Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30

அத்தியாயம் 30

“இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால் ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ மட்டுமல்லாமல் ஒரு மதமே கூட வளர்ச்சி தடைபட்டுக் குன்றிப் போக முடியுமோ என்று கூடத் தோன்றுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் இருப்பது போல பல நாடுகள், பலவகை மக்கள் என்றில்லாமல் இந்தியாவிலும் அண்டை நாடாகிய நேபாளத்திலும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் உண்மையான பக்தி சிரத்தையோடு தன்னை அணுகி அனுசரிபவர்களுக்கு எல்லாம் தாராளமாகத் தன்னுள் இடமளிப்பதுதான். முறையான திட்டமிடப்பட்ட சமயம் அங்கீகரித்த ‘கன்வர்ஷன்’ அல்லது ‘மாற்றி ஏற்றுக்கொள்ளுதல்’ என்பதின்றி அநுசரிப்பவர்களும், சுவீகரித்துக் கொள்ளுபவர்களும் கூட உள்ளே வருமாறு அனுமதிக்கும் பரந்த பண்பு இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் புதியது இல்லை. நீண்ட நாட்களாக வழக்கமான ஒன்றுதான். அன்னி பெஸண்ட் முதல் பலர் இப்படி இந்தியக் கலாசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான ஐரோப்பியர்கள் இப்படிப் பக்திசிரத்தையோடு இந்து தர்மத்தை அநுசரிப்பவர்களாக மாறி இருந்திருக்கிறார்கள். இதற்குப் பல முன் மாதிரிகள் காட்டலாம் (சில முன்மாதிரிகள் நீதிபதியால் விவரிக்கப்பட்டன). இங்கே இந்த வழக்கின் சாட்சியங்களைக் கொண்டு கவனிக்கும் போது குற்றம் என்பதாகச் சாட்டியிருப்பவற்றுக்கு நிரூபணமில்லாததோடு அவை வேண்டுமென்றே வலிந்து தயாரிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. கமலி என்ற பிரெஞ்சுப் பெண்மணி இந்துவாகவே தோன்றி வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நியாயமாகவும் செம்மையாகவும் உள்ளதுடன் சத்திய பூர்வமாகவும் தென்படுகின்றன. அவள் நுழைந்ததனால் ஆலயங்கள் பரிசுத்தம் கெட்டுவிட்டன என்று ஆட்சேபிப்பவர்களின் பரிசுத்தம் தான் இங்கே சந்தேகத்துக்கு இடமானதாகத் தெரிகிறது.

சொல்லப்போனால் சாட்சியங்களிலிருந்தும், விவரங்களிலிருந்தும் உள்ளூர் இந்துக்களை விட அதிக பக்தி சிரத்தையுடனும், முறையுடனும், தூய்மையுடனும் அவள் இந்துக் கோவில்களில் சென்று வழிபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே கோவில்களில் எந்தப் பரிசுத்தமும் எந்தப் புனிதத் தன்மையும் இதனால் கெட்டுவிடவில்லை. இக் காரணங்களால் இவ் வழக்கை நான் தள்ளுபடி செய்கிறேன்” – என்று தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. தீர்ப்பில் பிரதிவாதிகளாகிய கமலி சர்மா முதலியோருக்கு வாதிகள் உரிய செலவுத் தொகையைத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது – எதிர்பார்த்ததுதான் என்றாலும் வேணு மாமா உற்சாகமாக முகமலர்ந்து, “பார்த்தீரா? இந்தத் தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்றார் சர்மாவிடம். ரவி ஓடிவந்து வேணு மாமாவைப் பாராட்டிக் கை குலுக்கினான். கமலி மனப்பூர்வமாக நன்றி சொன்னாள். அன்றைய மாலைச் செய்தித் தாள்களுக்கும் அடுத்த நாள் காலைச் செய்தித் தாள்களுக்கும் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. சீமாவையர் கோஷ்டி, தீர்ப்பைக் கேட்டபின், “கலி முத்திப் போச்சு! உலகம் நாசமாத்தான் போகப் போறது. உருப்படப் போறதில்லை” – என்று வயிற்றெரிச்சலோடு சொல்லத் தொடங்கியிருந்தது. பழிவாங்கும் வேலை, கமலி-ரவி கல்யாணத்துக்குப் புரோகிதர், சமையற்காரர்கள் கிடைக்காதபடி செய்வது ஆகிய சில்லரைக் குறும்புகளில் உடனே ஈடுபட்டார் சீமாவையர். புரோகிதர்களை எல்லாம் அவரால் தடுத்துவிட முடிந்தது.

“ஓய் ஜம்புநாத சாஸ்திரி! இன்னிக்கு வேணு மாமா பணத்தை வாரிக் குடுக்கப் போறார்னு சாஸ்த்ரோக்தமா அங்கீகரிக்கப்படாத கல்யாணத்துக்கெல்லாம் புரோகிதரா போய் உட்கார்ந்து நீர் அதை நடத்திக் குடுத்துடறது சுலபம். நிறைய வருமானமும் கிடைக்கும். ஆனால் இதுக்கப்புறமும் நாளைப் பின்னே ஊர்லே நாலுபேர் உம்மை மதிச்சு நல்லது கெட்டதுக்கு வாத்தியாரா ஏத்துப்பாளாங்கறதை யோசியும்” என்று புரோகிதரைக் கூப்பிட்டுக் கலைத்தார் சீமாவையர்.

புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி தயங்கினார். பயப்பட்டார். திடீரென்று காசி யாத்திரை போவதாகச் சொல்லிக் கொண்டு ஊரை விட்டுத் தலைமறைவாகி விட்டார்.

“கலியாணத்துலேதான் காசியாத்திரை வரும். ஆனா அதுக்கு முன்னாடி இவரே காசியாத்திரை புறப்பட்டுவிட்டாரோ?” என்று அதைப்பற்றிக் கேலியாகச் சர்மாவிடம் கூறிவிட்டுச் சீமாவையர் போன்றவர்களுக்குப் பயப்படவும் தயங்கவும் செய்யாத நகர்ப்புறப் புரோகிதர் ஒருவரைத் தந்தி கொடுத்து வரவழைத்தார் வேணு மாமா. புரோகிதரிடம் பலித்ததுபோல் உள்ளூர்ச் சமையற்காரரிடம் சீமாவையரின் ஜம்பம் சாயவில்லை. சமையல்காரச் சங்கரையர், “நான் பத்தாளை வச்சுண்டு எப்படா கலியாணங்கார்த்திகை நல்லது கெட்டது வரப்போறதுன்னு தேடி அலைஞ்சிண்டு காத்திண்டிருக்கேன். வர்ற வேலையை உமக்காக என்னாலே விட முடியாது. அதுவும் அபூர்வமாக நாலுநாள் கல்யாணம். முன்னே ஒருநாள்; பின்னே ஒருநாள்னு சமையல்காராளுக்கு ஆறு நாள் வேலை. பேசாமே உம்ம வேலையைப் பார்த்திண்டுபோம். இதிலே எல்லாம் வீணாத் தலையிடாதியும். ஊர்லே யார் யாரோட கல்யாணம் பண்ணிண்டா உமக்கென்ன வந்தது?” – என்று சீமாவையரிடம் கறாராக மறுத்துச் சொல்லிவிட்டார் சமையற்காரர். சீமாவையரால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி பயந்து போய்க் காசியாத்திரை புறப்பட்டதைச் சர்மாவிடம் கேள்விப்பட்ட இறைமுடிமணி, “இந்த மாதிரிப் புரோகிதங்களை நம்பாதீங்க. பதிவுத் திருமணமோ, சீர்திருத்தத் திருமணமோ பண்ணிக்குங்கன்னு எங்க இயக்கம் ரொம்ப நாளாச் சொல்லிட்டு வாரதே இதுக்காவத்தான்” – என்று சொல்லிச் சிரித்தார். சர்மாவும் பதிலுக்கு விடவில்லை. கேட்டார்: “இப்போ அதிலே மட்டும் என்ன வாழுதாம்? தலைவர், வாழ்த்துரை வழங்குவோர்னு ஒரு புரோகிதருக்குப் பதில் ஒன்பது புரோகிதன் வந்தாச்சே? எந்தக் கட்சி சர்க்காரோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவா கல்யாணம்னா மந்திரியே புரோகிதரா வந்து எல்லாம் பண்ணி வச்சுடறார்.”

“அட நல்ல ஆளுப்பா நீ! நீயும் உன் முரண்டிலேருந்து மாறப் போறதில்லை. நானும் என் முரண்டிலேருந்து மாறப் போறதில்லே. விட்டுத் தள்ளு” – என்றார் இறைமுடிமணி. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் அவர்களுக்கு வந்தாலும் அவை கண்ணியமான முறையில் இருந்தன. நட்பைப் பாதிக்கவில்லை. இவர் அவரைக் கேலி பண்ணுவது போல் பேசுவதும் அவர் இவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் சகஜமாயிருந்தாலும் இருவரும் தங்களுக்குள் ஒரு போதும் எல்லை கடந்து போனது கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் மாலை வழித்துணை விநாயகர் கோவிலிலிருந்து அவ்வூர் வழக்கப்படி மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரசித்தி பெற்ற வாத்தியக் கோஷ்டியின் இரட்டைத் தவில் நாதஸ்வரக் கச்சேரி என்பதால் ஊரே அங்கு திரண்டு விட்டது.

“மாப்பிள்ளை அழைப்புக்குப் புது சூட், ஷூ எல்லாம் ரெடி!” – என்று வசந்தி வந்து ரவியிடம் சொன்னபோது,

“வர வர பிராமணக் குடும்பங்களில் கல்யாணம்கிறதே ஒரு ‘ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்’ மாதிரி ஆயிண்டு வரது! இது எப்படி நம்ம கலியாணத்திலே நுழைஞ்சுதுன்னே புரியலே. அழகா லட்சணமா வேஷ்டி அங்கவஸ்திரம் போட்டுண்டு மாப்பிள்ளை அழைப்புக்கு வந்தா என்ன கொறஞ்சுடப் போறது? இதெல்லாம் வேண்டாம். எடுத்துண்டு போ. மாப்பிள்ளைக்கு சூட் கோட்டுன்னாக் கலியாணப் பொண்ணுக்கும் ‘ஸ்கர்ட்’ போட்டுக் கொண்டு வந்து நிறுத்தலாமே? இதென்ன பைத்தியக்காரத்தனம்? இண்டியன் மேரேஷ் ஷுட் பி ஆன் இண்டியன் மேரேஜ்” – என்று சொல்லி ரவி சூட் அணிய மறுத்துவிட்டான். அவன் இப்படிக் கூறியதைக் கேட்டு சர்மாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் படித்த மாப்பிள்ளை பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தோடு ஜானவாஸத்துக்கு வந்ததை ஊரே பெரிய ஆச்சரியத்தோடு பார்த்தது.

மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்கவும், புகழ்பெற்ற இரட்டையர்களின் நாதஸ்வர இன்னிசையைக் கேட்கவும் ஊரே வழித்துணை விநாயகர் கோவிலைச் சுற்றியும், வீதிகளிலும் கூடிவிட்டது. சங்கரமங்கலத்தையே திருவிழாக் கோலங்கொள்ளச் செய்திருந்தது அந்தத் திருமணம். கோர்ட், கேஸ் என்று வேறு நடந்து விளம்பரமாகி இருந்ததனால் அந்தத் திருமணத்தைப் பற்றிய செய்தி உள்ளூரிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.

கையில் ரிஸ்ட் வாட்ச், கழுத்தில் தங்கச் சங்கிலியோடு இளம் வயதினரான ஒரு நகர்ப்புறத்துப் புரோகிதர் தமது உதவியாளரோடு வந்து வைதிகச் சடங்குகளை நடத்தி வைத்தார். கமலியை அசல் கிராமாந்தரத்து அழகியை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அப்படி மணப்பெண்ணாக அலங்கரித்திருந்தாள் வசந்தி. கைகளிலும் பாதங்களிலும் முதல் நாள் மருதாணி அரைத்து இட்டுக் கொண்டதன் விளைவாகச் சிவப்புப் பற்றி அவளுடைய நிறத்துக்கு அந்தச் சிவப்பு மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது. அலங்காரம் முடிந்ததும் வசந்தி தன் கண்களே திருஷ்டி பட்டு விடுமோவென்று கமலிக்குத் தானே கண்ணேறு கழித்தாள்.

வேணு மாமாவின் ஏற்பாடு எல்லாமே பிரமாதமாயிருந்தன. ரவி-கமலி திருமணத்தை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர். உள்ளூரில் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தக் கலியாணத்தை ஏதோ ஒரு வேடிக்கை போலப் பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களிற் சிலர் இந்தக் கல்யாணத்தைக் கேலி பண்ணினார்கள். வேறு சிலர் ஒதுங்கி நின்று புறம் பேசினார்கள். வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை காரில் ஊர்வலம் புறப்பட்ட அதே நேரம் சீமாவையர் வீட்டுத் திண்ணணயில் வம்பர் சபை கூடியிருந்தது. ஆனால் சபையின் ஆட்கள் சுரத்தில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன ஓய் ஹரிஹரையர்! மாப்பிள்ளை அழைப்புக்கு நீர் போகலியா? ஜானவாஸ விருந்து பிரமாதமா ஏற்பாடு பண்ணியிருக்காளாம். மாட்டுப் பொண் பிரெஞ்சுக்காரியோ இல்லியோ, அதுனாலே ஆட்டுக்கால் சூப், மீன் குழம்பு, மட்டன் பிரியாணீன்னு…” என்று வேண்டுமென்றே சீமாவையர் வம்பைத் தொடங்கினார்.

சமையல் சங்கரையர் தான் கல்யாணத்தில் நளபாகப் பொறுப்பேற்றிருக்கிறார். முழுக்க முழுக்க சைவச் சமையல்தான், எல்லாம் வைதீக சம்பிரதாயப்படிதான் நடக்கிறது என்பதெல்லாம் சீமாவையருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தும் எப்படியாவது விசுவேசுவர சர்மாவின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற முரண்டு தான் இப்படி எல்லாம் அவரைத் தாறுமாறாகப் பேச வைத்திருந்தது. ஆனால் ஹரிஹர ஐயர் விடவில்லை.

“என்னை யார் ஓய் கூப்பிடக் காத்துண்டிருக்கா. நீர் தான் முந்தின ஸ்ரீமடம் ஏஜெண்ட். இப்போ உம்ம ஸ்க்ஸஸராத்தான் சர்மாவே ஏஜெண்டா இருக்கார். உம்மையே அழைக்கல்லேன்னா என்னை யார் அழைக்கப் போறா?” – என்று சீமாவையரைப் பதிலுக்குக் கேட்டார்.

“என்னைச் சர்மா அழைக்கல்லேன்னு உமக்கு யார் சொன்னா? என் பேருக்குப் பத்திரிகை அனுப்பிச்சிருக்கார். நான் தான் போகலை. கண்ட தறுதலைக் கல்யாணத்துக்கெல்லாம் போறது எனக்குப் பிடிக்கல்லே” – என்று அத்தனை வெறுப்புக்கிடையேயும் ஜம்பமாகப் பேசினார் சீமாவையர். உள்ளூறத் தாங்க முடியாத எரிச்சல் அவருக்கு. சர்மாவை அப்படியே கடித்துத் துப்பிவிட வேண்டும்போல அவர் மேல் அத்தனை கோபம் வந்தது சீமாவையருக்கு. கேஸ் வேறு தள்ளுபடி ஆகிவிட்டதால் அந்த எரிச்சலும் கோபமும் முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு ஆகி இருந்தன. எப்படியாவது சர்மாவை தலையெடுக்க விடாமல் பண்ணி அவமானப்படுத்தி விட வேண்டுமென்று சீமாவையரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.

“நாம் தான் இங்கே வேலையத்துப் போய் உட்கார்ந்திண்டு இருக்கோம். ஊரே அங்கே மாப்பிள்ளை அழைப்பிலேதான் கூடியிருக்கு. வாண வேடிக்கைக்கு மட்டும் சிவகாசிக்காராளுக்குப் பத்தாயிர ரூபாய்க்குக் காண்ட்ராக்ட்டாம்; நாதஸ்வரத்துக்கு ஐயாயிரமாம்! அந்த வேணு கோபாலையர் பணத்தைத் தண்ணியாச் செலவழிக்கிறாராம். சர்மாவோட புள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்தப் பிரெஞ்சுக்காரியே அவள் அப்பாகிட்டே சொல்லிக் கையோட இதுக்குன்னே நிறையப் பணம் வேற கொண்டு வந்திருக்காளாம். எல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கறது. நீரும் நானும் வரலேன்னு அங்கே யார் ஓய் கவலைப்படறா? பெரிய பெரிய கோட்டீஸ்வர வியாபாரியெல்லாம் வேணு கோபாலய்யருடைய சிநேகிதன்கிற முறையிலே வந்து உட்கார்ந்துண்டிருக்கான். மலைமேலேருந்து அத்தனை எஸ்டேட் ஓணரும் வந்தாச்சு. ரோட்டரி கிளப் மெம்பர்ஸ் பூரா ஊர்வலத்திலே காருக்கு முன்னாடி நடந்து வரா. சர்மாவுக்கு என்ன குறைங்காணும்?” என்று ஹரிஹர ஐயர் மேலும் விவரங்களைச் சொல்லிச் சீமாவையரின் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டார்.

“பார்த்திண்டே இரும்! பகவான் ஒருத்தன் இருக்கான். இந்த அக்ரமம் பொறுக்காமே அவன் ஏதாவது பண்ணத்தான் போறான். தெய்வக் குத்தம் சும்மா விடாது” – என்று கையைச் சொடுக்கி நெரித்தார் சீமாவையர். அவரால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது.

“நமக்குப் பிடிக்கறதோ பிடிக்கலியோ! நல்ல காரியம் நடக்கறபோது துக்கிரி மாதிரி ஏன் இப்படிக் கையைச் சொடக்கி அஸ்துப் பாடணும்? பேசாம இருமேன்” – என்று ஹரிஹர ஐயரே தமது செயலைக் கண்டு அருவருப்பு அடைந்தபோது சீமாவையருக்குச் சிறிது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. கேஸ் தோற்றுப் போய்த் தள்ளுபடியாகிய பின் தான் வலிந்து தன்னுடன் சர்மாவை எதிர்க்கக் கட்சி சேர்த்தவர்களில் பலரும் சோர்ந்து துவண்டு போயிருப்பது சீமாவையருக்கே மெல்ல மெல்லப் புரிந்தது. அதிகநாள் அவர்களை எல்லாம் சர்மாவின் எதிரிகளாக நிறுத்தி வைத்துத் தொடர்ந்து சர்மாமேல் விரோதத்தையும் வெறுப்பையும் ஊட்டிக் கொண்டிருப்பது என்பது நடவாத காரியமாக இருக்குமோ என்று அவருக்கே தோன்றியது. இறைமுடிமணிமேல் பொய் வழக்குப் போடப் போக அவர் வேறு, சீமாவையரைப் போன்ற வேஷதாரிகளைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை என்று ஆக்ரோஷமாகக் கிளம்பியிருந்தார். சீமாவையருடைய கேடுகாலம் ஆரம்பமாகியிருந்தது. சர்மா போன்ற ஆஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இறைமுடிமணி போன்ற நாஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இருவருடைய விரோதத்தையும் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நேர்மாறாகச் சர்மா இருசாராருடைய அன்பையும் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தார். சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. கோயில் கேஸ் தள்ளுபடியான பின் சீமாவையரின் மதிப்பு ஊரில் குறைந்திருந்தது. என்றாலும் அவரது அடாவடித் தனங்கள் என்னவோ குறையவில்லை. கடைசி முயற்சியாகச் சமையற்காரரைக் கலைத்து விட்டோ புரோகிதரைக் கலைத்து விட்டோ கல்யாணத்தைக் கெடுப்பதில் முனைந்து பார்த்துத் தோற்றிருந்தார் சீமாவையர். சீமாவையருக்கு இருந்த சமூக அந்தஸ்தைவிட அதிகமான சமூக அந்தஸ்தும், படிப்பும், பணச் செல்வாக்கும் வேணு மாமாவுக்கு இருந்ததனால் சீமாவையரின் எதிர்ப்பை அவர் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணவே இல்லை.

அன்று மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்து விருந்தினர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொரு மணியாயிற்று. இரண்டு பந்தியோ மூன்று பந்தியோ – சிக்கனமே பாராமல் வந்தவர்களுக்கெல்லாம் – ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஒரு சேர உட்காரச் செய்து விருந்தளித்தார் வேணு மாமா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 32 (நிறைவுப்பகுதி)தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 32 (நிறைவுப்பகுதி)

அத்தியாயம் 32 காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலியாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டியும் பெரியம்மாவும். ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25

அத்தியாயம் 25 தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

  அத்தியாயம் 8   வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில்