Tamil Madhura கல்யாணக் கனவுகள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17

கனவு – 17

 

இலங்கைப் போக்குவரத்து சபைப் பேருந்து கொடிகாமத்தைத் தாண்டி நெல்லியடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வைஷாலி பதட்டம் தாங்க முடியாது, அது பொது இடம் என்பதையும் மறந்து சஞ்சயனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்.

 

அவள் பிடியின் அழுத்தத்திலேயே அவளது மனனிலையைப் புரிந்து கொண்டவன் அவள் கரத்தைத் தனது கரங்களில் பொதிந்து கொண்டான்.

 

“ரிலாக்ஸ் வைஷூ… நீ போறது உன்ர வீட்டுக்கு. ஏதோ ஜெயிலுக்குப் போறது போல பயப்பிடுறாய்? உனக்குப் பயமெல்லாம் விசாலிட குழந்தையை எப்பிடி எதிர்கொள்ளுறது என்றது தானே…

 

நீ ஏன் வைஷூ எதிர்மறையாக யோசிக்கிறாய்? விசாலிட குழந்தையை உன்ர பிள்ளையாக நினைச்சு அதோட பழகேன்… இழந்ததை நினைச்சுக் கவலைப்படாதே… நிதர்சனத்தைப் புரிஞ்சு நிகழ்காலத்தை எவ்வளவு சந்தோசமாக வாழ முடியுமோ வாழப் பழகிக் கொள்ளு வைஷூ… எல்லாம் எங்கட மனசில தான் இருக்கு… நீ உனக்குள்ளேயே துலைச்சிட்டிருக்க சந்தோசத்தை நீயாகத்தான் வைஷூ தேடி எடுக்க வேணும். அதுக்கு நான் எப்பவும் உன்னோட துணையாக இருப்பன். சரியா…?”

 

சஞ்சயனின் கூற்றில் மனம் சிறிது அமைதிப்பட்டது. அரசடிச் சந்தியில் பேருந்தால் இறங்கிய போது, குடும்பமே அவர்களை வரவேற்க வந்து நின்றது. விசாலி, “அக்கா…” என்று கூவியபடி ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட, அவர்கள் தாயாரும் கூடச் சேர்ந்து கண்ணீர் வடித்தார்.

 

தந்தை வைஷாலியின் பயணப் பையை வாங்கிக் கொள்ள, விசாலியின் மகன் ஏகன் தந்தையின் தோளிலிருந்தவாறு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“நான் ஒருத்தன் இங்கே நிற்கிறது யாருக்காவது கண்ணில படுதா…?”

 

“யார் சேர் நீங்க…?”

 

கேட்ட விசாலியைப் பார்த்து முறைத்தான் சஞ்சயன். அவள் கணவன் பக்கம் திரும்பியவன்,

 

“இவளைச் சமாளிக்கிற உங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிட வேணும் நண்பா…”

 

“ஹூம்…! என் கஷ்டம் உங்களுக்காவது புரிஞ்சுதே… வாங்கோ சஞ்சு… நாங்க வீட்டுக்குப் போவம்… இவை ஆறுதலாக வரட்டும்…”

 

அவன் கூறவும் சஞ்சயன் வீடு நோக்கி நடக்க மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். வீட்டை அடைந்ததும் கைகால்களை கழுவி விட்டு ஏகனிடம் வந்த சஞ்சயன் மெதுவாக அவனோடு பேச்சுக் கொடுத்துத் தனது பக்கம் அவனைத் திசை திருப்பினான்.

 

“என்ர பேர் சஞ்சு… உங்கட பேர் என்ன?”

 

“நான் ஏடன்…”

 

அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க விசாலி,

 

“அவனுக்கு இன்னும் சொல்லுகள் வடிவா உச்சரிக்க வரேல்லை அண்ணா…”

 

“ஏய் வாயாடி… உன்ர பிள்ளைக்குச் சரியாக உச்சரிக்க வரேல்ல என்றால் அது எட்டாம் அதிசயமாச்சுதே…”

 

“அச்சோ சஞ்சு அண்ணா… நீங்க கொஞ்சம் கூட மாறேல்லையா…? இவ்வளவு நாளும் இந்த மனுசன் மட்டும் தான் என்ர காலை வாரிட்டு இருந்தார். இப்ப நீங்களும் சேர்ந்திட்டிங்களா…? ஆளை விட்டால் போதும். அக்கா…! நீ குளிச்சிட்டு வா… எல்லாரும் சாப்பிடுவம்…”

 

ஏகன், சஞ்சயனோடு நன்றாக ஒட்டிக் கொண்டான். சஞ்சயன் வாங்கி வந்திருந்த ரிமோட்டில் ஓடும் காரைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதனோடே விளையாடிக் கொண்டிருந்தான்.

 

வைஷாலி குளித்து விட்டு வரவேற்பறைக்கு வந்த போது, ஏகன் விளையாடிக் கொண்டிருந்த கார் அவள் காலடியில் மோதி நின்றது. அதைக் கண்ட ஏகன்,

 

“பெரியம்மா…. தள்ளுங்கோ… என்ர கார்…”

 

என்றபடி அவளிடம் ஓடி வர வைஷாலி ஒரு நொடி திகைத்துப் போய் நின்றிருந்தாள். அவன் தன்னைப் பெரியம்மா என்றழைப்பான் என்று இவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய், அவள் காலைச் சுற்றிய குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

 

அவனும் அவளுக்கு எச்சில் படக் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன்,

 

“ஏன் பெரியம்மா… வதல பாக்க…?”

 

வைஷாலி அவன் கேட்டது புரியாமல் அங்கு நின்ற அவளது தாயைப் பார்க்க,

 

“நீ ஏன் இவ்வளவு நாளாகத் தன்னைப் பார்க்க வரேல்லையாம்…?”

 

என்று மழலை மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்தார். அதைக் கேட்ட வைஷாலிக்குக் கண்கள் கலங்க, அதைக் கண்ட குழந்தை அவள் கண்களைத் துடைத்து விட்டது.

 

“அழாத பெரியம்மா… கார் இடிச்சது நோகுதா…?”

 

என்று கேட்டு அவள் பிடியிலிருந்து வழுக்கிக் கொண்டு கீழே இறங்கியவன், அவள் காலில் கார் இடிபட்ட இடத்தைத் தடவி விட ஆரம்பித்தான். தானும் கீழே அமர்ந்தவள், ஏகனைத் தனது மடியில் இருத்திக் கொண்டாள்.

 

“பெரியம்மாக்கு கனக்க வேலை இருந்தது. பிள்ளையைப் பாக்க அதுதான் வரேல்ல. இனிமேல் அடிக்கடி வருவன். நீங்களும் பெரியம்மா வீட்ட அடிக்கடி வர வேணும் சரியா…?”

 

“சரி பெரியம்மா… நீங்க நல்ல வடிவு… ஐ லவ் யூ…”

 

என்று மறுபடியும் அவளை முத்தமிட்டு விட்டுக் காரைத் துரத்திக் கொண்டு ஓடினான். இங்கே விசாலியோ கணவனைப் பார்த்துக் கொலைவெறியில் கத்திக் கொண்டிருந்தாள்.

 

“பிள்ளைக்கு முன்னால வழியாதையுங்கோ என்று சொன்னால் கேட்டால் தானே… அவன் இன்றைக்கு அக்காக்குக் கொஞ்சினது சரி… இனி மொன்டசரிக்கு போக வேணும். அங்க போய் ஆரும் பிள்ளையைக் கொஞ்சி ஐ லவ் யூ சொன்னா பிள்ளையை எப்பிடி வளர்த்து இருப்பினம் என்று பார்க்கிறவை எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்…”

 

விசாலியின் பேச்சுக் காதிலேயே விழாதது போல அவள் கணவன்,

 

“மாமி… பசிக்குது… சாப்பிடுவமே…”

 

அவரும் சரியென்று சாப்பாட்டறைக்குச் செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். இந்தக் களேபரத்தில் வைஷாலி இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள். சஞ்சயன், அவளது அனைத்து மாற்றங்களையும் கவனிக்கத் தவறவில்லை.

 

சஞ்சயனுக்கு ஊரில் யாரும் இருக்காதபடியால் அவனும் வைஷாலி வீட்டிலே தான் தங்கியிருந்தான். முகப்புத்தகத்தின் மூலம் வெளியிடங்களுக்குச் சென்றவர்கள் தவிர ஊரிலிருந்த சில நண்பர்களைத் தேடிப் பிடித்திருந்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறு வயதில் அவர்கள் கூடி விளையாடும் ஞான வைரவர் கோயிலடியில் அவர்களைச் சந்திக்கவெனப் புறப்பட்டுச் சென்றிருந்தான்.

 

பழைய கதைகள் பேசி முடித்து வீட்டுக்குத் திரும்ப மணி இரவு ஒன்பதாகி விட்டது. வீட்டு வெளிக் கதவைத் திறந்தவன் ஒரு நொடி அசைவற்று நின்றான். கலங்கிய கண்களை மெதுவாய் அழுந்தத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 

வீட்டு முற்றத்திலே வேப்ப மரத்தின் கிளையில் கட்டியிருந்த ஊஞ்சலில் வைஷாலி அமர்ந்து மடியிலே ஏகனை வைத்துக் கொண்டு மெதுவாய் ஊஞ்சலை ஆடியபடி அவனுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அவள் முந்தைய தினம் தான் ‘பலராமனின் அன்பும் பண்பும்’ எனும் தலைப்பில் கிரிப்னிதா எனும் ஏழு வயதுக் குழந்தை, கிருஷ்ணனும் பலராமனும் இன்றைய காலத்தில் இருந்தால் எப்படி பாடசாலை போவார்கள்? எப்படி விளையாடுவார்கள்? என்று தனது கற்பனையில் கூறியிருந்ததை அந்தச் சிறுமியின் தாயார் கதையாக எழுதி இணையத்தளமொன்றில் பதிவிட்டிருந்ததை வாசித்திருந்தாள். அதைத்தான் இப்போது ஏகனுக்கு சொல்ல, அவனும் கதை கேட்டவாறே அவள் மடியில் தூங்கியிருந்தான்.

 

விசாலி அவனைத் தூக்கிச் சென்று உள்ளே படுத்தி விட்டு வர அனைவரும் இரவுணவை முடித்து விட்டு வேப்ப மரத்திற்கு கீழே கதிரைகளைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நாட்டு நடப்புகளை அலசி ஆராயத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல தூக்கம் சொக்க ஒவ்வொருத்தராக எழுந்து தூங்கச் செல்ல இறுதியில் சஞ்சயனும் வைஷாலியுமே எஞ்சியிருந்தனர்.

 

சில நிமிடங்கள் அந்த நிலவின் வெளிச்சத்தில் இரவின் ஏகாந்தத்தில் நிச்சலனமாகக் கழிய, வைஷாலி முதலில் மௌனம் கலைத்தாள்.

 

“தாங்ஸ்டா சஞ்சு…”

 

“எனக்கென்னத்துக்கு தாங்ஸ் சொல்லுறாய் பக்கி…?”

 

“நீ மட்டும் என்னை வற்புறுத்தியிருக்காட்டில் நான் வீட்ட திரும்ப வந்தேயிருக்க மாட்டன். நீ சொன்னது போல எல்லாம் மனசு தான்டா. அநியாயமாக ஏகனை இவ்வளவு நாளாகப் பார்க்காமல் விட்டிட்டனே என்று இப்ப கவலையாகக் கிடக்குடா… தேவையில்லாமல் என்னையும் வருத்தி அம்மாவையையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறன் என்றதை நினைக்க விசராக் கிடக்கு…”

 

“அடியே… நீ திருந்தவே மாட்டியா…? முதல்ல நடந்ததை நினைச்சு இங்க வரவே மாட்டன் என்றாய். இப்ப வந்திட்டு ஏன் முதலே வரேல்ல என்று கவலைப்படுறாய்… நீ முதல்ல பழசை நினைச்சுப் பார்த்துக் கவலைப்படுற உன்ர குணத்தை மாத்து. எப்ப பார் முடிஞ்சதைப் பற்றியே யோசிச்சுக் கொண்டிருக்கிறது… அவனவன் மறதியால அவஸ்தைப்படுறாங்கள் என்று பார்த்தால், நீயோ மறக்க முடியாமல் கஷ்டப்படுறாய்… உன்னை என்ன செய்யலாம்…?”

 

“ஹா… ஹா… அது என்னவோடா உண்மைதான்… தனிய இருந்து யோசிச்சு யோசிச்சுப் பழகிட்டுது… நான் என்ன செய்ய?”

 

“இனி மேல் உனக்கு நான் இருக்கிறன்… இனி நீ தனியாள் இல்லை சரியா…?”

 

கூறியவன் ஊஞ்சலில் இருந்தவள் முன்னுச்சியில் ஒற்றை விரலை வைத்து செல்லமாய் பின்னே தள்ளியவன்,

 

“சரி… லேட்டாகுது… போய் தூங்கு… நாளைக்கு பிறந்தநாள் வேலைகள் இருக்கே…”

 

“ம்… சரிடா… குட் நைட்…”

 

“குட் நைட் முயல் குட்டி…”

 

அவன் இரவு வணக்கம் கூறவும்  ஊஞ்சலை விட்டு எழுந்தாள். அவள் எழவும் அவன் அதிலமர்ந்து மெதுவாய் ஆடத் தொடங்கினான். வீட்டினுள் செல்ல ஆரம்பித்தவள், ஏதோ எண்ணியவளாய் திரும்பி அவனிடம் வந்தவள், ஊஞ்சலில் இருந்தவனின் முன்னுச்சியில் முத்தமிட்டாள். சஞ்சயன் அவள் மனனிலை புரிந்து வாஞ்சையாய் நோக்கவும்,

 

“சின்ஸியர்ளி தாங்ஸ்டா… உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தனோ தெரியேல்ல…”

 

என்று தளுதளுத்த குரலில் இயம்ப, சஞ்சயன் அவள் கரங்களைத் தனது கரங்களில் எடுத்துக் கொண்டவன்,

 

“ஏய் முயல்குட்டி…! இப்ப எதுக்கு எமோசனல் ஆகிறாய்…? இன்றைக்காவது எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்ர வீட்டில, உன்ர படுக்கையில நிம்மதியாக நித்திரை கொள்ளு… சரியா…?”

 

கூறியவன் அவள் கரங்களை விடுவிக்க, மௌனமான தலையசைப்புடன் விடைபெற்று உள்ளே சென்றாள். அவளுக்கு ஏதோ பெரிய மகான் போல அறிவுரை கூறி விட்டுத் தான் இன்னமும் அதே இடத்தில் அமர்ந்து கடந்த காலத்தைப் பற்றியும் இனிக் கடக்க வேண்டிய காலங்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். வேப்ப மரம் ஞானம் தருமா? என்பது அதற்கே வெளிச்சம்.

 

நாட்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன. பிறந்தநாள் விழாவும் இனிதே முடிந்து, ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது. குடும்பத்தினரைப் பிரியவே மனமின்றி வைஷாலியும் சஞ்சயனும் மலையகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். புதிதாய் மணமாகிப் புகுந்த வீடு செல்லும் மணப்பெண் போல வழியெங்கும் கண்ணீரோடு வந்தவளைத் தேற்றுவதே பெரும்பாடாய் போயிற்று சஞ்சயனுக்கு.

 

ஒருவாறு அவளைத் தேற்றி அழைத்துச் சென்று அவள் வீட்டில் விட்டு விட்டுத் தனது வீடு திரும்பினான். மறுநாளிலிருந்து வழக்கம்போல வேலை, வீடு என்று வாழ்க்கை செக்குமாடாய் அதன் பாட்டிற்குச் சுற்ற ஆரம்பித்தது. அடுத்த வார இறுதியிலேயே வைஷாலி குடும்பத்தினர் வைஷாலி வீட்டிற்கு வந்து விட்டனர். இரண்டு நாட்களும் தலதா மாளிகை, பெரதெனியா பூங்கா என்று மலையகம் முழுவதும் சுற்றவே நேரம் சரியாக இருந்தது.

 

ஏகன், “பெரியம்மா… சஞ்சு…” என்றபடி இவர்களோடே ஒட்டிக் கொண்டு திரிந்தான். குழந்தைகள் அப்படித்தானே. புதுஉறவுகளைக் கண்டு விட்டால் ஆனந்தமாய் அவர்களோடே சுற்றுவார்கள்.

 

வைஷாலி அவள் எண்ணிப் பயந்தது போலில்லாமல் ஏகனை நன்கு அரவணைக்கப் பழகியிருந்தாள். எந்தவித மாறுபாடான உணர்ச்சிகளுமற்று அவள் முன்பு போலவே எல்லோருடனும் பழகுவதைப் பார்த்த சஞ்சயனின் மகிழ்ச்சிக்கு அளவேது?

 

குடும்பத்தினர் ஊருக்குத் திரும்பியிருக்க அன்று வழக்கம் போல வேலை முடித்து இருவரும் உணவகம் ஒன்றில் உண்டு கொண்டிருந்தனர். அப்போது சஞ்சயன் அடக்க முடியாத ஆவலில் கேட்டே விட்டான்.

 

“வைஷூ… நீ ஏகனைப் பார்க்க அவ்வளவு பயப்பிட்டியே…? இப்ப உனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லையாடி?”

 

மென்னகை ஒன்றை இதழ்களில் தவழ விட்டவள்,

 

“நான் நினைச்சுக் கவலைப்பட்டுப் பயந்ததுக்கு மாறாக ஏகனைப் பார்த்ததும் நான் எடுத்த முடிவு மிகச் சரியென்றே எனக்குத் தோன்றிச்சு சஞ்சு…”

 

“உண்மையாவா வைஷூ…?”

 

“ஓமடா… ஏகனைப் பார்… அம்மா, அப்பா என்று ரெண்டு பேரோடயும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறான். நான் முரளியை விட்டுப் பிரியிறதாக முடிவெடுத்த நேரம் தான் பிரெக்னன்ட் என்று தெரியும். என்னைப் பொறுத்தவரை எங்கட ஊரில டைவேர்ஸ் எல்லாம் சாதாரண விசயம் இல்லை. நாளைக்கு நான் பிள்ளையைப் பெத்து வளர்க்க, அவன் என்ன என்ன எல்லாம் கேட்க வேண்டியிருக்குமோ தெரியாது…

 

ஒரு பிள்ளைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே முக்கியம். அப்பிடியிருக்க அப்பாவுடைய பாசம் கிடைக்காது என்று எனக்குத் தெரிஞ்சிருக்கும் போதே எதுக்குப் பெத்து அந்தப் பிள்ளையை மனவுளைச்சலில் விட வேணும்…?

 

நான் நிறைய வாசிப்பன் என்றது உனக்குத் தெரியும்தானேடா… கர்ப்பமாக இருக்கும் போது அந்தத் தாய் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கிறது முக்கியம் என்று சொல்லியிருக்கினம் நிறைய கட்டுரைகளில. நான் டைவேர்ஸ் எடுத்த டைம் எப்பிடியும் ஸ்ரெஸ்ட உச்சக் கட்டத்தில இருப்பேன். ஸோ அப்பிடியொரு சிற்றுவேசன்ல வளருற பிள்ளை ஒரு மனவளர்ச்சி குறைஞ்ச பிள்ளையாகப் பிறக்கக் கூட வாய்ப்பிருக்காம்.

 

அந்தப் பயத்தில தான்டா நான் அபோர்ஷன் செய்தன். இருந்தாலும் கூட எனக்கு சரியான குற்றவுணர்வாக இருந்துச்சு. ஆனால் இப்ப ஏகனை இவ்வளவு சந்தோசமாக பார்க்கிற நேரம், எனக்குப் பிள்ளை பிறந்திருந்தால் என்னால அவனுக்கு இப்பிடியொரு பூரண மகிழ்ச்சியைக் குடுத்திருக்க ஏலாதுதானே. அதால எனக்கு இப்போ நான் எடுத்த முடிவு சரியென்றே தோணுதுடா.

 

நேற்று ‘உன்னையே எண்ணியே வாழ்கிறேன்’ என்று ஒரு கதை வாசிச்சன். அதில ஒரு வசனம் வரும். ‘தாய்மை என்றது ஒரு உணர்வு தான். அது எல்லா உயிரினத்துக்கும் இருக்கு. மதர் தெரசாக்கு இந்த உலகத்திலுள்ள எல்லோருமே குழந்தைகள் தான்னு’.

 

அது உண்மை தானேடா… எத்தனையோ குழந்தைகள் அநாதையாகத் தவித்துக் கொண்டிருக்க…. என் இரத்தத்தில் வாரிசு வேணும் என்றதுக்காக அந்தப் பிள்ளையைப் பெத்துப் பிறகு என் மன அழுத்தம் எல்லாத்தையும் அதிலே காட்டி வளர்த்து… வேணாம்… நான் அபோர்ஷன் பண்ணியதே சரி…

 

ஆனால் நீ சொன்னது போல முதலே நான் தடை ஏதாவது பாவிச்சிருக்க வேணும். நிச்சயமாக நான் செய்தது பிழைதான்டா. அதை ஒத்துக் கொள்ளுறன்.”

 

நீளமாகப் பேசியவளை அன்போடு பார்த்திருந்தான்.

 

“நீ இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிய வந்ததே போதும் வைஷூ. இனி இதைப் பற்றி யோசிச்சு மனசை வதைக்காதை. இந்தக் கதையை இதோட விடு… அது சரி… அதுல்யாட கல்யாணம் எப்ப?”

 

என்று பேச்சை மாற்றினான்.

 

அதுல்யாவின் திருமணம் இவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரப் போவதை அறியாத நண்பர்கள் இருவரும் திருமணத்திற்குச் செல்வதைப் பற்றிய திட்டமிடலுடன் உணவை உண்டு கொண்டிருந்தார்கள்.

 

மாற்றம் நல்லதா?



6 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17”

  1. கருச்சிதைப்பு – அவ்வளவு எளிதா? காரணம் ஏற்ப்புடையதாக இல்லை. எப்படிப்பட்ட குறையிருந்தாலும் ஒரு உயிர் இவ்வுலகத்தில் வாழ முழு உரிமை உண்டு! பெற்றோர் இருவரும் இருந்தால் தான் ஒரு குழந்தை வாழத் தகுதி உடையதா? Nobody in the world having 100% support for living. குறைகளுடையதே வாழ்க்கை! அதனை ஏற்க்கும் மனப்பக்குவமே தேவை!

    1. சஞ்சயனும் அவள் செய்தது பிழை என்றுதான் சொல்கிறான். வைஷாலியே தான் செய்தது பிழை என்று ஒத்துக் கொள்கிறாள் தானேஅக்கா. அந்த நேரத்தில் அவள் எடுத்த முடிவு அப்படியாகிப் போயிற்று. அவ்வளவே! தவறுகளும் தப்புகளும் செய்யும், அதையும் தனக்கேற்ப நியாயப்படுத்த முனையும் சாதாரண காதபாத்திரமே வைஷாலியும்.

      உங்கள் கருத்தைத் தெரிவித்ததுக்கு மிக்க நன்றி அக்கா. 😍

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15

கனவு – 15   இந்த உலகத்தில் கடைமை தவறாதவன் யார் என்று கேட்டால் அது காலம் ஒன்றே. மழை வந்தால் என்ன? வெயில் அடித்தால் என்ன? பனி பொழிந்தால் என்ன? சுனாமியே வந்து சுருட்டிப் போட்டால் என்ன? எதைப் பற்றியும்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20

கனவு – 20   நேரம் இரவு பதினொரு மணி. கைத்தொலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்கவும் யாரென்று பார்த்தான் சஞ்சயன். காலையிலிருந்து அன்ன ஆகாரமின்றி வைஷாலியின் டயரிகளிலேயே மூழ்கிப் போயிருந்தான். இந்த சாம நேரத்தில் யார் அழைப்பது என்று சிந்தித்தவாறே தொலைபேசியைக்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09   தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு