Tamil Madhura தொடர்கள் சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4

அத்தியாயம் 4. ட
லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

வசந்தாவின் நினைவு தோன்றவே, உடனே தன் ‘தோளி’க்கு லெட்டர் எழுதப் போய்விட்டாள்.

 

“டியர் வசண்டா! இப்போது நான் மேரேஜ் பார்ட்டியுடன் வாஷிங்டன் வந்திருக்கிறேன். என் டாடியும், மம்மியும், உன் டாடியும், மம்மியும் இங்கேதான் இருக்கிறார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லர் ஒன் மினிட் கூட ஒய்வில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். மேரேஜ் ரொம்ப கிராண்டாக நடக்கும் போலிருக்கிறது. இங்கே சம்மர் ஹவுஸைச் சுற்றிலும் பியூட்டிஃபுல் கார்டன்! ஃபிளவர்ஸ் வெரி நைஸ்! ஆனால் டாஞ்சூர் ஃபிளவர்ஸ் மாதிரி வாசனை இல்லை.

 

அம்மாஞ்சி – ஸாஸ்ட்ரி என்று இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். வெரி ஹ்யூமரஸ் பீபிள்! அவர்களைப் பார்த்தால் லாரல் அண்ட் ஹார்டியைப் போல் இருக்கிறது. என் டாடியும், மம்மியும் பிரைட்க்ரூம் பார்ட்டியுடன் ‘டம்பர்ட்டன் ஒக்ஸ்’ மாளிகையைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். மேரேஜ் அநேகமாக ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் ’டேட்’ நிச்சயமாகவில்லை. ‘டுமாரோ’வுக்குள் எல்லாம் தெரிந்துவிடும். நீ இல்லாமல் எனக்கு இங்கே பொழுதே போகவில்லை. உன் ஹஸ்பெண்டுடன் நீ அடுத்த வாரமே வாஷிங்டன் வந்துவிடு. இங்கே ‘ஸ்ப்ரிங்’ ஆரம்பமாகப் போகிறது. செர்ரி பிளவர்ஸ், டாக்வுட், டுலிப்ஸ், மக்னோலியா எல்லாம் வெரி வெரி பியூட்டிபுலா யிருக்கும். இந்த ஸம்மர் ஹவுஸ் கார்டனில் பெரிய பெரிய மரங்கள் இருக்கின்றன. நீ வந்தால் அவற்றிலே ஊஞ்சல் கட்டி விளையாடலாம். ரொம்ப ஜாலியாக இருக்கும்.

 

உன் அன்புள்ள,

லோரிட்டா.

 

பி.கு : நீ வரும்போது எனக்கு ஆறு டின் கமர்கட் வாங்கி வரவும்.

 

*****

“சாஸ்திரிகளே மணி மூன்றாகப் போகிறது. வெளியே கொஞ்ச தூரம் ]வாக்கிங்’ போய்விட்டு வரலாமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

“சைக்கிள் இருந்தால் ஜார்ஜ் டவுன் முழுதுமே ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்துவிடலாம்” என்று ஆசைப்பட்டார் சாஸ்திரிகள்.

 

“உம் தரித்திர புத்தி உம்மை விடவில்லையே! வாஷிங்டனில் வந்து சைக்கிளில் போகிறாராம்” என்றார் அம்மாஞ்சி.

 

“நடந்து போவது மட்டும் குபேர புத்தியாக்கும்?…” என்றார் சாஸ்திரி.

 

“அதற்கு ‘வாக்கிங்’ போவது என்று பெயர். அதோ பாரும், எத்தனை பேர் ஜோடி ஜோடியாக வாக்கிங் போகிறார்கள் என்று…”

 

“அவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்?”

 

“சிலபேர் சர்க்காரமாவுக்குப் போவார்கள். சில பேர் ஷாப்பிங் போவார்கள். ”

 

“எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் போகணும்” என்றார் சாஸ்திரிகள். –

 

“எதுக்கு?”

 

“புது வருஷத்துப் பஞ்சாங்கம் வந்திருந்தால் வாங்கணும்!”

 

“சாஸ்திரிகளே, யாராவது சிரிக்கப் போறா… வாயை மூடிக் கொண்டு என்னோடு வாரும். மண்ட்ரோஸ் பார்க் பக்கமாகப் போய்விட்டு வரலாம்.”

 

“உமக்கு வழி தெரியுமா?”

 

“தெரியாமல் என்ன? சம்பந்தியாத்துக்காராள் தங்கப் போறாளே டம்பர்ட்டன் ஓக்ஸ், அந்த வீட்டைத் தாண்டி ஆர். ஸ்ட்ரீட் வழியா நடந்தால், கொஞ்ச தூரத்தில் மண்ட்ரோஸ் பார்க் நாம் தங்கியிருக்கிற சம்மர் ஹவுஸ் மேல் மாடியிலேயிருந்து பார்த்தாலே தெரியறதே!”

 

“வாஷிங்டன் நகரத்தையே நீர்தான் நிர்மாணித்த மாதிரி அல்லவா பேசுகிறீர்?” என்றார் சாஸ்திரிகள்.

 

“தக்ளியை எடுத்துக் கொண்டீரா? பார்க் பெஞ்சிலே உட்கார்ந்து கொண்டிருக்கிற நேரத்திலே நூற்கலாமே ! ” என்றார் அம்மாஞ்சி.

 

அய்யாசாமி, மூர்த்தி, ஹாப்ஸ் தம்பதியர், பிள்ளை வீட்டுக்காரர்கள் எல்லோரும் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள்.

 

“எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? என்று அம்மாஞ்சியைப் பார்த்துக் கேட்டார் மூர்த்தி.

 

“மண்ட்ரோஸ் பார்க் வரை வாக்கிங் புறப்பட்டோம். டம்பர்ட்டன் ஓக்ஸ் பங்களாவைப் போய்ப் பார்த்தீர்களா? வசதியாக இருக்கிறதா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

“ரொம்ப செளகரியம். இரண்டு வீடுகளும் கூப்பிடு தூரத்தில் இருக்கின்றன. நீங்களிருவரும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்கள்” என்றார் அய்யாசாமி.

 

“ஒ எஸ் ஸெவன் தர்ட்டிக்குள் வந்துவிடுகிறோம்” என்றார் சாஸ்திரி.

.

“அவ்வளவு நேரம் ஆகுமா?” என்று கேட்டார் அய்யாசாமி.

 

ஆறரை மணிக்குள் என்றுதான் சாஸ்திரிகள் சொல்ல நினைத்தார். ஆனால் அவருக்கு ஆறரை என்பதற்கு இங்கிலீஷ் தெரியாது. ஸெவன் தர்ட்டி என்கிற வார்த்தைதான் தெரியும். எனவே, தெரிந்த இங்கிலீஷைச் சொல்லி வைத்தார். –

 

சாஸ்திரிகள் உளறுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட அம்மாஞ்சி, “நாங்க ஸிக்ஸ் தர்ட்டிக்குள் வந்துவிடுகிறோம்.” என்று சொல்லி அனுப்பினார்.

 

சாஸ்திரிகளும், அம்மாஞ்சியும் பார்க்கில் ஜன நடமாட்டமில்லாத ஒர் இடமாகப் பார்த்து பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.

 

சாஸ்திரிகள் தக்ளியைச் சுழற்றி நூற்க ஆரம்பித்தார்.

 

“நீர் இங்கேயே உட்கார்ந்து நூற்றுக்கொண்டிரும். நான் கொஞ்சம் மாவிலை ஒடித்து வந்துவிடுகிறேன். நாளைக்கு இரண்டு வீட்டுக்கும் புண்ணியாகவாசனம் செய்யணும்…” என்று கூறிவிட்டுப் போனார்.

 

அம்மாஞ்சி திரும்பி வருவதற்குள் சாஸ்திரிகளைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர் தக்ளியைச் சுழற்றி, பஞ்சிலிருந்து நூலை லாகவமாக இழுப்பதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

 

“வாட் இஸ் திஸ்?” என்று கேட்டார் பத்திரிகை நிருபர் ஒருவர்.

 

சாஸ்திரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக அம்மாஞ்சியே திரும்பி வந்துவிட்டார். சாஸ்திரிகள் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், “திஸ் இஸ் டக்ளி! திஸ் இஸ் காட்டன்” என்று அவர்களுக்கு விளக்கினார் அம்மாஞ்சி.

 

“இந்த ’த்ரெட்’டை என்ன செய்வீர்கள்?”

 

“பூணூல் செய்து பிரம்ம முடிச்சுப் போடுவோம்… அப்புறம் இதை பிரம்மாவே வந்தாலும் பிரிக்கமுடியாது…”

 

“ஒரே தடவையில் அறுந்து போகாமல் எத்தனை அடி நீளம் நூல் நூற்பீர்கள்?”

 

“எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நூற்கலாம். ஆனால் தக்ளி தரையில் இடிக்குமே…” என்றார் அம்மாஞ்சி.

 

“தரையில் பள்ளம் வெட்டித் தக்ளி இடிக்காமல் நூற்றால் போகிறது” என்றார் ஒரு நிருபர்.

 

“அதைவிட வாஷிங்டன் ஸ்தூபி மீது ஏறி நின்று கொண்டு நூற்கலாமே” என்றார் அம்மாஞ்சி.

 

“ஒண்டர்புல் ஐடியா ஒரு எக்ஸிபிஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்தால் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள் பத்திரிகை நிருபர்கள்!

 

அவ்வளவுதான் “ஸ்பின்னிங் மேன் ஃப்ரம் காந்தி லாண்ட்!” என்று அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது.

 

அம்மாஞ்சியும், சாஸ்திரிகளும் ஜாகைக்குத் திரும்பிச் செல்வதற்குள் மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது.

 

இருவரும் வழி தெரியாமல் தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஜார்ஜ் டவுன் முழுதும் சுற்றிவிட்டுக் கடைசியாக ஆர். ஸ்ட்ரீட்டுக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

வெகு நேரமாகிவிடவே, டில்லி பஞ்சு காரை எடுத்துக் கொண்டு அவர்களைத் தேடக் கிளம்பிவிட்டான். அம்மாஞ்சியும், சாஸ்திரியும் ஆர். ஸ்ட்ரீட்டிலேயே அலைந்து கொண்டிருப்பதை கண்ட பஞ்சு, “உங்களைத் தேடிக் கொண்டு எங்கெல்லாம் அலைகிறது.மிஸஸ் ராக்ஃபெல்லர் உங்களிருவரையும் உடனே அழைத்து வரச் சொன்னார்” என்றான்.

 

“குளிர்ந்த வேளையில் ஜார்ஜ் டவுனை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தோம். அதனால் – லேட்டாகிவிட்டது” என்றார் அம்மாஞ்சி.

 

“வீட்டுக்கு திரும்பி வர வழி தெரியாமல் அலைஞ்சோம்னு சொல்லுமேன். இதிலே வேறு ஜம்பமா? ” என்றார் சாஸ்திரிகள்.

 

“அலையறதாவது? வாக்கிங் என்று சொல்லும்” என்றார் அம்மாஞ்சி.

 

“அம்மாஞ்சி வாத்தியாரே! கையிலே என்ன அது?” என்று கேட்டான் பஞ்சு.

 

“மாவிலைக் கொத்து, நாளைக்குப் புண்ணியாகவாசனம் செய்ய வேண்டாமா?”

 

டில்லி பஞ்சு சிரித்தான். “ஏன் சிரிக்கிறாய்?” அம்மாஞ்சி கேட்டார்.

 

“இது மாவிலை இல்லையே! வேறு ஏதோ இலை!” என்றான் பஞ்சு.

 

“பார்ப்பதற்கு அப்படித்தான் இருக்கும். இது அசல் அமெரிக்கா தேசத்து மாவிலை” என்று சமாளித்தார் அம்மாஞ்சி. . –

 

சம்மர் ஹவுஸில் ராக்ஃபெல்லர் மாமியும் மற்றவர் களும் கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிச் சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். அம்மாஞ்சியும் சாஸ்திரிகளும் வருவதைக் கண்டதும், “வாங்கோ அம்மாஞ்சி! ஏன் இவ்வளவு லேட்?” என்று கேட்டார் அய்யாசாமி.

 

“இந்த பேப்பர்காராள் எங்களை விட்டாத்தானே? கேள்வி மேலே கேள்வி கேட்கிறார்கள்? தக்ளியில் நூல் நூற்றுக் காட்டணுமாம். அதை ஒரு எக்ஸிபிஷனா நடத்தணுங்கறா ! ஆகட்டும்; வாஷிங்டன் ஸ்தூபி மேலேயே ஏறி நின்று நூற்றுக் காட்டுகிறோம் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு வந்தோம். அதுதான் லேட்” என்றார் அம்மாஞ்சி. .

 

“சரி, கல்யாணத்துக்கு மொத்தம் எத்தனை தேங்காய் வேண்டியிருக்கும்? சொல்லும் பார்க்கலாம் ” என்று கேட்டார் அய்யாசாமி.

 

“குறைந்தது இரண்டு லட்சமாவது தேவைப்படாதோ? ராக்ஃபெல்லர் மாமியைச் சார்ந்தவாளே நிறையப் பேர் வருவாளே!” என்றார் அம்மாஞ்சி.

 

“டு லாக்ஸ் போதுமா? ஒன் மில்லியன் கோகனட் வேண்டுமானாலும் ஹவாயிலிருந்து வரவழைத்து விடுகிறேன். எங்களுக்கு அங்கே ஒரு பெரிய எஸ்டேட் இருக்கிறது” என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

“ரொம்ப நல்லதாப் போச்சு. பந்தலுக்கு வேண்டிய தென்னங்கீற்றைக் கூட அங்கிருந்தே கொண்டு வந்து விடலாமே!” என்றார் மாமா.

 

“மஞ்சள் குங்குமத்திலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் விடாமல் ஜாபிதா போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றையும் மறக்கக் கூடாது” என்றாள் அத்தை.

 

“நாளைக்கே இரண்டு வீட்டுக்கும் புண்ணியாக வாசனத்தை நடத்தி விடலாம்” என்றார் அம்மாஞ்சி.

 

“அதுவும் சரிதான். வெள்ளிக்கிழமையாகவும் இருக்கிறது” என்றார் அய்யாசாமி.

 

“அப்படீன்னா விடியற்காலம் மூணு மணிக்கே எழுந்து வீடெல்லாம் மெழுகிப் பெருக்கிக் கோலம் போட்டுச் செம்மண்ணும் இட்டு விடுவோம்” என்றாள் அத்தை.

 

“ஏப்ரல் மாசத்திலேயே கல்யாணத்தை நடத்தி விடலாமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

“ஆமாம்; சுபஸ்ய சீக்கிரம்னு சொல்லுவா பெரியவா; எதுக்கு டிலே பண்ணனும்? விமானம் ரெடியா இருக்கு. “எதை நினைச்சாலும் அதைக் கொண்டுவந்து விடலாம்” என்றார் மாமா.

 

“முதலில் லட்சம் அப்பளம் இட்டு முடியணுமே!” என்று கவலைப்பட்டாள் பாட்டி.

 

“அதுதான் அப்பளம் உலர்த்துவதற்கு இடம்கூடப் பார்த்தாகிவிட்டதே! இன்னும் என்ன கவலை?” என்று கேட்டாள் அத்தை.

 

“எந்த இடம் ஃபிக்ஸ் ஆச்சு? என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

“நேஷனல் ஆர்ட் காலரிதான். அதன் மாடிதான் விசாலமாயிருக்கு” என்றாள் அத்தை.

 

“ஆமாம். அப்பளம் இடுவதும் ஒரு ஆர்ட்தானே?” என்றார் ராக்பெல்லர் மாமி.

 

“நாளைக்கே அப்பள வேலையை ஆரம்பித்தால்தான் முடியும். தஞ்சாவூர், திருநெல்வேலி, பாலக்காடு மூன்று ஊர்களிலிருந்தும் பாட்டிமார்களை அழைத்து வர வேண்டும். சம்மர் ஹவுஸில் அப்பளத்தை இட்டு ஹெலிகாப்டரில் கொண்டு போய் ஆர்ட் காலரி மாடியில் உலர்த்திவிடலாம்” என்றார் மாமா.

 

“மழை, காத்து வராமல் இருக்கணுமே” என்றாள் அத்தை. –

“ஆர்ட் காலரி மாடி முழுவதும் பந்தல் போட்டுவிடச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

 

“பந்தல் போட்டுவிட்டால் அப்பளத்துக்கு வெயில் இல்லாமல் போய்விடுமே!” என்றாள் மிஸஸ் மூர்த்தி.

 

“ஓ! அதை மறந்துவிட்டேனே!” என்றாள் ராக்ஃபெல்லர் மாமி.

 

“பஞ்சு நீ நாளைக்கே புறப்பட்டுப் போய் சமையல்காரர்களையும், பாட்டிமார்களையும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட வேண்டும்…” என்றார் மாமா.

 

“உளுந்து, அரிசி, உரல், உலக்கை, மணை, அப்பளக்குழவி இவ்வளவும் வரவேண்டும்” என்றாள் விசாலம்.

 

“மேரேஜ் ரொம்பப் பிரமாதமாக நடக்கணும். வாட்டெவர் யூ வாண்ட் வரவழைத்து விடுங்கள்” என்று உற்சாகப்படுத்தினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

“சரி, நாளைக்கே எல்லாவற்றுக்கும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டு, யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை ‘அலாட்’ செய்துவிடலாம்” என்றான் பஞ்சு.

 

“நகை செய்யும் ஆசாரிகளும் சீக்கிரம் வந்துவிட்டால் தேவலை. அவ்வளவு நகைகளும் செய்தாக வேண்டுமே” என்றாள் விசாலம். –

 

“பந்தல் போடுகிறவர்கள் கூடத்தான் முன் கூட்டியே வந்தாக வேண்டும்” என்றார் மாமா.

 

“ஆசாரி என்றால் யார்?…” என்று கேட்டார் ஹாரி ஹாப்ஸ். –

 

“கோல்ட்ஸ்மித்” என்றார் மாமா.

 

“கோல்ட்ஸ்மித் என்ற பெயரில் இங்கேயே ரொம்பப் பேர் இருக்கிறார்களே” என்றார் ஹாப்ஸ்.

 

“இந்த கோல்ட்ஸ்மித்துக்கள் வேறு. எங்கள் ஊர் ஆசாரிகள் வேறு” என்றார் மாமா.

 

“முதலில் தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு வெட்டி ராட்டினம் போட்டு, துணி துவைக்கிற கல்லும் போட்டால் தேவலை…” என்றாள் அத்தை.

 

“நானே சொல்லணும்னு நினைச்சேன். நமக்கெல்லாம் மடியா ஸ்நானம் பண்றத்துக்கு ஒரு இடம் வேண்டுமே: என்றாள் பாட்டி.

 

“சரி, நேரமாகிறது; எல்லோரும் தூங்கப் போகலாம். விடியற்காலமே எழுந்திருக்க வேண்டும்” என்று கூறினாள் அத்தை.

 

மிஸஸ் ராக்ஃபெல்லர் மட்டும் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. தன்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதர்களுக்கும் டெலிபோன் செய்து ‘காலையில் ஹோலிவாட்டர் ஸ்ப்ரிங்க்ளிங் பங்ஷன் நடக்கிறது. அவசியம் வந்துவிடுங்கள்’ என்று ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

பொழுது விடிந்ததுதான் தாமதம். விஸ்கன்ஸின் அவென்யூவிலும், ஆர். ஸ்ட்ரீட்டிலும் வண்டிப் போக்குவரத்தைத் தடை செய்யும் அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது. ஜார்ஜ் டவுனிலுள்ள பெண்மணிகள், ஆண்மணிகள், சிறுவர், சிறுமியர் எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள். காரணம், சம்மர் ஹவுஸ் டம்பர்ட்டன் ஒக்ஸ் வாசல்களில் கோலம் போடும் காட்சியைக் காணத்தான்.

 

பாட்டி, ஒரு பாத்திரத்தில் அரிசிமாவைக் கரைத்து எடுத்துக் கொண்டு விரல்களை வளைத்து வளைத்துப் போட்ட கோலத்தை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

விசாலம் குழல் கோலம் போட்டாள். அத்தை செம்மண்ணைக் கரைத்துக் கோலங்களுக்குச் சிவப்பு நிறத்தில் ‘பார்டர்’ கட்டினாள். –

 

“லவ்லி டிலைன்ஸ்!” என்றாள் மிஸஸ். ராக்ஃபெல்லர்.

 

“ரெட் பார்டர் ஒண்டர்புல்!” என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லரின் சிநேகிதி ஒருத்தி.

 

“ஹவ் டு தே புட் பாரலல் லைன்ஸ்?” என்று வியந்தனர் இன்னும் சிலர்.

 

“சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் விடறவாளுக்கு நாம் கோலம் போடறது ஒரு பெரிய அதிசயமாயிருக்கு” என்றார் மாமா.

“இந்த கோலத்துக்கே இவ்வளவு கூட்டம் கூடினால் ஊர்கோலத்தை எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ?” என்று பெருமூச்சு விட்டார் அய்யாசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 15ஒகே என் கள்வனின் மடியில் – 15

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 15 வம்சி

வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை