Tamil Madhura சிறுகதைகள் விசுவின் ‘நூலை போல் சேலை !’

விசுவின் ‘நூலை போல் சேலை !’

குட்டி போட்ட பூனை போல் படபடப்பாக  அந்த பிரசவ வார்டின் எதிரில் அமர்ந்து இருந்தான் அவன் . மனைவிக்கு தலை பிரசவம். அவள்  வார்டின் உள்ளே போய் ஏறகுறைய இரண்டு மணி நேரமாகியது.

“இன்னும் ஒரு மணிநேரத்தில் இயற்கையாக பிறக்காவிடில் சிசேரியன் செய்ய வேண்டி வரும்” மருத்துவமனையின் நர்ஸ் சொன்னார்கள்”!

“குழந்தைக்கு  எதுவும் ஆகாதுதானே”

அவன் மனதில் குழந்தை, குழந்தை, குழந்தை…மட்டுமே.

பேசி கொண்டே இருக்கையில் அறையில் இருந்து வெளியே வந்த  இன்னொரு நர்ஸ்…

“வாழ்த்துக்கள், உங்களுக்கு பெண் குழந்தை”

என்று சொல்ல அறையின் உள்ளே ஓடினான்!

கட்டிலில் கையில் க்ளுகோஸ் ஏற “அப்பா, அப்பா” என்று முனகலோடு அரை நினைவோடு இருந்தாள் மனைவி . அவள் கையை பிடித்து கொண்டு இருந்தவனை முதுகில் யாரோ தட்ட திரும்புகையில், பிங்க் நிறம் போட்ட புத்தம் புதிய உடையுடன் பெண் குழந்தை.  ஆச்சர்யத்தோடு உச்சி முகர்ந்தான். மனதில்..

குழந்தைக்கும்  அம்மணிக்கும்  குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியவில்லையே, இவ என்ன அவ ஆத்தாவே குட்டி போட்டு இருக்க மாதிரியே இருக்காளே என்று நினைத்தவன்.. அட ச்சே, அவ ஆத்தா தான குட்டி போட்டா என்று சிரித்து அம்மணியை  பார்த்து சொன்னான்.

“சொன்ன மாதிரியே எனக்கு ஒரு சிங்க குட்டிய பெத்து கொடுத்த, அதுக்கு நன்றி”

பதிவுக்கு அம்மணியோ , ஒரு அரை புன்னகையை உதிர்த்து விட்டு , “அப்பா அப்பா” என்று தொடர்ந்து முனகினாள்!

குழந்தை வளர்ந்தாள்.

அவளின் நடை உடை பாவனை என்று ஒவ்வொரு செய்கையும் அம்மணியை  போலவே இருந்தது.

ரசித்தான்.

இரண்டு வயது  இருக்கும் போது ஒரு காலை நீட்டி கொண்டு மற்றொரு காலை வளைத்து கொண்டு பிள்ளை உறங்க..

“அட பாவி, தூங்கும் போது கூட  அவங்க அம்மா மாதிரியே”

ஐந்து வயதில், லன்ச் சாப்பிடுகையில் வேகவைத்த  முட்டை ஒன்று இருக்க.. அதின் வெள்ளை பகுதியை மட்டும் உண்டு விட்டு மஞ்சள் உருண்டையை இன்னொரு தட்டில் வைத்து விட்டு கை கழுவ ….

“என்ன மகள், மஞ்சள் பிடிக்காதா”?

“ரொம்ப பிடிக்கும்”

“அப்புறம் எதுக்கு சாப்பிடல..”!?

“அதை தனியா ரசிச்சி சாப்பிடுவேன்”

என்ற பதிலை கேட்டவன், தன் கல்யாண விருந்திலேயே அம்மணி அப்படி சாப்பிட்டதை நினைவு கூர்ந்தான்!

அவளுக்கு பனிரெண்டு இருக்கையில் ஒரு முறை, “உங்க பேச்சு கா” என்று  ஒரு நோட் இவன் படுக்கையில் இருக்க, அம்மணியிடம்

“இப்ப என்ன தப்பு செஞ்சேன்.. என் பேச்சு கான்னு எழுதி இருக்க என்று கேட்க..!?”

“ஆமா.. நம்ம ரெண்டு பேருக்கும் இப்ப தான் பத்து வயசு பாருங்க.. பேச்சு காய்  பழம்ன்னு விளையாட.. போய் வேலைய பாருங்க ”

என்று சொல்லி , “அப்பா அப்பா” என்று முனகி கொண்டே உறங்க முயல…

இவனோ. அட பாவி கை எழுத்துக்கூட அப்படியே அவளோட  ஆத்தா போல வந்து இருக்கே என்று வியந்தான்.

பதினான்கு வயது இருக்கும். அலுவலகத்தில் மற்றொரு நாள்.. பள்ளியில் இருந்து ஒரு அழைப்பு.

“உடனே பள்ளிக்கு வாருங்கள்” என்று பள்ளியின் நர்ஸ் சொல்ல…

“என்ன ஆச்சி ” என்று அலற!

“பிள்ளைக்கு உடம்பு சரியில்லை வந்து உங்க பிள்ளையை அழைத்து கொண்டு செல்லுங்கள்”

அடித்து பிடித்து ஓடினான்.. வழியில்  அம்மணியிடம் இருந்து அழைப்பு..

“என்னங்க.. ஸ்கூல் நர்ஸ் போன் பண்ணி இருக்காங்க.. அவளுக்கு உடம்பு சரியில்லையாம்”  மெஸேஜ் விட்டு இருந்தாங்க. நேரா அவளை வீட்டுக்கு கூட்டினு போங்க.. நான் வீட்டுக்கு வரேன்!”

“என்ன ஆச்சி .. அவளுக்கு ஒன்னும் இல்லையே..”

“உண்மையா தெரியல!? அவ பெரியவளாய்ட்டா.. நீங்க ஒன்னும் பதட்ட படாதீங்க.. அவளுக்கு எல்லாம் சொல்லி வைச்சி இருக்கேன். அவ பாத்துக்குவா.. நீங்க உதவியா இல்லாட்டியும் உபத்திரவம் செஞ்சிடாதிங்க ”

வாவ்… நேத்து தான் பிறந்த மாதிரி இருக்கு! இன்னைக்கு பெரிய மனுஷியாகிட்டா. பள்ளியை அடைந்தான். அங்கே இருந்த மாணவர்கள்  அனைவரும் இன்று என்னமோ வில்லன்கள் போல காட்சி அளித்தனர்!

“மகள், என்ன ஆச்சி”

“டாட்,  இனிமேல் தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும் ” என்று நக்கலாக பதில் சொன்னாள்”.

“நடக்க முடியுமா? வீல்  சேர் கேக்கட்டா..”

“அம்மா சொன்ன மாதிரியே நீங்க டிராமா போடுறீங்க.. டேக் இட் ஈஸி. என்னை வீட்டுல விட்டுட்டு நீங்க ஆபிஸ்  போகலாம். மம்மா டாட் மீ எவெரிதிங்”

இவளுக்கு தான் என்ன ஒரு கான்பிடன்ஸ், அவளோட ஆத்தா போலவே, வியந்தான்!

இல்லத்தில் அவளை தனியாக விட மனமில்லாமல் அம்மா வரும்வரை காத்து இருந்தான்.

“உங்களை தான் விட்டுட்டு போக சொன்னேனே, இங்கே என்ன பண்றீங்க” ?

“நானும் சொன்னேன் மம்மா.. இவரு என்னமோ என்னை குழந்தை போல் பாக்குறாரு”

இருவரும் போட்டு தாக்க.. இந்த விஷயத்தில் கூட என்ன ஒரு ஒற்றுமை.. மீண்டும் வியந்தான்!

இரவு வந்தது.. குடும்ப பிரார்த்தனையை முடித்து விட்டு பிள்ளை அவள் அறைக்கு உறங்க  செல்ல.. மனைவியும் உறங்க செல்ல..

பிள்ளையின் அறையில் இருந்து முனகல் சப்தம்.

“அப்பா.. அப்பா…”

மெதுவாக அவள் அறையை திறந்தவன் அதிர்ந்தான்… அடிவயிற்றை பிடித்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.

“என்ன ஆச்சி மகள்?”

“ரொம்ப  வலிக்குது அப்பா”

” ஐயோ. அம்மாவை எழுப்பட்டா”

“வேணாம், அவங்களும் ரொம்ப டையர்ட்.  இப்ப தான் தூங்க போய் இருப்பாங்க.”

“இப்ப என்ன செய்யட்டும்”? பரிதவித்தான்.

“அம்மா தான் சொன்னாங்க.. வயிற்றில் “ஹாட் வாட்டர் பேக்” வைக்கணும், அப்புறம் கொஞ்சம் சூடு தண்ணியில் வெந்தயம் போட்டு முழுங்கனும் கூடவே ஒரு பெயின் கில்லர் மாத்திரை”

ஓடினான்! ஐந்தே நிமிடத்தில் மூன்றோடும்  வந்து அவளிடம் தந்து அருகில் அமர்ந்தான். மகளோ, மாத்திரையையும் வெந்தயத்தையும் முழுகிவிட்டு வயிற்றில் பை வைத்து “அப்பா அப்பா” என்று முனகிய படியே உறங்க சென்றாள்.

அவள் எழுந்து விட கூடாது என்று பூனை அடி வைத்து தன் அறைக்கு வந்து உறங்க முயல்கையில் !  “அப்பா அப்பா” என்ற சத்தம் வந்தது!  முழித்து விட்டாளோ, மீண்டும் வலியோ , தாங்க முடியாமல் இந்த அறைக்கு வந்து விட்டாளோ என்று எழுந்தவன் மகளை அங்கு காணாதலால், “ஓ.. அவ நினைப்பிலே இருக்கேன் போல இருக்கு”  என்று கண்ணை மூடுகையில் மீண்டும் “அப்பா அப்பா” என்ற சத்தம், மிக அருகிலேயே கேட்டது.

விழித்து பார்த்தான், முனகியது அம்மணி…

குற்றமாய் உணர்ந்தான்.. எல்லா விஷயத்திலும் இவர்கள் இருவருக்கும் ஒற்றுமையை அறிந்த நான் தாங்க முடியாத வலியென்றால் இருவருமே “அப்பா அப்பா” என்று முனகுவார்களே என்று அறியாமல் இருந்து இருக்கிறேனே.. எவ்வளவு பெரிய சுயநலவாதி மற்றும் முட்டாள் என்று தன்னை தானே திட்டி கொண்டு, படுக்கையை விட்டு பூனை அடி வைத்து நடக்க ஆரம்பித்தான்.

இன்னொரு “ஹாட் வாட்டர் பேக்”, வெந்தயம், பெயின் கில்லர் மாத்திரையை எடுத்து வர!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான்   அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு

குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்

மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு

உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்

கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும்