புத்தகப் பரிந்துரை – சத்யா GP
நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
“வெயில் காலத்தில் குடிக்கும் சரியான நன்னாரி ஸர்பத் மாதிரி இருக்கிறது” என்று முன்னுரையில் பாஸ்கர் சக்தி அவர்கள் குறிப்பிட்டது மேம்போக்கான சொல்லாடல் இல்லை.
மதுரை, மதுரைக்கே உரிய ஸ்லாங் போன்றவை இவரது எழுத்தின் சிறப்பம்சம். 90 களை கண் முன் நிறுத்துவது, அந்த காலத்தில் பால்யத்தை சந்தோஷமாக அனுபவித்து இப்போது நாட்களை எண்ணும் என்னைப் போன்ற மனோநிலையில் உள்ளவர்களுக்கு இவரின் எழுத்து மனதிற்குள் நிரந்தரமாகத் தங்குவது இயல்பு.
இயல்பான நடையில் சகலத்தையும் எழுத்தில் சொல்ல முயற்சிக்கும் ஆர்வம் இவர் எழுத்தில் புலப்படும். எழுத்தோடு நகைச்சுவையைப் பயணிக்கும் வைக்கும் சமர்த்தர் இவர்.
“ரேஷன் கடைல என்ன போடுறாங்க, கோட்ட?”
“சண்ட போடுறாகத்தா”
வாத்தியார் தம்முடைய சிறுகதைகளில் (குறிப்பாக ஸ்ரீரங்கத்துக் கதைகள்) சில பெயர்களை சூட்டி கதை மாந்தர்களை நடமாடவிடுவார். ஒரு கதையில் குறிப்பிட்ட நபரை சுற்றியே கதை நகரும். மற்றொரு கதையில் அந்த நபர் அமைதியான பார்வையாளராகவோ, முக்கியமான கதாபாத்திரத்தின் புலம்பல்களைக் கேட்டு ஆறுதல் சொல்பவராகவோ இருப்பார். அனைத்து கதைகளையும் படித்தபின் வாத்தியார் எழுத்தில் சிருஷ்டித்த மனிதர்கள் நம்மோடு நெருக்கமாகிவிடுவார்கள். அந்த வாத்தியாரின் பாணி இவரது எழுத்திலும் வெளிப்படுகிறது. இவருக்கான களம் மதுரை. அப்படியான கதை மாந்தர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் அம்பத்தாறு.
“கோட்டை” சிறுகதையில் ஒரே ஒரு வரியில் அவர் பெயரை மட்டும் குறிப்பிட்டாலும் அதைப் படிக்கும் போதே அப்படியொரு பரபரப்பு. கூடிய விரைவில் அம்பத்தாறு என்னும் தலைப்பில் ஒரு தனி புதினத்தை கதாசிரியர் எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
முக்கியமாக கதைக்குள் சில சொல்லாடல்களில், படிக்கும் என்னைப் போன்றவர்களின் பழைய நினைவுகளை வடிவாக கிளறிவிடுவதில் இவருக்கு நிகர் இவரே! பல்வேறு எழுத்தாளர்கள் ஒரே மாதிரியான அனுபவத்தை அவரவர் எழுத்து பாணியில் வழங்கி இருக்கிறார்கள் ஆனால் இவர் தரும் நினைவுக் கிளறல்களை இவர் மட்டுமே தம் எழுத்தில் தருகிறார்.
“என்னடா போய்ட்டாரா? அவரோட எல்லாம் பேசி, புரட்சி, பொங்கல்னு போய்றாதடா, பாரு, நல்ல வேலைல இருந்தாரு, கல்யாணமா காட்சியா? யாரோ ஒரு பொம்பளையோட மகன எடுத்து வளர்க்குறேன்னு காலத்த ஓட்டிட்டாறு, பாவம்”
“ரெமோ ஃபெர்ணான்டஸின் புல்லாங்குழல் தாளலயத்திற்கேற்ப ஆட” (வரிகளைப் படித்தவுடனேயே பாம்பே ஸிட்டி பாடலை ஒரு முறை கேட்டு முடித்தே பாய்ந்த மனதை அமர்த்தினேன்)
“அவனை இரவின் ரசிகன் ஆக்கியிருந்தாள். மின்விளக்குகளின் வரிசையை எந்த கோணத்தில் பார்த்தால் பறவையின் சிறகுகள் போல் இருக்கும் என்பதில் ஆரம்பித்து இருள்நிறத் தார்ச் சாலையின் வளைந்து நீளும் அழகோடு பேசுவது வரை அவனுக்குப் பழகிக் கொடுத்தாள்”
“நந்தியின் வலது கால் தரையில் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கோமாதாவின் கால் உள்நோக்கி மடங்கி இருக்கும்” என்றும் விவரித்தான்.
கதைக்குள் கதை, படம் பார்த்து அதனால் ஒரு கதை இப்படி மாறுபட்ட பாணியிலும் சில சிறுகதைகள் நிறைய யூகங்களை, கேள்விகளைப் புதைத்து வைத்திருக்கின்றன 1 + 1 = 2 என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் படிப்பவர்களுக்கு சொல்லாது அவர்கள் சிந்தனைக்கு விட்டுவிடவேண்டும் என்னும் பதத்தில் சில கதைகள் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன!
இத்தொகுப்பில் மாஸ்டர் பீஸ் “பொங்கப்பானை”
“மதுரைக் கதைகள்” தொகுப்பில் இடம் பெற்ற சில கதைகள் இதிலும் இருக்கின்றன. அதைத் தவிர்த்திருக்கலாம்.
முதன் முதலில் படித்துவிட்டு நன்றாக இருக்கிறதே, யார் எழுதியது என பெயர் பார்த்து மனதில் நிறுத்திக் கொண்டதும், அதன் பின் புத்தகங்களில் அவர் பெயர் தாங்கி ஏதேனும் ஓர் ஆக்கம் கண்டால் உடனே பரவசத்துடன் அதைப் படிப்பதும், இப்போது அந்தப் பெயர் பரிச்சயமாகி பேசி சந்தித்து அறிமுகமானவர் என்னும் நிலையை அடைந்த பின்பும் அவர் எழுதியது என்று எழுத்தைப் பரவசத்துடன் படிக்கும் அந்த உணர்வு அப்படியே இருக்கிறது. எழுத்தாளர் நர்ஸிம் அவர்களின் எழுத்தின் ரசவாதம் இது தான் போல!
மனதுக்கு நெருக்கமாக சிலவற்றைப் படிக்கும் போது உதட்டோரம் ஒரு புன்னகை, சிலவற்றைப் படிக்கும் போது “அட இது அதுல்ல” என்னும் உணர்வு, சிலவற்றைப் படிக்கும் போது “பச்சாதாபம்” சிலவற்றைப் படிக்கும் போது மன மெளனம், படித்து முடித்து டீக்கடைக்கு சென்று டீ குடித்தபடி ஏராளமானவற்றை அசை போட… இவையெல்லாம் பெற தாராளமாக இத்தொகுப்பைப் படிக்கலாம்.
தொகுப்பின் பெயர் : பைத்தியக் காலம்
கதாசிரியர் : நர்ஸிம்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
எப்போதும் உங்கள் புத்தக பரிந்துரை வாசிக்கும் போது உங்கள் ஆழ்ந்த வாசிப்பு திறனைப் பார்த்து வியப்பேன். அதேபோல மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டுமாறு உங்கள் கருத்துக்களை பகிர்ந்திருப்பீர்கள். தொடர்ந்து நல்ல புத்தகங்களை பரிந்துரைக்க வாழ்த்துக்கள் அண்ணா.