காலையிலிருந்து பொற்கொடி அபியை ஜிஷ்ணுவைப் பார்த்து அப்பா என்று சொல்ல ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவனோ ராமைத் தான் அப்பா என்றழைப்பேன் என்று அழிச்சாட்டியமாய் நிற்கிறான்.
“அம்மா அவனை கம்பெல் பண்ணாதிங்க” என்று விஷ்ணு அழுத்தி சொன்னான்.
“அவன் அணுகுண்டை அப்பாவாவே பாக்குறான் விஷ்ணு… உன்னை ஏத்துக்க கொஞ்ச நாளாவும்” கவலையாய் சொன்னாள் சரயு.
“பரவால்ல… அணுகுண்டே அப்பாவா இருக்கட்டும்”
அனைவரும் விழித்தனர்.
“இவ்வளவு நாள் ஒரு தகப்பனோட இடத்தை அவன்தானே நிரப்பிருக்கான். அவனைக் கூப்பிடுறதுல என்ன தப்பிருக்கு” கூலாய் சொன்னான்.
ஏர்போர்ட்டில் வரலக்ஷ்மியையும் சந்தனாவையும் ரிசீவ் செய்ய குடும்பமே சென்றது. சந்தோஷக் கூத்தாடும் ஜிஷ்ணுவின் முகத்தைக் கண்டவுடன் நடந்ததை ஓரளவு ஊகித்த வரலக்ஷ்மி, “நாணா ஜிஷ்ணு” என்று ஆர்வத்துடன் வினவ,
“பின்னி, தாங்க்ஸ் பின்னி, நீ மட்டும் தைரியம் தரலைன்னா எனக்கு உண்மையைத் தெரிஞ்சுக்குற ஆர்வம் வந்திருக்காது” என்று அன்போடு அணைத்துக் கண் கலங்கினான்.
லாவண்டர் நிற அனார்கலி சுடிதாரில் கண்களைப் பறித்தாள் சரயு.
சந்தனாவின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான் ஜிஷ்ணு.
“சந்து லேட்டா சொல்லுறதுக்கு சாரிரா… இது அபி, அபிமன்யு தாரணிக்கோட்டா… உன் தம்பி. இது சரயு தாரணிக்கோட்டா”
“என் பின்னி” என்ற சந்தனா தந்தையை விடுத்து சரயுவைக் கட்டி அழுத்தமாய் இச் பதித்தாள். பதிலுக்கு சரயுவும் அவள் கன்னத்தில் முத்தம் பதித்தாள். அம்மா முத்தம் தருவதைப் பார்த்த அபியும் பங்குக்கு சந்தனாவின் கன்னத்தில் இதழ் பதித்தான். ஆவலோடு அபியைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டாள் சந்தனா.
“சந்து, மை டார்லிங்… தாங்க்ஸ் பார் அக்செப்டிங் மீ.” கண்கள் பனிக்க சரயு சொன்னாள்.
“நாணா பின்னி ஸ்வீட், அபி ரொம்ப ரொம்ப ஸ்வீட்…” சந்தனா சொல்ல, அதுவரை ஜிஷ்ணுவை ஒன்றுமே சொல்லி அழைத்திராத அபி, சந்தனாவிடம் கற்றுக் கொண்டு அவனுக்கு புரிந்த விதத்தில்,
“நாணா ஸ்வீட்” என்று ஜிஷ்ணுவிடம் கைகளை நீட்டி சாக்லேட் கேட்டான். அனைவரும் திகைக்க, எதுவும் சொல்லித்தராமலேயே தன் மகன் தன்னை நாணா என்றழைத்ததைக் கண்டு சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய் அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்தான்.
“புஜ்ஜி, நாணா உனக்கு ஸ்வீட்டா வாங்கித் தள்ளுறேண்டா…” என்று விடுதி அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பொம்மைக் குவியலில் மகனை விட்டான். சாக்லெட்டாலும், கேக்காலும் இனிப்பு வகையாலும் மனைவி மக்களைத் மூழ்கடித்தான். ராம் சரயுவின் வீடு அன்பளிப்புக்களால் மூச்சு விடமுடியாது திணறியது.
இரவு உணவு நேரத்தில் லையன் கிங்கின் சிம்பாவாய் கர்ச்சித்து மகனைக் கிச்சுகிச்சு மூட்டி சாப்பிட வைத்த ஜிஷ்ணுவிடம் மெதுவாய் சொன்னான் ராம்.
“விஷ்ணு… போதும். இந்த மாதிரி சாமானா வாங்கித்தான் உன் அன்பை நிரூபிக்கணும்னு இல்லை. உன்னை நம்பிட்டேன்… உன் கூட முழு மனசோட உன் பொண்டாட்டியை அனுப்புறேன். இதுக்கு மேல பொம்மை வாங்கினேன்னா அதை வைக்கிறதுக்கு பக்கத்து வீட்டையும் விலைக்கு வாங்கணும்”
“பக்கத்து வீட்டை வாங்கிட்டேன்டா… அடுத்த வாரம் எக்ஸ்சேன்ஜ்” அமைதியாய் சொன்னவனின் பலம் ராமுக்குப் புரிந்தது.
“நீ இந்தியா போகல…”
திகைப்புடன் கேட்ட ராமிடம் பதில் சொல்லாமல், “சந்து இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்குக் கிளம்பணும்… நெனவிருக்கா?” சரயு ஊட்டி விட, தம்பியிடம் விளையாண்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த மகளிடம் அழுத்தமான குரலில் சொன்னான்.
“நினைவிருக்கு நாணா… நாளைக்கு டிரஸ்சை எடுத்து வைக்கிறேன்” முகம் சுருங்கிப் போய் கம்மிய குரலில் பதிலளித்தாள் சந்தனா.
“ஒண்ணு ரெண்டு மட்டும் எடுத்து வை போதும். உங்க ஸ்கூல்ல டிசி வாங்கிட்டு வரணும். உனக்கு இங்க ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல சீட் வாங்கிருக்கேன். அபியும் அங்கேயே நர்சரிக்கு வரப்போறான். இனிமே நம்ம பேமிலி ஆளுக்கு ஒரு திசையா இருக்குறதுல எனக்கு சம்மதமில்லை” சொல்லி முடித்தவுடன்,
“ஸ்வீட் நாணா” என்று அப்பாவைக் கட்டிக் கொண்டு தந்தையின் கன்னத்தை எச்சிலாக்கினாள்.
“ஸ்வீட் நாணா” என்று அபியும் மறுகன்னத்தில் முத்தமிட்டு கையை நீட்டி இனிப்பைக் கேக்க,
“டேய் பாபு, நீயும் உங்க அம்மாவை மாதிரி இனிப்புப் பைத்தியமா இருக்கியே… இந்த ஸ்வீட் வேற” என்று மகனைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான்.
சமையலறையில் பாத்திரத்தை விளக்கப் போடச் சென்ற சரயுவின் பின் சென்றவன், “பசங்க கொடுத்ததை விட டென் டைம்ஸ் அதிகமா அவங்க அம்மாட்ட எதிர்பார்க்கிறேன்” என்று முணுமுணுத்துவிட்டு சென்றான்.
பெட்டைம் ஸ்டோரி சொல்லி மகனையும் மகளையும் தூங்க வைத்த தம்பதியினரை பொற்கொடியும் ராமும் ரசித்துப் பார்த்தனர். இரவு நீண்ட நேரம் விழித்து வேலைகளை செய்துக் கொண்டிருந்த ஜிஷ்ணுவைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் காத்திருந்தான் ராம்.
“இங்கிருக்குறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷம்தான் ஆனா உன் பிஸினெஸ் என்னாகும்?” சந்தேகமாய் வினவினான்.
“ராம், சரயு நல்ல வேலைல இருக்கா… சந்தனாவுக்கும் ஆட்டோமொபைல் துறைல ஈடுபாடு இருக்கு. இந்த ஊர்தான் அவங்களுக்கு நல்லது. எனக்கும் இங்க பிசினெஸ் இருக்கு. தவிர உலகமே கைக்கு வந்துட்ட இந்த காலத்துல இங்கேருந்தே பிசினெசை கவனிக்க முடியாதா என்ன?”
“அதுமட்டும்தான் காரணமா?”
தீவிரமாய் யோசிப்பதாய் காட்டியவன், “அன்னைக்கு கேட்டியே நான் வீட்டில் இருக்கும்போதே என் மனைவியோட தாலியைப் பிடிங்கிட்டாங்கன்னு… உன் ஆதங்கம் சரிதான். அங்கிருந்தா என் ரிலேடிவ்ஸ் கண்ணுல படாம இருக்க முடியாது. அவங்க ஏதாவது பேசிட்டாங்கன்னா? சரயு பொருட்படுத்த மாட்டா ஆனா என் குழந்தைகளை அபெக்ட் பண்ணுமே”
“முக்கியமான காரணத்தை சொல்லாத மாதிரி தோணுது” முழு நம்பிக்கையில்லாமல் கேட்டான் ராம்.
“ம்ம்… அப்பா மகனை பிரிச்ச பாவம் வேண்டாம்னு பார்த்தேன். என்ன இருந்தாலும் அபிக்கு இந்த நாணா புது நபர்தானடா…” சொன்னவனை திகைப்பாகப் பார்த்தான் ராம்.
“சரவெடியை பிரிஞ்சது கவலைதான். ஆனாலும் சமாளிச்சுட்டேன். அபியை பிரிஞ்சா என் உயிரே பிரிஞ்சது மாதிரிதான்… ரொம்ப கஷ்டப்பட்டேண்டா…” மனவேதனையை வாய்விட்டு சொன்னான் ராம்.
“உயிர் பிரியும் வேதனையை நான் அனுபவிச்சிருக்கேண்டா… அதை நீ அனுபவிக்க விடமாட்டேன்…” ஆறுதல் தந்தான் தோழன்.
“விஷ்ணு எவ்வளவு பெரிய உரிமையை எனக்கு விட்டுத்தரன்னு உனக்குப் புரியுதா… தாங்க்ஸ்டா…” அன்புடன் அணைத்துக் குலுங்கினான்.
அறையில் தொலைப்பேசியில் ராஜுவுடன் பேசிக் கொண்டிருந்தாள் சரயு.
“ரெண்டு பேரும் எவ்வளவு அழகா தமிழ் பேசுறிங்க… எப்படி கத்துகிட்டிங்க..” சிலாகித்தாள்.
…
“ஆமாம் சந்தனாவுக்கு தமிழ்தான் நல்லா வருது… வீட்டுல வரலக்ஷ்மி ஆன்ட்டி கூட அவகிட்ட தமிழ்தான் பேசுறாங்க”
…
“கண்டிப்பா குடும்பத்தோட வரோம். சீதாராம கல்யாணம் மட்டுமில்லை ஜிஷ்ணு-சரயு கல்யாண நாளும் அன்னைக்குத்தானே”
வேலைகளை முடித்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் தூங்க வந்த கணவனைப் பார்த்தபடி பதிலளித்தாள்.
“தூக்கம் வரலை உங்க கூட பேசணும்னு ஆசையா இருந்தது. ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனச்சுத்தான் கால் பண்ணேன். நீங்க இவ்வளவு அழகா தமிழ் பேசுனது சந்தோஷம்”
மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அலைபேசியை வைத்தாள் சரயு.
“எல்லா பொண்ணுங்க கூடவும் கடலை மட்டும் போட்டுட்டு, காதல் கத்திரிக்காய்ன்னு மாட்டிக்காம, இரும்பு மாதிரி இருந்தேன்… நீ மேக்னட்டா மாதிரி என்னை அட்ராக்ட் பண்ணிட்டடி.. இப்ப கூட பாரு ரூம்ல நுழைஞ்சதும் காந்தமா மாறி என்னை இழுத்துட்ட” ஒட்டிக் கொண்டு கொஞ்சினான்.
“விஷ்ணு ராஜு அங்கிள் என்னம்மா தமிழ் பேசுறார்… எப்படி இது?” வியந்தவளை வளைத்து தன் மடிக்குக் கொண்டு வந்தான்.
“உன்னாலதான்”
“என்னாலையா… என்ன சொல்லுற?”
“தாரணிக்கோட்டைலேருந்து கிளம்பி போனல்ல, ராஜு கூட குண்டூர்ல பஸ் ஏத்தி விட்டாரே… அன்னைக்குத் தமிழ்ல பேசுனியாம் அவரால புரிஞ்சுக்க முடியல, என் நிலைமையை உன்கிட்ட விளக்கவும் முடியல… சோ வெறியோட தமிழ் கத்துகிட்டார்…”
வியந்து போய் கல்லாய் அமர்ந்திருந்தவளை உலுக்கினான் அவளது ஆசைக் கணவன்.
“அப்படி என்ன சொன்ன பங்காரம். அதை நினைக்கும்போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடும்”
அவள் வருடக்கணக்காய் எண்ணி வருந்தும் வார்த்தைகளைச் சொன்னாள்.
“விஷ்ணுவ நேத்துக் கனிவோட பார்த்த கண்ணு இன்னைக்கு கோவத்துல பொசுக்கிட்டு வந்ததே … இந்தக் கண்ணைப் பிடிங்கிப் போட்டா என்ன?”
“நேத்து ஆசையா கொஞ்சின வாய் இன்னைக்கு என்னை வேசியாக்கிட்டியேடான்னு அவன் மேல பழி போட்டதே, வெக்கமில்லாம திசை மாறுற இந்த நாக்கை அறுத்தெரிஞ்சா என்ன?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன வரை காதலோட கட்டிப் பிடிச்ச இந்தக் கை, அவன் நோகணும்னே அடிச்சதே இதை வெட்டிப் போட்டா என்ன?”
கண்களில் நீர் பெருகி வழிய சொன்ன மனைவியைக் கண்டு உருகியவன்,
“நோ பங்காரம், கண்ணீர் முத்துக்களை வீணாக்காதே…
இந்தக் கண்ணுக்கு என்னைக் கனிவா பாக்க மட்டும்தான் முடியும். கோவத்துல பொசுக்குற பலம் அதுக்கில்லை.
என் செல்லம்மாவோட வாய்க்கு என்னைக் கொஞ்ச மட்டும்மில்லை, தப்பு செஞ்சா கண்டிக்கவும் உரிமையிருக்கு.
காதலோட கட்டிபிடிச்ச இந்த அன்பான கைகளுக்கு, என் துரோகத்துக்கு தண்டனையா வெட்டிப் போடக் கூட தகுதியிருக்கு.
அடி வாங்கின எனக்கு வலிக்கவே இல்லரா… அடிச்ச உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கு… சாரி டியர்…”
“இனிமே நம்ம கஷ்டத்தைப் பத்தி பேசவே வேணாம் விஷ்ணு… நினைக்கவே பிடிக்காததைப் பத்தி பேசி ஏன் இப்ப இருக்குற சந்தோஷத்தைக் கெடுத்துக்கணும்”
“அவுனு அவுனு” மனைவியின் பேச்சுக்கு கனகச்சிதமாய் ஜின்க்சாக் போட்டு தான் ஒரு சிறந்த கணவன் என்பதை உலகுக்கு உணர்த்தினான்.
“பங்காரம்…” அவளது கன்னத்தில் கன்னம் இழைத்தபடி குழைந்தான்.
“சொல்லு…”
அவனது கைகள் பெண்டண்டை சுற்றிக் கோலம் போட்டன. “பிசினெஸ் பத்தி இனிமே கவலையில்லை வெறியோட சாதிச்சுட்டேன். உன் ஹஸ்பன்ட் சின்ன ஊறுகாய் கம்பனில ஆரம்பிச்சு இப்ப எக்ஸ்போர்ட் பிஸினெஸ்ல கோடி கோடியா சம்பாரிக்கிறேன். புதுசா ஹோட்டல் செயின்ஸ் பிரான்ச்சைஸி எடுத்திருக்கேன்.”
“சரி”
“சந்தனா உன்னை மாதிரி ஆட்டோமொபைல் படிக்க ஆசைப்படுறா… அபி இப்பயே டாக்டர் செட் வச்சு விளையாடுறான். அவனை டாக்டர் ஆக்காம அணுகுண்டு நிறுத்த மாட்டான். ஜெயெஸ் ப்ராண்டையும், ஹோட்டல் பிசினெஸ்சையும் யாரு கவனிப்பா… நெனச்சாலே கவலையா இருக்குரா” குரலில் கவலையை வரவழைத்துக் கொண்டான்.
“ம்ம்ம்…”
“என் கவலையைப் போக்குற கடமை உனக்கு மட்டும்தானே இருக்கு” நைச்சியமாய் பேசினான்.
“நான் வேலையை விடமாட்டேன்…”
“அதி காதுரா… அடுத்த பாப்பா எனக்குத் தரேன்னு சொன்னேல்ல…” டன் டன்னாய் வழிந்தான்.
அவனை ஒரு முறை முறைத்தவள், “அதுக்கு… இன்ஸ்டன்ட் பாப்பா எல்லாம் ரெடி பண்ண முடியாது” அவன் எங்கு வருகிறான் என்று உணர்ந்தும் தெரியாதது போலக் கேட்டாள்.
“ப்ளீஸ்ரா… சீக்கிரம் அடுத்த பாப்பா வேணும். பத்து மாசம் ஆனா கூட பரவால்ல… பொறுத்துக்குறேன்.. சந்தனா அபி என் ரெண்டு குழந்தைகளைப் பத்தியும் கடைசியாத் தெரிஞ்சுட்ட அப்பன் நானாத்தான் இருப்பேன். அந்தக் காயம் என் மனசில் நிறையா இருக்குரா… அதனால இந்த பாப்பாவோட ஒவ்வொரு அசைவும் நான் உணரனும்… அப்பறம்…” தொடங்கியவனின் இதழ்களைப் பொத்தினாள்.
“வேணாம் விஷ்ணு பெருசா ப்ளான் போடாதே… நம்ம வகை வகையா ப்ளான் பண்ணினதும் போதும். அதே வேகத்துல பிரிஞ்சது போதும். இனிமே உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. தினமும் புத்தம் புதுசா நமக்கே விடியுறதா நெனச்சுக்குவோம். ஒவ்வொரு செகண்ட்டும் நமக்கு தந்த கிப்ட்டா நெனச்சுப்போம். வாழ்க்கையோட ஒவ்வொரு கணத்தையும் நம்ம காதலுக்குக் காணிக்கையாக்குவோம். பதிலுக்குக் காலம் தர்றதை முழு மனசோட ஏத்துப்போம்.”
Let’s live let’s live like there is no tomorrow
Let’s sing let’s dance like we don’t know the meaning of sorrow.
சரயுவின் கூற்றில் தென்பட்ட உண்மையை ஆமோதித்தான் ஜிஷ்ணு. கவலைகளை மறந்துவிட்டு தங்களுக்கான வாழ்க்கையை வாழத் தயாரானார்கள் தம்பதியர்.
“சரவெடி நேத்தே சொல்லணும்னு நெனச்சேன் உன் பால்கோவா இடுப்புக்கு ப்ரெஸ்டீஜ் கேஸ்கட் சுப்பரா இருக்குடி” குறும்புடன் சொல்லி தனது பங்காரத்தை அணைத்தவன், அந்த நொடியே தங்களுக்கு அடுத்த வாரிசை உண்டாக்கும் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் இறங்கினான்.
கையருகே கட்டழகுப் பெண்ணிருக்க,
கட்டுக்கடங்கா காதல் ஊற்றெடுக்க,
பிரிவுத்துயரில் இளமை ஏங்கியிருக்க,
தித்திக்க தித்திக்கப் பேசியபடியே அங்கே சல்லாபம் ஆரம்பமாகியது.
எத்தனை எத்தனையோ நாட்கள் மனதினுள் பேசி, கனவினுள் பார்த்து, கற்பனையில் குடும்பம் நடத்தி வந்த அர்ஜுனனும் சித்ராங்கதாவும் தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை சந்தோஷமாய் அனுபவிக்கட்டும். நாம் ஒரு சிறு இடைவேளைக்குப் பின் அவர்களை சந்திப்போம்.