Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’

சோனா வெகுவாய் ஆசைப்பட்ட சிங்கப்பூர் பயணம் ஒரு வழியாக சாத்தியமாயிற்று. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது சோனாவின் நெடுநாளைய கனவு. சிங்கபூர், மலேசியா அழைத்து செல்லும் இன்பச் சுற்றுலா மையத்தில் இருவது சதவிகித தள்ளுபடியோடு இந்த வாய்ப்புக் கிடைத்ததும் கண்டிப்பாய் செல்ல வேண்டும் என்று செந்திலிடம் உத்தரவு போட்டுவிட்டாள்.

 

 சோனா சொல்லி எது நடக்காமல் இருந்திருக்கிறது. செந்திலும் அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டான். அவள் வருவதை அறிந்ததும் சிங்கப்பூரிலிருக்கும் அவளது தாய் வழி தூரத்து உறவினர் ஒருவர் வீட்டுக்கு அழைத்தார். அதைத்தவிர அவளது தோழிகள் சிலரும் அங்கு வேலை பார்க்கின்றனர். அனைவரின் வீட்டுக்கும் செல்ல வேண்டும். அனைவருக்கும் பரிசு வாங்க வேண்டும். அவளது  பட்டியல் மனதில் ஓடியது. 

 

கடன் அட்டையின் உதவியால் பொருட்களை வாங்கிக் குவித்தனர் தம்பதியினர். பணமுடையால் இரண்டு மாத வாடகைப் பணத்தை அட்வான்ஸாய் சிவாவிடமிருந்து பெற்றுக் கொண்டான் செந்தில். எவ்வளவு வருமானம் வந்தாலும் அதை விட அதிகமாய் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கும் கோஷ்டி என்று மனதில் எரிச்சல் பட்டான் சிவா. 

ஆனால் சங்கரி வாய்விட்டே சொல்லிவிட்டார் “வரவு எட்டணா செலவு பத்தணாவா இருந்தா தெருவில் தாண்டா நிக்கணும். பாத்து செலவு பண்ணு” என மெல்லிய குரலில் செந்திலைக் கடிந்துக் கொண்டார் சங்கரி.

செந்தில் மனைவி சொல்லே மந்திரம் என்றிருக்கும் கணவனாயிற்றே. அப்படியே அதை சோனாவிடம் ஒப்பித்துவிட்டான் என்பதை ஓரிரு நாட்களில் அனைவரும் அறிந்தனர். 

ரு கலவரமான ஞாயிற்றுக் கிழமைக் காலை சோனாவின் அர்ச்சனையுடன் தொடங்கியது.  

“புள்ளைக்கு ஓதி விடுற வேலை எல்லாம் இங்க வேண்டாம். போனா போகுது  எங்கப்பாவோட தங்கச்சியாச்சேன்னு உனக்கும், உன் வாழாவெட்டி மகளுக்கும், அவ பெத்ததுக்கும் வீட்டில் உக்கார வச்சு சாப்பாடு போட்டுட்டு இருக்கேன். என் குடும்பத்தைக் கெடுக்கணும்னு நெனச்ச நாளைக்கே ஊருக்குப் பெட்டியைக் கட்டு” கூச்சலிட்டாள்.

சோனா கத்திய கத்தலில் தீபிகா பயந்து அழ ஆரம்பிக்க, அறையினுள் அமர முடியாமல் வெளியே வந்து தீபிகாவை தூக்கிக் கொண்டு மிரா ரோட்டில் இருக்கும் மார்கெட் சென்றான். வித விதமான துணிகளும் பொம்மைகளும் அங்கு நிறைந்திருந்தன. 

“வா.. வா..”  என்று அவன் கன்னத்தில் அடித்து விளையாடினாள் பாப்பா. சங்கரி சிவா என்று அழைப்பார். அதில் தீபிகாவுக்கு சுலபமாய் வந்த வா என்ற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டாள். 

அழகான பொம்மைகளில் அவளுக்குப் பிடித்ததை வாங்கி பையில் பத்திரப்படுத்தினான். வைஷாலி இல்லாத சமயத்தில் அந்த பொம்மைகளை வைத்து இருவரும் விளையாடுவார்கள். 

சிவா வீட்டுக்குத் திரும்பியபோது வீடு மயான அமைதியில். சங்கரி கண் கலங்க அமர்ந்திருநதார். செந்திலும், சோனாவும் அவர்கள் பிள்ளைகளும் வீட்டில் இல்லை. தீபிகாவை சிவாவின் கைகளிலிருந்து பெற்றுக் கொண்டார்.

 

 “அமைதியா இருக்கேன்னு பாக்குறியாப்பா. சோனா குடும்பத்தோட எங்கண்ணன் வீட்டுக்குப் போய்ட்டா. நாங்க அவளைப் பாத்து வயிறு எரியுரோமாம். அவங்க அப்பா வீட்டில் இருந்தே சிங்கப்பூர் போயிட்டு வருவாங்க போலிருக்கு.

பொறுப்பு வேணாம்… படிக்கிற பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவ் போட்டிருக்காங்க. ஒரு மாசம் பாடம் போனா பிள்ளைங்க எப்படி படிக்கும்னு அம்மாக்காரி நினைச்சுப் பாக்க வேண்டாம். இவ பாடம் சொல்லித் தந்தாதானே கஷ்டம் புரியும். தினமும் சாலில்ல தொண்டைத் தண்ணி வத்த சொல்லித்தரா” எரிச்சல் பட்டார்.

“பாப்பாவுக்குப் பாலாத்தித் தர நேரமாச்சு.” என்று தீபிகாவை வாங்கிக் கொண்டார். 

“ சாலி  இன்னைக்கு டீச்சர் வேலைக்கு இன்டர்வியு போயிருக்கா. கிடைச்சா நல்லாருக்கும்” என்றவாறு பால்பொடியில் சுடுதண்ணியைக் கலக்கி பாட்டிலில் ஊற்றித் தந்தார்.

“நான் ஹோட்டல்ல ஹார்லிக்ஸ் வாங்கித் தந்தேன்ம்மா சமத்தா குடிச்சுட்டா” என்று மெல்லிய குரலில் சொன்னான் சிவா. 

“நன்றிப்பா, யார் வீட்டுப் பிள்ளையோ இந்த சந்தைக் கடைல தங்கிக்  கஷ்டப்படுறிங்க”

“சண்டையில்லாத வீடு உலகத்திலேயே இல்லைம்மா. எங்க வீட்டில் நடக்காதது ஒண்ணும் உங்க வீட்டில் நடக்கல” 

தீபிகாவின் தலையைக் கோதியவாறு சொன்னார் சங்கரி “பாப்பா அப்படியே இவ அம்மா மாதிரி…. சாலிக்கும் ஹார்லிக்ஸ்ன்னா ரொம்பப் பிடிக்கும். சின்னத்தில் அவங்க அப்பா ஹார்லிக்ஸ் வாங்கித் தந்தா வெறும் வாயிலயே அள்ளி சாப்பிடுவா. ஹ்ம்ம்… அவ பொண்ணுக்கு பால் பவுடரைத் தவிர வேற விதியில்லை ” கண்களைத் துடைத்துக் கொண்டார். 

“இப்படி கடன் வாங்கி லட்சக்கணக்கா செலவு செய்றாங்க. பச்சைக் குழந்தைக்கு பால் செலவு அதிகமாகுதுன்னு பால் பவுடர் வாங்கித் தந்தாங்கப்பா. அந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாம அடுத்த வாரமே வேலைக்குப் போயிட்டா. அவ சம்பாதிக்கிறதுக்குள்ள தீபிகாவுக்கு இந்தப் பாலே பழகிடுச்சு. அம்மா கஷ்டம் தெரிஞ்சு வளர்ற பிள்ளை….” பால் பாட்டிலில் இருந்து முகத்தைத் திருப்பிய தீபிகா சிவாவைப் பார்த்து சிரித்தாள். சிவா அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான். அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“பாசமா இருக்குறதிலும் அப்படியே சாலி மாதிரிதான். அண்ணனுக்கு இருக்குறதெல்லாம் தூக்கித் தந்துட்டியேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்டதில்லை. 

முட்டாள்தனமா என்கிட்டே இருந்தது எல்லாத்தையும் செந்திலுக்குத் தூக்கித் தந்துட்டேன். கையோட சாலியோட வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுட்டான். 

என்னமோ என்னையும் என் பொண்ணையும் சும்மா வச்சு சோறு போடுறா மாதிரி பேசுறாங்க. சாலி முதுகொடிய சம்பாரிக்கிற பணத்துக்கும் சேத்துல்ல இந்த வீட்டில் செலவுக் கணக்கு போடுறா சோனா. யாரை நொந்து என்ன புண்ணியம்… நம்ம மகன் நமக்கு சப்போர்ட்டா இல்லாதப்ப நம்ம என்ன செய்ய முடியும் தம்பி”

“வா… வா…” என்று தீபிகா, சிவாவை அழைத்து அவன் பையை சுட்டிக் காட்டி புது பொம்மையைக் கேட்டாள். அவன் எடுத்துத் தந்ததும் கைகளால் அணைத்தபடி உறங்கினாள்.  

அன்று சிவாவிடம் மனதில் இருப்பதைக் கொட்டிவிட முயற்சி செய்ததைப் போல் பேசினார் சங்கரி.

“இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இங்க இருக்கணும்னு தோணுது. ஆனா எங்க போவேன். 

சாலியோட அப்பா மதுரைல சின்ன ஜவுளிக்கடை வச்சிருந்தாங்க. கடைக்கு வேண்டிய ரெடிமேட் சுடிதார், உள்பாவாடை, குழந்தைங்க டிரஸ்ல்லாம் நான் தச்சுத் தருவேன். சாலிக்கும் தையலில் ஆர்வம் அதிகம். நல்லாத்தான்  வாழ்ந்தோம். காளவாசல்ல சொந்த வீட்டில் குடியிருந்தோம். பிள்ளைகளைப் படிக்க வச்சோம்.

படிச்சு முடிச்சதும் செந்திலுக்கு கடைல உக்காரப் பிடிக்கல. கோட் சூட் போட்டுட்டு வேலை பாக்க ஆசைப்பட்டான். என் ஒண்ணு விட்ட அண்ணன் பேச்சைக் கேட்டுட்டு பம்பாய்லதான் வேலைக்கு போவேன்னு வந்தான். வந்தவன் வேலையைத் தேடினானோ இல்லையோ ஒரு பொண்டாட்டியைத் தேடிகிட்டான். என்ன கொடுமையை என்ன சொல்றது, யாரு என் மகனை பத்திரமா பாத்துக்குவாங்கன்னு நம்பி அனுப்பினோமோ அந்த அண்ணன் மகள்தான் சோனா. 

சோனா அப்பா, அதான் எங்கண்ணனுக்குப் படிப்பு வரல.  சின்ன வயசில் பம்பாய்க்கு ஓடி வந்துருச்சு. இங்கேயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிச்சு.  அப்பப்ப ஊர் பக்கம் வந்து இந்த ஊர்ல பெரிய வேலைல இருக்குறதா சொல்லும். அதை நம்பி வேலை வாங்கித்தரும்னு நெனச்சு செந்திலை அனுப்பினோம். 

அண்ணன் வீட்டில் தாராவில ஒரு பிளாட்ல குடியிருக்காங்க. அண்ணனும், அதோட ரெண்டு பசங்களும்  டப்பாவாலாவா இருக்காங்க. இதெல்லாம் நான் இங்க வந்து தெரிஞ்சுகிட்டது. 

இந்த சோனா பெரிய படிப்பெல்லாம் படிக்கல. மூணு நாலு பாஷை பேசுவா, ஸ்டைலா இருப்பா. இங்க சின்ன சின்ன கடைகள்ல சேல்ஸ் கேர்ள்லா வேலை பார்த்தாளாம். அவங்க கண்ணுக்கு செந்தில் ஏ கிளாஸ் மாப்பிள்ளை. இங்க வேலை தேடி வந்த செந்திலோட  மனசை மாத்தி அவளைக் கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. இது தெரிஞ்சதும் அந்த வருத்தத்திலயே நெஞ்சுவலில  சாலியோட அப்பா போயிட்டார். 

செந்தில் ஊருக்கு வந்தான். அப்பா சாவுக்கு இவனோட கல்யாணம்தான் காரணம்னு சொந்தக்காரங்க திட்டினாங்க. மன்னிப்பு கேட்டு, என் காலைக் கட்டிட்டு கதறி அழுதான். 

அவங்க அப்பாவுக்கு தப்பை மன்னிக்க முடியல. எனக்கோ தப்பு செஞ்ச மகனை வெறுக்க முடியல. ஆயிரம்தான் இருந்தாலும் ஆம்பிள்ளைபிள்ளைதானே கடைசி வரைக்கும் நமக்குன்னு நெனச்சேன். அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டேன். 

என்னதான் அம்மா மன்னிச்சாலும் சொந்தக்காரங்களுக்கு வாய் சும்மா இருக்குமா தம்பி. இவன் ஊருக்கு வரும்போது குத்தலா பேசுவாங்க. இவன் வர்றதையே நிறுத்திட்டான். 

சாலி படிச்சு முடிச்சதும் வரன் பாக்க ஆரம்பிச்சோம். அந்த சமயத்தில்தான் செந்தில் தெரிஞ்சவங்க குடும்பம் மதுரைக்கு வருது. வீட்டில் அவங்களைத் தங்க வச்சு ஊர் சுத்திக் காமின்னு சொன்னான். 

ஊர் சுத்திப் பாக்க வந்தது சுமனோட தங்கச்சி அங்கீதாவும், அம்மா பார்கவியும். ரெண்டு பேருக்கும் அந்த ஒரு வாரத்தில் சாலியைப் பிடிச்சுடுச்சு. பொண்ணு கேட்டாங்க.

மாப்பிள்ளை  சுமன் பெரிய பணக்காரன். அவனை விட செந்திலுக்கு மனசில்லை. நானும் தங்கச்சியும்  ஒரே ஊர்லையே இருப்போம் ஒருத்தொருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்துப்போம்னு என்னனவோ சொல்லி என்னை சம்மதிக்க வச்சான். கல்யாணம் முடிஞ்சதும்  என்னை மும்பைக்கு வந்து கூடவே தங்கணும்னு சொல்லிட்டான். 

கல்யாணத்துக்கு முன்னையே, என் ஒண்டிக்கட்டைக்கு எதுக்கு மதுரைல வீடுன்னு வீட்டையும் கடையையும் வித்து இந்த வீட்டுக்குப் பணம் கட்டினான். எல்லாமே திட்டம் போட்டு செஞ்சிருக்கான். இது சுமனோட கம்பனி வித்த வீடாம். வருங்கால மச்சினனுக்கு சுமன் சலுகை விலைல தந்திருக்கான். 

செந்திலுக்கு வீட்டை விட மனசில்லை. பாதிப் பணத்துக்கு சொத்தை வித்து, மீதிப் பணத்துக்கு எல்லா இடத்திலையும் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி இப்படி காலத்தை ஓட்டிட்டு இருக்கான். வரவுக்கு தக்கன செலவு செய்யத் தெரியாதவன் கையில் எப்படித் தம்பி காசு நிக்கும் சொல்லு”

துண்டு துண்டாய் சங்கரி சொன்னது வீட்டு நிலவரத்தை விளக்கியது. அவர் மனம் விட்டுப் பேசியது வைஷாலியின் விவரம் பற்றி கேட்கும் தைரியத்தைத் தர, 

“தீபிகா அப்பா அவ்வளவு ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணிட்டாரே. இப்ப எங்க இருக்கார். இவங்களை அவர் கூட சேர்த்து வைங்கமா. பாப்பா  முகத்தை பார்த்தா அவரோட கோவமெல்லாம் பறந்துடும்”

“கோவம் பறக்கக் கூடாதுன்னுதான் அவர் இவளைப் பாக்கவே வரல. விடுப்பா அதை நினைக்கக் கூடத் தெம்பில்லை. சாலிக்குப் புயல் வேகத்தில் கல்யாணம் முடிஞ்சது.  அதை விட வேகமா அவ வாழ்க்கையும் முடிஞ்சது” சிவாவின் மடியிலேயே தூங்கி விட்டிருந்த தீபிகாவைப் படுக்கை  விரித்துப் படுக்க வைத்தார் சங்கரி. மனதில் தனக்குரிய யோசனையில், சிவாவிடம் தீபிகாவைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டுக்  காய்கறி வாங்கச் சென்றார். 

“குட்டிப் பாப்பா, உன் மேல கூட யாராவது கோவப்படுவாங்களா என்ன? உன்னை எப்படியாவது உங்கப்பா கண்ணில் காமிக்கிறேன். அவர் கோவமெல்லாம் பறந்து உன்னையும் உங்க அம்மாவையும் இந்த நரகத்திலிருந்து தூக்கிட்டுப்  போய்டுவார். அப்பறம் தினமும் நல்ல கவுன் போட்டுக்குவிங்கலாம். கழுத்தில் குட்டியா செயின். ரூம் புல்லா பொம்மை வச்சு விளையாடுவிங்கலாம். உங்க அம்மா முகத்தில் பழைய சிரிப்பும் சந்தோஷமும் வந்துடுமாம். அதை எல்லாத்தையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேனாம்”   

நேர்முகத் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்த வைஷாலி, சிவா பாப்பாவிடம் பேசுவதைக் கேட்டு சிலையாய் நின்றாள். அவள் முகத்தில் தெரிந்த கவலை கண்களில் நீராய்ப்  பெருகியது. உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்தான் சிவா. 

கைகளில் பொம்மையைக் கட்டி உறங்கிய தீபிகாவிடமிருந்து மெதுவாய் பொம்மையை உருவ முயற்சித்தான். 

“உங்களுக்கு எதுவும் வாங்கித்தந்தா பிடிக்காதுன்னு தெரியும். குழந்தை மேல இருக்குற பிரியத்தில் தான் இந்த பொம்மையை வாங்கினேன். வேற தவறான எண்ணம் எதுவும் இல்லை”

பொம்மையைப் பிடுங்கவும் உறக்கம் கலைந்து சிணுங்கினாள் தீபிகா. 

“பரவால்ல இருக்கட்டும் விடுங்க” என்றாள் வைஷாலி 

“நன்றி, என் பரிசை மறுக்காததுக்கு” கவனமாய் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து சொன்னான். 

“மிஸ்டர் சிவா… என் மேல பரிதாபப்படாதிங்க. அந்த அளவுக்கு நான் நல்லவளுமில்லை” எங்கோ பார்த்தவாறு சொன்னாள். 

“நீங்க நினைக்கிற அளவுக்கு நானும் நல்லவனில்லை” அவள் முகத்திலிருக்கும் உணர்ச்சிகளைப் படிக்க முயன்றவாறு பதிலளித்தான் சிவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் ஆடியோ நாவல் – 1 youtube linkகாதல் வரம் ஆடியோ நாவல் – 1 youtube link

வணக்கம் தோழமைகளே காதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி. அன்புடன், தமிழ் மதுரா

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’

“ச்சே… இதுவும் நல்லால்ல” அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டெறிந்தான். தரையில் அனாமத்தாய் கிடந்த ஒரு டசன் சட்டைகளுக்கு நடுவில் அந்த சட்டையும் ஒளிந்துக் கொண்டது. எதற்கு இத்தனை பாடு… இன்று காதம்பரியை சந்திக்கப் போகிறான்.   ‘டேய் அடங்குடா…. பெங்களூர்லேருந்து வந்து