அத்தியாயம் – 24
பில்டரில் இரண்டு ஸ்பூன் காபி பொடியைப் போட்டவன், அதன் தலையைத் தட்டி, கெட்டிலில் சுட்டிருந்த சுடுதண்ணியை ஊற்றினான். சுகந்தமான டிகாஷனின் நறுமணத்தை அனுபவித்தபடி பாலை சுடவைத்தான். அவன் மனதில் நேற்றைய நினைவுகள்.
“ என்ன சித்து தூக்க மாத்திரை தரியா?” என்று இரண்டாவது முறை கம்மிய குரலில் கேட்கவும்.
“ இனிமே வேண்டாம்” என்று சொல்லி சித்தாராவின் கைகள் அவனது தோள்களை வளைத்துக் கொண்டன.
மனது நிறைந்த மகிழ்ச்சியில் அதிகாலையில் விழித்துக் கொண்டான். இந்த அளவு சந்தோஷமாய் இருந்து ரொம்ப நாளாகி விட்டது. ஸ்ராவணியை முதலில் பார்த்தபோது கூட மகிழ்ச்சியை விட, குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சொன்ன செய்தியே அவனை மிகவும் கவலைப் படுத்தி இருந்தது.
அதனைப் பற்றி மேலும் அவன் சிந்திக்கவில்லை. அவனைப் பொருத்தவரை அவனது வாழ்வின் இருண்ட காலத்தை குழி தோண்டி புதைத்து விட்டான். அவன் வாழ்வு இனி வநியோடும் சித்துவோடும் நன்றாக இருக்கும். கடவுள் அவனுக்குத் தந்த துன்பங்கள் போதும். இனி துன்பங்களை அவனால் தாங்க முடியாது.
மனதில் இனிமையான இரவு நிகழ்வுகளை எண்ணியவாறே குளித்து முடித்திருந்தான். அவனது ரவுடி ராணிக்கு இன்னமும் திருப்பள்ளியெழுச்சி ஆகவில்லை. அவளது செந்தாமரைக் கண்களையும், அவற்றுக்கு நடுவில் வாள் போல் இருந்த கூரான மூக்கினையும், முகம் அசையும் போது சுளித்துக் கொண்டு விழும் கன்னக் குழியினையும் ரசித்துப் பார்த்தவாறு அவளது போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டான்.
இரவின் நினைவில் காபியைக் குடித்தவாறு வெளியே பெய்திருந்த பனி மழையை வேடிக்கை பார்த்தான்.
“அரவிந்த் மத்தவங்களை பார்க்க வச்சுட்டு காபி குடிச்சா வயிறு வலி வரும்”
காதில் தூக்கக் கலக்கமாக விழுந்த குரலை கேட்டு பதில் பேசாமல் சிரித்தவாறு தனது வேலையைத் தொடர்ந்தான்.
“காலைல பெட் காபி குடிச்சா எனக்கு ரொம்ப பிடிக்கும் அரவிந்த். அதையும் யாராவது ஒரு மீசையில்லாத அழகான பையன் காலங்காத்தால குளிச்சுட்டு, சாமி கும்பிட்டு திருநீறு பூசிக்கிட்டு, ஞானப்பழமா கைல கொண்டு வந்து தந்தா என்ன சூப்பரா இருக்கும் தெரியுமா? ” கெஞ்சலாக ஒலித்தது அவனது சித்துவின் குரல்.
“பல்லு விளக்காமலா?” முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு கேட்டான்.
“பச்…. நீ பல் விளக்குனா நான் விளக்குன மாதிரி அரவிந்த்”
“அப்ப நான் காபி குடிச்சா நீ குடிச்ச மாதிரி சித்து”
உன்கிட்ட ஒரு காபிக்கு கெஞ்ச வேண்டி இருக்கே என்று கடுப்பாக சொன்னாள் “ஆடு மாடெல்லாம் என்ன பல்லா விளக்குது?”
உடனே முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு “ எங்க பாட்டி மாதிரி திட்டி கிட்டே காபி தந்தா அது எப்படி என் உடம்புல ஒட்டும்? ப்ளீஸ் அரவிந்த் ஒரு கப் காபி கொண்டு வாயேன்”
“அப்படியா அப்ப நீ ஆடா இல்ல மாடா? சரியா சொல்லு, நான் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன்”
இவ்வளவு கெஞ்சியும் உன் மனம் இறங்கவில்லையா என்பது போல் லேசாக முறைத்தவள் “ஏன் நேத்து நீ கண்டு பிடிக்கலையா? நேத்து நைட் நீ என்…… “ ஓடி வந்து அவளது வாயைப் பொத்தியவன்
“ வாயாடி….. நான் போய் காபி கொண்டு வரேன். நேத்து நைட் பத்தி மூச்சு விட்ட கொன்னுடுவேன்”
கணவன் கொண்டு வந்த காபியை துளித் துளியாகப் பருகினாள். “இன்ஸ்டன்ட் இல்ல போல. டிகாஷன் போட்டியா?”
“ம்ம்ம்…”
“பரவால்ல நீ என் பாட்டி அளவுக்கு இல்லைன்னாலும் சுமாராவே காபிபோடுற. சரி அரவிந்த்! எத்தனை மணிக்கு கிளம்பணும்?”
“எங்க கிளம்பணும்?”
“என்ன இப்படி கேட்குற? இன்னைக்கு உன்னோட ட்ரீட் தெரியும்ல”
“எதுக்கு, இந்த வருஷமும் பிரமோஷன் கிடைக்காததுக்கா?”
“ஓ… ரிசல்ட் நேத்தே வந்துடுச்சா? நேத்து நடந்த கலாட்டாவுல கேட்க மறந்துட்டேன். சரி கவலைப் படாதே அரவிந்த் உன்னோட ஆபிஸ்லேயே உன்னை வேற நல்ல வேலைக்கு போக சொல்லுறான். நாம வெளில ட்ரை பண்ண ஆரம்பிக்கலாம். அப்பாடா நமக்கு பலாப்பழம் வாங்குற செலவு மிச்சம். நான் ட்ரீட் கேட்டது அதுக்கில்ல”
“வேற எதுக்கு?”
“என்னப்பா நேத்து வைப் கூட ஜாலியா முதல் டேஷ் எல்லாம் கொண்டாடி இருக்க அதுக்கு ட்ரீட் தர மாட்டியா?”
“அதென்ன முதல் டேஷ்….” இரவு என்று சொன்னால் கொன்னுடுவேன் என்று மிரட்டியதால் இப்படி சொல்கிறாள் என்று புரிந்தது.
“கடவுளே! தபு ஷங்கர் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்ன்னு சந்தேகப் பட்டு கேட்டது உன்னைத்தானா?”
“தபு கவிதை எல்லாம் எழுதுவாங்களா. கிரேக்க வீருடு, ராஜ் குமாருடு அவங்க எழுதினது தானா? அப்ப அதுக்கும் சேர்த்து ஒரு ட்ரீட் குடு”
அவளைக் கனிவோடு பார்த்தவன் “ சித்து நேத்து உனக்குத்தான் முதல் டேஷ் எனக்கில்ல. நான் ஒரு குழந்தைக்கு தகப்பன்”
அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் உண்மையை அவள் மனது ஏற்றுக் கொள்ள வேண்டும். மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் பொய்யாக வாழ்வது இருவருக்கும் வேதனையைத் தரும். பொய்யில் ஆரம்பிக்கும் தாம்பத்யத்துக்கு ஆயுள் குறைவு. இது அனுபவப் பாடம்.
இவன் முதல் திருமணத்தை இந்த இனிமையான தருணத்தில் நினைவுபடுத்த வேண்டுமா என்றெண்ணி அவளது முகம் சற்று வாடிப் போனது. அதனைத் தாங்க முடியாமல் சொன்னான்
“கண்ணம்மா, ஒவ்வொரு பெண்ணும் தன் மனதுக்குப் பிடித்த ஆணுக்கு தர உயர்வான பரிசினை நேத்து எனக்கு தந்த. ஆனா என்னால உனக்கு அதைத் தர முடியலன்னு நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. காலைல கடவுள் கிட்ட என்ன வேண்டி கிட்டேன் தெரியுமா? இனி வர ஜென்மத்துலையாவது என்னோட சித்துவுக்கு நான் அந்த உயர்ந்த பரிசினை தரணும்னு வேண்டிகிட்டேன்”
வேக வேகமாகக் கணக்கு போட்டது சித்தாராவின் மனது
‘இனி வர ஜென்மத்துல எனக்குத் தரணும்னா இனி வர எல்லா பிறவிலயும் நான்தான் அவனுக்கு மனைவியா வரணும்னு அரவிந்த் ஆசைப்படுறான். அப்படித்தானே அர்த்தம். அப்ப அதுக்கு இன்னொரு அர்த்தம் அவன் முதல் மனைவி வர வேண்டாம்னு நினைக்கிறான். அப்ப அவளைவிட உன்னைத்தான் அவனுக்குப் பிடிச்சிருக்கு.
நீ ஒண்ணும் அவனுக்கு பெருசா செஞ்சு கிழிக்கல. உன்னோட சமையலை தைரியமா சாப்பிடவே ஒரு தனித் தெம்பு வேணும். அரவிந்தோட முதல் திருமண வாழ்க்கைல ஏதோ பயங்கர கசப்பு இருக்கு. அதனாலதான் அதைப் பத்தி பேசவே தயங்குறான்.
வனி குறை பிரசவத்துல பிறந்தததுக்கும் இதுக்கும் என்னவோ சம்பந்தம் இருக்கணும். இந்த ஊமைக் கோட்டான் அவனுக்கே தெரியாம இந்த அளவு ஹிண்ட் தராதே பெருசு. இரு அரவிந்த், இனிமே நானே கண்டு பிடிக்கிறேன்’
நிகழ்காலத்துக்கு வந்தவள் “ரொம்ப தாங்க்ஸ் அரவிந்த்” அவனது கைகளில் முத்தமிட்டாள்.
“இது என்ன பாவம் செஞ்சது” தனது இதழ்களை சுட்டிக் காட்டியவாறு குறும்போடு கேட்டான்.
“பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு வந்துடுறேன்” வேகமாய் அவனது கைக்கு சிக்காமல் ஓடினாள்.
குளியல் அறை வாசலுக்கு வந்தவன் “சித்து நான் போய் கறிகாய் வாங்கிட்டு வரேன். இன்னைக்கு வீட்டுல நான்தான் சமையல். இந்த மாசம் நோ ட்ரீட். பட்ஜெட் டைட்டா இருக்கு. சரியா? ”
கதவினை திறந்தவள் “ஓகே அரவிந்த் அடுத்த மாசம் ட்ரீட் தா. இன்னைக்கு பீன்ஸ் சாம்பார், காலி ப்ளவர் வறுவல், கத்திரிக்காய் கூட்டு, தக்காளி ரசம், தயிர், ஒரு பாயசம், வடை இப்படி சிம்பிளா சமைச்சிடு”
தாவங்கட்டையில் கை வைத்துக் கொண்டு ஆச்சிரியமாய் “போதுமா? பதார்த்தம் கம்மியா இருக்கே”
“அப்பளம் சொல்லலாம்னு நெனச்சேன் அப்பறம் உனக்கு வேலை அதிகம் தர வேணாம்னு விட்டுட்டேன். நைட் வேணும்னா ரவா தோசை, சட்னி மட்டும் வச்சுடு”
“ஏண்டி போனாப் போகுதுன்னு இன்னைக்கு சமைக்குறேன்னு சொன்னா, ஹோட்டல் மாதிரி அடுக்கிட்டு எனக்குத் தொந்தரவுன்னா சொல்லுற. இன்னைக்கு வெறும் லெமன் ரைஸ் அப்பறம் புதினா துவையல். அப்பறம் நைட் பிரட் டோஸ்ட். முக்கியமான விஷயம் இனிமே பல் விளக்கினாத்தான் உனக்கு காபி”
“எனக்கென்ன இன்னைக்காவது நீயும் வனியும் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு ஒரு நல்லெண்ணத்துல சொன்னேன். உனக்கு வேண்டாம்னா விட்டுடு” சொல்லிவிட்டு குளியலறைக் கதவை சாத்திக் கொண்டாள்.
அரவிந்தும் சிரித்தபடியே அவளும் ஒரு நாள் நல்ல உணவு சாப்பிடட்டும் என்ற எண்ணத்தில் அவள் சொன்ன கறிகாய்களை வாங்கி வந்தான்.
வீட்டுக்கு வந்தபோது வாசலிலே நின்று கொண்டு பயம் காட்டினாள் ஸ்ராவணி.
“பூ….”
“ஹய்யோ … அப்பாக்கு பயம்மா இருக்கே. தங்கம் நைட் எங்க போனிங்க?”
“ஹர்ஷு வீட்டுலப்பா. அஸ்வின் கூட விளையாண்டோம். அப்பா அஸ்வின எனக்கு ஹர்ஷு வீட்டுக்குத் தர மாட்டேன்னு சொல்லிட்டா. எனக்கும் இப்பவே ஒரு தம்பி வேணும்பா. அம்மா கிட்ட கேட்டா நோன்னு சொல்லிட்டாங்க”
முன்னாடி என்றால் ஏதாவது சொல்லி இருப்பான்
“ இன்னைக்கே கேட்டா எப்படிடா, வேணும்னா அடுத்த வருஷ கிறிஸ்த்மஸ்குள்ள வாங்கித் தர சொல்லி அம்மா கிட்ட ரெண்டு பேரும் கெஞ்சி பார்க்கலாம்” சொல்லிக் கொண்டே வந்தவன் திகைத்துப் போனான். சித்தாராவின் முகத்தில் கடுகைப் போட்டால் பொரிந்து விடும் போல் சிவந்து இருந்தது கோவத்தால்.
அவன் கையில் இருந்து நழுவி ஓடிய வனி “ஆன்ட்டி எங்கப்பா எனக்கு தம்பி வாங்கித் தரேன்னு சொல்லிட்டாங்க”
ஏன் சித்தாராவின் முகம் சிவந்தது என்று காரணம் தெரிந்தது.
‘இந்த சோப்பு பயபுள்ள வீட்டுல இருந்தா ஏதாவது கத்தி பேசிட்டே இருக்கும். வாசல்லேயே ஆள் இருக்குறது தெரிஞ்சு உஷாராயிருப்பேன். இன்னைக்கு பார்த்து அமைதியா உட்கார்ந்து இருக்கு. நான் வேற சோப்பு இருக்குறது தெரியாம உளறிட்டேன். இன்னைக்கு சித்து கிட்ட எனக்கு உதை இருக்கு ’
“ஹி… ஹி… வாங்க சந்திரிகா எப்ப வந்திங்க?” என்று திணறினான்.
ஹாலில் நமுட்டு சிரிப்புடன் அவன் பேசியதைக் கேட்டவாறே சந்திரிகா விவஸ்தை இல்லாமல்
“ வனி அதான் அப்பா சொல்லிட்டாங்கல்ல, அப்ப அடுத்த வருஷ கிறிஸ்த்மஸ்கு வனிக்கு தம்பி பாப்பா வந்துடுவான். இன்னைக்கு நைட் எங்க வீட்டுல அவனுக்கு பேர் செலக்ட் பண்ணலாம். என்ன?” என்றவள் “நான் வரேன் சித்து, பை அரவிந்த்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
பின்னர் அரவிந்தின் பின் வரவேற்ப்பரையின் மற்றொரு ஓரத்தில் கதவின் பின்னால் மறைந்து இருந்த இருக்கையைப் பார்த்து “வரேன் அங்கிள்” என்று சொல்ல, யாரது புது அங்கிள் என்று அரவிந்த் பார்க்க
“தம்பி நல்லா இருக்கிங்களா” என்று தனது பற்கள் அனைத்தையும் காட்டினார் விவேகானந்தன்.