Tamil Madhura சிறுகதைகள் கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்

கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்

    • புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும். பசலைக் கொடியும் அவசியந்தான்; எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு பாத்திகள் இருக்க வேண்டும். மூலிகைகளுக்கென்று சில பாத்திகளாவது வேண்டும்.

 

    • அவனுடைய வீட்டுத் தோட்டத் திட்டத்தில் காய்கறி, கனி, மூலிகை, பூஜை மலர் எல்லாம் இருந்தன. வீடு கட்டிக்கொண்டு வந்தபோது சில சமயங்களில், ‘இந்தத் திட்டம் உருவாகிவிடுமா? மண் எப்படியோ? பயிரிடும் முறை எதுவோ? என்றெல்லாம் தோன்றும்.

 

    • ஒன்றும் மாத்திரம் அவனுக்கு நன்றாகத் தெரியும். கீரைப் பாத்தி போடுவதில் அவன் கெட்டிக்காரன். இது வரையில் அவன் குடியிருந்த வீடுகளில் கையகலம் நிலம் இருந்தாலும் அங்கே கீரைப் பாத்தி போட்டுவிடுவான். கீரைத் தண்டில் அவனுக்கு அலாதிப் பிரியம்; அவனோடு பழகி வாழ்ந்த அவனுடைய மனைவிக்கும் கீரைத் தண்டிலே மோகம் ஏற்பட்டுவிட்டது.

 

    • அவனுக்குத் தோட்டக்கலை தெரியாது. ஆனால் அந்தக் கலை தெரிந்த நண்பர்கள் இருந்தார்கள். ஒரு நண்பராக இருந்தால் திட்டமாக யோசனை சொல்வார். பல நண்பர்கள் அவனுக்கு இலவசமாகத் தம்முடைய அறிவுத் தானத்தைச் செய்யப் புறப்பட்டபொழுது அவன் எதையென்று வரையறையாக மேற்கொள்வது!

 

    • “நீங்கள் எந்த மரம் வைத்தாலும் வையுங்கள். தென்னமரத்தை வைக்காதீர்கள். அதன் வேர் பரவலாகப் பாய்வது; உங்கள் வீட்டுச் சுவரைத் துளைத்துவிடும்.’ என்றார் ஒருவர்.

 

    • ‘வாழை மரம் உங்களுக்கு அவசியம். உங்கள் வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளிகள் வருவார்கள். இலை வாங்கிக் கட்டாது. காய்க்கென்று போடாவிட்டாலும், இலைக்கென்று நாலுமரம் வையுங்கள்’ என்பது ஒருவர் யோசனை.

 

    • அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேறொரு நண்பர் அவர் போனவுடன் விசாகனை நெருங்கி வந்தார். ‘ஸார், நான் சொல்கிறதற்காகக் கோபம் கொள்ள வேண்டாம். கண்ட பேர் பேச்சைக் கேட்காதீர்கள். வாழை போட்டால் அது பேய் மாதிரி இலைகளை விரித்துப் படரும். அப்புறம் கீழே ஒரு செடி வளரமுடியாது.’ என்று இரகசியமாகச் சொன்னார்.

 

    • ‘முருங்கை மரம் வீட்டிலே வைக்கக் கூடாது என்று எங்கள் பாட்டி சொல்லுவாள்’ என்று ஒருவர் அவன் காதில் போட்டு வைத்தார்.

 

    • இவ்வளவு பேர்களுடைய அற்புதமான அறிவுரைகளுக்கிடையே விசாகனுடைய அநுபவ அறிவு வேலை செய்தது. அவனுக்குத் தெரிந்தது ஒன்றுதான்; அன்றும் சரி, இன்றும் சரி, இனியும் சரி அந்த ஒன்றைப்பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை: அதுதான் கீரைப்பாத்தி.

 

    • மற்ற முயற்சிகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு அவன் கீரைப் பாத்தி போட்டான். அவனுக்குத் தெரிந்த முறையிலே போட்டான். அதற்கு எங்காவது போய்ப் படிக்க வேண்டுமா என்ன?

 

    • பாத்தி பச்சைப் பசேலென்றிருந்தது. செடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. ஒரு சாண் உயரம் முளைக் கீரை வளர்ந்தது. ஆறு மாசக் கீ,ஐத் தண்டு வேறு போட்டிருந்தான். அதுவும் வளர்ந்தது.

 

    • இந்தச் சமயம் பார்த்து எதிரே குடிசை போட்டிருந்த சின்னத்தம்பி ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்க்க வேண்டுமா என்ன? விசாகனுடைய வீட்டின் மூன்று புறமும் திறந்தவெளி. மனையை வாங்கினவர்கள் இன்னும் வீடு கட்டவில்லை. முன் பக்கத்தில் ரோடு. ரோட்டுக்கு எதிரே யாருடைய மனையிலோ சின்னத்தம்பி குடிசை கட்டிக் கொண்டிருந்தான். ரிக்‌ஷா இழுக்கும் தொழிலில் வருமானம் போதவில்லை யென்று என்ன தொழில் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆட்டுக் குட்டி வாங்கி வளர்க்கலாம் என்று தோன்றியதும், அவன் வாங்கி வளர்த்ததும் நியாயந்தானே? விசாகன் கீரைப் பாத்தி போட்டுக் கீரையை வளர்த்த்து எவ்வளவு நியாயமோ, அவ்வளவு நியாயம் அவன் ஆடு வளர்த்ததும்.

 

    • ஆட்டுக்குட்டியும் வளர்ந்து வந்ந்து; கீரைத்தண்டுகளும் வளர்ந்து வந்தன. முதலில் ஆட்டுக்குத் தன் எசமானல் வீடு இன்னதென்று பழக்கிறவரைக்கும் சின்னத் தம்பியின் மகன் அதைக் கயிற்றால் கட்டித் தானே கொண்டு மேய்த்து வந்தான். ‘இதற்கு வீடு அடையாளம் தெரிந்துவிட்டது. எங்கே போனாலும் திரும்பி வந்துவிடும்’ என்ற நிலை வந்தது. சின்னத்தம்பி ஆட்டுக்குட்டியை அதன் மனம் போனவாறு அவிழ்த்துவிட்டான்.

 

    • இப்போதுதான் சங்கடம் தலைகாட்டியது. ஆட்டுக் குட்டிக்கு அல்ல; சின்னத்தம்பிக்கும் அல்ல. விசாகனுக்குத்தான்; உண்மையைச் சொல்லப் போனால் அவன் வீட்டுக் கீரைத் தண்டுக்கென்றே சொல்ல வேண்டும். நேர் எதிர் வீட்டில் தளதள வென்று வளர்ந்துவரும் கீரையின் மேல் ஆட்டுக் குட்டி கண் வைத்துவிட்டது. வாசல் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் கம்பம் நட்டு முள் கம்பியால் வேலி கட்டியிருந்தார்கள். அந்தக் கம்பிகளுக்கு இடையே எதுவும் நுழைய முடியாது என்பது வேலி கட்டினவர்களின் எண்ணம். ஆட்டுக்குட்டியின் ஆசையும் முயற்சியும் வேறுவிதமாக இருந்தன.

 

    • அன்று வெள்ளிகிழமை. நாளும் கிழமையுமாகப் பார்த்துத்தான் எதிர் வீட்டு ஆட்டுக்குட்டி விருந்து சாப் பிட்டிருக்கிறது! ஆட்டுக்குட்டி என்று அப்போது சொன்ன பேரையே இப்போது சொல்வது முறையாகாது. இப்போது அது சாட்சாத் ஆடு; குட்டிப் பருவம் தாண்டி விட்டது.

 

    • எப்படியோ முண்டி அடித்துக்கொண்டு ஆடு கீரைத் தண்டைப் பட்சணம் செய்துவிட்டது. சரியாகப் பட்டப் பகல் பன்னிரண்டு மணி நேரத்தில் இந்தக் காரியத்தை அது செய்தது. விசாகன் காரியாலயம் போய்விட்டான். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு அது ஓய்வு நேரம். எல்லோரும் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு கண் விழித்து என்னவோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். இன்று பன்னிரண்டு மணி வேளையில் பகலில்தான் உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

 

    • இந்தச் சுப முகூர்த்தத்தில் ஆடு எங்கெங்கோ முட்டி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தின் நெளிவு சுளுவு தெரிந்து உள்ளே நுழைந்துவிட்டது. வாசலில் எல்லையடைப்பைப் பூட்டித்தான் இருந்தார்கள். அது மனிதர் நுழையாததற்காக அல்லவா?

 

    • ஸ்ரீமான் ஆட்டையா தம்முடைய நாக்குக் கொண்ட மட்டும் கீரைத் தண்டை ருசி பார்த்துவிட்டார். அது வந்த சோடும் தெரியவில்லை; போன சோடும் தெரியவில்லை; பெண்மணிகள் மூன்று மணிக்கு விழித்துக்கொண்டு பார்த்தால் கீரைப் பாத்தி புயலடித்த தோப்புப் போல இருந்தது.

 

    • “ஐயையோ!” என்று அலறினார்கள். விசாகன் வந்தால் அமர்க்களப்படும் என்று அஞ்சினார்கள். சின்னத்தம்பியின் ஆடுதான் கடித்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்கள்.

 

    • “இதோ பார், உன் ஆடு பண்ணின அக்கிரமத்தை!” என்று அவனைக் கூப்பிட்டுக் காட்டினார்கள்; திட்டினார்கள்.

 

    • அவனா ஒப்புக்கொல்வான்? “என்ன அம்மா அப்படிச் சொல்கிறீர்கள்? என் ஆட்டை எப்போதுமே கட்டி வைத்திருக்கிறேன். நாம் பையன் ஓட்டிக்கொண்டு மேய்த்து வருகிறான். அதைப் போய்ச் சொல்கிறீர்களே!” என்று சொல்லிவிட்டான்.

 

    • “இங்கே பார்; ஆடு கடிக்காமல் இப்படி ஆகுமா?” என்று கேட்டார்கள் பெண்கள்.

 

    • “இந்த ஊரில் நான் ஒருத்தந்தானா ஆடு வளர்க்கிறவன்? எத்தனையோ பேர்கள் வளர்க்கிறார்கள். எந்த ஆடு வந்து தின்றதோ?” என்றான்.

 

    • அவர்கள் அவனோடு வாய் கொடுக்கக்கூடாது என்று சும்மா இருந்துவிட்டார்கள்.

 

    • விசாகன் மாலையில் வீடு வந்து சேர்ந்தான். வந்தவுடனே சமாசாரத்தை அறிந்தான். சின்னத் தம்பியை இடிக் குரலில் அழைத்தான். அவன் ரிக்க்ஷா வண்டியில் அடிக்கடி போகிறவன் விசாகன். ஆகையால் கடுமையாகக் கோபித்துக்கொள்ளத் தீர்மானித்தான்.

 

    • சின்னத்தம்பி மெதுவாக வந்தான். “என்ன ஐயா இடி விழுந்ததுபோலக் கத்துகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே வந்தான். அவன் முன்பே திட்டம் போட்டுக் கொண்டு வருகிறவன் ஆயிற்றே!

 

    • “அக்கிரமம் பண்ணிவிட்டு நான் கத்துகிறேனென்றா சொல்கிறாய்?” என்று விசாகன் கோபத்துடன் கத்தினான்.

 

    • “என்ன அக்கிரமத்தைக் கண்டுவிட்டாய்?” என்று சின்னத்தம்பியும் இரைந்து பேசினான். ஒன்றும் தெரியாதவனைப் போலல்லவா பேசுகிறான்?

 

    • கீரைப் பாத்தியை உன் ஆடு நாசமாக்கிவிட்டதே! பார்க்கவில்லையா?”

 

    • ‘கீரைப் பாத்தியையா? நீதான் கோட்டை மாதிரி வேலி கட்டியிருக்கிறாயே! அதைத் தாண்டி எப்படி ஐயா வரும்?’-இது யோசனையின்மேல் வரும் கேள்வி.

 

    • ‘ஆடு வந்த அடையாளமும் அது கடித்த அடையாளமும் இருக்கிறபோது, நீ ஒன்றும் நடக்காததுபோலப் பேசுகிறாயே?’

 

    • ‘என் ஆடுதான் கடித்திது என்பதற்கு அடையாளம் இருக்கிறதா?’

 

    • ‘ஏ முட்டாள்! இங்கே கண் முன்னாலே உன் ஆடு தானேடா வளைய வருகிறது?’ என்று கோபம் தாங்காமல் பேசினான் விசாகன்.

 

    • இந்தா, முட்டாள், கிட்டாள் என்று பேசினால் அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும். உனக்குத்தான் பேசத் தெரியுமென்று எண்ணாதே…’

 

    • இதற்குள் விசாகன் மனைவி வந்து, ‘ஆபிஸிலிருந்து வந்ததும் வராததுமாக அவனோட என்ன பேச்சு? வாருங்கள் உள்ளே!’ என்று அழைத்தாள். விசாகன் மறுபடியும் கத்தினான். சின்னத்தம்பியும் இரைந்து பேசினான். விசாகன் மனைவி அவனை உள்ளே கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். சின்னத்தம்பி மீசையை முறுக்கின படியே தன் குடிசைக்குப் போய்விட்டான்.

 

    • 2

 

    • சண்டையோ சாமாதானமோ, அதெல்லாம் ஆட்டுக்கா தெரியும்? அது எப்படியோ திருட்டுத்தனமாக்க் கீரைப் பாத்தியைத் துவம்சம் செய்து வந்தது. விசாகன் சின்னத் தம்பியின் ரிக்‌ஷாவில் ஏறவில்லை. வீட்டுக்கு எதிரே வா என்று அழைத்தால் வாசலில் நிற்கும் ரிக்‌ஷாவில் ஏறுவது எப்படி? நாமாகத் தேடிக்கொண்டு போவது எப்படி? இருந்தாலும் அந்தப் பயலுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்றே அவனைக் கூப்பிடுவதில்லை. சின்னத்தம்பி இதனால் அயர்ந்தவனாகத் தோன்றவில்லை. ‘இவர் இல்லாவிட்டால் இன்னொருத்தர்’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

 

    • விசாகன் வேலியைப் பின்னும் செறிவாகப் போடத் தொடங்கினான். அங்கங்கே குறுக்கே குச்சியைக் கட்டினான். புதிய கீரைப் பாத்தி போட்டான். சில இடங்களில் வேலிக் காலில் முள்ளுச் செடியை வைத்தான். ஆட்டுக்குப் பயந்து வீட்டுக்கு அரண் போட்டான். ஆடோ அந்த அரணை எப்படிக் குலைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து வந்தது. ஒரு மாசம் சென்றது. மேலும் இரண்டு வாரங்கள் ஆயின. பாத்தியில் ஒரு சாணுக்கு மேல் முளைக் கீரை வளர்ந்திருந்தது.

 

    • அன்று சனிக்கிழமை. எப்படியோ ஆடு வேலியாகிற கோட்டையில் ஒரு நுழைவிடத்தைக் கண்டு பிடித்து விட்டது. பகல் இரண்டு மணி இருக்கும். உள்ளே நுழைந்து கீரையைப் பலகாரம் பண்ணிக் கொண்டிருந்தது. அப் போதுதான் காரியாலயத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தான் விசாகன். சனிக்கிழமையன்று பாதி நாள் வேலை என்று ஆட்டுக்குத் தெரியவில்லையே! நுழையும் போதே வீட்டுக்குப் பக்கத்தே கண்ணை ஓட்டும்போது அவனுக்குப் பகீரென்றது. நுழையும் இடத்தில் ஒரு கல் இருந்த்து. அதை எடுத்து ஆட்டின்மேல் ஆத்திரத்தோடு வீசினான். அது பாவம்! முளைக்கீரையின் சுவையிலே உலகையே மறந்திருந்தது. கல் சரியாக அதன் பின்னங்கால் ஒன்றைத் தாக்கியது. வேகமான தாக்குதல். மே என்று அலறிக்கொண்டு அது பாயத்தொடங்கியது. கால் ஒடிந்து விட்டது. முன்னங்காலானாலும் நொண்டி நொண்டி ஓடும். இப்போது பயத்தால் ஓடப் பார்க்கையில் நடக்க முடியாமல் விழுந்தது. சற்று அருகிலே போய்ப் பார்த்தான் விசாகன். பாவம், படுகாயம்! பின்னங்கால் துண்டுபட்டது போல் ஆகிவிட்டது ரத்தம்வழிந்தது. ரத்தத்தைக் கண்ணாலே கண்டபோது அவனுக்கு வயிறு புளிக்கரைத்தது. வாய்ப் பேச்சில் வீரமே ஓழிய அவன் மனசு கோழை மனசு. ஆடு திணறியது; நடுங்கியது. பேசாமல் அதை மெதுவாக இழுத்து வந்து வாசலில் விட்டு விட்டுக் ‘கேட்’டைப் பூட்டிக்கொண்டு உள்ளுக்குள்ளே போய்விட்டான்.

 

    • அவன் நெஞ்சு படபடத்தது. ஆட்டுக்கு என்ன ஆகுமோ என்ற பயம். சின்னத்தம்பி சண்டைக்கு வந்து விடுவானே என்ற திகில். திருடனுக்குத் தேள் கொட்டினதுபோல ஒன்றையும் வெளியிடாமல், ஒன்றிலும் மனம் ஓடாமல் திருதிரு வென்று விழித்துக்கொண்டே இருந்தான்.

 

    • எதிர்க் குடிசையில் சின்னத்தம்பி கத்திக் கொண்டிருந்தான். எந்த அகரதியிலும் இல்லாத வார்த்தைகள் அவன் திருவாயிலிருந்து வெள்ளமாக வந்தன. ஆட்டை அடித்தவன் யார் என்று சொல்லுவது? எதிர் வீட்டு விசாகன் என்றால் அவன் வீட்டுக்குள் ஆடு நுழைந்ததா? அதை முதலில் ஒப்புக்கொண்டாக வேண்டுமே; ஒப்புக் கொள்வதானால் முன் குற்றங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டுமே! பொதுவாகவும் குறிப்பாகவும் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே யிருந்தான் அவன்.

 

    • வெளியிலே தலை காட்டாமல் வீட்டுக்குள் எவ்வளவு நேரம் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்து கொண்டிருப்பது? எங்காவது பிரசங்கம் கேட்டுவிட்டு வரலாமென்று புறப்பட்டான் விசாகன். மயிலாப்பூர் கபாலி கோயிலில் அன்று முருகனைபெபற்றி யாரோ பேசினார்கள். முருகனைக் குல தெய்வமாக வழிபடுபவன் விசாகன். அவன் அங்கே போனான். பிரசங்கி ஒரு கட்டத்தில் அஹிம்சையைப்பற்றியும் புலால் மறுத்தலைப்பற்றியும் பேசினார்.

 

    • ‘சைவம் என்பதற்குச் சிவ சம்பந்தம் என்று பொருள். ஆனால் பொது மக்கள், சைவம் என்றால் புலால் உண்ணாமை என்று நம்புகிறார்கள். சைவ சமயம் அஹிம்சையைச் சிறந்த விரதமாகக் கொள்வது; புலால் மறுத்தலை முதல் கடைப்பிடியாக உடையது. சைவர்களிலும் முருகன் அடியார்கள் புலாலுணவைக் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. ஆட்டையும் கோழியையும் கொலை செய்து தம் வயிற்றை இடுகாடாக்கும் மக்கள் முருகன் அருளைப் பெறமுடியாது. ஆடு முருகனுடைய வாகனம்; கோழி அவனுடைய கொடி. அந்த இரண்டுக்கும் தீங்கு புரிபவர்கள் எப்படி முருகன் அடியாராக இருக்க முடியும்?…..’

 

    • பிரசங்கி மேலே என்ன பேசினாரோ, விசாகன் உணரவில்லை. ‘ஆட்டுக்கு ஹிம்சை உண்டாக்கினவன் முருகன் அடியனாக இருக்க முடியாது’ என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்து போனான். ‘நம்முடைய செயலைத் தெரிந்து கொண்டுதான் இப்படிச் சொல்கிறாரோ? பாவம்! அந்த ஆடு என்ன துடிதுடித்தது! அதன் காலில் ஒழுகின ரத்தம்! ஐயோ! அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே. ஒரு கீரைப் பாத்தி போனால் மற்றொரு கீரைப் பாத்தி போடலாம். ஆடு இறந்து போய்விட்டால், அதன் உயிரை மறுபடியும் வாங்கி வர முடியுமா?……’ அவனுடைய பச்சாத்தாபம் வளர்ந்தது; விரிந்தது. வேறு ஞாபகமே உண்டாகவில்லை.

 

    • ‘செய்தது செய்துவிட்டோம். இனிமேல் என்ன செய்வது? கடவுளே! வடிவேல் முருகா! அந்த ஆட்டை எப்படியாவது காப்பாற்று. நான் வேண்டுமென்று செய்ய வில்லையே! நீ காப்பாற்ற வேண்டும், அப்பனே!’-வழி நெடுக இப்படியே வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தான் பண்ணிய பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். முதல் பிராயச்சித்தம் சின்னத்தம்பியுடன் சகஜமாக இருப்பது; அவன் ரிக்‌ஷாவில் பழையபடி ஏறுவது இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருந்தான். பிறகு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தான்.

 

    • முதலில் அவன் சின்னத்தம்பியின் மகனைக் கூப்பிட்டு ரிக்க்ஷா கொண்டு வரச் சொல்லி ஏறினான். பிறகு அவனையே கூப்பிட்டு மெல்ல ஆட்டின் நிலையை விசாரித்தான். அதன் காலில் மூலிகை வைத்துக் கட்டி வருவதாகத் தெரிந்துகொண்டான். எப்படியாவது அந்த ஆட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அதற்கு என்ன வழி? “ஆட்டுக்கு என்ன தீனி அப்பா போடுகிறாய்?” என்று சின்னத்தம்பியைக் கேட்டான்.

 

    • “அரசிலை வெட்டிப் போடுகிறேன்” என்றான் அவன்.

 

    • “அது புல் தின்னுமா?” என்று கேட்டான் விசாகன். “புல் வாங்கக் காசு ஏது?”

 

    • “நான் தருகிறேன்” என்று நாலணாவை எடுத்துக் கொடுத்தான் விசாகன். அன்று ராத்திரி அவனுக்கு நன்றாகத் தூக்கம் வந்தது.

 

    • இரண்டு நாள் கழித்து அவனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. அது மிகவும் பொருத்தமான பரிகாரம் என்று எண்ணினான். தன் வீட்டுப் பாத்தியிலிருந்து சில கீரத் தண்டுகளைப் பறித்துக்கொண்டு போய்த் தானே அந்த ஆட்டுக்குப் போட்டான்.

 

    • “கீரைத் தண்டு எதற்குச் சாமி ஆட்டுக்கு?” என்று கேட்டான் சின்னத்தம்பி.

 

    • “நான் ஒரு சொப்பனம் கண்டேன். என் அம்மா சொப்பனத்தில் வந்து ஆட்டுக்கு கீரை வாங்கிப் போடடா என்று சொன்ன மாதிரி கண்டேன்” என்றான் விசாகன். முன்பே தீர்மானித்து வைத்திருந்த பதில்.

 

    • சின்னத்தம்பி ஏன் ஆட்சேபிக்கிறான்? அல்வாவைக் கொண்டு வந்து ஊட்டட்டுமே! அவன் ஆட்டுக்குத்தானே நல்லது! இரண்டு நாளைக்கு, மூன்று நாளைக்கு ஒருமுறை ஆட்டுக்குக் கீரைத்தண்டு கொடுப்பதை ஒரு விரதமாகவே மேற்கொண்டான் விசாகன். முருகனுடைய கோபத்துக்குப் பாத்திரமாகாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியல்லவா? ‘ஜீவஹிம்சை செய்துவிட்டோம், தெரியாமல். இப்போது இறங்குகிறோம். கடவுளே! என்னை மன்னிக்க வேண்டும்!’ – இப்படி என்னை என்னை ஆறுதல் பெற்றான்.

 

    • ஆட்டுக்கும் கால் ஆறி வந்தது. மெதுவாக நொண்டி நொண்டி நடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் விசாகன் வாரத்துக்கு ஒரு முறை, சனிக்கிழமையில் தவறாமல் கீரைத் தண்டு வாங்கி ஆற்றுக்குச் சமர்ப்பித்து வந்தான். இன்னும் மூன்று மாசம் இந்த விரதம். அவன் சங்கற்பம் அது. பாவம்! ஆடு பிழைத்துக் கொண்டது. நன்றாக ஓடியாடித் திரிய வேண்டும்.

 

    • இரண்டு மாதம் ஆயின. ஆடு பழையபடி திரியத் தொடங்கியது. அதற்குப் பயந்து விசாகன் கீரைப் பாத்தி போடவில்லை. ஆனால் சனிக்கிழமை விரதம் நடந்து வந்தது. அவன் கீரை வாங்கிக் கொணர்ந்து ஆட்டுக்குக் கொடுத்து வந்தான்.

 

    • ஒரு நாள் சனிக்கிழமை. எங்கும் கீரை கிடைக்காமல் கொத்தவால் சாவடிக்குப் போய் நாலு தண்டு வாங்கினான். அவையும் வாடிப்போன தண்டுகள். அவனும் அலைச்சலினால் முகம் வாடிப் போனான். ஆனாலும் உள்ளத்தில் மலர்ச்சி; தான் செய்த காரியத்தால் ஆடு கால் ஒடிந்து உயிரிழந்து போகாமல் பிழைத்துக்கொண்டதே என்ற நினைவு. வாடிய முகமும் வாடிய கீரைத்தண்டுமாக வந்தவன் வீட்டுக்குள் நுழையாமலே எதிரில் உள்ள குடிசைக்கு அருகில் சென்றான்.

 

    • “சின்னத்தம்பி!” என்று கூப்பிட்டான். “ஏன் சாமி!” என்று ஓடிவந்தான் அவன்.

 

    • “இன்று நல்ல கீரைத் தண்டு கிடைக்கவில்லை. பல இடங்களில் அலைந்தேன். இதுதான் கிடைத்தது. இந்தா!

 

    • உண் ஆட்டுக்குப் போடு” என்று அவன் கையில் கொடுத்தான்.

 

    • சின்னத்தம்பி அதை வாங்கியபடியே, “இனிமேல் நீங்கள் கீரைத் தண்டு வாங்க வேண்டிய வேலை இல்லை, சாமி” என்று புன்னகை பூத்தபடியே சொன்னான்.

 

    • “ஏன்?” என்று கேட்டான் விசாகன். “அதை ராவுத்தருக்கு விற்றுவிட்டேன்.”

 

    • “ராவுத்தரா? அது யார், அப்பா?” “கசாப்புக் கடை வைத்திருக்கிறாரே, அந்த ராவுத்தர்!”

 

    • “ஹா!” விசாகன் இடிவிழுந்து போனான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஸ்வன்னமச்சாஸ்வன்னமச்சா

என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும்

பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்

1   “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?”   “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”

குளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audioகுளிர்ச்சி – கி.வா. ஜகன்னாதன் – Audio

  1 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம்.   அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள்.   “என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.”   “இல்லை,