சாவியின் ஆப்பிள் பசி – 16

சாவதாரம்” என்று காண்ட்ராக்டர் கண்ணப்பதாஸ் கூறினார்.

“ஏகப்பட்ட பணம் செலவாகுமே!” என்றார் சிங்காரப் பொட்டு.

“செலவழிச்சு நடத்தினோம்னா கூட்டம் மொய்ச்சுத் தள்ளும்” என்றார் வக்கீல்.

“டாக்டர் என்ன நினைக்கிறாரோ?” என்று சிங்காரப் பொட்டு மெதுவாக நிரவல் செய்தார்.

டாக்டர் கண்ணைக் கொஞ்சம் மூடித் திறந்தார். அதே நேரம் சகுந்தலா என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகக் குறிப்பிலிருந்து அறியப் பார்த்தான் சாமண்ணா.

அவள் பார்வை அடிக்கடி சாமண்ணா பக்கம் திரும்பி அங்கேயே லயித்து நின்றது. அது காதலா, கனிவா, அக்கறையா என்பதைச் சாமண்ணாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதல் முதல் சாமண்ணா அவளைப் பார்த்ததிலிருந்தே உள் கதவு திறந்தது போல இருந்தது அவனுக்கு. மென்மையாக ஒரு வாசனைப் புகை போன்ற உணர்வு அவன் உடலெங்கும் நீந்திச் சென்றது. மனசில் ஒரு சின்ன அழுகை கூட வந்தது.

‘இந்த உணர்ச்சிக்கெல்லாம் என்ன காரணம்? அதை நினைக்கலாமா?’ அந்த ஒரு நினைப்பே பரவசத்தைத் தந்தது.

‘அவள் தன்னை ஒரு நடிகன் என்ற முறையில் பார்க்கிறாளா? அல்லது தானே கிழித்துக் கொண்ட எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பழகுகிறாளா? அவளை அடையக்கூடிய அந்தஸ்து தனக்கு இருக்கிறதா? ஒருவேளை எட்டாத பழத்துக்கு ஏக்கப் பெருமூச்சு விடுகிறோமா?

டாக்டர் பேச ஆரம்பித்தார். “தசாவதாரம்னு சொன்னா நிறைய டர்னிங் சீன் போடுவீங்க! மாயா ஜாலங்கள், தந்திரக் காட்சியெல்லாம் காட்டுவீங்க! பத்து அவதாரங்களும் பத்து தினுசான காட்சிகளாச்சே! துண்டு துண்டா வருமே! நடிகர்களுக்குத் தங்கள் நடிப்புத் திறமையைக் காட்டச் சந்தர்ப்பமே இருக்காதே!”

“நானும் அதைத்தான் சொல்றேன்” என்றார் வக்கீல் வரதாச்சாரி.

“அப்படின்னா மச்சகந்தி போடுவோமா? ரொம்ப கவர்ச்சியா இருக்கும்! சாரதாம்பாளுக்கு மீன்காரி வேடம் போட்டால் பிரமாதப்படுத்தி விடுவாள்!” என்றார் பாவலர். அவர் தான் நாடகங்களுக்குப் பாட்டு இட்டுக் கட்டுபவர்.

“நன்னாப் பேசி துடுக்காகவும் நடிப்பா!” என்றார் வக்கீல்.

“மச்சகந்தின்னா ஆண் நடிகருக்குச் சந்தர்ப்பம் இராது. தவிர, காதல், வீரம், சோகம் எல்லா ரசங்களும் ஒரு கதையில் வந்தாத்தான் நாடகம் சோபிக்கும்!”

“ஏன்? மச்சகந்தியில் நிறைய காரம் காட்டலாமே?”

“சிருங்காரத்துக்கு வழி ஏது? ஒருதலைக் காதல்தானே! சந்தனு மகாராஜா மச்சகந்தி மேலே பிரியப் படறார். அவளைப் போய்ப் பெண் கேட்கிறார்… தீர்ந்தது கதை. இதில சிருங்காரத்துக்கு இடம் எங்கே?”

“மாயா பஜார்…?” என்றார் இன்னொருவர்.

“ப்ஸு வத்ஸலா கல்யாணமா? ரசப்படாது” என்று முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டார் டாக்டர். “சீதா கல்யாணம்?” என்று சிங்காரப் பொட்டு சொல்ல, டாக்டர் முகத்திலிருந்த இறுக்கம் அப்போதும் தளரவில்லை.

“அப்பா, இதுவரை நான் கிட்டத்தட்ட பன்னிரண்டு நாடகம் படிச்சுட்டேன்” என்று சகுந்தலா இடைமறித்த போது எல்லார் முகமும் சகுந்தலா பக்கம் திரும்பியது.

“அதில் நல்லதா ஒண்ணு சொல்லேன் பார்க்கலாம்” என்றார் டாக்டர்.

“நீங்க சொல்ற எல்லா அம்சமும் பொருந்தியிருக்கிற மாதிரி உள்ள ஒரே நாடகம் சகுந்தலா தான்!” என்றாள்.

“துஷ்யந்தன் – சகுந்தலாவா?” என்று யாரோ கேட்க சாமண்ணா சகுந்தலாவைப் பார்க்க, சகுந்தலா சாமண்ணாவைப் பார்த்தாள்.

சிறிது நேரம் நிசப்தம்.

“உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்று பாவலர் சகுந்தலாவைக் கேட்டார்.

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா சாமண்ணாவுக்குப் பிடிச்சிருக்கணுமே. அதுதானே முக்கியம்?” என்றாள் சகுந்தலா.

அவள் வார்த்தையில் உள் அர்த்தம் இருப்பது போல் தோன்றியது சாமண்ணாவுக்கு.

“எனக்கு ரொம்ப நாளா சகுந்தலா மீது ஒரு கண் தான். அப்படி ஒரு நாடகத்துலே நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமான்னு காத்திண்டிருக்கேன்” என்று அவனும் பொடி வைத்துப் பேசினான். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.

“அதிலே ஒரு சின்னக் குறை” என்று பாவலர் இழுக்க,

“அதென்ன?” என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்தனர் மற்றவர்கள்.

“ரெண்டு பேர் பிரதானமா நடிக்கப் பாத்திரம் இல்லாம இருக்கு.”

“யாரு அந்த ரெண்டு பேர்?”

“சிங்காரப் பொட்டுவும், சாமண்ணாவும்தான்!”

“அதுக்குத்தான் நான் சொல்ல வந்தேன்” என்று சிங்காரப் பொட்டு எழுந்து நின்றான்.

“சொல்லுங்க” என்றார் டாக்டர்.

“பெரியவங்க என்னை மன்னிக்கணும். ‘கர்ணா – அர்ச்சுனா’ நாடகம் போட்டோம். ஓகோன்னு ஓடியது. பிரமாதமா வசூல் ஆச்சு. இந்த நாடகம் ஓடினத்துக்குக் காரணம் எல்லாரோட ஒத்துழைப்புன்னு சொன்னா மட்டும் போதாது. சாமண்ணாவின் பங்குதான் பெரிய பங்கு. அவரது நடிப்புத்தான் தூக்கி நின்னுது. அவர் பாட்டுத்தான் இன்னிக்குப் பொது ஜனமே பாடறா. அவர் வசனத்தைத்தான் சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் கூடப் பேசுது! அதனாலே இந்த சகுந்தலை நாடகத்தையே நாம் எடுத்து நடத்துவோம். எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கறது முக்கியமில்லை. துஷ்யந்தன் பாத்திரத்துக்குச் சாமண்ணாதான் பொருத்தமானவன். இதில் சாமண்ணாவை ஹீரோவாக்குவோம். ஒரே ஒரு ஹீரோ போதும். அது சாமண்ணாவாகவே இருக்கட்டும். நானே இப்படிச் சொல்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.”

சிங்காரப் பொட்டு உட்காரும் போது எல்லோரும் கைதட்டினார்கள்.

“சிங்காரப் பொட்டே ஹீரோவா இருக்கட்டும்” என்று சாமண்ணா வற்புறுத்திய போதிலும் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சகுந்தலா தன் அப்பாவின் காதோடு ஏதோ ரகசியம் பேசினாள். உடனே டாக்டர் எழுந்து நின்று, “இந்த நாடகம் ஓடினா, சாமண்ணாவாலேதான் ஓடும்” என்று தீர்க்கமாய் அடித்துச் சொன்ன போது எல்லோரும் கைதட்டி ஆமோதித்தார்கள்.

ஒத்திகை இரவும் பகலுமாக நடந்தது. பாவலர் தலைமையில் சங்கிதப் பயிற்சிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன. சிங்காரப் பொட்டு இந்த முறை டைரக்டர் வேலையைத் தானே எடுத்துக் கொண்டார்.

தமிழ் வருடப் பிறப்பன்றே அரங்கேற்றம் என்று முடிவெடுத்ததும் எல்லோர் உள்ளத்திலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சாமண்ணா, உள்ளத்தில் கரை புரண்ட உற்சாகத்தைத் தன் நடிப்புத் திறமையால் அடக்கிக் கொண்டான். துஷ்யந்தன் கதையைக் கேட்டதும் தன் கையிலிருந்த மோதிரத்தை ஒரு முறை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டான்.

ஓவியர் கேசவன் பிள்ளை தூரிகை எடுத்து, காட்டு சீன், ஆசிரம சீன், துஷ்யந்தன் தர்பார் எல்லாவற்றையும் கண்கவர் வண்ணமாகப் ‘படுதா’வில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

நாடக ஒத்திகைக்குச் சகுந்தலா நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தாள்.

சாமண்ணாவின் அருகில் அமர்ந்து வசனங்களை ஞாபகப்படுத்தும் சாக்கில் அவனைத் தொட்டும் பேசும் போதும் சாமண்ணா அந்த வசனங்களை எடுப்பாகப் பேசும்போது சபாஷ் போடும் போதும் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கினாள்.

“மிஸ்டர் ஸாமு…” என்று ‘ச’வுக்குப் பதில் அவள் ‘ஸ’ போடும் போது சாமண்ணாவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. தமிழ் அவன் இனிய குரலில் கொஞ்சி வருவது போல் தோன்றியது.

“ஸாமு! எனக்கு இந்த வசனம் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று ஒருநாள் அவள் சொல்ல, “எது?” என்று கேட்டான் சாமண்ணா.

நோட் புக்கைத் திருப்பிக் காண்பித்தாள் அவள்.

“ரவிகுல திலகரே! இந்த அடியாளின் மனக்கிடக்கையை இன்னும் நீர் அறியீரோ? அன்றொரு நாள் என் காலில் தைத்த முள்ளை எடுத்து என் பாதத்தைத் தடவி விட்டீரே! அது தங்கள் நினைவில் உள்ளதா? இன்று என் மனமெல்லாம் முள் தைத்தது போல் நான் வேதனைப் படுகின்றேன். காதல் என்கிற அந்த முள் நெருஞ்சி முள்ளைக் காட்டிலும் கொடியது ஆயிற்றே! இந்த முள் தைக்கப்பட்டவர்களுக்கு அன்னம் பிடிக்காது. பானம் பிடிக்காது. துயில் பிடிக்காது. விரக தாபத்தில் உடம்பு அனலாய்க் கொதிக்கும். சுந்தரா, சுகுமாரா! என் தாபம் அறிந்து தாங்கள் உடனே வர மாட்டீரா?”

சகுந்தலா இந்த வசனத்தை நின்று நிதானித்து வாசிக்கும் போது அந்த வசீகரமான குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது.

“ஏது! நீங்களே சகுந்தலாவா ஆயிட்டீங்க போல இருக்கே!” என்றான் சாமண்ணா.

“இது வெறும் நடிப்புன்னு நீங்க நினனக்கிறீங்களா, ஸாமு…?”

கேள்வி அவனைத் துளைத்து நின்றது. அவள் பார்வை ஒரு தாபமாக அவன் கண்களில் வலித்தது. தனக்குள் ஒரு புயல் வீசுவதை உணர்ந்தான் அவன்.

‘இல்லை பயமாயிருக்கு! சகுந்தலா நாகரிகமானவள்! அவள் விகல்பம் இல்லாமல் பேசுவதை நான் தப்பா நினைச்சுக்கப் படாது! அவள் அந்தஸ்து எங்கே? கேவலம் ஒரு நடிகனான என் அந்தஸ்து எங்கே? நான் இதற்கு ஆசைப்படக் கூடாது. அவள் ஓர் ஆப்பிள். இந்த அன்னக்காவடிக்கு ஆப்பிள் பசி ஏற்படக் கூடாதா?’

‘ஆசைப்படு சாமண்ணா, ஆசைப்படு! பெரிசை நினைச்சுத் தான் ஆசைப்படணும். ஆமாம்! விடாதே. முயற்சி பண்ணு!’

சாமண்ணாவின் கண்கள் நிறைய வார்த்தைகளோடு தவித்து நின்றன. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இழுத்து நிறுத்தியது. ‘சகுந்தலா படித்தவள். சமூகத்தின் மேல் தட்டில் வாழ்கிறவள். உன்னையாவது… நினைக்கிறதாவது…’ என்றது உள்குரல்.

“உணர்ச்சி வசமா அதை உங்களுக்குப் படிச்சுக் காட்டத் தெரியுது. நீங்களே எங்களுக்குப் பயிற்சி கொடுத்தால் கூட நன்றாயிருக்கும்” என்றான் சாமண்ணா.

அவள் கலகலவென்று சிரித்துக் கொண்டே, “என்னையே சகுந்தலாவா நடிக்கச் சொன்னாலும் சொல்லுவீங்க போலிருக்கே!” என்றாள். சாமண்ணாவின் மனம், ‘டேய் விட்டுட்டியேடா’ என்று இடித்துக் காட்டியது.

டிரஸ் ஒத்திகையன்று ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பள்ளிக்கூட மேடையில் நடித்துப் பார்த்தார்கள்.

பன்னிரண்டு மணி வரை ஒத்திகை நடந்தது. ஒரு சின்னப் பிழை வரவில்லை. ஒருத்தர் கூட வசனம் பிசகவில்லை. சாமண்ணா அசல் துஷ்யந்தனாகவே ஆகிவிட்டான்.

“இது பிரமாதமான நாடகமா அமையப் போகிறது” என்று சொல்லிப் பாவலர் பூசணிக்காய் மீது கற்பூரம் வைத்துக் கொளுத்தி திருஷ்டி சுற்றிப் போட்டார்.

சாமண்ணாவுக்கு ஆகயத்தில் பறப்பது போல இருந்தது. ஒரு ஹீரோ ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள் நெருங்கி விட்டதை நினைத்துப் பார்க்கும் போது உற்சாகம் சிறகடித்துப் பறந்தது.

தாயாரை நினைத்து மானசீகமாக வணங்கினான்.

அப்போது மூலையில் சற்று ஓரமாக உட்கார்ந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு வடநாட்டு சேட்டுகள் எழுந்து வந்து சாமண்ணாவைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள்.

“இவர் தான் கோவர்த்தன் சேட். பம்பாயிலிருந்து பயாஸ் கோப் எடுக்கணும்னு இங்க வந்திருக்காங்க. அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவங்க” என்று அவர்களை அறிமுகப்படுத்தினாள் சகுந்தலா.

கோவர்த்தன் சேட் சாமண்ணாவை அப்படியே தழுவிக் கொண்டார். “இந்தாங்க, பிடியுங்க! அட்வான்ஸ்” என்றார். ஒன்றும் புரியாமல் விழித்தான் சாமண்ணா.

“பம்பாயில் இந்த சகுந்தலா நாடகத்தை அப்படியே மூவி எடுக்கப் போறோம். நீங்க தான் ஹீரோவா நடிக்கறீங்க. அடுத்த மாசம் கல்கத்தாவில் நடத்தலாம்னு திட்டம்” என்று சொல்லி ஒரு கவரையும் ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரையும் சாமண்ணாவிடம் நீட்டினார் கோவர்த்தன் சேட். அந்தக் கவரில் ரூபாய் ஐயாயிரம் இருந்தது!

 

1 thought on “சாவியின் ஆப்பிள் பசி – 16”

Leave a Reply to Priya saravanan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 66கல்கியின் பார்த்திபன் கனவு – 66

அத்தியாயம் 66 சக்கரவர்த்தி கட்டளை நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, “பொன்னா! எடு வாளை!” என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47

அத்தியாயம் 47 – பூமி சிவந்தது “முத்தையா! நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய்! நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு! இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப்

கல்கியின் பார்த்திபன் கனவு – 02கல்கியின் பார்த்திபன் கனவு – 02

அத்தியாயம் இரண்டு ராஜ குடும்பம் பொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக்