வாழும்மட்டும் நன்மைக்காக……

“டேய் … பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?”
“13….அப்பா”
“முட்டா பயலுக்கு பிறந்தவனே… நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?””
“11…ப்பா”
“மறந்துடாத..!!
“சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ பஸுல ஏற போற..”
“தம்பி, உனக்கு என்ன வயசு…?”
13 சார்..
“அட பாவி.. 11ன்னு சொல்லுன்னு எத்தனை தரவை சொல்றது…மர மண்டை.. மர மண்டை…!!!”
“திரும்பவும் சொல்லு .. உனக்கு எத்தனை வயசு…!!?”
“11.. ..”
சரி..! ஜாக்கிரதையா இரு… நீ மட்டும் சரியா சொன்ன .. ராணிபேட்டையில் பஸ் நிக்கும் போது உனக்கு பால்கோவா வாங்கி தரேன்..சரியா..!!?”
“ஐ பால்கோவா..!!”
வேலூரில் இருந்து சென்னை போகும் பஸ்சில் 13 வயதாகிய தன் மகனுக்கு 11 என்று பொய் சொல்ல சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார் ஒரு தகப்பனார் .
அந்த சிறுவனுக்கு அப்பா ஏன் தன்னை பொய் சொல் சொல்கின்றார் என்று புரியவில்லை. 12 வயது வரை அரை டிக்கட் அதற்கும் மேல் முழு டிக்கட் என்று அவனுக்கு எடுத்து சொல்ல அந்த தகப்பனுக்கும் நேரம் இல்லை.
வண்டியும் வந்தது, வண்டியில் ஏற போன சிறுவன் மனதில் .. பதினொன்னு.. பதினொன்னு.. என்று சொல்லி கொண்டே படி அருகில் சென்றான். கண்டக்டர் அவன் அருகில் வந்து …
“தம்பி, இந்த படிக்கட்டு கிட்ட ஒரு அளவு கோல் இருக்கு, அங்கே கொஞ்சம் நில்.”
“சரி சார்…!!”
“நீ, அந்த 12 வயது பிள்ளைகளுக்குக்கான கோட்டை விட உயரமாய் இருக்க .. உனக்கு முழு டிக்கட்…”
அப்போது தான் அவனுக்கு புரிந்தது .. டிக்கட் கட்டிணத்தை பாதியாக்க தன் தகப்பன் தன்னை பொய் சொல்ல சொல்கிறார் என்று..
தகப்பனோ, கண்டக்டரிடம் .. சார்..
“நான் ஆறு அடி.. என் மனைவியும் நல்ல உயரம்..அதனால் தான் பையன் நல்ல உயரம்.. அவனுக்கு…”
“ஒரு நிமிஷம் சார்.. நான் பையனிடம் பேசி கொள்கிறேன்.. நீங்க அமைதி..”
“தம்பி .. உன் பெயர் என்ன?”
“சந்திரன்..”
“உன் வயசு என்ன !!!?”
“11..”
“எங்க ..? விரல் விட்டு கூட்டாம சொல்லு… 8 + 7 எவ்வளவு!?”
“15 சார்..!”
“பரவாயில தம்பி! நீ உண்மையாவே கெட்டிகாரன் ..ஒரு நாலாவது வகுப்பு பையன் இவ்வளவு சீக்கிரமா இந்த பதில சொல்லுவேன்னு நான் எதிர் பார்க்கவில்லை!”
“சார்.. நான் நாலாம்ப்பு இல்ல.. ஏழாம்ப்பூ..”
“அப்படியா தம்பி…ரொம்ப சந்தோசம்.. நீ போய் உள்ள உக்காரு…!”
அந்த சிறுவன் அங்கு இருந்து நகர்ந்தவுடன்…
“ஏன் சார்? ஒரு அரை டிக்கட்டுக்காக சின்ன பிள்ளைக்கு பொய் சொல்ல சொல்லி கொடுக்குரிங்களே..”
“மன்னிக்கணும்.. பிள்ளை குட்டிக்காரன்.. தவறாகிவிட்டது..”
“இந்த முறை கொடுக்குறேன், அடுத்த முறை இந்த மாதிரி பண்ணாதீங்க..”
“நன்றி…”
வண்டி ஓட ஆரம்பித்தது.. அந்த சிறுவனுக்கோ..
அப்பா சொல்லி கொடுத்தை போல் “பதினொன்று” என்று சரியாக சொன்னேனே .. ராணிபேட்டையில் பால் கோவா கிடைக்கும் என்ற ஒரே எண்ணம். தான் ஏழாவது படிக்கின்றோம் என்று சொன்னதில் தான் சொன்ன வயது “உண்மை” தெரியவந்தது கூட அவனுக்கு புரியவில்லை.
“அப்பா… ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும் ?”
“அதுக்கு என்ன இப்ப?”
“இல்ல.. சும்மா கேட்டேன்…”
“அமைதியா வா..!”
சிறுவன் பொறுமை இழந்து… கண்டக்டரிடம்..
“சார் … ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும்?”
“அஞ்சி நிமிஷம்..?”
அவன் நினைவு பால்கோவாவை நோக்கி சென்றது…
“அப்பா… நான் பதினொன்னுன்னு சரியா சொன்னேனே.. பால்கோவா வாங்கி தருவிங்க தானே..”
“டேய்.. சும்மா இருக்க மாட்ட…?”
என்று சொல்லும் போதே…ராணிபேட்டை வந்தது, சிறுவனின் கண்களோ பால்கோவாவை தேட.. சில பயணிகள் இறங்க முயல்கையில். ..டிக்கட் பரிசோதனை செய்யும் அரசு அதிகாரிகள் சிலர் படிக்கட்டை மறைத்து அனைவரின் டிக்கட்டையும் பரிசோதிக்க ஆரம்பித்தனர்..
ராணிப்பேட்டையில் இறங்குபவரின் டிக்கட்களை பரிசோதித்து விட்டு .. அவர்கள் வண்டியின் உள்ளே ஏறி.. அமர்ந்து இருக்கும் அனைவரின் டிக்கட்களை பரிசோதிக்க …
தகப்பனின் முகம் மாறியது…
ஐயகோ.. அரை டிக்கட் தானே வாங்கினோம். இப்போது மாட்டி கொள்வோமே.. அனைவரின் எதிரேலேயும் அசிங்கம்.. ஒரு சிறிய லாபத்திற்காக தன் மகனை பொய் சொல்ல சொல்லி..
“சார் டிக்கட்..!”
“இந்தாங்க..”
பரிசோதித்துவிட்டு..
“நீங்க நல்ல மனுஷன் சார்.. பையனுக்கு முழு டிக்கட் வாங்கி இருக்கீங்க..
இந்த வயது பசங்களின் பெற்றோர்கள் எப்போதும் ஏதாவது ஒரு பொய் சொல்லி .. பசங்களையும் பொய் சொல்ல சொல்லி கொடுத்து அரை டிக்கட் வாங்க முயற்சிப்பார்கள்…”
“சார்.. நான்..!!!”
என்று அவர் வாய் திறக்க முயற்சிக்கையில்…
கண்டக்டர் .. பரிசோதகரிடம்.. சார்.. கொஞ்சம் சீக்கிரம் ப்ளீஸ்.. ரயில் கேட் .. விழ போகுது…
என்று சொல்ல .. பரிசோதகர் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.
வண்டி மீண்டும் ஓட .. தகப்பனோ அந்த கண்டக்டரை பார்க்க..
“உங்கள் குழப்பம் எனக்கு புரியுது. உங்களிடம் அரை டிக்கட்டிற்கு தான் பணம் வாங்கினேன், ஆனால் முழு டிக்கட்டை தான் கொடுத்தேன்”
“அதுக்கு பணம்..!!?”
இது பங்களூரில் இருந்து ஆரம்பித்த பஸ்…கிருஷ்ணகிரியில் இறங்கிய ஒருத்தரிடம் சில்லறை இல்லன்னு சொன்னேன். பராவாயில்லை … சில்லறை கிடைத்தவுடன் ஏதாவது ஒரு சின்ன புண்ணியம் பண்ணுங்கன்னு சொன்னார்.. அதை வைச்சி தான்..
“ரொம்ப நன்றி.. சார்
என்று தன் மகனை பார்த்தவர்..
“டேய்.. ஏதுடா உனக்கு பால்கோவா?”
கண்டக்ட்டர் மாமா வாங்கி கொடுத்தார்..
“சார்…பால்கோவா…!!?”
“ஓ .. அதுவா? நான் இந்த இடத்தில தான் வளர்ந்தவன்.. வளரும் வயதில் …இந்த பால்கோவாவிர்க்காக நான் ஏங்கிய ஏக்கம் எனக்கு தான் தெரியும். பையன் உங்களிடம் கேட்பது என் காதுக்கு எட்டுச்சி.. அதுதான்..”
“நன்றி சார்….!!!”
என்று அவர் சொல்ல…
அந்த பஸ்சின் ஒழி பெருக்கியில் SPB ” வாழும்மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா ” என்று “கண்ணதாசன்-இளையராஜா” அவர்களின் உதவியோடு பாடி கொண்டு இருந்தார்.