘மா’ப் பலகாரம் தயாராக எடுத்து வைத்து விடுவார்களே! “என்ன நாச்சப்பா! இப்படி நேத்து வராமே ஏமாத்திப் போட்டயே?” என்று வாஞ்சை பொங்கக் கேட்பார்கள். ஆடிப் பண்டிகைக்கே அப்படி! தீபாவளி, பொங்கல் குறித்துச் சொல்ல வேண்டுமா? உள்ளூர் முருகப்பன், ‘நோம்புச்சோறு வருசத்துக்கு ஒருக்கால் தானப்பா கெடைக்கும்? உன்ற வீட்டிலே பொம்பளை இல்லே! பையன் ‘பொக்’கென்று நிப்பானே!’ என்று சொல்வான். ‘இன்னைக்குத்தான் முருகப்பன் ஊட்டுக்குப் போகாமெ எங்க வாசப்பக்கம் வரப்படாதா?’ என்று மற்றவர்களும் அன்புக்குரல் கொடுப்பார்கள்.

ஊத்துக்குளிக்கோ வேறு எந்த ஊருக்கோ வண்டியை பூட்டிக் கொண்டே, ‘நோம் பண்ணைக்கு போகப்படாதின்னு இருந்தா கேக்கறாங்களா? ஆனா புது மாப்பிள்ளையும் பொண்ணும் பண்டிகைக்கு போகாமே வேறெ எதுக்குப் போவாங்க! அடெ தம்பி! நா வெளக்கு வெக்கறதுக்கு மிந்தியே வந்தர்ரேன். தூங்கிராதே!’ என்று சொல்லிக் கொண்டே, தன்னை அழைத்தவர்களிடமும் விடை பெற்றுச் செல்வான் நாச்சப்பன். திரும்பி வரும் போது, வாழைக்காய்கள், கத்திரி, முருங்கை, இலைகள் உள்பட மறக்காமல் வாங்கி வருவான். கனிந்த பழங்களும், ஊத்துக்குளி வெண்ணெயும் பெரிய குண்டாவுக்குள் போட்டுப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பான்.

முருகப்பன் மனைவிக்கு சிரிக்காமல் எதையும் பேசிப் பழக்கம் இல்லை. ‘வாய்நிறைய’ச் சிரிப்போடு, ‘மாமன் உண்ணி சோத்தையும் ஆக்கிப் போட்டிட்டு, அவுங்களும் எலையிலே உக்காந்திட்டாச் செரியாப் போகும் போங்க!’ என்று தன் கணவனைக் கடிந்து கொள்வாள். அப்போதும் அந்தச் சிரிப்பு உதட்டில் விளையாடிக் கொண்டிருக்கும். பாவம், முருகப்பன் ஏழெட்டுப் ‘புள்ளைகுட்டி’க்காரன். ஓடி, ஓடிப் பாடுபட்டாலும், ‘ஆடு கறக்கறதுக்கும் பூனை குடிக்கறதுக்கும்’ கணக்காகத்தான் இருக்கும். நல்ல நாளில் நன்கு செய்ய வேண்டும் என்று நினைப்பான். நாச்சப்பன் ‘வண்டி நிறைய’ச் சாமான்கள் அன்றைக்குக் கொண்டு வந்து விடுவதால் முருகப்பனுக்கு தலைச் சுமையைக் கீழே இறக்கி வைத்ததைப் போலிருக்கும்!

சிங்கநல்லூர்! நாச்சப்பன் நெஞ்சுக்குள் மென்குரல் அரும்புகிறது. ‘இங்கே யாரும் அழைக்கவில்லையே என்று பொரும்மாதே’ என்று அந்த மெல்லிய குரல் அறிவுறுத்தும்.

‘நான் என்ன பொருமிக்கொண்டா இருக்கறேன்?’ அவன் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டான். கட்டிலில் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“என்ன அண்ணா! தண்டால் பஸ்கி எல்லாம் எடுக்கறாப்பலே இருக்குது?”

“யாரு கருப்பண்ணனா?”

“நா மாத்திரம் இல்லேண்ணா! இன்னும் வந்திருக்கறவங்களைப் பாரண்ணா” என்று சொல்லிக் கொண்டே வாசற்படியில் ஒரு காலும் வாசலில் ஒரு காலுமாக நின்ற கருப்பண்ணன் பின்புறம் திரும்பிப் பார்த்து, “மேலே வாங்க” என்று சொன்னான். கீழே தயங்கியவாறு நிற்கும் தாயாரையும் மகளையும் பார்த்து.

வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு சுமார் நாற்பது வயதிருக்கும். ரவிக்கை அணியவில்லை, தலைக்குக் குளித்திருந்தாள். இன்னும் ஈரம் உலரவில்லை. அவள் ‘மாராப்புச் சேலை’யைக் கட்டியிருந்த தினுசிலிருந்த கூர்ந்து பார்த்த நாச்சப்பன். ‘நம்ம பக்கத்துக்காரியாட்ட இருக்குதே’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

அந்தப் பெண்ணின் பக்கத்தில் ஒல்லியாக உற்சாகமே வடிவாக நின்றிருந்த சிறுமிக்குப் பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். முகச் சாடையிலிருந்து தாயும் மகளும் என்பதை எவரும் சொல்லி விடுவார்கள்.

கருப்பண்ணனும் கட்டிலின் மீது உட்கார்ந்தான்.

நாச்சப்பன் ‘விசு’க்கென்று எழுந்தான். “அட, நீயும் உக்காந்திட்டா எப்படி? இந்தக் கிட்டானையும் காணமே! வாங்க வாங்க! ஒரம் பாயிருங்க. ‘விக்’கினாப்பலே நின்னுகிட்டே இருக்கிறதா? ஏப்பா! பாயை எடுத்து விரிச்சு உக்காரச் சொல்லுவயா…” என்று நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தான் நாச்சப்பன்.

“அண்ணா! அவுங்க ஆரும் ஆரந்தூரமில்லை! நீ மொதல்லே உக்காரண்ணா! அவுங்க விருந்தாளிக அல்ல! நம்மளை விருந்துக்கு கூப்பிட வந்திருக்காங்க!” என்றான் கருப்பண்ணன்.

“அதுக்கென்ன போனாப் போவுது! பையன் எங்கப்பா காணாம்? எங்காச்சும் போகச் சொல்லிருக்கறயா?” என்றான் நாச்சப்பன். தன் மகன் இருந்தால் உபசரிப்பில் தான் தடுமாற வேண்டியதில்லையே என்பது அவன் நினைப்பு. இதில் தடுமாட்டத்திற்கு ஒன்றுமில்லை! ஆனால் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு வெற்றிலைபாக்கு எடுத்துக் கொடுக்கவாவது ஆள் வேண்டாமா?

கருப்பண்ணன் சாவதானமாக, “கிட்டப்பன் தான் மலையக்கா வீட்டுக்கு இப்பக் காவல்!” என்றான். இதைச் சொல்லிவிட்டு, “நாம சட்டின்னு போகிலே – காவல்காரன் நம்மளைத் தேடிக்கிட்டு ஓடியாந்திருவான்!” என்றான் சிரித்துக் கொண்டு.

அதற்குள் மலையக்காள் அடுப்பு மூட்டி விட்டாள். டீத்தூள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டாள். பால் இருக்காதென்று நினைத்தாள். கருப்பண்ணன் காலையிலேயே வேலைக்காரச் சிறுமியிடம் சொல்லி வைத்திருந்தான். அந்தச் ‘சிறிசு’ பாலைக் காய்ச்சாமலேயே தன் வீட்டிற்கு ஓடிவிட்டது என்றாலும் பால் வாங்க மறக்கவில்லை.

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் – நாச்சப்பன், ‘கோயில் பசு மாடு, குங்குமப்பில்லை நிறம். நான் கோல் கொண்டு அடிக்கவில்லையே! இப்படி ஏன் ‘குத்தம்’ வந்து சேர்ந்தது?’ என பதட்ட நினைவுகளோடு போராடிக் கொண்டு கிடந்தான்.

இப்போது –

சேனி அம்மன் தேர்ப்போல, குடம் குடமாக, அவன் நெஞ்சில் அமுது சுரக்கிறது! மலையக்கா பாதம் பட்டவுடன் வீட்டில் மலர்ச்சி தாண்டவமாடுகிறதே! ‘அவ கை பட்ட பொருள் எவ்விதச் சுவை தருமோ?’ என எண்ணினான். அந்த எண்ணம் நிழலடிக்க, ஒரு வாய் எடுத்துக் குடித்ததும், “கருப்பண்ணா! ஊட்டுக் காப்பீங்கறது தனி ருசிதாம் போ?” என்றான்.

“அண்ணா! இது டீ! இன்னம் ரண்டு வாய் குடுச்சுப் பாத்திட்டுச் சொல்லண்ணா” என்றான் கருப்பண்ணன். சிறுமி குஞ்சாளுக்குச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. அவள் சிரித்த சிரிப்பில் ‘பொறை’ ஏறிவிட்டது! கன்னியின் நகைப்பொலி கூடத் தன் வீட்டில் தவழ்கிறதே என்கிற பரவசத்தில் நாச்சப்பனுக்கு இருக்கை கொள்ளவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 32சாவியின் ஆப்பிள் பசி – 32

ரயிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது சிங்காரத்தை ‘இறங்கு! இறங்கு!’ என்று சேட் சொன்னது, “நான் மாட்டேன்! நான் மாட்டேன்!” என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணாவின் கவனத்தில் பதியவில்லை. அவன் பார்வை நகரும் பிளாட்பாரத்தில் லயித்திருந்தது. தூரத்தில் தெரிந்த நுழைவாயில்

கல்கியின் பார்த்திபன் கனவு – 67கல்கியின் பார்த்திபன் கனவு – 67

அத்தியாயம் 67 நள்ளிரவில் படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, “படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். “உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு