Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’

அத்தியாயம் – 23

 

லஸ்யாவின் விரல்கள் மித்துவின் முகத்தை அளந்தன. “வாவ்.. ரொம்ப அழகு நீ. அந்தக் கண்கள் என்னை மாதிரி இருந்தாலும் அதில் இருக்கும் உணர்ச்சிகள் அப்படியே அதின் மாதிரி”

“நான் உங்களோட மகள்தானேம்மா”

அழகான லஸ்யாவின் முகம் கொடூரமாக மாறியது “டோன்ட் கால் மீ மாம்”

“உங்களை அப்பறம் எப்படி கூப்பிடுறது”

“லஸ்யான்னு கூப்பிடு. லான்னு கூட கூப்பிடு. எனக்கு நெருக்கமானவர்கள் என்ன அப்படித்தான் கூப்பிடுவாங்க”

“ஆனால் உங்க மகள் உங்களை அம்மான்னு சொல்லக் கூடாது”

“ஆமாம். இவ்வளவு பெரிய பொண்ணுக்கு அம்மான்னு வெளிய தெரிஞ்சா என் மார்க்கெட் குறைஞ்சுடும்”

மித்து எதிர்பார்த்தது போல லஸ்யா அவளை இழுத்து அணைத்துக் கொள்ளவும் இல்லை. உச்சி முகரவும் இல்லை. அதற்கு பதில் அவளது வார்த்தைகள் மித்துவை வெகுவாகக் காயப்படுத்தின.

“உங்கப்பா, அதுதான் சொன்ன வாக்கு தவறாதவன், இன்னமும் சொந்த ஊரிலேயே சுத்திக்கிட்டு இருந்தான். இப்ப திடீருன்னு எதுக்கு உன்னை அனுப்பிருக்கான்”

“நான் வந்தது அவருக்குத் தெரியாது”

“அந்தக் கிழடுகளுக்கு”

“யாருக்கும் தெரியாது”

“நான்தான் உன் அம்மான்னு”

“யாருமே என்கிட்ட சொன்னதில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு செத்துப் போயிடுவேன்னு பிளாக்மைல் செய்து வாங்கினேன்”

“இதுக்கு, பேசாம நீ செத்தே போயிருக்கலாமே”

“அம்மா… “

“உஷ்… நீ வயத்தில் இருந்தப்பவே கலைச்சுடுறேன்னு உங்கப்பாட்ட சொன்னேன். அந்த இடியட்தான் உன்னை வச்சு என்னைக் குடும்பம்னு ஒரு கூட்டுக்குள்ள அடைக்கப் பார்த்தான். இப்ப இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்து நிக்கிற”

“நான் உங்களைத் தொந்தரவு பண்ணவே மாட்டேன்மா. அப்பப்ப தூரத்தில் நின்னு பாத்து சந்தோஷப் பட்டுக்குறேன்”

“தூரத்திலேயே இருக்கலாம்…. ஆனாலும் நீ உயிரோட இருக்குறது என்னைக்கும் எனக்கு டேஞ்சர்தான். அதனால… மேனஜர்” என்று அழைக்க ரகசியமாய் சந்திக்க சொன்னதின் அர்த்தம் புரிந்தது மித்துவுக்கு. தாயே எப்படி மகளை தீர்த்துக் கட்ட சொல்லுவாள். சிலர் தாய் என்ற பெயரில் உலவும் பேய் என்பது நிஜம்தான் போலும்.

“அம்மா பிளீஸ்மா விட்டுடுங்க… நான் இனிமே உங்களைப் பாக்கவே வரமாட்டேன்”

“விட்டுடலாமா “ மேனேஜரிடம் லஸ்யா கேட்க

“டைமண்ட் பிஸினஸ் பண்ற வர்மா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் காத்திருக்கார். வருங்காலத்தில் கூட இந்தப் பொண்ணு டிஎன்ஏ டெஸ்ட் அது இதுன்னு பண்ணி உங்களை சிக்க வைக்க வாய்ப்பு இருக்கு. நான் இந்த பிரச்சனையை ஹாண்டில் பண்ணிக்கிறேன். நீங்க ஒரு வாரம் பாரின் ட்ரிப் போயிட்டு வாங்க” லஸ்யா ஏதோ மயக்கத்தில் இருப்பவளைப் போன்ற மனநிலையில் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“பெரிய இடத்து பொண்ணு அதனால பிரச்சனை பண்ணிடாதிங்க. ஏதோ டீன் ஏஜ் பொண்ணு தற்கொலை முயற்சி மாதிரி காமிக்க கையைக் கிழிச்சுவிட்டு உயிர் போகுற மாதிரி இருக்கும்போது ஊருக்கு வெளியே தூக்கிப் போட்டுட்டு வந்துடுங்க” என்ற உத்தரவுப்படி அவளை அப்படியே போட்டுவிட்டு அந்தக் கும்பல் சென்றுவிட, மித்துவின் அதிர்ஷ்டம் இறுதி நிமிடத்தில் உயிர் பறவை பிரியப் போகும் தருணத்தில் குப்பையில் கிடந்தவளைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் யாரோ ஒரு புண்ணியவான் சேர்த்து விட்டார்.

மருத்துவமனையில் தற்கொலை என்ற அனுமானத்திலேயே மித்துவுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. வீட்டிற்கும் அவர்கள் வாயிலாக அதினனுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. தன் மகள் எதனால் தற்கொலைக்கு முயன்றாள் என்று தெரியாமல் மனம் கலங்கிவிட்டான் அதினன். ஆனால் கடைசியில் மித்துவின் உயிரை மீட்டெடுத்ததும் அவள் வாயிலாக நடந்தவை அதினனுக்குத் தெரிந்த பொழுது. தனது வேலைகளை ஒதுக்கிவிட்டு தனது மகளைக் காக்கும் முயற்சியில் இறங்கினான்.

ஒரு வருடம் குடும்பத்தை விட்டு நகரவில்லை. தனது நடிப்பிற்கு இடைவேளை விட்டான். செல்வாக்கு மிகுந்த தனது நண்பனின் துடையுடன் பண பலத்தையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி சாதுர்யமாக காய்களை நகர்த்தினான்.

சில மாதங்களுக்கு முன் பார்த்த செய்தியில் லஸ்யா வெளிநாட்டில், இந்திய அரசாங்கம் தேடிக் கொண்டிருந்த குற்றவாளி ஒருவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளிவந்ததால் வர்மாவுடன் நடக்கவிருந்த  அவளது திருமணம் நின்றுவிட்டது.

அந்த வீடியோவை அவளது மேனேஜர்தான் வெளியிட்டார் என்ற செய்தி பரவிய இரண்டு நாட்களுக்குள் அதற்கு பதில் கூட அளிக்க முடியாமல் விபத்தில் அவர் மறைந்துவிட்டார். லஸ்யாவின் அசையும், அசையா சொத்துக்களை பராமரிப்பதில் பெரும்பங்கு அவர்தான் என்பதால் அவளுக்கு இப்போது கைகள் இரண்டும் ஒடிந்த நிலை.

ஒரே சமயத்தில் பணம், புகழ் இரண்டிற்கும் விழுந்த அடி அவளை சிந்திக்க விடாமல் செய்திருந்தது. வெளிநாட்டிலேயே மறைந்து வாழ்கிறாளாம். இந்தியா மண்ணில் அவள் கால் வைத்த மறுகணம் கையில் விலங்கு பூட்ட அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.

தன் தாயின் நடத்தையால் மிகப்பெரிய அதிர்ச்சியில் சிக்கியிருந்த மித்துவின் மனநலன் வெகுவாக பாதிப்பட்டிருந்தது.  பள்ளியில் இருந்து பிரைவேட் வழியாக பரீட்சை எழுதப் போவதாக அனுமதி வாங்கிய அதினன் அவளது மனநலனை மீட்டெடுக்க மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறான்.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’

வீட்டில் எப்போதும் டின்னில் போட்டு வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை அனைவருக்கும் உண்ண வைத்தாள் வெண்ணிலா. குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, மித்துவுக்கு வீட்டில் இருக்கும் ஆடு மரம் செடி கொடிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தனர் ரதியும், வெற்றியும். சிறிது நேரத்தில் அனைவரும் நெருங்கிவிட்டிருக்க, வெளியே

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19 அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_9’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_9’

அத்தியாயம் – 9   வெண்ணிலாவுக்கு மனதில் உதறல் எடுத்தது. இந்தத் திட்டத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கவே கூடாதோ? உலகம்மை அக்கா திடுதிப்பென்று ஒரு நாள் அழைத்து டிவி நிறுவனத்தில் உனது கதையைக் கேட்கிறார்கள். நீ என்ன சொல்கிறாய் என்றுதான் கேட்டார்.