Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’

வீட்டில் எப்போதும் டின்னில் போட்டு வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை அனைவருக்கும் உண்ண வைத்தாள் வெண்ணிலா.

குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, மித்துவுக்கு வீட்டில் இருக்கும் ஆடு மரம் செடி கொடிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தனர் ரதியும், வெற்றியும்.

சிறிது நேரத்தில் அனைவரும் நெருங்கிவிட்டிருக்க, வெளியே காய்ந்த தணலில் அனைவருக்கும் டீ போட்டுவிடலாம் என்று வெண்ணிலாவும் பாலைக் காய்ச்சினாள்.

இவர்கள் அனைவரும் இரவு மதுரைக்கு சென்றுவிடுவார்களா? இங்கு எப்படி தங்க முடியும். இந்த சிறுவீட்டில் அவர்கள் தங்க இடமில்லையே. இரவு உணவிற்கு என்ன செய்வது. அவர்களுக்கு என்றால் மாவு இருக்கிறது தோசை ஊற்றிவிடலாம். இவர்களுக்கு என்ன உணவு சமைப்பது? ஒரு வார்த்தை அதினன் சொல்லியிருந்தால் முன்னரே ஏற்பாடு செய்திருப்பாள்.

“ரொம்ப யோசிக்காதே நிலா, நாங்க தங்க ஏற்பாடு செஞ்சுட்டோம்”

“மதுரைக்குப் போறீங்களா?”

சுத்தம் செய்கிறார்கள் என்று சொன்ன வீட்டைக் காட்டினான் “அந்த வீட்டை சுத்தம் செஞ்சு ஆறு மாசத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கேன்”

“ஆறு மாசமா?”

“ஆமாம் கதை முழுசும் தயாராகணுமே. நீ வேற என் கூட தனியா உக்காந்து கதை எழுத மாட்டேன்னு சொல்லிட்ட. ஒரு கதை எழுத குடும்பத்தையே ஷிப்ட் பண்ணிட்டு வந்த பைத்தியக்காரன் யாருன்னு கேட்டா அதின்னு இனி இந்த உலகம் சொல்லும்”

“கதை எழுத இங்க வந்தீங்களா? மித்துவோட ஸ்கூல்”

“ஒரு வருஷமா அவ ஸ்கூல் போகல. பிரைவேட்டாதான் படிக்கிறா”

அதினன் எதிலும் ஈடுபடாமல் இருக்கும் இந்த ஒரு வருடம். அதற்கும் மித்துவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?

வீட்டின் பின்னால் இருந்த அடுப்பில் வெண்ணிலா டீ போட, பக்கத்திலிருக்கும் காலி பாக்கெட்டைக் கவிழ்த்து அதன் மேல் அமர்ந்து கொண்டு சொன்னான் அதினன். ஹிம்.. இந்த அழுக்கு ஜீன்ஸ், சிவப்பு டீஷர்ட் இவனுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது.

அவனது கைகளில் ஒரு டம்ப்ளரை திணித்தாள்.

“மத்தவங்களுக்கு தந்துட்டு நாம குடிக்கலாம்” என்றவண்ணம் அனைவருக்கும் தானே கொண்டு சென்றான்.

குழந்தைகள் மூவரும் அங்கு வந்துவிட்டனர். “ஆன்ட்டி இதென்ன ரெண்டு பாலு. ரதிக்கு அந்த பாத்திரத்தில் மில்க் ஊத்துனிங்க, எனக்கு இந்தப் பாத்திரம்”

“இல்லம்மா இது ஆட்டுப்பாலு. உங்களுக்கு மாட்டுப்பாலு”

“ஹே… ஆட்டுப்பாலில் டீ போடுவாங்களா?” விழிகள் விரிய கேட்டாள்.

“ஆமாம்… பால் ரொம்ப திக்கா இருக்கும். அதுனால நிறைய தண்ணி சேர்ப்போம்”

“ரதி அதை எனக்குத் தா… இதை நீ வச்சுக்கோ… “ என்று தம்ளர்களை மாற்றினாள்.

“மித்துக்கா நான் ஒரு வாயி குடிச்சுட்டேன்”

“பரவால்ல தா… “ என்று கப்பை வாங்கிப் பருகியவள் “அப்பா சூப்பரோ சூப்பர்” என்று அவனுக்கும் தர

“நீ குடிம்மா, இங்க நிலாவோட டம்ளரை நான் மாத்திட்டேன்” என்று அதினனும் பதில் சொன்னான்.

“ஆன்ட்டி இனிமே தினமும் இதே மாதிரி டீ போட்டுத் தரணும். ஓகேயா” என்று சொன்ன மித்துவிடம் சரி என்று தலையாட்டினாள்.

“நேத்தே சொல்லி இருக்கலாமே. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிருப்பேனே. பால் கூட வாங்கி வைக்கல” அதினனிடம் சொன்னாள்.

“சொல்லக் கூடாது சர்ப்ரைஸ் விசிட்ன்னு மித்து எங்க எல்லாரையும் கட்டிப் போட்டுட்டா”

“மித்து சொன்னா சரிதான். இருந்தாலும் அவளுக்குப் பிடிச்சதா ஏதாவது செஞ்சிருப்பேன். ஆமாம் அவளுக்கு என்ன பிடிக்கும்”

“ஹிம்… அவளுக்கு இந்த ஒரு வருஷமா எதுவும் பிடிக்கிறதில்லை நிலா. ரதியையும் வெற்றியையும் பாக்கணும்னு அவ சொன்னதே எங்களுக்கு எவ்வளவு ஆறுதலா இருந்ததுன்னு உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனாலத்தான் உடனே கிளம்பினோம்”

“அச்சோ… சொல்லிருந்தா நானே கிளம்பி வந்திருப்பேனே… “

“வந்து, வெளிய டின்னர் கூட போக முடியாது. … சென்னைல கூட்டம் கூடிடும். இப்ப இங்க பாரு” சுட்டிக் காட்டினான்.

சற்று தொலைவில் மூவரும் பட்டம் ஒன்றை பறக்க விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என் ஃப்ரெண்ட் இஸ்மாயில் தொட்டிப் பட்டம் குடுவைப் பட்டம் எல்லாம் செய்வான் தெரியுமா மித்துக்கா. அவங்க நாகூர்ல வருஷா வருஷம் பட்டம் விடுற விழா நடக்குமாம்” என்று மித்துவிடம் கதை பேசிக் கொண்டிருந்தான் வெற்றி.

“எல்லாம் செம்ம ஈஸிடா நாமளும் செய்யலாம்” என்று மித்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அதினனின் கண்களில் ஈரம் பளபளக்கிறதா என்ன?

வெண்ணிலாவால் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அதினன் பலமாகக் காயம் பட்டிருக்கிறான். அது மித்துவின் அம்மாவால் கூட இருக்கலாம். அதனால்தான் அவனுக்கு பெண்கள் மீது அவ்வளவு வெறுப்பு. ஆனால் அவன் மனம் சரியாக வேண்டும் என்று என் மனம் ஏன் துடிக்கிறது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’

அத்தியாயம் – 25   அடுத்த சில மாதங்கள். அவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடியது. வெண்ணிலாவின் மதுரை வீடு மீட்டெடுக்கப் பட்டது. பாபு செய்த குற்றங்களுக்கான தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. நீதி வேகமாக செயல் படவேண்டுமானால் அதிகாரம் என்ற உந்துசக்தி அல்லவா

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’

அத்தியாயம் – 12   நாட்கள் வேகமாய் உருண்டோடி மாதங்களாகியது. ஆனால் அதினனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. “விட்டுத் தொலை போ” என்று சுலபமாக சொல்லிவிட்டான் கார்மேகம். ஆனால் கை நீட்டி காசு வாங்கிவிட்டு வேலை செய்யாமலிருப்பது வெண்ணிலாவின் மனதை உறுத்தியது.

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத